|
சென்ற வாரம் வந்த இரண்டு வலை
அஞ்சல்கள் பெரிதும் மகிழ்வித்தன.
இறைவனின் நாட்டத்தால், 1994 முதல் அய்மானுடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ள ஒரு
சமுதாயக் களப்பணி ஊழியன் என்ற அடிப்படையில் - அய்மானின் சாதனைகளை என் சொந்த
சாதனைகளாகவே எடுத்துக் கொண்டு மகிழும் எனக்குள் உண்மையில் பெரிய மகிழ்ச்சி!
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!
வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் கடின உழைப்பில் சம்பாதித்த செல்வத்தை,
தங்கள் வேர்க் கிராமங்களின் பலமுனை வளர்ச்சிகளுக்கு, தாராள மனதுடன் வாரி வழங்குவதும், அதனால் சில பல இடங்களில் அரசு முயற்சிகளையும் மிஞ்சும் அளவுக்கு, இத்தகைய
கொடையாளர்களின் பங்களிப்பு விசாலமாயிருப்பதையும் நாம் அறிந்திருக்கிறோம்.
ஒரு
காலத்தில் சிங்கப்பூர், மலேசியா, பர்மா, சிலோன், சைகோன் என்று ஒரு சில நாடுகளில்
மட்டும் பரந்திருந்த நம்மவர்கள் இப்போது உலகின் மூலை முடுக்கெல்லாம் பரந்து விரிந்து
கிடக்கின்றனர்; தங்கள் பங்களிப்பை தாங்களால் இயன்ற அளவுக்கு அளித்து வருகின்றனர்.
என்றாலும் அரபு நாடுகளின் கதவுகள் நமக்காகத் திறக்கப் பட்ட போது நமக்குக் கிடைத்த 'சுவாச
சௌகரியம்' தனித்தன்மையுடையது. பர்மா. சைகோன், சிலோன் கிட்டத்தட்ட கைவிட்ட பிறகு,
மலேசியா, சிங்கப்பூர், சுதந்திரம் பெற்ற பிறகு செய்த குடியுரிமைச் சட்ட மாற்றங்கள்
ஒருவித 'திணறல்' நிலையை ஏற்படுத்தியிருந்த வேளையில், இந்த அரபகக் கதவுகள் திறந்தன.
தமிழ்நாடெங்கும் பட்டதாரிகள் - பள்ளிப்படிப்பு முடித்தோர் - படித்தலை
இடைநிறுத்தியோர் என்ற பல தளங்களில் நம் இளைஞர்கள் உள்நாட்டு வேலை வாய்ப்புக்கள்
பெரும்பாலும் எட்டாக் கனிகள் என்ற அளவில் சோர்ந்து போய், பலவிதமான சமுதாய - குடும்ப
அவமானங்களால் துவண்டு "சும்மா" கிராமங்களில் முடங்கிக் கிடந்த போது இறைவன்
ஏற்படுத்திக் கொடுத்த இந்த வாய்ப்பு, நம் சமுதாய வாழ்வியல் வரலாற்றில்
தனித்துவமிக்க ஒரு சிறப்பத்தியாயம் என்பதில் சந்தேகம் இல்லை!தமிழக முஸ்லிம்களின்
வாழ்வுச் செழுமைக்கு ஒரு 'வண்ணக் கோலம்' போட அது உதவியது.சமூக கட்டமைப்பிலும்
கால்த்துக் கேற்ற மாற்றங்கள் மலரத் தொடங்கின! இது காலம் வரை 'தீவுகள் ' போல
தனித்தவைகளாக இருந்த சமுதாய வளர்ச்சிகள் சற்றே விசாலத்தன்மையைப் பெற்றன.அதற்கு
வித்திட்ட காரணங்களை ஆய்வுப் பார்வையில் அலசும் போதுதான், சிறிதும் பெரிதுமாக அரபு
நாடுகாளில் ஆங்காங்கே உருவான அவரவர் ஊர்களின் அமைப்புகளின் செயல் பரிமாணங்கள்
தெளிவாகத்தெரிய வரும்.
இந்த அமைப்புக்களில் இருந்த படித்தவர்கள் - பணம் படைத்தோர் - உழைப்பாளிகள் என்று
இவ்வளவு காலமாக தனித்தனித் தளஙகளில் தனித்து நின்றவர்களை ஒருகுடும்ப வட்டத்துக்குள்
ஒருங்கிணைத்தன. அவரவர் ஊர்களின் குறுகிய கால நீண்டகாலத் தேவைகள் அறிவியற்பூர்வமாக
அடையாளம் காணப்பட்டு, அவற்றுக்கான தீர்வுகளும் கிடைக்கத் தொடங்கின.
இது ஒரு நிலையில் இருக்க , சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி, 'கல்வி சார்ந்தது'
என்ற ஞானோதயமே நமக்கு அரபக நுழைவுக்குப் பின்னர்தான் தீவிரமாக உறைக்கத்
தொடங்கியது.பி.எஸ்ஸி; பி.ஏ.; பாலிடெக்னிக் பட்டயம் படித்தவர்கள் கூட கட்டுமானம் ,
பொது சுகாதாரம் போன்ற கடின வேலைகளிலிருந்து தப்பி - தொழிலாளர் கேம்ப்களின்
இறுக்கமான வாழ்வியற்சூழல்களிருந்து மீண்டு - சுலபமான வேலை - சொகுசான வாழ்க்கைச்
சூழல் இவற்றைப் பெற முடிந்த யதார்த்தங்கள் ! எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும்
, கணிசமான அளவுக்கு சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்துக்கு வழியமைத்தன.இது ஒரு
விரிவான வரலாற்று உண்மை.
