1. முதன்மையாளர்கள்
இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும்
உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர்.
அவர்களது மக்கள் தொகை விகிதாச் சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர்
எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது.
- குஷ்வந்த்சிங், இல்லஸ்டிரேட் வீக்லி, 29-12-1975.
வடக்கில் சிந்திய முதல் ரத்தம்
வர்த்தகம் செய்ய வந்த ஆங்கிலேயருக்கு இந்த மண்ணின் வளத்தை நிரந்தரமாய்
அனுபவிக்கும் எண்ணம் ஆசையாய்
உருவானது. ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு இங்குள்ள ஆட்சியாளர்கள் பலர்
அச்சத்துடன் அள்ளிக் கொடுத்தனர். அண்ட இடமும்
கொடுத்தனர். தங்கள் ஆட்சிப்பரப்புக்குள் ஆங்கிலேயர் சுதந்திரமாய்
பவனிவர பாதை அமைத்தனர். ஏனென்றால் பிரிட்டீஷாரின் துணை, தங்கள் பகை
அரசுகளிடம் இருந்து தங்களைக் காக்கும் என்ற
சுயநலத்தினால். நம் ஆட்சியாளர்களின் இச்சுயநலம் பிரிட்டீஷாருக்கு
நிரந்தரமாய் இம்மண்ணை ஆள்வதற்கான எளிய வாய்ப்பாக அமைந்தது.
இந்த காலகட்டத்தில், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு நாடாளும் ஆசை வந்துவிட்டது
என்பதை முதலில் கணித்து,
ஆங்கிலேயரின் நிர்பந்தங்களுக்கு எதிராய் இந்த மண்ணில் முதலில் நிமிரிந்து
நின்றவர்தான் வங்காளத்தை ஆண்ட சிராஜ்-உத்-தௌலா.
1757-ல் ஆங்கிலேயரை அவர் சந்தித்த பிளாசிப் போர்தான் பிரிட்டீஷ்
ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இம்மண்ணில் நடந்த முதல்
பெரிய யுத்தம். இப்போரில் கைதாகும் இந்திய வீரர்களை அடைப்பதற்காக ஆங்கிலேயர்
கட்டிய சிறைக்கூடத்திலேயே ஆங்கிலேயர்களைக் கைது
செய்து அடைத்த மாவீரர்தான் தௌலா.
ஆங்கிலேயரின் நாடாலும் ஆசையை முளையில் கிள்ளும் தௌலாவின் முயற்சியை முறியடிக்க
பிரிட்டனிலிருந்து கடல் மார்க்கமாக வந்த ஆங்கிலப்படை
கல்கத்தா துறைமுகத்தில் மிகப்பெரிய எதிர் முற்றுகையைச் சந்தித்தது.
கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கிலேயரை
எதிர்கொண்ட தௌலாவுக்கு இயற்கை மட்டும்
ஒத்துழைத்திருந்தால்… இந்திய சரித்திரமே மாறியிருக்கும். ஆனால் இயற்கை
ஒத்துழைக்க மறுக்க, நான்கு மணி நேரம் பெய்த கடுமையான
மழையினால் தௌலா படையின் வெடிமருந்துகள் நனைந்தன. அவரது
முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
வங்காளத்தில் சிராஜ்-உத்-தௌலா சிந்திய ரத்தத்தின் மீதுதான் பிரிட்டீஷ்
ஏகாதிபத்தியம் தன் முதல் கால் கோளை இந்திய மண்ணில்
ஊன்றியது. ஆமாம் இந்தியாவில் பிரிட்டீஷாரின் ஆட்சி முதலில் வங்காளத்தில்தான்
ஏற்பட்டது.
தெற்கின் முதல் போராளியோடு
தேசத்தின் தென்கோடியில் முதன் முதலாக ஆங்கிலேயரை எதிர்த்த வரவாற்று நாயகர்களில்
ஒருவர் பாஞ்சாலங்குறிச்சி சீமையை ஆண்ட
கட்டப்பொம்மன். இராமநாதபுரத்திற்கு ஜாக்ஸன் துரையைச் சந்தித்த
கட்டப்பொம்மன் சென்றபோது அவரோடு சென்ற தளபதிகளைப் பட்டியலிட்டுக்
காட்டுகிறது வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடல்.
