உணவில் மஞ்சள் சேர்த்துக் கொண்டால்
பன்றிக் காய்ச்சல் நெருங்காது
பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களின் தாக்குதலைத் தடுக்க
முடியாமல் நோய் எதிர்ப்பு ஆற்றலை உடல் இழந்து வருவதற்கு, நாம் அன்றாட உணவில்
மஞ்சள் சேர்த்துக் கொள்ளாமையே காரணம் என்று ஆயுர்வேத மருத்துவ வல்லுநர் நிலேஷ்
கோர்டே கூறியுள்ளார்.
இவர் கோவாவில் உள்ள கோமண்டக் ஆயுர்வேத மகாவித்யாலயா மற்றும் ஆய்வு நிலையத்தைச்
சேர்ந்த மருத்துவ வல்லுநர். பழங்காலம் தொட்டு
பயன்படுத்தப்பட்டு வரும் நறுமணப் பொருளான மஞ்சள் மருத்துவப் பண்புகள் கொண்டது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது. நாம் அன்றாட வாழ்வில்
உணவுப்பொருள்களில் மஞ்சள் அளவு குறைந்து வருவது கவலை அளிக்கிறது. என்றும்
நிலேஷ் கோர்டே குறிப்பிட்டுள்ளார்.
நமது நவீன உணவுப்பழக்க வழக்கத்தினால் நோய் நுண்ணுயிரிகளை எதிர்க்கும் ஆற்றலை
உடல் இழந்து வருகிறது. பீஸ்ஸா போன்ற உணவுகளில் ஒரு சிட்டிகை அளவுகூட மஞ்சள்
இருப்பதில்லை. மேலும் வெள்ளை சருக்கரைகள், அரிசி போன்ற வெள்ளை உணவு வகைகள்
சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க முடியாது என்றும் அவர்
தெரிவித்தார்.
வீட்டு மருத்துவமாக காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த பல்வேறு மரபான மருத்துவ
முறைகளுக்கு நாம் திரும்ப வேண்டும். வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு
அருந்துவதன் மூலம் சளி பிடிப்பதைத் தவிர்க்கலாம் என்று கோவா இந்தியவியல் என்ற
அமைப்பின் நிறுவனரான அஞ்சலி ராவ் தெரிவிக்கிறார்.
நிலவேம்பு கஷாயம் பன்றி காய்ச்சலை தடுக்கும்
நிலவேம்பு கஷாயம் மூலம் பன்றி காய்ச்சல் நோயை தடுக்க முடியும்
என்று ‘மூலிகைமணி’ டாக்டர் வெங்கடேசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக, சென்னையில்
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
புகையிலை, மது, மாமிசம் சாப்பிடுகிறவர்களை பன்றி காய்ச்சல் விரைவாக தாக்கும்.
1950, 1980ல் இப்படிப்பட்ட விஷக்காய்ச்சல் வந்தபோது நிலவேம்பு கஷாயம் வழங்கி,
தமிழக அரசு நோயை தடுத்தது. தற்போது பன்றி காய்ச்சல் அச்சுறுத்துவதால்,
சுகாதாரத்துறை அமைச்சர்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சித்த மருத்துவ வல்லுனர் குழு அமைத்து ‘உடனடியாக
மறந்து போன மூலிகை கஷாயங்களை மீண்டும் தயாரித்து விநியோகிக்க வேண்டும்’
என்றார்.
பன்றிக் காய்ச்சலை பொருத்தவரை சித்த மருத்துவ நூலில் விஷக்காய்ச்சல் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு நிலவேம்பு, விஷ்ணுகரந்தை, பற்பாடகம், சீந்தில்
கொடி, ஆடாதொடை ஆகிய மூலிகைகளை ஒரு கைப்பிடி அளவு சேர்த்து, இரண்டு லிட்டர்
தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, மிளகு, கிராம்பு தூள் செய்து கலந்து, வயிறு
காலியாக இருக்கும்போது மூன்று வேளை குடித்தால் 5 நாளில் காய்ச்சல் சரியாகும்.
பெரியவர்கள் 150 மில்லியும், குழந்தைகள் 75 மில்லியும் குடிக்கலாம் பக்கவிளைவு
கிடையாது.
சிக்கன்குனியா வந்தபோது இதே மூலிகையை மாநில அரசு அங்கீகரித்து, எல்லா அரசு
சித்த மருத்துவமனைகளிலும் வழங்கியது. வெளிநாட்டில் இருந்து பெறப்படும் ஒரே
மருந்தை நம்பாமல், இங்குள்ள மருந்தை மக்கள்
பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு டாக்டர் வெங்கடேசன் கூறினார்.