|
Refer this Page to your friends
முஸ்லிம் சமுதாயத்தின் நியாயமான எதிர்பார்ப்புகள்
முஸ்லிம் சமுதாயத்தின் பெரும்பான்மை ஆதரவுடன் டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராகப்
பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். சமுதாயத்தின் சார்பில் நமது நெஞ்சார்ந்த
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜெயலலிதா முஸ்லிம் சமுதாயத்துக்கு ஒரு முஸ்லிம் மந்திரியே தேவையில்லை என்பது போல
அடாவடித்தனமாய் வக்ஃப் மந்திரியாக ஒரு முஸ்லிம் அல்லாதாரையே நியமித்து நெஞ்சில்
நஞ்சிட்டார்.
ஆனால் கலைஞர் உடனடியாக இரண்டு முஸ்லிம் மந்திரிகளை நியமித்ததுடன் சிறுபான்மை நலத்
துறையையும் தன் பொறுப்பிலேயே வைத்துக் கொண்டிருக்கிறார். இவை இரண்டும் முஸ்லிம்
சமுதாயத்தை மகிழ்ச்சிப் படுத்தியிருக்கிறது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக பதவியேற்பு நிகழ்வின் போதே ஏழை மக்களின்
மனதில் பால் வார்க்கும் வகையில் ஒரு கிலோ அரிசி இரண்டே ரூபாய்க்கு வழங்கும்
உத்தரவில் கையெழுத்திட்டும், சுனாமியிலும் வெள்ளத்திலும் கடுமையான
நஷ்டத்துக்குள்ளான ஏழை விவசாயிகளின் கடன்கள் முழுவதையும் ரத்துச் செய்ததன் மூலமும்,
சத்துணவு உண்ணும் ஏழைக் குழந்தைகளூக்கு இனி வாரத்து ஒரு முட்டைக்குப் பதிலாக இரண்டு
முட்டைகள் வழங்கப் படும் என்றதன் மூலமும் தமிழக மக்களுக்கு புதிய ஆட்சியின் சாயல்
எப்படியிருக்கும் என்பதற்கான சாயலைக் காட்டி அனைவரையும் மகிழ்வித்திருக்கிறார்.
இந்த நேரத்தில் முஸ்லிம் சமுதாயம் எதிர்நோக்கியுள்ள இன்னும் சில முக்கியப்
பிரச்சினைகளை அவரது மேலான பார்வைக்குக் கொண்டு வருவது நமது கடமையாகக் கருதுகிறோம்:
• பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை இயன்ற
விரைவில் விடுதலை செய்து அவர்களது குடும்பங்களைப் பேரழிவிலிருந்தும் பெரும்
மனஉளைச்சலிலிருந்தும் காப்பாற்றுதல்
• முஸ்லிம்களுக்குச் சட்டப் பூர்வமான- நீதிமன்றங்களால் தடை போட முடியாத வகையில் -
இட ஒதுக்கீட்டுக்கு ஆவன செய்தல் ; அதற்கு இடையூறாய் நிற்கும் அத்தனை தடைகளையும்
தளைகளையும் களைதல்.
• பள்ளிவாசல் கட்டுமானங்களுக்கான ஒப்புதல் அளிப்பதில் அரசு யந்திரம் காட்டிவரும்
திட்டமிட்ட தாமதத்தை ஒழித்து ஏற்கனவே தேங்கிக் கிடக்கும் கோப்புகளை உடனடியாக
நடைமுறை படுத்துதலும்; இனிமேல் செய்யப் படும் விண்ணப்பங்களுக்கு உடனடி நடவடிக்கை
எடுக்குமாறு உத்தரவிடலும்
• வக்ஃப் போர்டுக்கு சமுதாயத்தின் மேல் அக்கறையும் மார்க்க அறிவுமிக்க ஒரு
நல்லாரைத் தலைவராக்கி , தகுதிவாய்ந்த நிர்வாகிகள் - உறுப்பினர்கள் தேர்வு மூலம்
பலராலும் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப் பட்டுக் கிடக்கிற கோடிக் கணக்கான வக்ஃப்
சொத்துக்களை மீட்டெடுக்கும் பணியில் சட்டப் பூர்வ்மான ஒத்துழைப்புக்கொடுத்து வக்ப்•
வாரியம் வீரியத்துடனும் பொருளாதார பலத்துடனும் நிமிர்ந்து நிற்க ஆவன செய்தல்
• மத்திய அரசுடன் இருக்கிற நல்ல புரிந்துணர்வைப் பயன்படுத்தி, வெளிநாடுகளில் வாழும்
லட்சக்காணக்கான தென்மாவட்டத் தமிழர்களின் நலனுக்காக மதுரை விமான தளத்துக்கு
சிங்கப்பூர், மலேசியா, அரபுநாடுகளிலிருந்து வரும் விமானங்கள் நேரடியாகத் தரையிறங்க
வழிவகைகள் செய்தல்; மற்றும் திருச்சி - சிங்கப்பூர்; திருச்சி - கோலாலம்பூர்; மதுரை
-துபாய் மார்க்கங்களில் நேரடிப் போக்கு வரத்துக்கு ஏற்பாடு செய்தல்.
நன்றி : நர்கிஸ் ஜூன்
2006 இதழ்
Refer this Page to your
friends
|