'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்", என்பது பழமொழி. இது
ஒருவருடைய குணநல சம்பந்தப்பட்ட ஒரு விஷயம்.
ஆனால் நமது முகமே சிதைந்து விட்டால் நம்முடைய அகம் (மனம்)
என்ன பாடுபடும்?
பெரும்பாலும் விபத்துக்களில் சிக்கி பிழைத்தவர்கள் சிறு
சிராய்ப்புகளையாவது
பெற்றிருப்பார்கள். சிலரது உறுப்புகள் அலங்கோலமாக சிதைக்
கப்பட்டிருக்கும்.
விபத்திற்கு முன் ஆணழகனாகவோ அல்லது பேரழகியாகவோ
இருந்திருப்பார்கள். எத்தனையோ சிகிச்சைகள் மேற்கொண்டாலும்
முன்பிருந்த அழகு பறிபோயிருக்கும். இது போன்ற
பாதிப்புகளுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மட்டுமே தீர்வாகும்.
அதுவும் வசதியுள்ளவர்கள் மட்டுமே இம்மாதிரியான சிகிச்சைகள்
செய்துகொள்ள முடியும். இருந்தாலும் இயல்பான தோற்றத்தைக்
கொண்டு வருவது கடினம் தான்.
தீ விபத்துக்களில் சிக்கியவர்கள் முகம் இருந்தாலும் மாறாத
வடுக்களாகவோ, தோல் சுருங்கியோ காணப்படும். வாழ்க்கையே
இருண்டு விட்டது. நம்முடைய எதிர்காலமே சிதைந்து விட்டது
என்று மன உளைச்சலுக்கு ஆளானவர்களும் உண்டு.
ஆனால் அதற்கெல்லாம் வடிகாலாக முகம் மாற்று சிகிச்சை
வந்துவிட்டது. விஞ்ஞானம் இப்பொழுதெல்லாம் நமக்கு புதுப்
பொலிவுடன் முக மலர்ச்சியைத் தரும் செய்தியை தந்து கொண்டு
தான் இருக்கிறது. இக் கட்டுரையில் முக மாற்று ஆபரேஷன்
பற்றிக் காண்போம்.
அமெரிக்காவிலுள்ள ஓகியோ மாகாணத்திலுள்ள க்ளேவ் லாண்ட்
மருத்துவமனையில் உலகிலேயே முதன் முதலாக முழு முகம் மாற்று
சிகிச்சை மேற்கொள்ள ஆராய்ச்சிகள் நடக்கிறது. இதற்கான
விஞ்ஞான கழகத்தின் அனுமதியையும் இவர்கள் பெற்றுள்ளனர்.
மருத்துவ ஆராய்ச்சியாளர் மரியா சீமியோனோவ் என்பவரின்
தலைமையில் இந்த முக மாற்று சிகிச்சை நடைபெற இருக்கின்றது.
மருத்துவத்தில் பல நவீன வளர்ச்சிகள் வந்து கொண்டிருக்கும்
போது இம்மாதிரியான நவீன சிகிச்சை முறை ஏன் இவ்வளவு தாமதமாக
வந்திருக்கின்றது என்ற கேள்விக்கு டாக்டர்கள் மற்றும்
ஆராய்ச்சியாளர்கள் அளிக்கும் பதில் என்ன தெரியுமா?...
'இந்த முறையில் ஏராளமான சிக்கலான பிரச்சினைகள்
இருக்கின்றன" என்கின்றனர்.
மேலும் இந்த முறையில் சிகிச்சை பெற்றுக் கொள்பவரின்
தன்மைக்கு ஏற்ப தானமாக உறுப்பு அளிப்பவரை கண்டு பிடிப்பது
அரிதாகவே உள்ளது.
கண் தானம் செய்வது போல உடல் உறுப்புகளை தானம் செய்ய பலர்
முன் வருவதில்லை. எனவே மூளை செயல் இழந்தவர்கள், மற்றும்
இனி பிழைப்பது சாத்தியமே இல்லை என்ற நிலைக்கு
சென்றவரிடமிருந்து முகம் மற்றும் அது தொடர்பான உறுப்பு களை
பிரித்தெடுக்க வேண்டும். பின்னர் இந்த உறுப்புகளை
தேவைப்படுபவருக்கு பொருத்த வேண்டும்.
இவ்வாறு முகமாற்று ஆபரேஷன் செய்யும் போது முகம் கொடுப்பவர்
மற்றும் முகம் பெறுபவர் இருவரும் ஒரே பாலினமாக இருத்தல்
அவசியம். காது, மூக்கு, தாடை, மற்றும் தலைமுடி ஆகியவற்றை
அப்படியே எடுத்து பொருத்த வேண்டும்.
இது போன்ற முக மாற்று ஆபரேஷனுக்கு 39 வயதுடைய ஆரிங்டன்
என்பவர் முன்வந்தார். இவர் மூன்று குழந்தைகளுக்குத் தாய்.
தீவிபத்து ஒன்றில் இவருடைய முகம் மோசமாக பாதிக்கப்பட்டது.
இதை சரி செய்ய பிளாஸ்டிக் சர்ஜரி எதுவும் பலன் தராத
நிலையில் இவர் தன்னுடைய முக மாற்று சிகிச்சைக்காக
டாக்டர்களை அணுகினார்.
