|
நான்
எழுதுலகுக்கு அறிமுகமானது கவிதை வாயிலாகத்தான். சுமார் 1000 கவிதைகள் எழுதி
இருந்தாலும் கதையாசிரியனாகவே பரவலாக அறியப்படுகிறேன். அதைப்பற்றி எனக்கு வருத்தம்
ஒன்றும் இல்லை. 10 சிறுகதைத் தொகுதிகளைத் தந்துள்ள நான் ஒரே ஒரு கவிதை நூலைத்தான் ,
என் மல்லாரி பதிப்பகத்தின் மூலம் தந்திருக்கிறேன். அந்த "இருகாட்சிகள்"
நூலிலிருந்து சில காட்சிகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இதைப்பற்றி, மறைந்த
இறையருட்கவிமணி, பேராசிரியர்,
கா.அப்துல் கபூர், எம்.ஏ.; டி.லிட்.
அவர்கள் எழுதிய சில வரிகளை முன்னுரையாக வைப்பதில் மகிழ்ச்சி. "
இந்த
நூலில் 'இருகாட்சிகளாக ஹிமானாசையத் காட்டும் காட்சிகள் ஒரு புதிய இலக்கிய வடிவம்.
இதில் ஒரு சமகால சமுதாயச்சிறுகதை, ஒரு வரலாற்றுச் சிறுகதை இரண்டையும் பிசிறில்லாமல்
இணைத்துக்காட்டுகிறார்.....' என்ன செய்வது? சொல்லுங்கள் , என்ன செய்வது?' என்று
அவர் ஒவ்வொரு காட்சியையும் முடிக்கும் போது, நாம் வித்தியாசமான ஓர் உணர்ச்சிக்கு
ஆளாகிறோம்..."
|
|
தாட்சண்யம்
|
இன்று:
ஊர்க்கூட்டம் இருப்பதாக
ஊர்ப்பியூன் அறிவித்தார்
தொழுதவர்கள் அனைவரும்
தளத்தில்வந் தமர்ந்தார்கள்!
தலைவர் உமர்கான்
தூணருகில் உட்கார்ந்தார்!
முகமன் கூறி
முறையாகத் தொடங்கி வைத்தார்!
முக்கிய விஷயங்கள்
முடிந்தபின் சபைநோக்கி
"ஏதேனும் இனிஉண்டா?"
எனக்கேட்டார் தலைவர்!
"ஆம்" என்று சொல்லி
அஹ்மது எழுந்து
நின்றான்!
தலைவர் முகத்தில்
தயக்கம்; கலக்கம்
அஹ்மதொரு அப்பாவி
அவ்வூரின் கடைமனிதன்
என்ன விஷயத்தை
இங்கு அவன் சொல்வானென
ஏற்கனவே தெரிந்ததனால்
ஏற்பட்ட குழப்பம் அது!
அஹ்மது வீட்டுக்கு
அருகிருந்த நிலத்தை எல்லாம்
அவ்வூரின் பணக்காரர்
ஆனா மூனா வாங்கிவிட்டார்!
அஹ்மது வீட்டுக்குள்ளும்
'ஆறு அடி இருக்குதென்று
அடாவடித் தனமாக
அவர்கூறும் விசயத்தை
அஹ்மது எழுப்பிவிட்டால்
அமளிதான் அங்கு எழும்!
ஆனாமூனா பணக்காரர்;
அடிதடிக்கு அஞ்சாதவர்!
ஊரில் பெரும்புள்ளி
ஊரெங்கும் சொத்துப் பத்து!
அதிகார வர்க்கமெல்லாம்
அவர் பக்கம்!
அவ்வூரில்
அவர்பேச்சை மீற
யாருக்கும் துணிவில்லை!
அவ்வூர்த் தலைவரும்
அதற்குவிதி விலக்கல்ல!
