
குழந்தைகள் என்றால் அவர்கள் மீது பிரியம் கொள்ளாதவர்கள்
யாரும் இருக்க முடியாது. அதே போல குழந்தைகளுக்கு
விளையாட்டு பொருட்கள் என்றால் கொள்ளைப்பிரியம் உண்டு.
குழந்தைகளும் அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டு பொருட்கள்
ஒரே இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும்.
அந்த இடத்தில் குழந்தைகளின் சந்தோஷ கூச்சலும்,
மகிழ்ச்சியும் கரைபுரண்டு ஓடத்தானே செய்யும்.
அப்படி குழந்தைகளை குதுகலிக்கச்
செய்யும் எந்திர பொம்மைகள் (ரோபோ) அதிக அளவில் தயாரிக்கப்
படுகிறது. அதாவது மனித உணர்வுகளை புரிந்து கொண்டு,
அவர்களின் கட்டளையை உணர்ந்து அதற்கு ஏற்ப செயல்படுவது
போன்ற திறன் உள்ள ரோபோக்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.
அத்தகைய ரோபோக்களில் ஒன்று 'குவாசி' என்று
பெயரிடப்பட்டுள்ள ரோபோ ஆகும். சமீபத்தில் அமெரிக்காவில்
உள்ள பிட்ஸ்பர்க் நகரில் இருக்கும் கார்னிஜ் மிலன்
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கண்காட்சியில் இந்த குவாசி ரக
ரோபோ குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது.
தனது உருண்டையான தலையை அசைத்து கண்கள் ஒளிர
பார்வையாளர்களிடம் வெகு சகஜமாக உரையாடியது குவாசி. இது
பார்வையாளர்களிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியதுடன்
அவர்களுடன் வந்த வாண்டுகளை மிகவும் குஷிப்படுத்தியது.
இந்த ரோபோவின் சிறப்பு என்ன என்றால் அது மனிதர்களிடம் உள்ள
பல்வேறு உணர்வுகளில் 5 வகையான உணர்வுகளை அழகாக
வெளிப்படுத்தும். கார்னிஜ் பல்கலைக்கழக மாணவர்கள்
உருவாக்கியுள்ள இந்த ரோபோ 76 சென்டி மீட்டர் உயரம்
கொண்டது. சுமார் 12 வயது நிரம்பிய ஒரு சிறுவனின் உணர்வுகளை
வெளிப்படுத்தும் வகையில் இந்த குவாசி ரோபோ
உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மனித உணர்வுகள் அவர்களின் கண்களிலும் அங்க
அசைவுகளிலும் வெளிப்படும். அதற்கு ஏற்ப குவாசியும் தனது
உணர்வுக்கு ஏற்ப அதன் கண்களில் வண்ண விளக்கு ஒளிரும், அதன்
அங்க அசைவுகளும் அமைந்து இருக்கும்.
அதாவது
மகிழ்ச்சியாக இருக்கும் போது குவாசியின் கண்கள் பச்சை
நிறத்தில் ஒளிரும். சோகமாக இருக்கும் போது நீல
நிறத்திலும், குழப்பத்தில் இருக்கும் போது மஞ்சள்
நிறத்திலும், கோபமாக இருக்கும் போது சிவப்பு நிறத்திலும்
அதன் கண்கள் ஒளிரும்.
அதோடு மட்டுமின்றி, அந்தந்த உணர்வுகளுக்கு ஏற்றவாறு தனது
உடலின் அசைவுகளையும் மாற்றிக்கொள்ளும் வகையில் குவாசி
உருவாக்கப்பட்டுள்ளது. தோள்களை உயர்த்தியும், குலுக்கியும்
தனது இயலாமையை வெளிப் படுத்துதல், கையை நீட்டி ஒரு பொருளை
சுட்டிக் காட்டுதல், தலையை திருப்பிக் கொள்ளுதல், மூக்கின்
மீது விரல் வைத்தல் போன்ற பணிகளையும் இது செய்யும்.
