எண்ணெய் வளத்தையும் தாண்டி வியாபாரத்தில் முன்னேறும் துபை

Refer this Page to your friends

வி.களத்தூர் ஷா

வளைகுடா வளம் பெறும் வாய்ப்பு எண்ணெய்க் கிணறுகளால் என்றால் மிகையல்ல. சில நாடுகள் தங்கள் நாட்டின் வளத்தைக் கொண்டும் சில நாடுகள் அறிவியல் வளர்ச்சியைக் கொண்டும் முன்னேறி வருகின்றன. வளைகுடாவைப் பொறுத்தவரை எண்ணெய்க் கிணறுகள் தான் இதன் வளம். இதனைக் கொண்டே வளைகுடாவில் உள்ள அத்தனை நாடுகளும் முன்னேறி வருகின்றன. அந்த முன்னேற்றதில் பலநாட்டு மக்கள் உழைத்து பங்கு கொண்டு பணம் ஈட்டி வருகின்றனர். வளைகுடாவில் ஒரு பகுதி ஐக்கிய அரபு அமீரகம் (U.A.E) . இந்த அமீகரத்தில் மொத்தம் 7 மாநிலங்கள் உள்ளன. இதன் தலைநகரம் அபுதாபி. துபை, சார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன்,புஜைரா, மற்றும் ராசல்கைமா என்பது இதன் மற்ற மாநிலங்கள். இதில் தலைநகரம் அபுதாபியை அடுத்து துணைத் தலைநகரம் போல் இருப்பது துபை. ஐக்கிய அரபு அமிரகம் ஏறக்குறைய எண்ணெய் வளமே பிரதான வளம் என்றபோதிலும் துபை மாநிலம் வியாபாரத்திலும் தன்னை ஈடுபடுத்தி, உலக நாடுகளையே வியக்க வைத்திருக்கிறது.
உலக வியாபாரத்தில் வெற்றிநடைபோட்ட சிங்கப்பூரை சிந்திக்க வைத்திருக்கிறது துபை என்றால் மிகையல்ல.
தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் முன்பொருமுறை, இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் விருப்பத்தின் பேரில் துபை அழைக்கப்பட்டார். துபை வந்த துரைமுருகன் துபையின் வளர்ச்சியைக் கண்டு பிரமித்ததார். தான் சுற்றுலாவிற்காக இதுவரை சிங்கப்பூர் சென்று வந்துள்ளதாகவும் இனிமேல் சிங்கப்பூர் செல்வதை நிறுத்திவிட்டு துபை வரவிருப்பதாகவும் கூறிய தகவல், சுற்றுலாவாசிகளை துபை கவர்ந்துவருவதற்கான சான்று. இந்தியர்களை மட்டுமல்ல சிஙகப்பூர், சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஐரோப்பியர்களையும் துபை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

1990 களில் தமிழகத்தில் உள்ளவர்கள் துபையிலிருந்த தமது உறவினர்களிடம் விஷா எடுக்கும்படி கூறிய போது அவர்கள் பதிலுரைத்ததை இன்றும் பலர் நினைவில் கொண்டு வினாஎழுப்புகின்றனர். ஆம் அப்போது துபையிலிருந்த தமிழர்கள் கூறியது 'துபை வளர்ச்சியே முடிந்துவிட்டது இனி நீ துபை வந்து என்ன செய்யப்போகிறாய்?' அப்போதைய துபைக்கும் இன்றைய துபைக்கும் வானத்திற்கும் பூமிக்குமான வளர்ச்சி. 1990 களுக்குப் பிறகுதான் துபை மிகவும் அதிக அளவில் வளர்ச்சியைக் கண்டு பல்வேறு நாட்டினரை ஈர்த்துள்ளது.
துபையில் 1996லிருந்து வியாபாரத்திருவிழா (Shopping Festival) தொடங்கப்பெற்று வருடம் ஒருமுறை மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் கூட 2006 டிசம்பர் 20 முதல் 2007 பிப்ரவரி 2 ந்தேதி வரை நடந்தது. இந்தத் திருவிழாவைப் பார்ப்பதற்காகவே பல்வேறுநாட்டினர் வந்தவண்ணம் இருந்தனர். விஷா வழங்குவதற்கான நடைமுறை இத்திருவிழாவிற்காக தளர்த்தப்பட்டதாகத் தெரிகிறது.
வருடாவருடம் GITEX – (Gulf Information Technology Exhibition ) - எனும் கணிணி கண்காட்சியும் விற்பனையும் நடைபெற்று வருகிறது. சுமார் 61 நாடுகள் கலந்து கொண்டு தங்கள் கணிணி வளத்தை அறிமுகப்படுத்துகின்றன.
நவம்பரில் 5 நாட்கள் நடக்கும் இக்கண்காட்சியை எதிர்பார்த்து ஓரிரு மாதங்களுக்கு முன்பேயே கணிணி வியாபாரிகளும் வாடிக்கையாளர்களும் காத்திருக்க ஆரம்பித்துவிடுகின்றனர். அந்தளவிற்கு உலக வியாபாரிகளை கவர்ந்திழுக்கிறது.
துபையின் தற்போதைய வளர்ச்சி என்பது கட்டிடம் கட்டுவதில்தான். ஐரோப்பியர்களள அதிக அளவில் குடியேறுகின்றனர். அவர்கள் அதிக அளவில் 99 வருட ஒப்பந்த முறையில் குடியிருப்புகளை வாங்கி தங்கிவருவதாகத் தெரிகிறது. ஐரோப்பியர்கள் மட்டுமல்ல இந்தியா உள்பட பல்வேறு நாட்டினர் சொந்தமாக அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்க முற்பட்டுள்ளனர்.

