தமிழ்நாட்டில் உலமாக்கள், பணியாளர் நல வாரியம்
அமைக்கப்பட்டது
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடந்த 2009,
பிப்ரவரி 1-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் மஹல்லா
ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாட்டை
நடத்தியது.
தமிழகம் முழுவதிலுமிருந்து சங்கைக்குரிய உலமா பெருமக்கள்,
இமாம்கள், பள்ளிவாசல் தர்ஹா பணியாளர்கள், ஜமாஅத் தலைவர்கள்
பல்லாயிரக்கணக்கில் பங்கேற்ற இம்மாநாட்டில் மாண்புமிகு
அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக
பங்கேற்றார்.
தமிழ்நாட்டில் உலமாக்கள், பணியாளர் நலவாரியம் அமைக்கப்பட
வேண்டும் என்ற கோரிக்கை இம்மாநாட்டில் பிரதான தீர்மானமாக
நிறைவேற்றப்பட்டது.
இக்கோரிக்கை முதல்வர் கலைஞர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு
சென்று நிறைவேற உறுதுணையாக இருப்பேன் என அம்மாநாட்டில்
உரையாற்றிய மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டது
குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
கூறப்பட்டுள்ளதாவது:
2009-2010ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் மாநிலத்தில்
உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மத்ரஸாக்களில்
உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கென உலமாக்கள் மற்றம்
பணியாளர்கள் நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்று
அறிவிக்கப்பட்டது.
மேற்காணும் அறிவிப்பின்படி தமிழ்நாட்டிலுள்ள
பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் உள்ள
உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கென உலமாக்கள் மற்றும்
பணியாளர்கள் நல வாரியம் அமைத்து அரசு ஆணையிடுகிறது.
இந்நலவாரியத்தில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள்
மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்
இமாம்கள், அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள், மோதினார்கள்,
பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள் மற்றும்
அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷூர்கானாக்கள் மற்றும்
முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும்
முஜாவர் உள்ளிட்ட பணியாளர்களை உறுப்பினர்களாகச்
சேர்க்கலாம்.
இவ்வாறான நிறுவனங்களில் பணிபுரியும் 18 வயது நிரம்பிய 60
வயதுக்கு மேற்படாத பணியாளர்கள் பதிவு பெற தகுதியுடையவர்கள்
என அரசு ஆணையிடுகிறது.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்திற்கு சுற்று
சூழல் மற்றும் வக்ஃபு அமைச்சர் மைதீன் கான் தலைவராக
நியமனம் செய்யப்படுகிறார்.
இவ்வாரியத்தில் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாகக்
கீழ்க்கண்ட அலுவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
- அரசு சார்ந்த உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை அரசு நலத்துறை
செயலாளர்,
- நிதித்துறை முதன்மைச் செயலாளர்,
- வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர்,
- சமூக நலத்துறை முதன்மைச் செயலாளர்,
- பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர்,
- உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர்,
- தொழிலாளர் நலத் துறை ஆணையாளர்,
- சிறுபான்மை நலன் ஆணையர்,
- பிற்படுத்தப்பட்டோர் நலன் ஆணையர்,
- தமிழ்நாடு வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவலர்
ஆகியோர் அரச சார்ந்த உறுப்பினர்களாகவும்,
அலுவல் சாரா உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள்
நியமிக்கப்படுகிறார்கள்.
- தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் லால்பேட்டை
மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி பேராசிரியருமான மௌலவி
ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான்,
- மாநில பொதுச் செயலாளரும் மவ்லவீ அப்துல் காதர்,
- மாநில பொருளாளர் மௌலவி எஸ்.எம். முஹம்மது தாஹா,
- மாநில ஜமாஅத்துல் உலமா சபை கௌரவ தலைவரும் வீரசோழன் ஜாமிஆ
கைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி முதல்வருமான மௌலவி
ஓ.எம். அப்துல் காதிர் பாகவீ,
- திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும்
அல்ஹசனாத்துல் ஜாரியா அரபிக் கல்லூரி முதல்வருமான மௌலவி
டி.ஜே.எம். சலாஹுத்தீன்,
- வேலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளரும் வாணியம்பாடி
மஃதினுல் உலூம் அரபிக்கல்லூரி முதல்வருமான மௌலவி முஹம்மது
வலியுல்லாஹ்,
- மாநில துணைப் பொதுச் செயலாளரும் பாபநாசம் ஆர்.டி.பி.
