புரதங்களால் ஏற்படும் மாற்றங்கள் அலர்ஜியாகும் உணவுப் பொருள்கள்

தொகுப்பு:

எம். முஹம்மது ஹுசைன் கனி,
செயலாளர் மத்திய மாகாணம், சவுதி அரேபியா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.

Refer this Page to your friends

நாம் திட்டமிட்டு எதையும் சாப்பிடுவதில்லை. இட்லி, தோசை, வடை, சப்பாத்தி, பரோட்டா என்று சாப்பிடுகிறோம். கூடவே கப் தேநீர். மதியம் ஒரு சாப்பாடு. கத்தரிக்காயோ, கருவாடோ, மீனோ, இறைச்சியோ ஏதோ ஒரு குழம்பு. மறுபடியும் மாலையில் பிஸ்கட் டீ, பர்கர், சான்ட்விச், இரவு அரிசி அல்லது கோதுமை. பெரும்பாலானோரின் உணவுப் பட்டியல் இப்படித்தான். சில நாட்களில் பீஸ்ஸா தேடுவோம். ஐஸ்கிரீம் தடவுவோம். சாக்லேட் கடிப்போம். சாப்பாட்டின் இடையிடையே பூச்சியோ, தவளையோ எந்தக் கவலையும் இல்லாமல் கோலாக்களையும் குளிர்பானங்களையும் பருகுவோம். சாப்பிடுவதில் திட்டங்கள் எதுவும் இல்லை. ஏதோ ஒரு உணவு. பசிக்கு உணவு. அவ்வளவுதான். பாவ்பாஜி, பேல்பூரி, சவர்மா, சாண்ட்விச் என்று விதவிதமான அயிட்டங்களை வேகமாக உள்ளே தள்ளிக்கொண்டு வேலையை கவனிப்பது பலருக்கும் _ முக்கியமாக இளைஞர்களுக்கு _ தினசரி வாழ்க்கையாகவே ஆகிவிட்டது. ஆனால் நம் உடல் அப்படி இல்லை. அதற்கு ஒழுங்காக வேலை செய்ய ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு அளவில் தேவை. நாம் சரியாக சாப்பாட்டின் வழியாக அதைத் தரவில்லை என்றால் கொஞ்ச நாட்கள் சமாளித்துப் பார்க்கும். பின் தட்டுப்பாட்டை உடல்குறைபாடடின் வழியாகக் காண்பிக்கும்.

ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு அளவில் உணவிலிருந்து நுண்பொருட்கள் தேவை.

நம் உடல்,
நம் நாடு,
நம் ஊர்,
நம் நாடடின் வெப்பம், குளிர்,
நம் பழக்கம்,
நம் மண் வழி

நுண்பொருட்களின்தேவைகளை எப்படித் தெரிந்து கொள்வது:

எவை அந்த நுண் பொருட்கள்? புரோட்டீன், கொழுப்பு, மினரல்கள், வைட்டமின்கள் போன்றவைதான். 'சோகையாக இருக்கிறீர்கள். கீரை சேர்த்துக் கொள்ளுங்கள்...' என்று டாக்டர் சொன்னால் உடலில் இரும்புச்சத்து குறைகிறது என்று அர்த்தம். இப்படி ஒவ்வொன்றின் பின்னாலும் பற்றாக்குறையா? நோயா? நமக்கு இந்த நுண்பொருட்களை உணவின்வழி பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. உணவு சாப்பிடும் அளவு ஒருவருக்கு ஒருவர் வேறுபடுகிறது. ஆனால் எப்படி எந்த அளவில் இந்த நுண்பொருட்கள் நமக்குத் தேவை? யார் இதை பரிந்துரைப்பது? எப்படித் தெரிந்து கொள்வது, இந்த வேலையை அரசாங்கம் செய்கிறது. பொதுவாக இந்தியர்களின் பழக்கவழக்கம், உணவு அளவு எந்த அளவில் இந்த நுண்பொருட்கள் உணவில் இருந்தால், பற்றாக்குறை அல்லது நோய் வராது என்பதை ஒரு தோராயமாகக் கணக்கிட்டுச் சொல்கிறார்கள். இந்த அளவையே மருத்துவர்கள் கவனத்தில் வைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். இந்த வேலையை 'இன்டியன் கவுன்சில் ஆஃப் மெடிகல் ரிசர்ச்' முதன் முதலில் செய்து, இந்தியர்களுக்குச் சராசரியாக உணவில் எவ்வளவு சக்தி தேவை? எவ்வளவு புரோட்டீன் தேவை? எவ்வளவு இரும்புச் சத்து தேவை? எவ்வளவு மினரல்கள் தேவை? எவ்வளவு வைட்டமின்கள் தேவை? என்று அறிவித்தது. இந்தக் கணக்கீடுகள் அவ்வப்போது மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு புதிய தேவை அளவுகள் அறிவிக்கப்படும். தற்சமயம் ICMR என்கிற உணவு ஆய்வு அமைப்பின் அறிக்கையின்படி நமக்கு இந்த நுண்பொருட்கள் எவ்வளவு தேவை என்பது கொடுக்கப்பட்டிருக்கிறது.