குவாசி ரோபோ மொத்தம் 32 வகையான உணர்வுகளை வெளிப்படுத்தும்
திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திறனை
வெளிப்படுத்துவதற்கு ஏற்ப அதன் இரண்டு காதுகள், இரண்டு
கண்கள், கை, கால்கள் ஆகியவற்றில் உணரி (சென்சார்) கருவிகள்
பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர அதன் கண்களில் சக்தி வாய்ந்த
சிறிய வீடியோ கேமிராவும் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் மைக்ரோபோன், ஆம்பிளிபையர், மிக்சர், சவுண்ட்
பிராசசர், கம்பியில்லா ஆடியோ ரிசீவர் போன்றவையும் இதில்
இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர 4 சிறிய கம்ப்யூட்டர்களும்
இதில் உண்டு. இந்த 4 கம்ப்யூட்டர்கள் தான் குவாசியின்
மூளையாக செயல்படுகிறது. மேலும் இந்த ரோபோவின் செயல்பாடுகளை
கட்டுப்படுத்துவதற்கு என்று தனி மென்பொருள் ஒன்றும்
உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது உணர்வுகளை வெளிப்படுத்தும்
வகையில் அதன் செயல்பாடுகள் இருக்குமாறு மென்பொருள் இயக்கம்
இருக்கும்.
உதாரணமாக நாம் குவாசி ரோபோ அருகே சென்றதும் அது 'ஹலோ'
சொல்லும். நாம் பதிலுக்கு 'ஹாய்' சொல்லா விட்டால் 'ஹலோ
உங்களைத் தானே...", என்று மீண்டும் பேச்சுக் கொடுக்கும்.
அதன்பிறகும் நாம் கவனிக்கவில்லை என்றால் குட்மார்னிங்
நண்பரே, என்னுடன் பேச விரும்புகிறீர்ளா? எனது பெயர்
குவாசி... நான் ஒரு ரோபோ...உங்களை நான் மகிழ்விக்கிறேன்...
என்ற ரீதியில் பேசும்.
இத்தனைக்கு
பிறகும் நாம் அதை கண்டுகொள்ளாமல் இருந்தால் குவாசி
வருத்தம் அடைந்து விடும். உடனே அதன் கண்கள் நீல நிறமாக
மாறிவிடும். தோள்களை சுருக்கிக் கொண்டு, தலையை தொங்கப்
போட்டுக்கொண்டு 'உம்' என்று
இருக்கும்.
இந்த செயல்களை செய்யும் அளவுக்கு அதில் உள்ள மென்பொருள்
உருவாக்கப்பட்டுள்ளது.
அதே போல சிறுவர்களுடன் விளையாடும் போது குவாசி தோற்று
விட்டால் கண்களை சிவப்பு நிறத்துக்கு மாற்றிக் கொண்டு
தலையை கவிழ்ந்து கொள்ளும்.
12 வயது சிறுவன் எப்படியெல்லாம் தனது கோபம், மகிழ்ச்சி,
சோகம், குழப்பம், ஆகியவற்றை வெளிப்படுத்துவானோ அது போல
குவாசியும் தனது கோபம், மகிழ்ச்சி, சோகம், குழப்பம்
ஆகியவைகளை தனது உடல் அசைவுகளின் மூலமாகவும் கண்களில்
ஒளிரும் நிறத்தினைக்கொண்டும் தனது நிலையினை மாற்றிக்
கொள்கிறது.
குவாசி ரோபோவை உருவாக்கிய ஆய்வுக்குழுவினர் கூறும்
போது....
விழாக்கள், நிகழ்ச்சிகள் நடைபெறும் போது அதில் கலந்து
கொள்ள வருபவர்களை வரவேற்று அவர்களுக்கு வாழ்த்து சொல்லும்
வகையில் இருக்குமாறு முதலில் குவாசியை உருவாக்கினோம்.
குவாசியை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து ஆய்வுகளை
உருவாக்கி வருகிறோம். மனித உணர்வுகளை புரிந்து கொண்டு
அதற்கு ஏற்ப செயல்படும் வகையில் இனி வரும்
கண்டுபிடிப்புகள் அமையும்.
