அறிவியல் அதிசயம் - MJM Iqbal

09-09-2006

Refer to Your Friends

செயற்கை மனிதன் தோன்றுவானா?



விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி வருங்காலத்தில் மனிதர்களை புதிய யுகம் ஒன்றுக்கே அழைத்து செல்லும் என்கின்றனர். அதில் செயற்கை மனிதனை உருவாக்கும் பிரம்மாக்களாக விஞ்ஞானிகளே மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் அந்த நிலையை அடையும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்கிறது இப்போது வெளி வந்துள்ள ஆராய்ச்சி முடிவுகள்.

இயற்கையான முறையில் செயல்படக்கூடிய கண்கள் மற்றும் கைகளின் செயல்பாடுகள் பற்றிய ஆராய்ச்சி ஒருபுறம் நடைபெற்று வெற்றியடைந்த நிலையில் இப்பொழுது கழுத்திற்கு கீழ் உள்ள பகுதிகளைப் பற்றி ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதாவது கழுத்திற்கு கீழ் உள்ள செயல்பாடுகளை இழந்த ஒரு முழு மனிதனையே இயங்க வைக்கும் முயற்சிதான் அந்த ஆராய்ச்சி. அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் டொனாகியூ என்பவரின் தலைமையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் ஓரளவிற்கு வெற்றியும் கிடைத்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் முடிவுகளைப் பற்றிய விவரங்களைப் பின்வருமாறு காணலாம்.

25 வயதே நிரம்பிய மேத்யு நேகிள் என்ற இளைஞருக்கு கழுத்துப்பகுதி காயம் அடைந்தது. இதில் அவருடைய தண்டுவடம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் அவருடைய கழுத்துக்கு கீழ் உள்ள உறுப்புகள் சரிவர இயங்கவில்லை. பக்கவாத நோயும் வந்துவிட்டது. இளம் வயதில் நோயினால் அவதிப்பட்டு வந்த மேத்யு நேபிளின் பரிதாப நிலையை போக்க விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள எண்ணினர். இதற்காக பேராசிரியர் டொனாகியூ தலைமையிலான குழு களம் இறங்கியது.

முதலில் மேத்யூ நேபிளின் தலையில் சிறிய துவாரம் இடப்பட்டது. அந்த துவாரத்தின் வழியாக முடியை விட மிகவும் மெல்லிய, நூற்றுக்கணக்கான எலக்ட்ராடுகள் செலுத்தப்பட்டன. அந்த எலக்ட்ராடுகள் மூளையில் உள்ள ஒரு பகுதியில் 1 மில்லிமீட்டர் அளவிற்கு செருகப்பட்டன. இதன் பின்னர் எலக்ட்ராடுகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, அவரின் தலையில் பொருத்தப்பட்டுள்ள டைட்டானியம் பொத்தானுடன் இணைக்கப்பட்டது. இதோடு மட்டுமில்லாமல், மூளையின் அதிர்வுகளை அறிந்துகொள்வதற்காக மூளைக்கு கீழ் ஒரு உணரியும் (சென்சார்) பொருத்தப்பட்டது.

டைட்டானியம் பொத்தான் ரெப்ரிஜிரேட்டர் அளவில் உள்ள கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டது. இந்த கம்ப்யூட்டரிலிருந்து ரோபோ கை ஒன்றும் சேர்க்கப்பட்டது. இந்த ரோபோ கையானது மிகவும் மெதுவாக இயங்கக்கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதாவது மணிக்கு 15 வார்த்தைகள் வேகத்தில் தட்டச்சு செய்யக்கூடிய அளவிற்கு அமைக்கப்பட்டிருந்தது.



நாம் சிந்திக்கும் பொழுது தோன்றுகின்ற நியூரான்கள் எவ்வாறு உடல் உறுப்புகளுக்குச் சென்று அதனை இயங்க வைக்கிறதோ, அதே போன்று மேத்யூ நோபிள் சிந்திக்கும் பொழுது தோன்றக்கூடிய நியூரான்கள் மூளையில் செருகப்பட்டிருந்த எலக்ட்ராடுகள் மூலமாக, தலையின் மேற்பரப்பில் பொருத்தப்பட்டுள்ள டைட்டானியம் பொத்தானுக்கு சென்று அதன் வழியாக கம்ப்யூட்டருக்கு சிக்னல்களாக மாற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.

கணினிக்கு வரக்கூடிய சிக்னல்கள் கம்ப்யூட்டர் மொழிக்கு மாற்றப்பட்டன. இதனைக் கொண்டு தங்கள் ஆராய்ச்சிக்கு வேண்டிய விவரங்களை விஞ்ஞானிகள் பெற்றனர். மேத்யூ நேபிளின் உடல் நிலை செயல்பாட்டையும் அறிந்து கொண்டனர். சிக்னல்கள் கம்ப்யீட்டர் மொழிக்கு மாற்றப்படுவதற்கு ஒரு புதிய உத்தி ஒன்றை செயல்படுத்தினார்கள். அதாவது மேத்யூ நேபிள், ஒரு பாட்டிலை எடுக்கவேண்டும் என்கிற ஒரு கட்டளையை நினைத்தால், அந்த கட்டளை எந்த வகையான சிக்னல்களாக கம்ப்யீட்டர் பெறுகிறது என்பதை ஆராய்ந்தனர். இப்படி பல கட்டளைகள் ஆய்வு செய்யப்பட்டு சிக்னல்கள் உருவாக்கப்பட்டது. இதனைக் கொண்டு மென்பொருள் ஒன்று தயாரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கம்ப்யூட்டர் இயக்கத்தை அறிந்து கொண்டனர். ஆனால் இந்த மென்பொருளானது குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே சைகைகளை பெற்று அதனை கட்டளைகளாக மாற்றும். ஏனெனில், மேத்யூ நேபிள் நினைக்கக்கூடிய கட்டளைகளால் தோன்றக்கூடிய அத்தனை சிக்னல்களையும், பொருத்தப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான எலக்ட்ராடுகளால் உணர்ந்து கணினிக்கு அனுப்ப முடியவில்லை.