நுண்பொருட்கள் எவ்வளவு தேவை என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோமா?
உடல் எடை: 50 லிருந்து 60 கிலோ வரை சராசரி இந்தியர்களின் உயரத்தைப் பொறுத்து.
சக்தி அளவு: இது BMR (basal metabolic rate) அளவைப் பொறுத்து அமைகிறது. கமிட்டி முன்பிருந்த அளவில் 5 சதவிகிதத்தைக் குறைத்திருக்கிறது.


புரோட்டீன்: நடுத்தர வயதுள்ளவர்களுக்கான தேவை 1 gm ஒரு கிலோ எடைக்கு.
இரும்புச்சத்து: தேவையைப் பொறுத்து செய்யப்பட்டிருக்கிற மாற்றம் 5%, 3% மற்றும் 2%.
கால்சியம், பாஸ்பரஸ்: 1:5 பெரியவர்களுக்கு 1:1 குழந்தைகளுக்கு,
குரோமியம்: 65 mg
காப்பர் 2.2mg
மாங்கனீஸ் 5.5 mg
துத்தநாகம் 15.5 mg
மாலிப்டினம் 500 mg
வைட்டமின்: வைட்டமின் ஏ 600mg பெரியவர்களுக்கு
தையாமின் : 0.5 mg
ரைபோபிளேவின்: 0.6mg
நிகோடினிக் ஆசிட்: 6.6 mg
போலிக் ஆசிட் : 3mg 1 Kg
வைட்டமின் B 12 : 1mg 1 day
வைட்டமின் C: 2025 mg 1 day
வைட்டமின் D: எதுவுமில்லை
வைட்டமின் E: 0.8mg 1 day

மற்ற உணவுப்பொருட்கள், நுண்பொருட்களின் தினசரித் தேவை அளவில் மாற்றம் ஏதும் இல்லை. மேலே மாற்றப்பட்டவைகளின் பட்டியல் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் பல ஆய்வுக்கூடங்கள், நாளிதழ்களில், செய்தித்தாள்களில் பழைய அளவே திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளது, மாற்றப்பட்ட அளவைத் தெரிந்து கொண்டால், நீங்கள் பற்றாக்குறை பாதிப்பில்தான் இருக்கிறீர்களா என்பதை உணர்ந்து கொள்ள முடியும். தேவையில்லாமல் தவறான சிகிச்சையும் செய்யப்படுவதைத் தவிர்க்கலாம்.

