அறிவியல் அதிசயம் - MJM Iqbal

17-06-2006

Refer to Your Friends

ஆய்வுக்கூடத்தில் வளரும் இருதயம்

மனித உயிர் விலை மதிப்பு இல்லாதது. இறைவனின் படைப்பில் மிக உயர்ந்ததும் மனித இனம் தான். வேறு எந்த உயிரினத்துக்கும் இல்லாத வகையில் பகுத்தறிவு கொண்டதும் மனிதன் தான். மிருகங்களுடன் இணைந்து வாழ்ந்த மனிதன் கால சுழற்சியில் பரிணாம வளர்ச்சி பெற்று தனது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டான்.

தனது ஆராய்ச்சி அறிவின் மூலம் போட்டி போட்டுக்கொண்டு புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி தனது வாழ்க்கையை வசதிகள் நிறைந்ததாக வளர்த்துக்கொண்டான்.

பல அரிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி உயர்ந்த நிலைக்கு வந்தாலும் மனிதனால் அவனது அறிவு மற்றும் ஆராய்ச்சி திறனால் வெல்ல முடியாதது நோய்கள் மற்றும் மரணம். இதில் நோய்களுக்கு மருந்துகள் கண்டு பிடித்தாலும் அதில் இருந்து முழுமையாக மனிதனால் மீள முடியவில்லை. அது போலத்தான் மரணமும்.

இது வரை மரணத்தை வெல்ல எந்த மருந்தும் இல்லை, எந்த மந்திரமும் இல்லை, எந்த கருவியும் கிடையாது.

இருந்தாலும் மனிதன் நோய்களையும் மரணத்தையும் வெல்ல போராடித்தான் வருகிறான். மனித இனத்துக்கு சவாலாக இருந்து வரும் நோய்களில் ஒன்று இருதய நோய்.

மாரடைப்பு மற்றும் இருதய கோளாறு காரணமாக ஆண்டு தோறும் பல கோடி பேர் மரணம் அடைகிறார்கள். இருதய நோய்களுக்கு பல நவீன சிகிச்சை முறைகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இருதயத்தில் உள்ள வால்வு பாதிக்கப் பட்டால் அதை மட்டும் மாற்றும் வசதி, இருதயத்துக்கு ரத்தம் கொண்டும் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் அதை சரிசெய்யும் பைபாஸ் அறுவை சிகிச்சைகள் உள்பட பல விதமான இருதய நோய்களுக்கும் சிகிச்சைகள் உள்ளன.


இது தவிர ஒருவரின் இருதயம் பழுதானால், அந்த இருதயத்தை அகற்றி விட்டு மாற்று இருதயம் பொருத்தும் அளவுக்கு மருத்துவ வசதிகள் முன்னேறி உள்ளன. மேலும் செயற்கை இருதயம் ஒன்றும் தயாரிக்கப்பட்டு அதை மனிதனுக்கு பொருத்திப்பார்த்தும் ஆராய்ச்சிகள் செய்துள்ளனர்.

இருதய நோய்கள் தொடர்பான ஆய்வில் புதிய முயற்சியாக ஆய்வுக் கூடத்தில் இருதயத்தை வளர்க்கும் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக ஒருவரின் இருதயம் பழுது அடைந்து இருந்தால் ஒரு ஊசி மூலம் அந்த கோளாறை சரி செய்யும் வகையில் ஆராய்ச்சிகளும் நடந்து வருகிறது.

இந்த ஆராய்ச்சியின் ஒரு கட்டமாக துடிக்கும் இதயத்தின் திசுக்களை சோதனைச்சாலையில் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் ஆஸ்திரேலிய மருத்துவ விஞ்ஞானிகள். இது குறித்த அதிசய தகவல்களை இந்த வாரம் காண்போம்.

மனித உடலில் உள்ள உறுப்புகளில் ஒன்று பழுது அடைந்தாலும் அல்லது பாதிக்கப்பட்டாலும் அதை சரி செய்ய மருத்துவர்கள் கடும் முயற்சி செய்ய வேண்டியுள்ளது. என்ன தான் மருந்து மாத்திரைகள் என்று நவீன சிகிச்சைகள் இருந்தாலும் பாதிக்கப்பட்ட உடல் உறுப்பை மீண்டும் பழைய பொலிவுடன் பெற முடியாது.

உதாரணமாக புகைப்பிடிக்கும் பழக்கம் காரணமாக ஒருவரின் இருதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த பாதிப்புக்கு என்ன தான் மருத்துவ சிகிச்சைகள் அளித்தாலும் இருதயம் மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பை மாற்ற முடியாது அல்லவா?.

