|
'வரும் முன் காப்போம்' என்றாலே அது எந்தவகை இடரும் வரும் முன்
காப்போம் என்பதைத் தான் குறிக்கும். பொதுவாக இந்த வாக்கியத்தைக்
கேட்டால் நோய் வரும்முன் காப்போம் என்பது பற்றித்தான் என்று
அனைவரும் சொல்வார்கள். ஏனென்றால் நோய் வரும்முன் சில அறிகுறிகள்
தென்படும். அதாவது 'யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே'
என்பதைப் போல. நோய்க்கான அறிகுறி தென்பட்டவுடன் அப்போதே தேவையான
வைத்தியம் செய்து களை எடுத்துவிட்டால் நோயிலிருந்து தப்பிப்பது
மட்டுமல்ல, இறப்பையும் தள்ளிப்போடலாம்.
எந்த
நோயை எடுத்துக்கொண்டாலும் சில அறிகுறிகள் தென்படும். அல்லது
மருத்துவர்கள் சோதனையின் மூலம் கண்டறிந்து விடுவார்கள். உதாரணமாக
மாரடைப்பு, சர்க்கரை வியாதி, சிறுநீரகக் கோளாறு இவை
ஒவ்வொன்றிற்கும் சில ஆரம்ப அறிகுறிகள் தென்படும். இதை வைத்தே
நமக்கு வந்துள்ள நோய் என்னது என்று அறிந்து கொள்ள முடியும். உடனே
உரிய மருத்துவ சிசிச்சைகள் மூலம் தற்காத்து கொள்ளலாம். ஆனால் இதில்
புற்று நோய் மட்டும் சற்று வித்தியாசமானது. இதனால்தான் புற்றுநோய்
புதிர்நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோய் எப்படி தாக்கியது
அல்லது நோய் தொற்றிக் கொள்ள காரணங்கள் சில சமயம் ஒரு புரியாத
புதிர்தான்.
இன்றைய மருத்துவ உலகில் புதுப்புது ரகங்களில் புற்று நோயின்
தாக்கம் உள்ளது. உதாரணமாக மார்பகப் புற்று நோய், மூளைக் கட்டிகள்
என்று பலவகைகளில் மனிதனை ஒரு கை பார்த்துவிடுகிறது. சில சமயம்
உயிரை பறித்துக் கொள்ளும் அளவுக்கு இதன் தாக்கம் அதிகம் இருக்கும்.
இது மாதிரியான நோய்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு கடும்
சவாலாக உள்ளது. இதனால் புற்று நோய் பற்றிய பயம் மக்கள் மனதில்
இருந்து கொண்டுதான் உள்ளது. பெரும்பாலும் புற்றுநோய் அதன்
அறிகுறியே தென்படாமல் கொரில்லா தாக்குதல் போல் முற்றிய நிலையில்
தாக்கிவிடும். இதன்பிறகு அதற்கு சிகிச்சை அளிப்பது பயனற்று போய்
மருத்துவர்கள் கை விரித்துவிடுவார்கள்.
புற்றுநோய்
எப்படி? ஏன்? யாருக்கு வரும்? என்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்து
கொண்டுதான் இருக்கின்றது. உலகில் ஏராளமானோருக்கு எளிதில் தென்படாத
நிலையில் புற்றுநோய் தாக்கியிருக்கின்றது. இதில் வசதிபடைத்தவர்,
ஏழை என்ற வித்தியாசம் இல்லை. இப்படி தாக்கிய புற்றுநோய்கள்
திடீரென்று முற்றிய நிலையில் மாறி உயிரை காவு
வாங்கியிருக்கின்றன. எவ்வளவு காசு இருந்து என்ன பயன்?
புற்றுநோய் இருந்ததை கண்டுபிடிக்க முடியவில்லையே! என்று
சொல்வோர்களும் உள்ளனர். ஆனால் அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக
விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து இடைவிடாது ஆராய்ச்சிகளை
மேற்கொண்டுள்ளனர். அதற்கு கைமேல் பலனும் கிடைத்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள Massachusset Institute of Technology-யில் உள்ள
ஆராய்ச்சியாளர்கள் ஒரு நூதன முறையின் மூலம் புற்று நோயை அறியும்
முறையை கண்டறிந்துள்ளனர். இப் பல்கலைகழகத்தின் பேராசிரியர் சங்கீதா
பாட்டியா என்பவர். இவர் தனது மாணவர்களுடன் புற்றுநோய் பற்றிய
ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதாவது வேதிப்பொருட்கள் கலந்த
நுண்துகள்களை உடலில் செலுத்துவதன் மூலம் புற்றுநோயை அறிய முடியும்
என்பதை கண்டறிந்தார். மேலும் அதே முறையில் சிகிச்சையும் அளிக்க
முடியும் என்றும் நிரூபித்தார்.