தேவையைத் தெரிந்து கொண்டோம், இனி உணவினால் ஆகும் அலர்ஜியைப் பற்றிப் பார்ப்போம்,

எந்த ஒரு உணவுப் பொருளை எடுத்துக்கொண்டாலும், அதில் எவ்வளவு சத்து இருந்தாலும், எவ்வளவு ருசி இருந்தாலும் அது பார்ப்பதற்கும், நுகர்வதற்கும் சிறந்ததாக இருக்கவேண்டியதுள்ளது. பெரும்பாலும் நிறத்தை வைத்தே ஒரு உணவுப் பொருளின் ருசியையும் அளவிடுகிறார்கள். சில நேரங்களில் நிறமே தரத்தையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. நல்ல சிவப்பு நிறம் கொண்ட ஆப்பிள் பழம் அதிகச் சுவையுடனும் தரத்துடன் இருக்கும் என்பதும் _ பச்சை நிற ஆப்பிள் அவ்வளவு சிறப்பாக இருக்காது என்பதும், அதிக மஞ்சள் நிறத்துடன் இருக்கும் ஆரஞ்சுப் பழம் நல்லது என்றும், பச்சை நிறத்தில் உள்ளது அவ்வளவு தரமானது அல்ல என்பதும் மக்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது.

நிறமுள்ள உணவுகளையும், பானங்களையும் பருகும்போது, நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தரமற்றச் செயற்கை நிறங்களைச் சார்ந்த உணவுகளையும், பானங்களையும் பருகினால், அவை கடுமையான ஆரோக்கிய பிரச்சினைகளைக் குறிப்பாக அலர்ஜி நோய்களை உண்டாக்கும். நிறங்களுக்கு எப்போதும் எல்லோரையும் வசீகரிக்கும் சக்தி இருக்கிறது. பெரும்பாலும் குழந்தைகள் இதன் ஈர்ப்புக்கு அடிமையாகி விடுகிறார்கள். அவர்கள் கடைகளில் கிடைக்கும் சாதாரணமான மிட்டாய்கள், சாக்லேட்கள், ஐஸ்க்ரீம், ஜெல்லி போன்ற உணவுப் பொருட்களை நிறத்தைப் பார்த்து வாங்குகிறார்கள்.

1858 ஆம் ஆண்டில்தான் ''வில்லியம் எச்.பெர்கின்'' என்பவரால் ''செயற்கை நிறம்'' கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிறப்பொருளுக்கு ''மோவ்'' என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. பிற்காலத்தில் அதன் தேவைகளும், தயாரிப்புகளும் அதிகரித்ததால் பிரச்சினைகளும் அதிகரித்தன. அதனால் ஒவ்வொரு நாடும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலே செயற்கை உணவு நிறங்களைத் தயாரிக்க அனுமதி வழங்குகின்றன. அமெரிக்காவில் ஏழு நிறங்கள், இங்கிலாந்தில் பதினொன்று, ஆஸ்திரேலியாவில் பதிமூன்று இப்படிக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலே செயற்கை நிறங்கள் தயாரிக்க அனுமதி வழங்கப்படுகிறது. செயற்கை நிறங்களைத் தரமானதாக, அதற்குரிய வழிகாட்டுதல்படி மட்டுமே தயாரிக்க வேண்டும்.

உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் நிறத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று _ இயற்கை. இரண்டு _ செயற்கை. காய்கறி, பழங்கள், கீரைகள் போன்றவைகளில் இருப்பது இயற்கையான நிறம். குங்குமப்பூ, மஞ்சள், புதினா, மல்லிஇலை, ஆரஞ்சு தோல், கேரட் போன்றவைகளை உணவில் பயன்படுத்தினால், இயற்கை நிறம் கிடைக்கும். இதுபோன்ற நிறங்களைச் செயற்கையாகவும் தயார் செய்கிறார்கள். இவை உணவில் மட்டுமின்றி, மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களிலும் சேர்க்கப்படுகின்றன.

தரமற்ற செயற்கை நிறங்கள் கலந்த உணவுப் பொருட்களைச் சாப்பிட்டால் உடல் உறுப்புகள் பலவும் பாதிப்படைகின்றன. செயற்கை நிறங்களில் இருக்கும் ''ஓரமின்'' என்ற பொருள் கல்லீரல், சிறுநீரகங்களைப் பாதிக்கச் செய்கிறது. ''மெட்டோனில் எல்லோ'' என்பது வயிறு, கல்லீரல், சிறுநீரகம், கருப்பை, விரைப்பை போன்றவைகளைப் பாதிக்கிறது. 'ரோடமின் பி' என்பது இரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்களை அழித்து, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும். கல்லீரல், சிறுநீரகம் போன்றவைகளையும் பாதிக்கும். இதனால் பெரியவர்கள், குழந்தைகள், சிறுவர், சிறுமியர்களும் செயற்கை நிறங்கள் கலந்த உணவுப் பொருட்களை உண்ணுவதில் அதிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