இரண்டாம் நிலையில் , தமிழகம் சார்ந்த அளவில், ஒருங்கிணைந்த சில அமைப்புக்களும்
பிறப்பெடுத்தன.அவைதான் அய்மான், ஈமான், காயிதேமில்லத் பேரவை, மெப்கோ (ஜெத்தா),
டி.எம்.சி.ஏ.(குவைத்), சீமான் இப்படியான சமுதாய அமைப்புக்கள்.
இவை அனைத்தும்
அடிப்படையில் கல்வி மேம்பாடு முயற்சிகளை செயல்பாட்டுத் தளமாக வைத்துத் தொடங்கப்
பட்டவையே! ஏழை மாணவ, மாணவிகளுக்கு பொருளாதார உதவி என்ற கொள்கை வடிவமைப்புடன்
தொடங்கப் பட்ட இவ்வமைப்புக்கள் இன்று தங்களது செயல்பாட்டுத்தளங்களை விரிவுபடுத்திக்
கொண்டே போகின்றன.அல்ஹம்துலில்லாஹ்!
அந்தப் பின்னணியில்தான், அய்மான் 1994 - இல் 'நேரடி கல்விப் பணிக்காக' திருச்சிக்கு
வந்தது. பள்ளியாகத் தொடங்கிய அந்தப் பணி, பரிமாண வளர்ச்சி பெற்று இன்று தமிழக கல்வி
வரலாற்றில் அழுத்தமான ஒரு கல்வித் தளமாக உயர்ந்து இன்று பலகைக்கழக விருதுகளை மிகக்
குறுகிய காலத்துக்குள்ளேயே அள்ளி வந்துகொடுத்திருக்கிறது!
இக்கல்விக்கூடத்தின் தொடக்க நிலையிலிருந்து அதன் வளர்ச்சியை பெருமிதத்துடன்
பார்த்துவரும் என்போன்றவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி விளக்க வொண்ணாதது.
அய்மான்
கல்லூரி தொடக்க விழா, முதல் பட்டமளிப்பு விழா இரண்டிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பை
அய்மான் நண்பர்கள் எனக்குத்தந்தார்கள். இதோ, இப்போது வெள்ளிவிழாக் காணுகிற இந்த
வேளையிலும் தூரத்தில் உள்ள என்னை மறந்துவிடாமல் அழைப்பிதழ் அனுப்பி
கௌரவித்திருக்கிறார்கள்.
கண்ணியத்துக்குரிய முன்னாள் அய்மான் நிர்வாகிகள் - இன்னாள் நிர்வாகிகள் என அப்துல்
வஹ்ஹாப் சாஹிப் தொடங்கி, சம்சு பாய், பக்ஸ் ஹாஜியார், முதுவை ஹசன், சிடிசன் மஜீத்,
செய்யது ஜாஃபர், ஜாகிர்ஹுசைன், ஹபீபுல்லாஹ், ஹபிபுர்ரஹ்மான் , ஸிஹாப், அய்மான்
பாடகர் தாஜுத்தீன், அய்மான் கவிஞர் இக்பால், ஷாஹுல்ஹமீத், ஹமீத்ரஹ்மான் என்று
ஏராளமானோரின் முகங்கள் மனதில் போட்டி போட்டுக் கொண்டு வந்து முன்னிற்கின்றன.
1994 இல் என் முதல் அமீரகப் பயனத்துக்குப் பின் "அமீரக அனுபவங்கள்" என்ற தலைப்பில்
"மணிச்சுடர்"இல் தொடர் கட்டுரை எழுதியபோது, எனக்கு 10 நாட்கள் விடுமுறை தந்து
எங்காவது செல் என்று சொன்னால் நான் அபுதாபி சென்று அய்மான் நண்பர்களுடந்தான்
தங்குவேன் என்று கூறியதையும் , 2003 ரமலானில் அவர்களுடன் மீண்டும் கழித்த இனிமையான
நினைவுகளையும் அசைபோட்டவனாக இக்கட்டுரையை வலைத்தளத்தில் வைக்கிறேன்.
சமுதாயத் தலைவர், அய்மானின் ஆரம்ப காலம் முதல் இன்றுவரை அதனுடன் ஒவ்வொர்
அணுவுக்குள்ளுமிருந்து ஊக்கம் கொடுத்துவரும் பேராசிரியர் கே.எம்.கே. அவர்களுக்கு
அன்பும் ஸலாமும்.
தமிழக அரசியலில் நம்மிடையே பெரிய எதிர்பார்ப்பை தொற்றுவித்திருக்கும்
தளபதி,
டாக்டர் ஸ்டாலின் அவர்களுக்கு அன்பும், மரியாதையும்!
அய்மான் கல்லூரியின் அருமையான மாணவிகள் இந்த வெள்ளி விழா நேரத்தில் வழங்கியுள்ள
இந்த அழகிய பரிசு
தான் அய்மானுக்காக உழைத்த - உழைக்கின்ற அதன் நிர்வாகிகள்
உறுப்பினர்களுக்கு மிகப் பெரும் உந்துவிசை என்பதைச் சொல்லி, விழா வெற்றிக்கும் -
நீடித்த செயல்பாட்டுச் சிறப்புக்கும் துஆ செய்து முடிக்கிறேன்.நன்றி!
|