காலேஜ் அரபித் துறை பேராசிரியருமான மௌலவி தேங்கை
ஷர்புத்தின்,
- சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் மண்ணடி
மஸ்ஜிதே மஃமூர் தலைமை இமாமான மௌலவி ஓ.எஸ்.எம். முஹம்மது
இல்யாஸ்,
- மாநில தகவல் தொடர்பு நிறுவனர் சிதம்பரம் மௌலவி முஹம்மது
இஸ்மாயில் நாஜி,
- குடியாத்தம் தாருல் உலூம் சயீதிய்யா அரபிக் கல்லூரி
நிறுவனர் மௌலவி முஹம்மது அய்யூப்,
- தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளரும்,
மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி பேராசிரியருமான மௌலவி எஸ்.
முஜீபுர் ரஹ்மான்,
- தமிழ்நாடு பிலால்கள் சங்கம் தலைவர் ஏ. முஹம்மது யூனுஸ்,
- தமிழ்நாடு இஸ்லாமிய ஆலயப் பணி உடல் உழைப்பு பிலால்கள் நல
சங்கம் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அலி பேக்,
- தமிழ் மாநில இமாம்கள் பேரவை மௌலவி எம்.ஜி. ஷிஹாபுத்தீன்,
- சென்னை மந்தைவெளி தலைமை இமாம் மௌலவி ஜி.கே. முஹம்மது
இல்யாஸ் ரியாஜி
ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்களின் சமூக, கல்வி மற்றும்
பொருளாதார மேம்பாட்டிற்கான அரசு செயற்படுத்தும் பல்வேறு
திட்டங்களின் செயலாக்கத்தை கண்காணித்து இப்பிரிவினரின்
மேம்பாட்டினை உறுதி செய்ய தக்க ஆலோசனைகளை இவ்வாரியம்
அரசுக்கு வழங்கும்.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில்
உறுப்பினர்களைச் சேர்த்து வாரிய உறுப்பினர்களுக்கு அமைப்பு
சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்
பல்வேறு நல உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்று முடிவுச்
செய்து உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில்
உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் உதவி தொகைகள்
வழங்குவதற்கான வழி முறைகள் குறித்து அரசு கீழ்க்கண்டவாறு
ஆணையிடகிறது.
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள
உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கீழ்க்கண்ட பல்வேறு நல
உதவிகள் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில்
உறுப்பினர்களாக பதிவு செய்த கொள்பவர்களுக்கும், அவர்களது
குடும்பத்தாருக்கும் வழங்கப்படும்:
விபத்து ஈட்டுறுதி திட்டம்
- விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ. 1 லட்சம் உதவித் தொகை.
- விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ. 10
ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை.
- இயற்கை மரணத்திற்குள்ளானவர் குடும்பத்திற்கு உதவித் தொகை
ரூ. 15 ஆயிரம்.
கல்வி உதவித் தொகை
- 10-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ஆயிரம்
ரூபாய்,
- 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய்,
- 11-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ஆயிரம்
ரூபாய்,
- 12-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ரூ. 1,500,
- 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ. 1,500,
- முறையான பட்டப் படிப்புக்கு ரூ. 1,500,
- மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்டப் படிப்புக்கு ரூ.
1,750,
- முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ. 2 ஆயிரம்,
- மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ. 3
ஆயிரம்.
- தொழிற்கல்வி பட்டப் படிப்புக்கு ரூ. 2 ஆயிரம்,
- மாணவர் இல்ல வசதியுடன் தொழிற் கல்வி பட்டப்படிப்புக்கு ரூ.
4 ஆயிரம்,
- தொழிற் கல்வி மேற்படிப்புக்கு ரூ.4 ஆயிரம்,
- மாணவர் இல்ல வசதியுடன் தொழிற் கல்வி பட்ட மேற்படிப்பு ரூ.
6 ஆயிரம்,
- ஐ.டி.ஐ. அல்லது தொழிற் பயிற்சி படிப்புக்கு ரூ.1,000,
- மாணவர் இல்ல வசதியுடன் ஐ.டி.ஐ. அல்லது பல்தொழில் பயிற்சி
படிப்புக்கு 1,200,
திருமண உதவித் தொகை ரூ.2 ஆயிரம்.
மருத்துவ உதவித் தொகை
- மகப்பேறு மாதம் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் மொத்தம் 6000
ரூபாய்,
- கருச்சிதைவு, கருக்கலைப்பு ரூ.3000,
- மூக்குக் கண்ணாடி செலவுத் தொகையை முதியோர் ஓய்வூதியம்
மாதந்தோறும் ரூ.400.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின்
உறுப்பினர்-செயலராக தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின்
முதன்மைச் செயல் அலுவலர் நியமனம் செய்யப்படுகிறார்.