துபையின் வியாபாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது தங்க நகை வியாபாரமாகும். சிங்கப்பூரை முந்தும் முயற்சியில் துபை வெற்றியடைந்ததாகவே கருதலாம். புதிய நகை பஜார் ((New gold souq, Old gold souk) என இரண்டு நகைக்கடை வியாபார பஜார்களும் கோல்டு லேண்ட் என்ற நகை வியாபார காம்ப்ளக்ஸ்ம் உள்ளது. உலக சுற்றுலாவாசிகளை இது மிகவும் கவர்ந்திழுக்கிறது.

மீடியா சிட்டி என்றும் இன்டெர்நெட் சிட்டி என்றும் புதிய புதிய நகரங்களை உருவாக்கி பல்வேறு வகையான வேலை வாய்ப்புகளையும் உலகை தன்னகத்தே கொண்டுவரும் முயற்சிகளையும் துபை நி[ர்வாகம் செய்துவருகிறது. மீடியா சிட்டியில் உலக செய்திநிறுவனங்கள் பல தமது நிலையங்களை தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில் தற்போது துபையில் செயல்படுவது யாவரும் அறிந்ததே.

வியாபாரத்தில் முழுகவனம் செலுத்தினால் முன்னேறிக்காட்டலாம் என்பது தனி நபருக்கான இலக்கு மட்டுமல்ல நாட்டுக்கே கிடைக்கும் இலக்குமாகும். நாடே முன்னேறும்போது தனிநபர் முன்னேற்றத்தில் தடையா வரும்.


 

மனிதவளம் இங்கு அதிக அளவில் பயன்படுகிறது

உயர் நிறுவனம் ஒன்றில் மனிதவளத்துறையில் முக்கிய பங்கு வகிக்கும்; குழுவில் ஒரு தமிழர் இடம்பெற்றிருப்பது மகிழ்வான செய்தியாகும். அந்த தமிழர் திரு.அப்துல் ஜாமிஆலம் அவர்களைக் கண்டு உரையாற்றியபோது, ‘இந்தியர்களின் திறமை வளைகுடாவில் அதிக அளவில் பயன்படுகிறது. தமிழர்கள் பல திறமையாளர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். ஆயினும் இன்னும் திறமையில் மேம்பட்டவர்கள் தேவைப்படுகிறார்கள். பல்வேறு தமிழர்கள் படிப்பை பாதியில் முடித்துவிட்டும், படித்த படிப்பிற்கு எந்த வித அனுபவமும் இன்றியே வளைகுடா வந்துவிடுவதால் பல்வேறு வகையான வாய்ப்புகளை அவர்களால் பெற முடியவில்லை' என ஆதங்கப்பட்டடார்.

படிக்கும் காலத்திலேயே பாஸ்போர்ட் எடுத்துவிடுவது மாணவர்களின் வீழ்ச்சிக்கே காரணமாக அமைவதாகப் படுகிறது. படித்து முடித்ததும் பாஸ்போர்ட் எடுத்தால்தான் சிறந்தது. படிக்கும்போதே எடுப்பது அவர்களுக்கு படிப்பின் மீது நாட்டம் குறைந்து வெளிநாடு செல்வதிலேயே அமைந்துவிடுகிறது.
 

Refer this Page to your friends