தவிட்டு நிறத்திலுள்ள ஐஸ்க்ரீம், 'சாக்லேட் சுவை' கொண்டது என்பதும், பிங்க் நிறத்திலானது 'ஸ்ட்ராபெரி சுவை' கொண்டது என்பதும், பச்சை நிறம் கொண்டது 'பிஸ்தா சுவையுடன்' இருக்கும் என்பதும் சிறுவர்களுக்குக் கூட தெரிந்த விஷயமாக இருக்கிறது! சீன உணவுகள் எந்த அளவிற்கு ருசியாக இருக்கும் என்பதைவிட, அதன் நிறங்களும், மணமும் அதைப் பார்ப்பவர்களைச் சாப்பிடத் தூண்டுவதாக இருக்கும். இப்போது உலகம் முழுவதும் உணவுப் பிரியர்கள், அதிகரித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அதற்கு இணையாக உண்ணும் உணவினால் வரும் அலர்ஜி நோய்களும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இவற்றிற்கு முக்கியக் காரணம், கடந்த பத்து ஆண்டுகளில் உணவுத் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய புரட்சிதான்! அந்த உணவுப் புரட்சிக்குக் காரணமாக இருந்தது உணவில் சேர்க்கப்படும் நிறமும், அதன் மணமும்தான் என்றால் அது மிகையல்ல!!

பொதுவாக உணவே மருந்து என்கிறோம். அத்தகைய ஆகாரமே கூட அலர்ஜியை உண்டாக்குமா?
அலர்ஜி தன்மையுடைய ஒருவருக்கு தாம் அன்றாடமோ, அரிதாகவோ உண்ணும் உணவுப் பொருட்களோ, சில நேரங்களில் அவற்றிற்கு நிறத்தையும், மணத்தையும் கொடுக்கப் பயன்படுத்தும் உணவுச் சேர்ப்பான்களோ (Food additives) ''அலர்ஜி''ப் பொருட்களாகச் செயல்பட்டு, பலவித அலர்ஜி நோய் அறிகுறிகளை வெளிப்படுத்துவதையே நாம் உணவு வகைகளால் வரும் அலர்ஜி நோய்கள் என்கிறோம். இவ்வகையில் மருந்தாகும் உணவே கூட அலர்ஜி ஆகலாம்.