மனிதன் ஒரு செயலை நினைக்கும் பொழுது ஆயிரக்கணக்கான சிக்னல்கள் தோன்றுகின்றன. அவைகள் அனைத்தையும் உணரக்கூடிய அளவிற்கு பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ராடுகள் போதுமானதாக இல்லை. மேலும் போதுமான எலக்ட்ராடுகளை பொருத்தி அனைத்து சிக்னல்களையும் உணர்ந்தால் கூட, அவைகள் எந்த கட்டளைக்குரியது என்பதனை கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இது போன்ற கட்டளைகளை கண்டறிவதற்காக பல ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

எனவே மேத்யூ நேபிள் நினைக்கும் ஒரு சில கட்டளைகள் மட்டும் சிக்னல்களாக மாற்றப்பட்டு கம்ப்யூட்டருக்கு சென்றடைகிறது. இதன்பின்னர் தகவல்கள் கம்ப்யீயூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள ரோபோ கைக்கு செல்கிறது என்பதை முன்னதாகவே பார்த்தோம். எடுத்துக்காட்டாக ரோபோ கையின் மூலமாக டி.வி. ரிமோட்டை இயக்குவது, கம்ப்யூட்டரில் மின்-அஞ்சல் அனுப்புவது, கம்ப்யூட்டருடன் விளையாடுவது, தேவையான பொருளை எடுப்பது போன்ற செயல்களை மேத்யூ நேபிளால் நிறைவேற்றிக் கொள்ளமுடியும். பொதுவாக ரோபோ கைகளின் அசைவானது சற்று மெதுவாகவே இருக்கும். ஆனால், இந்த ரோபோ கையினை இயற்கையான கைகள் சாதாரணமாக இயங்கக்கூடிய வேகத்தின் அளவிற்கு செயல்படும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஆராய்ச்சி ஆபத்தில் முடியும் என்று சில சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் என்னவெனில், மனிதனின் சிந்தனைகளை செயல்படுத்தக்கூடிய ரோபோக்கள் அல்லது ரோபோ கைகள் உருவானால், அதனை சமூக விரோதிகள் தவறான காரியங்களுக்கு பயன்படுத்தக்கூடும். இது ஆபத்தில் முடியவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறி உள்ளனர்.

இந்த ஆராய்ச்சி முற்றிலுமாக வெற்றி அடைத்து விட்டது என்று கூறமுடியாது. ஏனெனில், எலக்ட்ராடுகள், சில குறிப்பிட்ட காலங்களுக்கு பின் அதன் செயல்திறனை இழக்கக்கூடும், அவ்வாறு இழந்தால், எந்தவகையான சிக்னல்களையும் அறிந்து கொள்ள முடியாது. மேலும், எலக்ட்ராடுகள் மூளையின் மேற்பகுதியில் செருகப்பட்டிருப்பதனால், நீண்ட காலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்றும் கூற முடியாது. இதன் காரணமாக புதிய நோய்கள் தோன்றக்கூடிய அபாயங்களும் உள்ளன என்று சில ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

பலரும் பலவாறாக கருத்துக்கள் கூறிக்கொண்டிருந்தாலும், இந்த குழுவின் ஆராய்ச்சி தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. குழுவின் தலைவர் டொனாகியூ கூறுகையில், "ஒரு சில மனித கட்டளைகளை சிக்னல்களாகப் பெற்று செயல்படுத்தும் வகையில் நாங்கள் வெற்றிகண்டுள்ளோம். இன்னும் பலதரப்பட்ட கட்டளைகளை அறிந்து கொள்ளும் விதத்தில் எங்கள் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டு இருக்கிறது. தற்போது ரோபோ கைகளின் உதவியோடு செயல்களை நிறைவேற்றிக்கொள்வதிற்கு பதிலாக, இயற்கையான உடல் உறுப்புகளையே இயங்க வைக்கும் அளவிற்கு எங்களின் ஆராய்ச்சி தீவிரமடைந்துள்ளது. அதாவது மூளையிலிருந்து சைகைகளை ரோபோ கைக்கு கொடுப்பதற்கு பதிலாக, அந்த சைகைகளை தசைகளுக்கு ஏற்றவாறு கொடுத்து இயற்கை உறுப்புகளையே இயங்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்று உறுதியாக கூறுகின்றார் டொனாகியூ.

விஞ்ஞான வளர்ச்சி என்பது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், இயற்கையுடன் விஞ்ஞானம் போட்டி போடும் பொழுது செயற்கை மனிதன் தோன்றவும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அதன் முடிவு எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதிசயம் தொடரும்...

 

 

http://www.dailythanthi.com/Irmalar/home/second_page.asp?issuedate=9/9/2006&secid=76