18 வயது முடிவடைந்த, அனால் 60 வயது முடிவடையாத
ஒவ்வொருவரும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல
வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய தகுதி பெற்றவராவார்.
தற்போது நடை முறையில் உள்ள உலமா ஓய்வூதியத் திட்டத்தின்
கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந் நலவாரியத்தில்
முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படக்கூடாது.
உறுப்பினர் பதவிக்குரிய விண்ணப்பங்களை தகுதி வாய்ந்த
நபருக்கு வழங்கி அவர்களிடமிருந்து பெறப்பட்ட உறுப்பினர்
சேர்க்கை விண்ணப்பங்களைத் தொகுத்து, உறுப்பினர்களுக்கு
அடையாள அட்டைகளை வக்ஃபு காண்காணிப்பாளர்கள் / வக்ஃபு
ஆய்வாளர்களின் உதவியுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்
மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் வாங்குவார்.
நிதி உதவி வழங்கக் கோரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து
தகுதியான உறுப்பினர்களுக்கு நல உதவிகளை மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்
மூலம் வழங்கப்படும்.
வாரிய உறுப்பினர் சேர்க்கைக்குரிய விண்ணப்ப படிவம்,
வாரியத்தின் விதிமுறைகள், வாரியத்தின் இதர செயல்பாடுகள்
முதலிய அனைத்திற்கும் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தின்
மூலம் நடைமுறைப் படுத்தப்படும் இதர அமைப்பு சாரா தொழிலாளர்
நல வாரியங்களில் பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளும்
மேற்கொள்ளப்படும்.
பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குவதற்கு மாவட்ட
நிர்வாகத்திற்கு தேவையான நிதி உலமாக்கள் மற்றும்
பணியாளர்கள் நல வாரியத்தின் நிதியிலிருந்து வழங்கப்படும்.
மேற்காணும் நிதி உதவிகள் யாவும் தகுதியான நபர்களுக்கு
மட்டுமே அளிக்கப்படும்.
அரசு / அரசு சார்ந்த மற்றும் அமைப்பு சார்ந்த
நிறுவனங்களில் பணிபுரிந்து அந்நிறவனங்களில் வழங்கப்படும்
அனைத்து சலுகைகளையும் பெறும் உலமாக்கள் மற்றும்
பணியாளர்கள் இத்திட்டங்களின் கீழ் பயன்களை பெற இயலாது.
வேறு நல வாரியங்களில் உறுப்பினராக உள்ள உலமாக்கள் மற்றும்
பணியாளர்கள் ஏதேனும் ஒரு நல வாரியத்தின் மூலம் மட்டும்தான்
நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியுடையவர் ஆவார்.
மேற்குறிப்பிட்டுள்ள பணிகள் மாவட்டங்களில் சீராக
நடைபெறுவதைக் கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் மாநில அளவில்
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்திற்கு அதிகாரம்
அளித்து ஆணையிடப்படுகிறது. சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின்
எண்ணிக்கை, அடையாள அட்டை வழங்கப்பட்ட குடும்பங்களின்
எண்ணிக்கை, நல உதவிகள் இனம் வாரியாக வழங்கப்பட்ட எண்ணிக்கை
மற்றும் தொகை, மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் தொகை
போன்ற விவரங்கள் அடங்கிய அறிக்கையினை பதினைந்து
நாட்களுக்கு ஒரு முறை அரசுக்கு அனுப்பி வைக்குமறு
வாரியத்தின் உறுப்பினர்-செயலர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
புதியதாகத் தோற்றுவிக்கப்படும் இந்நலவாரியத்தில் உலமாக்கள்
மற்றும் பணியாளர்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும்
திட்டங்களின் அமலாக்கத்தைக் கண்காணிக்கவும், மேலும் புதிய
திட்டங்கள் அமுல் படுத்தப்படுவது குறித்து அரசுக்கு
ஆலோசனைகள் வழங்கவும், மற்றும் இக்குழுவினை முதல் நிலைக்
குழுவாகவும் (தினப்படி / பயணப்படி பெறுவதற்கு), இதன்
பதவிக் காலம் 3 ஆண்டுகள் என நிர்ணயித்து, அரசு ஆணை
வெளியிடுகிறது.
மேற்குறிப்பிட்டவாறு நல உதவிகள் உலமாக்கள் மற்றும்
பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்படும்
உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காகவும், இதுதொடர்பான பிற
பணிகளை மேற்கொள்வதற்காகவும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள்
நல வாரியத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து
அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.
தகவல்:
தமிழ்நாடு மாநில இ.யூ. முஸ்லிம் லீக்
Refer this Page to your
friends
|