உணவு அலர்ஜியானால் என்னென்ன அறிகுறிகள் தெரியும்?
அலர்ஜி அறிகுறிகள் பொதுவாகவே வயிற்றிலும் குடலிலும், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, வாயு பிரிதல் போன்ற அதிகமான பாதிப்புகளாகத் தெரியலாம். சிலருக்குத் தாங்கமுடியாத தலைவலியாகக் கூட வெளிப்படும். வேறு சிலருக்கு உணவு அலர்ஜி அறிகுறிகள், தோலில் அங்கங்கு தடிப்பையும் (Urticaria), உதடு, கண், காது, தொண்டை போன்ற இடங்களில் அளவுக்கதிகமாக வீங்கிப்போய், குருதிக் குழாய் சார்ந்த நீர்வீக்கத்தையும் (Angio Ocdema) உண்டாக்கி, உயிரையே போக்கியும் (Anaphylaxis) விடலாம். சில நேரங்களில் ஆஸ்துமா இழுப்பையும் (Asthma Attack) உண்டாக்கிவிடலாம். சிலவகை மனநோய்களும், மாறுபட்ட நடத்தையும் கூட சிலவகை உணவுப் பொருட்கள் அலர்ஜியினால் ஏற்படுவதாக அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உண்மையிலேயே உணவினால் அலர்ஜி எப்படி உண்டாகிறது?
அலர்ஜி தன்மையுடையோர் ஒருவருக்கு தாம் உட்கொள்ளும் பலவகை உணவுப் பொருட்களில் அதிலும் குறிப்பாகச் சமைக்காத உணவுப் பொருட்களைவிடச் சமைத்த உணவுப்பொருட்களே அலர்ஜி பொருட்களாக மாறிவிடுகின்றன. பெரும்பாலும் சில குறிப்பிட்ட உணவுப் பொருட்களே பெரும்பாலான அலர்ஜி நோயாளிகளுக்கு ஒத்துக்கொள்வதில்லை. முக்கியமாக முட்டை, பால், கடல் உணவுகள், சாக்லெட், கோதுமை, கொட்டைகள், வெங்காயம், கத்திரிக்காய் வெண்டைக்காய் போன்றவற்றிலுள்ள சில பாகங்கள் சமைக்கப்படும்போது, அவை ஒவ்வாத எற்கெனவே செரிமான உறுப்புகளில் அமைந்துள்ள சிறப்புப் பாதுகாப்புக் கொடுக்கக்கூடிய மாஸ்ட் அணுக்களைப் பெரிதும் பாதிக்கின்றன. அதாவது, இந்தவகை உணவிலுள்ள ஒவ்வாத புரதங்களுக்கு (Antigens) எதிராக, எதிர்ப் பொருட்களான (Antibodies) இம்மியூனோகுளோபுலின் ஈ இந்த மாஸ்ட் அணுக்களில் ஏற்கெனவே ஒட்டிக்கொண்டு, கூருணர்ச்சி (Sensitised Mast Cells) பெற்றவைகளாக இருக்கும். உணவில் உள்ள ஒவ்வாமை ஊக்கிகள் அல்லது ஒவ்வாத பொருட்கள் (புரதங்கள்) செரிமான மண்டலத்திற்குச் சென்றவுடன், இந்த மாஸ்ட் செல்களிலுள்ள எதிர்ப் பொருட்கள் விரைந்து, அவற்றைச் சிதைக்கும் (Antigen Antibody Reaction). இதன் விளைவாக மாஸ்ட் செல்கள் வெடித்து ஹிஸ்டமினை வெளியிடுவதால், முன்பு சொன்ன குமட்டல், வாந்தி, வயிற்றுப்பொருமல், உப்புசம், வாயு பிரிதல், வயிற்றுப்போக்கு, வயிறு சுருண்டு வலித்தல் போன்ற தொல்லைகளை உண்டாக்குகின்றன. இது போன்ற அறிகுறிகள் அலர்ஜி இயல்புடைய ஒருவருக்கு ஒத்துக்கொள்ளாத உணவு உண்டவுடனேயே வரலாம்.
சிலர் உணவு உட்கொண்ட பல மணி நேரங்கள் கழித்து, உதடு வீங்குதல், உடலில் கொப்புளங்கள் அல்லது தடிப்புகள் ஏற்படுதல், ஆஸ்துமா இழுப்பு போன்ற அலர்ஜி அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள். பொதுவாக, சிலவகை மீன் வகைகள் (Tuna, Mackcrel) இறால்கள் (Shirmp), சில நேரங்களில் கோழி, ஆடு, மாடு, இவற்றின் இறைச்சிகள், மதுபான வகைகள், தக்காளி, கத்திரிக்காய், உருளைக் கிழங்கு, கோதுமை, மக்காச்சோளம், பட்டாணி, சோயாபீன்ஸ், ஆரஞ்சு, ஆப்பிள், எலுமிச்சை, கமலா, சாத்துக்குடி, நார்த்தம்பழம், வாழைப்பழம், பால், கெட்டித்தயிர், சாக்லெட்டிலுள்ள கோகோ, ரொட்டி செய்வதற்குப் பயன்படும் ஈஸ்ட், காபிக்கொட்டை, டீ இலை போன்ற ஒரு சில சைவ, அசைவ உணவுப்பொருட்களே உணவு அலர்ஜி நோய் அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன.