இது போன்ற நிலையில் பாதிக்கப்பட்ட திசுக்கள் மற்றும் பகுதிகளை அகற்றிவிட்டு அவற்றுக்கு பதிலாக வேறு புதிய திசுக்கள் மற்றும் பகுதிகளை ஏற்படுத்த முடியுமா? என்பது தான் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியாக இருந்து வருகிறது.

இந்த ஆராய்ச்சியில் ஒன்று தான் ஆய்வுக்கூடத்தில் இருதயத்தை வளர்ப்பது மற்றும் இதயத்திசுக்களை உடலில் செலுத்தி அதன் மூலம் புதிய இருதயத்தை உடலுக்குள்ளேயே வளரச் செய்வது.


எம்.ஜே.எம். இக்பால்
இதுவரை நடந்த ஆய்வுகளின் மூலம் இரு பரிமாணங்கள் கொண்ட திசுக்கள் மட்டுமே ஆய்வுக்கூடங்களில் உருவாக் கப்பட்டுள்ளன. இதற்கு உதாரணமாக மனிதனின் தோல் திசுக்களை சொல்ல லாம். இந்த தோல் திசுக்களை அடிப்படையாகக் கொண்டு தற்போது முப்பரிமாண திசுக்களை உருவாக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய மருத்துவ ஆராய்ச்சி யாளர்கள் இது தொடர்பான ஆய்வுகளில் முனைப்புடன் செயல்பட்டு வருகின் றனர். மெல்போர்ன் நகரில் உள்ள பெர்னார்டு ஓ பிரையன் மைக்ரோ சர்ஜரி ஆய்வுக்கூடம் இந்த ஆய்வுகளில் முன்னணி வகிக்கிறது. இந்த ஆய்வுக் கூடத்தில் உள்ள விஞ்ஞானிகள் இந்த ஆய்வை அடிப்படையாக வைத்து இதற்கு முன்பு தோல் மற்றும் தசைகளுக் குரிய திசுக்கள், மார்பக திசுக்கள் கொழுப்பு தொடர்பான திசுக்கள் போன்ற வற்றை உருவாக்கி உள்ளனர்.

இப்போது அந்த ஆய்வுகளை அடிப் படையாக வைத்து இருதய திசுக்களை உருவாக்கி உள்ளனர். இது இருதயம் துடிப்பது போல துடிக்கும் தன்மை கொண்டது. இந்த திசுவை இருதயத்தில் பதியம் செய்வதன் மூலம் புதிய இருதய திசுக்கள் மற்றும் இருதயத்தின் பாகங் களை உரு வாக்க முடியும் என்பது விஞ்ஞானிகளின் முடிவாகும். இவ்வாறு செய்வது மிக எளிதான காரியம் அல்ல. இதற்கு என்று தனியாக சில ஆபரேஷன் களையும் செய்து கொள்ள வேண்டும்.

முதலில் இருதயத்தின் திசுவை செயற்கையாக ஆய்வுக்கூடத்தில் ஊருவாக்க வேண்டும். யாருடைய உடலில் இந்த திசுவை பொருத்த வேண்டுமோ அவரது உடலில் இருந்து திசுவை எடுத்தும் ஆய்வுக் கூடத்தில் வளர்க்கலாம். இவ்வாறு வளர்க்கப்பட்ட திசுவை உடலில் ஆபரேஷன் செய்து இருதயத்தில் (அல்லது எந்த உடல் உறுப்பை மாற்ற வேண்டுமோ அந்த உடல் உறுப்பில்) பொருத்த வேண்டும். பின்னர் திசுக்களின் வளர்ச்சிக்கு உரிய `ஸ்டெம் செல்'களையும் பதிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து அந்த திசு வளர்ந்து புதிய உடல் உறுப்பை உருவாக்கும்.

இந்த ஆராய்ச்சியில் முதல் கட்ட வெற்றியை விஞ்ஞானிகள் பெற்றுள்ள னர். ஆய்வுக்கூடத்தில் துடிக்கும் இருதய திசுவை உருவாக்கியதன் மூலம் இனி வரும் காலங்களில் மற்ற உடல் உறுப்புகளையும் இயற்கையான முறை யில் வளர வைக்க முடியும் என்று கருதுகின்றனர். இந்த ஆராய்ச்சிகள் வெற்றி பெறும் போது எந்த நோய் களுக்கும் தீர்வு காணுவது மிக எளிதாக அமையும்.

(அதிசயம் தொடரும்)
 

 

http://www.dailythanthi.com/Irmalar/home/second_page.asp?issuedate=6/17/2006&secid=76