அதில் இஸ்லாமிய தளபதிகள் பலரும் உடன் வந்ததை,
மம்மது தம்பியும் முகம்மது தம்பியும்
மார்க்கமுள்ள தம்பி வரிசையுந்தான்
தர்ம குணவான் இபுராமு சாகிபும்
தம்பி இசுமாலு ராவுத்தனும்…
- என்று பேராசிரியர் நா.வானமாமலை பதிப்பித்து 1971-இல் வெளியான
வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் புகழ்கிறது.*
(* செ.திவான். விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள்.
பக்கம்.36)
கட்டபொம்மன் படையில் வீராகளாகவும் ஏராளமான இஸ்லாமியர் இருந்திருக்கின்றனர்.
அவர்கள் கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரையை வாய்பேச
முடியாதவர் என்ற பொருளுடைய MOOKAH என்னும் உருது
வார்த்தையால் அழைத்ததைக் கர்னல் வேல்ஷ் தனது இராணுவ நினைவுகள் என்ற
நூலில் குறிப்பிட்டுள்ளார்**.
இச்செய்திகள் தென்னகத்தின் முதல் போராளிகளுடனும் இணைந்து இம்மண்ணின்
விடுதலைக்காகத் தியாகம் புரிந்தவர்கள் இஸ்லாமியர்
என்பதை வெளிப்படுத்துகின்றன.
(** செ.திவான். விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள்.
பக்கம்.38)
கிளிங்கர்கள்
மலேசிய திருநாட்டின் பினாங்கு தீவில் வாழும் தமிழர்கள் முன்பு கிளிங்கர்கள்
எனப் பிறமொழி பேசுபவர்களால் அழைக்கப்பட்டனர்.
கிளிங்கர்கள் என்ற பினாங்கு வாழ் தமிழர்களின் பட்டப் பெயரின் பின்னால் இந்திய
சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாக வரலாறு
ஒன்று ஒழிந்திருக்கின்றது.
தமிழகத்தில் சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்திதுப்
போரிட்டு இறுதியில் தூக்கிலிடப்பட்டுது வரலாறு.
மருது சகோதரர்களைத் தூக்கிலிட்டதோடு திருப்தியடையாத ஆங்கில அரசு,
அன்னாரது குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்கள் மற்றும் தளபதிகள், வீரர்கள்
என 72 பேரைப் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தியது.
அவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களுக்கு விலங்கிட்டு,
கைகால்களை இரும்புச் சங்கிலியால் பிணைத்து நடமாட
விட்டிருந்தனர். அவர்கள் நடக்கும் போது சங்கிலிச் சத்தம் கிளிங் கிளிங் எனக்
கேட்டதால் அக்கைதிகள் கிளிங்கர்கள் என
அழைக்கப்பட்டனர். நாளடைவில் அப்பெயர் அங்கு குடியேரிய தமிழர்களை
அழைப்பதற்குரிய பெயராக மாறியது.
அக்கைதிகளில் இருவருக்கும் மட்டும் நடக்கக் கூட முடியாத அளவிற்கு சங்கிலிப்
பிணைப்போடு பெரிய இரும்புக் குண்டுகளைக்
கைச்சங்கிலியில் தொங்க விட்டிருந்தனர். ஏனென்றால் அவர்கள் இருவரும் அந்தக்
கைதிகள் கூட்டத்தில் தலைமை சான்றவர்களாவர்.
அவர்களில் உருவர் இளைய மருதுவின் மகன் முத்துவடுகு என்ற
துரைச்சாமி. முற்றவர் முக்கிய படைத்தளபதிகளில் உருவான
சேக் உசேன் எனற் இஸ்லாமிய இளைஞர்*.
யார் இந்த சேக்உசேன்?
(* Miltry consultations, Vol.307(19.1.1803),
P.1249 - இல் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட 72 பேர் பெயர் பட்டியலில்
சேக் உசேன் பெயர் இடம் பெற்றுள்ளது. பார்வை:மேற்படி பக்கம்.45.)
இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றின் ஆரம்ப கட்ட புரட்சிகளுள் தென்னிந்தியக்
கிளர்ச்சி [1800-1801]
முக்கியத்துவம் பெற்றதாகும். ஆங்கிலேயர்க்கு எதிராகத் தென்னிந்திய குறு நில
மன்னர்களும் பாளையக்காரர்களும் ஒருங்கிணைந்த கூட்டு
நடவடிக்கையாக இக்கிளர்ச்சி அமைந்தது. மலபார் கேரளவர்மா,
மருது பாண்டியர், திப்புசுல்தானின் குதிரைப்படைத் தலைவராகப் பணியாற்றிய
கனீஷாகான் (Khan-i-Jah-Khan), மராத்தியில் சிமோகா
(Shimoga) பகுதியை ஆண்ட தூண்டாஜி வோக் (Dhondaji Waug), விருப்பாச்சி
பாளையக்காரர் கோபால நாயக்கர், திண்டுககல் பாளையக்காரர் போன்றோர் ஒரு
கூட்டமைப்பை உருவாக்கினர்.
இக்கூட்டமைப்பைச் சார்ந்த வடக்கு-தெற்கு ஆட்சியாளர்களை இணைக்கும் வாயிலாக
கனீஷ்கான் செயல்பட்டார். இந்தப் புரட்சிப்படை
யுத்தத்திற்குத் தலைமை தாங்கி, காவிரிக்கு வடக்கிலுள்ள படைகளை
நடத்தும் பொறுப்பு கனீஷ்கானிடம் ஒப்படைக்கப் பட்டது. இக்கூட்டமைப்பின்
முக்கிய திட்டமே கோவையிலுள்ள பிரிட்டீஷாரின் ராணுவக்
கோட்டையைத் தகர்ப்பதாகும். ஆந்தப் பொறுப்பையும், கோவை-சேலம் பகுதிகளைக்
கைப்பற்றும் பொறுப்பையும் கனீஷ்கான் ஏற்றிருந்தார். 4000 குதிரைப்படை
வீரர்களுடன் இத்தாக்குதலில் கனீஷ்கான் ஈடுபட்டார்.*
ரகசியமாகத் தீட்டப்பட்ட இத்திட்டம்
பிரிட்டீஷாருக்குத் தெரிந்துவிட, இம்முயற்சி
தோல்வியில் முடிவடைகிறது. இக்கிளர்ச்சிஙில் கைதான 42 பேருக்கு சேலம் கலெக்டர்
மாக்லியோட் (Macleod) உத்தரவுப்படி சேலம் ராணுவ
கோர்ட்டில் தூக்குத்தணடனை என தீர்ப்பு வழங்கப்பட்டு அனைவரும்
தூக்கிலிடப்பட்டனர்**
(* K.Rajayyan, South Indian Rebellion, The First
War of Independence. 1800-1803,, PP.110-111.) (**libd.,P.125)
அவ்வாறு தூக்கிலிடப்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் முஸ்லிம்
வீரர்களாவர்.* இம்மண்ணின்
விடுதலைக்காக ஜமாத்தாக(கூட்டாக) தூக்கு கயிற்றை முத்தமிட்ட தியாக வரலாற்றினை
இஸ்லாமியர் படைத்துள்ளனர்.
இந்த தென்னிந்தியக் கிளர்ச்சியில் மருதுபாண்டியர் படையைத்தலைமை தலைமை தாங்கி
நடத்திச் சென்றவருள் ஒருவர்தான் பினாங்குக்கு
நாடுகடத்தப்பட்ட சேக் உசேன். இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன் என்று
அழைக்கப்பட்ட இவர், சுதந்திரக் கிளர்ச்சிப் படையின் முதல்
தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார். இவரைத்
திண்டுக்கல் புரட்சிக் கூட்டத்தின் எழுச்சி வீரர், சிறந்த போராளி என்று
வரலாற்று அறிஞர் கே.ராஜய்யன் குறிப்பிடுகிறார்.**
இந்த சேக்உசேன் தான் மருதுபாண்டியர் வீழ்ச்சியின் போது ஆங்கிலேயரால் கைது
செய்யப்பட்டு பினாங்கு தீவில் சங்கிலியால்
பிணைக்கப்பட்டு நடமாடக் கூட முடியாமல் பட்டினியால் வாடி அங்கேயே
காலமானவர். இம்மண்ணின் விடுதலைக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை
முன்னெடுத்துச் சென்று தியாக
வரலாறு படைத்தவர்களாக கனீஷாகான், சேக்உசேன் போன்ற இஸ்லாமிய தீரர்கள்
விளங்கியுள்ளனர்.
(* செ.திவான், இந்திய விடுதலைப்போரில் தமிழக
முஸ்லிம்கள். பக்கம் 41.)
(** K.Rajayyan, South Indian Rebellion, The First War of Independence,
1800-1803..,Page.274.)
தொடரும்...
|