உணவு அலர்ஜி குழந்தைகளுக்கும் வருமா?
உணவு அலர்ஜி தன்மையுடைய குடும்பத்தாருக்குள்ளேயே இந்த உணவு அலர்ஜி நோய் அறிகுறிகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத் தெரியலாம், குழந்தைகளைப் பொறுத்தவரை முட்டை, பசும்பால், சாக்லெட் போன்றவை பெரும்பாலும் பேதியாகவும், சில நேரங்களில் கரப்பான் தோல்நோய், ஆஸ்துமா போன்ற அலர்ஜி நோய்களாகவும் வெளிப்படும். இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது, குழந்தைகளின் நோய் எதிர்ப்புச்சக்தி முழுமையான வளர்ச்சியை அடைந்திருக்காத நிலையில், அந்தக் குழந்தைகளின் உடல் மனிதப் புரதம் அல்லாத இவைபோன்ற புறப்புரதங்களைத் தவறாகக் கையாள்வதுதான். பொதுவாக, தாய்ப்பால் பருகும் குழந்தைகளுக்கு இயற்கையிலேயே தாய்ப்பாலில் உள்ள பலவகை எதிர்ப்பொருட்கள் அல்லது நோய் தடுப்புப் புரதங்கள் (Immunoglobulins) உள்ளன. இந்த வகை புறப்புரதங்களைப் பாதுகாப்பான முறைகளில் கையாண்டு குழந்தைகளின் உடலை அலர்ஜி துன்பங்களிலிருந்து காப்பாற்றுகின்றன. தாய்ப்பாலை முன்கூட்டியே நிறுத்திவிடுவதால் இந்த வகைப் பாதுகாப்பு கிடைப்பதில்லை. எனவேதான் இவை போன்ற, குறிப்பாக உணவு அலர்ஜி நோய்கள் குழந்தைகளுக்கும் உண்டாகிறது.

கண்ணைக் கவரும் கலர் கலரான உணவுகளாலும் அலர்ஜி வருமா?
கரோட்டினாய்ட்ஸ் (Carotenoids) எனப்படும் இயற்கை வண்ணங்களான மஞ்சளும், ஆரஞ்சும் மஞ்சள், முள்ளங்கி, தக்காளி, வாழைப்பழத் தோல், இனிப்பு நாரத்தை (Orange), பீச் பழங்கள், மக்காச் சோளம் போன்றவற்றில் இயற்கையிலேயே மிகுந்து காணப்படுகிறது. குளோரோபில் எனப்படும் பச்சயம், பச்சை வண்ண நிறமியாக கீரைவகைகள், அவரை வகைகள், சில காய்கறிகள் போன்றவற்றில் காணப்படுகிறது. பீட்ரூட், பிளம், இராஸ்பெர்ரி மற்றும் கறுப்புத் திராட்சை போன்றவைகளில் சிவப்பு, நீலம், ஊதா வண்ணங்களான அந்தோசயனின் (Anthocyanin) காணப்படுகிறது. இதுதவிர, மஞ்சள் கிழங்கில் மஞ்சள் நிறம் உள்ளது. இவை யாவும் இயற்கை வண்ணங்கள் பெற்ற உணவு வகைகளாகும். இவற்றை உண்பதால் ,வண்ணங்களில் ஏற்படும் ஒவ்வாமைக்கேடுகள் எதுவும் உண்டாகாது.

ஆனால், சிலவகை உணவுப் பொருட்களுக்குக் கவர்ச்சிகரமான நிறங்களைக் கொடுப்பதற்காகவும், அவை பலமணி நேரங்களுக்குக் கெடாமல் இருக்கவும், சில அசோ சாயங்கள் (Azo dyes) எனப்படும் டார்ட்ரசின், சன்செட்யெல்லோ, கார்மோசின், அமராந்த், எரித்ரோசின், சாக்லெட் பிரவுன், ரெட், வயலட் போன்ற வண்ண இரசாயனங்கள் அவற்றில் சேர்க்கப்படுகின்றன. உதாரணமாக ஜாம், சாஸ், கெச்சப் போன்ற உணவுப்பொருட்களிலும், அன்னாசி, செர்ரி, பப்பாளி, மாம்பழம் போன்ற பதப்படுத்தப்பட்ட பழங்களிலும், மென் பானங்களிலும் (Soft drinks) இவ்வகைச் செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றுள் பல அலர்ஜி கேடுகளுடன், புற்றுநோய், சிலவகை மனநோய்களையும் சிலருக்கு உண்டாக்கக்கூடும்.