"அப்புறமா பார்க்கலாமே,
அஹ்மது?" எனத் தலைவர்
அவனை அமரவைக்க
அவசரமாய் முயற்சி செய்தார்!
ஆனால் அஹ்மது
அமரவில்லை; எழுந்துநின்று,
பணிவாய் வேண்டினான்;
பரிதாபம் அவன் குரலில்!
"ஏழைக்கு இரங்குங்க
(இ)ரப்பு உங்களை ரட்சிப்பான்!
இருக்கிற வீடும்போயிட்டா
ஏழை நான் எங்கே போவேன்?"
தலைவர் குனிந்தார்;
தர்மசங்கடத் தில்நெளிந்தார்!
ஆனால் அங்கிருந்தோர்
ஆனாமூனா ஆட்களன்றோ!
போட்டார்கள் கூச்சல்!
போர்க்களம் தோற்றதுவே!
நீதி செத்தது; நேர்மை தோற்றது!
நியாயத்தைக் கொன்றவர்கள்
நிமிர்ந்து நடந்தார்கள்!
அன்று
வீரர் உமர்ஹத்தாப்
ரலியின்
விசாரணை மண்டபம்!
குற்றவாளிக் கூண்டில்
குபேர ஜபலா!
அண்டை நாட்டவர்
ஆட்சித்தலை வரின் நண்பர்!
குற்றம் சாட்டியவர்
கூன்விழுந்த விவசாயி!
கூழுண்டு வாழும்
குடிமகன்;சாமான்யன்!
"அறியாமல் செய்த
சிறுபிழையைப் பெரிதாக்கி
அடித்துதைத் துவிட்டார்
அநியாயம் இழைத்து
விட்டார்!"
சொன்னார் விவசாயி
சோகம் அவர் முகத்தில்!
கேட்ட கலீபா
கேள்விக் கணை தொடுத்தார்!
க அ பாவை வலம்வந்த
கூட்டத்தில் இருவருமே
முன்பின்னாக
முறையாக 'தவாப்" செய்தார்!
அப்போது அரசரின்
அங்கி தரைபடிய,
அவ்விவ சாயியின்
அடிகள் அதில்பதிய,
அரசர் நிலைகுலைந்தார்
ஆத்திரத்தில் நிலையிழந்தார்!
நடந்தது இதுதான்
நன்றாகப் புரிந்ததுவே!
"வேண்டுமென்று செய்யவில்லை
விவசாயி" என்பதுவும்
வீரர் உமரவர்க்கு
விளங்கியது; அவர் சொன்னார்!
"ஆத்திரத்தில் அடித்தது
அப்பட்டமான தப்பு!
அரசன் என்றாலும்
ஆண்டியே என்றாலும்
அல்லாஹ்வின் நீதிக்கு
அனைவரும் சமமாகும்!
எனவே, ஜபலா
ஏழை விவசாயியிடம்
எந்த நிபந்தனைக்கும்
இடமின்றி , மன்னிப்பு
கோரிடவேண்டும்" என
கூறினார் கலீபாவும்!
ஜபலா சினந்தார்;
ஜபர்தஸ்தைக் காட்டினார்!
ஆனால் உமரவர்கள்
அசைந்து கொடுக்கவில்லை!
அரசரைப் பணியவைத்தார்!
அநீதியை அகலவைத்தார்!
நீதியைக் காக்க
நியாயத்தை நிலைநாட்ட;
தாட்சண்யம் பார்க்காது
தடை, தயக்கம் காட்டாது,
நேருக்கு நேராய்
நியாயத்தை சொன்னதனால்
வரலாற்றில் நின்றார்கள்
வீரர் உமர் ஹத்தாப்(ரலி)!
அந்த உமர்ஹத்தாபும்
இந்த உமர்கானும்
சொந்த பந்தம்தான்..
சோதர முஸ்லிம்கள்தான்...
என்ன செய்வது?
சொல்லுங்கள் ....
என்ன செய்வது?
|
Refer this Page to your friends
|