வீடுகள், சிறிய அளவிலான அலுவலகங்கள் போன்றவற்றில் வரவேற்பு
பணிகளுக்கும், சிறுவர்களுடன் விளையாடவும் அவர்களுடன்
பொழுதைக்கழிக்கவும் குவாசியை பயன் படுத்தலாம்.
குவாசி ஒரு குழந்தையிடம் வித்தியாசமான தமாஷ் ஒன்றும்
செய்தது. அதாவது ஒரு சிறுமி, 'அன்பாக
பேசும் குவாசியே உனது குணாதிசயத்தை மாற்றிக்காட்ட உன்னால்
முடியுமா? என்று குறும்பு செய்தாள்.
குவாசியும் ஓ என்னால் முடியுமே. இதோ பார் என்று முகம்
மாறியது. தனது உடலை விரைப்பாக வைத்துக்கொண்டு, கைகளை
கோபமாக தூக்கிக் கொண்டு 'நான்
தான் உனது கோபக்கார தந்தை' என்று சத்தமாக கூறியது.
பொதுவாக குழந்தைகள் மீது கோபம் வரும் போது ஒரு தந்தையின்
உடல் அசைவுகள் எப்படி இருக்குமோ? அது போல குவாசி
நடித்துக்காட்டி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.
இது
போன்ற கண்டுபிடிப்புகள் எல்லாம் சும்மா வேடிக்கை
வினோதங்களுக்கு மட்டும் தானா? என்று நினைத்தால் அது தவறு.
'ஆர்டிபீசியல் இன்டலிஜென்ஸ்'
எனப்படும் செயற்கை புத்திசாலித்தனம் தொடர்பான ஆய்வின்
முன்னோடி தான் இது போன்ற தமாஷ் கண்டுபிடிப்புகள் எல்லாம்.
மனிதனைப் போன்ற புத்திசாலித்தனத்துடன் செயல்படும் வகையில்
எந்திர மனிதனை உருவாக்க வேண்டும் என்பது தான் ரோபோ
ஆராய்ச்சியாளர்களின் திட்டமாகும். அதற்கான ஆரம்பக் கட்ட
முயற்சிகள் தான் இந்த குவாசி போன்ற ரோபோக்கள்.
(அதிசயம் தொடரும்)
'ஓடுகாலி" ரோபோ
ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே
இருக்கும் குழந்தைகளை சரியான ஓடுகாலி குழந்தை', என்று
கிராமப் பகுதிகளில் செல்லமாக சொல்லுவதுண்டு. (ஓடும்
கால்களை கொண்ட குழந்தை என்பது மருவி ஓடுகாலி
குழந்தையாகிவிட்டது).
படத்தில் நீங்கள் காண்பதும் அது போல ஒரு 'ஓடுகாலி ரோபோ"
தான்.
இதுவரை
உருவாக்கப்பட்ட ரோபோக்கள் எல்லாம் நடக்கும், படி ஏறி
இறங்கும், சிறிய உயரமான தடையைத்தாண்டி நடக்கும், எடை
தூக்கும், சைக்கிள் ஓட்டும், இசைக்கருவிகளை வாசிக்கும்
வகையில் தான் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஆனால் படத்தில் காணும் 'மனோய்" ரக ரோபோ அட்டகாசமாக ஓடும்.
சுமார் ஒன்றரை கிலோ எடையும் 34 சென்டி மீட்டர் உயரமும்
கொண்ட இந்த ரோபோவில் 17 வகையான உணரி (சென்சார்) கருவிகள்
பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கட்டளைக்கு ஏற்ப ஓடும்
வகையில் இதில் கம்ப்யூட்டர் மென்பொருள் உள்ளீடு
செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருக்கும்
இந்த ஓடுகாலி ரோபோவின் விலை சுமார் 60 ஆயிரம் ரூபாய்கள்
தான்.
(அதிசயம் தொடரும்)
எம்.ஜே.எம்.இக்பால்
|