உணவிற்கு ஆரஞ்சு அல்லது மஞ்சள் அல்லது பச்சை வண்ணம் கொடுப்பதற்காகச் சேர்க்கப்படும் ''டார்ட்ரசீனும், சாலிசைக்ளேட்'' என்னும் இரசாயனப் பொருட்கள் அடங்கிய உணவுகளும் சிலருக்கு அளவுக்கு மீறிய சுறுசுறுப்பையும் (Hyperactivity) உதடு வீக்கத்தையும் உண்டாக்க வல்லன. உணவு வகைகள் கெடாமல் நீண்ட காலம் பாதுகாக்கப்படவும், மணத்துடன் இருக்கவும் பயன்படுத்தப்படும். நைட்ரைட்டுகள், நைட்ரேட்டுகள், சல்பைடிங் பொருட்கள், சோடியம் பென்சோயேட் மற்றும் முன்பே சொன்ன சுவைக்காகச் சேர்க்கப்படும் சீன உணவுகளில் உள்ள அஜினமோட்டா என்ற உப்பு போன்ற பொருளில் உள்ள மானோசோடியம் குளுடாமேட் (MSG) மற்றும் குவானோசின் போன்றன பலவிதமான அலர்ஜி பாதிப்புகளை அலர்ஜி தன்மையுடையவர்களுக்கு உண்டாக்கக்கூடும். (அஜினாமோட்டாவால் ஏற்படும் பாதிப்புகள் எமது அடுத்த கட்டுரை)
லட்டு, ஜாங்கிரி, அல்வா, பொங்கல் இனிப்பு வகைகளிலும் பஜ்ஜி, போண்டா போன்ற கார வகைகளிலும், கேக்குகளிலும், இறைச்சி, கோழி பிரியாணி போன்ற புலால் உணவு வகைகளிலும் கவர்ச்சியான வண்ணங்களைக் கொடுப்பதற்காக தரம் குறைந்த ''கோல்தார்'' சாயங்களையும் ''மெட்டமானில் யெல்லோ'' எனப்படும் காரீய ஆக்சைடையும் (கேசரிபவுடர்) பயன்படுத்துவதாலும் பலவகையான அலர்ஜி கேடுகள் உண்டாகின்றன. சில நேரங்களில் கேசரி பவுடரால் விந்தணு உற்பத்தியாகும் திறனும் பாதிக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.

ஐஸ்கிரீம், சாக்லெட், கேக், ரொட்டி, கஸ்டர்ட் புட்டிங் போன்றவற்றில் மணம் கொடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் செயற்கை வெனிலா எஸ்ஸன்சும் பலவகை இனிப்பு வகைகளில், அழகுக்காக விரவி விடப்படும், செயற்கைக் குங்குமப்பூவும், சிலருக்கு அலர்ஜி நோய்களை உண்டாக்கக்கூடும். செயற்கைப் பானங்களிலுள்ள கோக்கோவும் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. இவை போன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் புரதங்களும், அவற்றிற்கு மணம், ருசி மற்றும் கெடாமல் பாதுகாக்கக்கூடிய உணவுச் சேர்ப்பான்களும், செயற்கை வண்ணங்களும் (Food additives Dyes) உணவு ஒவ்வாமை இயல்புடைய ஒருவருக்கு, ஒவ்வாமை ஊக்கிகளாக அல்லது ஒவ்வாப் பொருட்களாகி, நேரிடையாகவோ (Through immunological mechanisms) மறைமுகமாகவோ (Non Immunological Mechanisms) பல்வேறு அலர்ஜிக் கேடுகளை உண்டாக்கலாம். l
(எமது அடுத்த கட்டுரை அஜினாமோட்டாவால் ஏற்படும் பாதிப்புகள்)
-- மருத்துவர்



 

 

Refer this Page to your friends

தலைப்புப் பகுதி