இதற்காக விலங்குகளுக்கு ஊசி மூலம் நுண்துகள்களை செலுத்தப்படும்
சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நானோ என்றால் ஒரு மீட்டரில் பலகோடி
மடங்கு சிறியது என்பது பற்றி முந்தையக் கட்டுரைகளில்
விவரித்திருக்கின்றோம்.
நொதிப்பொருட்களுடன் கூடிய இந்த நுண்துகள்கள் ரத்த நாளங்களில்
சென்று ஆரம்ப கட்டத்தில் இருக்கும் புற்றுநோய் கட்டிகளின் நுண்
இடுக்குகளில் சென்று ஆராய ஆரம்பிக்கும். இவ்வாறு புற்றுநோய்
கட்டிகளின் இடுக்குகளில் சென்ற வேதி நுண்துகள்கள் ஒன்று சேர்ந்து
காந்த சக்திகளின் மூலம் Magnetic Resonance Imagine Machine (MRI)
எனப்படும் இயந்திரத்திற்கு புற்றுநோயை பற்றிய துல்லியமான படத்தை
அனுப்பும். இதன் மூலம் புற்றுநோயின் தன்மை, எப்பொழுது உருவானது
என்பதையெல்லாம் அறிய முடியும்.
நுண்துகள்களாக
சென்ற நொதிப்பொருட்கள் (வேதிப்பொருட்கள்) ஒன்று சேர்வதால் அதிகமான
காந்த சக்தியை பெறுகிறது. இதனால் புற்றுநோயை ஆராய்வது சுலபமாவதுடன்
துல்லியமான விவரமும் கிடைக்கிறது. இதுபற்றி ஆராய்ச்சியாளர் சங்கீதா
பாட்டியா கூறுகையில், 'ஊசி மூலம் நாங்கள் இந்த நுண்துகள்களை உடலில்
செலுத்துகிறோம். இவ்வாறு உடலில் சென்ற நுண்துகள்கள் ஒன்றுசேர்ந்து
புற்றுநோய் கட்டிகளில் உள் நுழைந்து அல்லது இடுக்குகளில் ஊடுருவி
ஆராய்கிறது. இவ்வாறு ஒன்று திரண்ட நுண்துகள்கள் கட்டியிள் உள்ளே
ஊடுருவுவதால் திரையில் துல்லியமான படங்களுடன் விவரங்கள்
தெரிகிறது'', என்கிறார். சங்கீதா பாட்டியா Health Science &
Technology யில் மின்னியல் மற்றும் கணிப்பொறித் துறை பேராசிரியராக
பணியாற்றி வருகிறார். மேலும் இவர்
MIT&Harward Center of Cancer Nanotechnology Excellence
இவர் முக்கிய பங்கு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக இந்த நுண்துகள் சோதனை மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கு
பயன்படுத்தப்படுகிறது. இப்பொழுது ஏராளமான பெண்களுக்கு மார்பக
புற்றுநோய் தாக்கி இருக்கிறது. இதுபற்றி ஆராய்ச்சியாளர் பாட்டியா
கூறுகையில், 'முதலில் மார்பக புற்று நோய் பாதித்த பெண்களுக்கு
பயன்படுத்தப்படும். அதில் கிடைக்கும் முடிவுகள் நன்றாக ஆய்வு
செய்யப்படும். இந்த ஆய்வின் முடிவுகள் திருப்திகரமாக இருந்தால்
படிப்படியாக இச்சோதனை எல்லா வகை புற்றுநோய்களையும் கண்டறிய
பயன்படுத்தப்படும். மேலும் இந்த நானோ நுண்துகள்களின் மூலமே
வேதியியல் சிகிச்சை (Chemotherapy treatments) மற்றும்
கதிர்(Radiation) சிசிச்சையை மேற்கொண்டு புற்றுநோயை குணப்படுத்த
முடியும்'' என்றார்.
இந்த ஆராய்ச்சியில் பேராசிரியர் சங்கீத பாட்டியாவுடன்
அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக் கழக மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த அதிநவீன ஆராய்ச்சிக்கு அமெரிக்காவின் தேசிய புற்றுநோய்
கழகத்தின் (National Cancer Institute)
முழு ஆதரவும் இருக்கிறது. மேலும், இந்த ஆராய்ச்சியில்
ஈடுபட்டவர்கள் இந்த புதுமையான மருத்துவ முறைக்கு அதிகாரப் பூர்வ
உரிமமும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-எம்ஜேஎம் இக்பால்
அதிசயம் தொடரும்
|