அமெரிக்காவிலேயே முதன்முதலாக இந்த சிகிச்சையை செய்து
கொள்பவர் இவர் தான். டாக்டர்களும் இவருக்கு முக மாற்று
ஆபரேஷன் செய்ய திட்டமிட்டனர். முதல் கட்டமாக அவருக்கு சில
பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அப்போது அவரது முகத்தை
மாற்றுவதில் பல மருத்துவ சிக்கல்கள் இருப்பது தெரிய
வந்தது. மேலும் இதை விட மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஒருவரது
முகத்தை மாற்றுவது தான் சிறந்ததாக இருக்கும் என்றும்
தெரிவித்தனர். எனவே தற்போது வேறு ஒரு நபரை இந்த
ஆபரேஷனுக்காக தேடிக்கொண்டு இருக்கின்றனர்.
டாக்டர் மரியா சீமியோனோவ் இது தொடர்பான ஆய்வுகளில்
தீவிரமாக இருக்கிறார். முழு முக மாற்று சிகிச்சையை
செய்யும் போது முகத்தில் ஏற்படும் இரத்த ஓட்டத்தின்
நிலையைப் பற்றி தற்போது ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.
இரத்த ஓட்டம் தடைபட்டால் என்ன நிகழும் என்பதைப் பற்றி
அவரும் அவருடைய குழுவினரும் முக்கியமாக ஆராய்கின்றனர்.
இந்த சோதனையில் எலியை உட்படுத்தி ஆய்வுகள் நடத்தப்பட்டு
வருகிறது. மேலும் இறந்த ஒரு உடலில் இருந்து மற்றொரு
உடலுக்கு ஒரு உறுப்பை மாற்றுவது பற்றியும் சோதனையை
டாக்டர்கள் தற்போது மேற் கொள்கின்றனர்.
ஆனால் உயிருள்ள ஒரு மனிதனிடமிருந்து உடல் உறுப்பை ஆபரேஷன்
செய்து எடுத்து அதை மற்றொருவருக்கு பெருத்துவது என்பது
நீண்ட நேரம் ஆகும் என்பது அவர்கள் அறிந்த விஷயம் தான்.
ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் சீனாவில் இதுபோன்று சில அறுவை
சிகிச்சைகளை நடத்தி உள்ளனர். மிருகங்களால் தாக்கப்பட்டு
முகத்தில் சிறிய அளவில் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆபரேஷன்
செய்து பாதிக்கப்பட்ட பகுதிகளை மாற்றி அமைத்துள்ளனர்.
சீனாவில் கரடியினாலும், பிரான்ஸில் நாயினாலும்
தாக்கப்பட்டு முகம் சிதைந்தவர்களுக்கு இந்த முக உறுப்பு
மாற்றப்பட்டிருக்கின்றது. பிரான்சில் இசபெல்லா என்ற பெண்
மணிக்கு மூக்கை மாற்றி அமைத்திருக்கின்றார்கள்.
'முழு முகமாற்று சிகிச்சைக்குப் பின் முகத்தினுடைய இயக்கம்
எப்படி இருக்கும் என்பது இன்னும் ஆராய்ச்சியாளர்கள்
முழுவதுமாக கண்டுபிடிக்க வில்லை", என்கிறார் மரியா
சீமியோனோவ். க்ளேவ்லாண்ட் மருத்துவ ஆராய்ச்சி நிலைய
டாக்டர்கள் உணரி மாற்றப்பட்ட முகத்தில் உணரி நரம்புகளை
இணைப்பு ஏற்படுத்துவார்கள். ஆனால் இது இயல்பாக
பொருத்தப்பட்டவரின் தன்மைக்கு இயங்க நீண்ட நேரம்
எடுக்கின்றது.
சில சமயம் புதிய முகத்தைப் பெறுபவருடைய உடல் புதிய உறுப்பை
ஏற்பதற்கு தகுந்தவாறு ஒத்துழைக்காது. இதனால் சிறுநீரகம்
போன்ற சில உள்ளூறுப்புகளில் கூட பாதிப்பு ஏற்படலாம்.
இருந்தாலும் ஆராய்ச்சியாளர்கள் இதனைக்களையும் முயற்சியில்
தீவிரமாக இருக்கின்றார்கள் என்பது உறுதி. மரியா சீமியோனோவ்
கூறுகையில், "உறுப்புப் பெறுபவரின் உடலும் நல்ல ஆரோக்கிய
நிலையில் இருக்க வேண்டும்'' என்கிறார்.
"இந்த முறைகளில் வெற்றி கண்டு விட்டால், இனி முழு முக
மாற்று சிகிச்சைக்கு பச்சைக்கொடி தான்'' என்கிறார் மரியா
சீமியோனோவ்.
இரத்த தானம் என்றாலே பயந்த காலங்களெல்லாம் உண்டு. அதற்குப்
பின் கண்தானம், கிட்னி தானம் என அறிவியல் உலகம்
முன்னேறிவிட்டது. அதெல்லாம் இப்பொழுதெல்லாம் சாதாரண
விஷயமாகிவிட்டது.
ஆனால் முழு முகத்தையே மாற்றுவது என்பது சிக்கலான விஷயம்
தான். ஏனென்றால் கண், காது, மூக்கு, வாய், மூளை என
அனைத்தும் வாழ்விற்கு மிக மிக முக்கியமான உறுப்புகள் உள்ள
இடம். ஒவ்வொன்று இன்றியமையாதது.
இதில் வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால்
எதையும் சாதிக்க வல்ல அறிவியல் உலகம் இதில் வெற்றி பெறும்
என்பது உறுதி.
இருந்தாலும் இறைவன் கொடுத்த இயற்கையான அழகிற்கு செயற்கை
பொருத்தமாக இருக்குமா? என்றால் அது சந்தேகம் தான்.
இயற்கையுடன் போட்டி இருந்து கொண்டு தான் இருக்குமே தவிர
முழுவதும் வெல்ல முடியுமா என்பது சந்தேகம் என்றாலும்
விஞ்ஞானிகளின் முயற்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
(அதிசயம் தொடரும்)
|