அறிவியல் அதிசயம் - MJM Iqbal

16-09-2006

Refer to Your Friends

உயிர் காக்கும் ஸ்டெம் செல்


துடிப்பான விளையாட்டுக்களில் குறிப்பிடத்தக்கது கால்பந்து. இரு தரப்பு அணி வீரர்களும் கோல் போடும் முனைப்புடன் பந்தை கடத்திச் செல்லும் அதிரடி ஆட்டம் பரபரப்பு மிகுந்தது. உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்களைக்கொண்ட விளையாட்டு கால்பந்து ஆட்டம் என்றால் அது மிகையாகாது.

விறுவிறுப்பு நிறைந்த கால்பந்து ஆட்டத்தில் ஈடுபடும் வீரர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதும் சகஜம். இதன் காரணமாக அவர்களால் விளையாட முடியாமல் போவதும் உண்டு. இன்னும் சிலர் காயம் காரணமாக தொடர்ந்து கால்பந்து ஆட முடியாமல் போகும் நிலையும் ஏற்படும்.

இது போன்ற நிலையில் கால்பந்து வீரர்களுக்கு உதவ நவீன மருத்துவம் முன் வந்துள்ளது. அதாவது "தொப்புள் கொடி உறவு'' அவர்களுக்கு மறு வாழ்வு கொடுக்கப்போகிறது. இது பற்றிய விவரம் வருமாறு:-

'ஸ்டெம் செல" தோற்றம்
ஒரு தாயின் கருவில் வளரும் போது அந்த குழந்தைக்கும் தாய்க்கும் இணைப்பு பாலமாக இருப்பது 'தொப்புள் கொடி' ஆகும். இந்த தொப்புள் கொடி மூலம் தான் குழந்தைக்கு உணவு மற்றும் பிற உயிர்காக்கும் வசதிகள் கிடைக்கிறது. குழந்தை பிறக்கும் போது தொப்புள் கொடி கழிவுப் பொருளாக கருதப்பட்டு வந்தது. ஆனால் இதில் முக்கியமான மருத்துவ குணம் உள்ளது என்று மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். '்டெம் செல்' ஆராய்ச்சிக்கு தொப்புள் கொடி முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒரு குழந்தை பிறக்கும் போது அதனுடன் கிடைக்கும் தொப்புள் கொடியை பாதுகாத்து வைப்பதன் மூலம் எதிர்காலத்தில் அந்த குழந்தைக்கு ஏற்படும் நோய் ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க முடியும் என்பது நவீன விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பாகும். இதைத்தொடர்ந்து மேலை நாடுகளில் தொப்புள் கொடி மற்றும் அதில் இருந்து கிடைக்கும் 'ஸ்டெம் செல்" ஆகியவற்றை ஆய்வுக்கூடத்தில் பாதுகாத்து வைக்கும் முறை பிரபலம் அடைந்து வருகிறது. நமது நாட்டிலும் சென்னை உள்பட பிற முக்கிய நகரங்களில் 'ஸ்டெம் செல்' பாதுகாப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கிலாந்து நாட்டில் உள்ள கால்பந்து வீரர்கள் தங்களது குழந்தைகளின்

ஸ்டெம் செல்களை பாதுகாத்து வைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் மூலம் எதிர்காலத்தில் அவர்களுக்கு ஏதாவது உடல் ரீதியான கோளாறு ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க முடியும் என்பது மட்டுமின்றி தங்களுக்கும் அது பயன்படும் என்பதை உணர்ந்துள்ளனர்.



பொதுவாக கால்பந்து வீரர்களுக்கு அதிகமாக ஏற்படும் பாதிப்பு தசை நார்கள் கிழிந்து போதல் மற்றும் கால் மூட்டு மற்றும் தசைப்பகுதிகளை இணைக்கும் 'ஜவ்வு" பகுதி பாதிக்கப்படுதல் ஆகியவை ஆகும். இந்த பாதிப்புகளுக்கு அறுவை சிகிச்சை மற்றும் பிசியோதெரபி போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இருப்பினும் இந்த சிகிச்சை மூலம் அவர்களால் முழுமையாக குணம் அடைய முடியாது. இதற்கு 'ஸ்டெம் செல்' மூலம் சிகிச்சை அளித்தால் முழுமையான குணம் கிடைக்கும் என்பது நவீன மருத்துவத்தின் கண்டுபிடிப்பாகும். இந்த 'ஸ்டெம் செல்'  சிகிச்சைக்கு சம்பந்தப்பட்ட வீரரின் குழந்தையின் தொப்புள் கொடி மிகவும் உதவியாக இருக்கும். இதை அறிந்துள்ள இங்கிலாந்தில் உள்ள முன்னணி கால்பந்து வீரர்கள் தங்களது குழந்தைகளின் 'ஸ்டெம் செல்'களை சேகரித்து வைப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இதன் மூலம் எதிர்காலத்தில் தங்கள் குழந்தைகளுக்கு பாதிப்பு வந்தாலும், அல்லது தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு வந்தாலும் அதற்கு சிகிச்சை பெற உதவியாக இருக்கும் என்று நம்புகின்றனர்.இங்கிலாந்து நாட்டைப்பொறுத்த அளவில் இது வரை 11 ஆயிரம் பெற்றோர் தங்களின் குழந்தைகளின் 'ஸ்டெம் செல்'களை சேகரித்து வைத்துள்ளனர். இதற்காக கட்டணமாக மட்டும் அவர்கள் 2 கோடி ரூபாய் செலுத்தி உள்ளனர்.


வந்துவிட்டது ஹைட்ரஜன் ரெயில்


இதுதான் முதல் ஹைட்ரஜன் ரெயில் :
நீராவி மூலம் இயங்கும் ரெயில் எஞ்சின்கள் இன்று பொருட்காட்சியில் வைக்கக்கூடிய அளவிற்கு பழமை வாய்ந்ததாக ஆகிவிட்டன. வரும் காலங்களின் டீசல் மூலம் இயங்கும் எஞ்சின்களையும் பொருட்காட்சியில் வைக்கக்கூடிய அளவிற்கு விஞ்ஞானத்தின் வளர்ச்சி இருந்து கொண்டிருக்கின்றது.

மின்சாரத்தினால் இயங்கும் தொடர்வண்டிகள், காந்த சக்தியினைக்கொண்டு இயங்கும் தொடர் வண்டிகள் (ரெயில்) என கண்டுபிடிப்புகள் வளர்ந்து கொண்டே வருகின்றன. அந்த வரிசையில் உருவாகியுள்ள புதிய கண்டுபிடிப்புதான் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் தொடர் வண்டியாகும்.

இன்றைக்கு திரவ எரிபொருள்களாக நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு அத்தியாவசியமான பொருளாக டீசல், பெட்ரோல் போன்றவைகள் வந்து ஒட்டிக்கொண்டு நமது பணத்தையும் எரித்துக்கொண்டிருக்கின்றன. அதோடு மட்டுமல்லாமல், சுற்றுப்புற சூழலையும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கி கொண்டுள்ளது. இதோடு விட்டதா? இல்லை. விலைமதிக்க முடியாத மனித உயிர்களையும் காவு வாங்கியுள்ளது. இந்த எரிபொருள்களுக்காக நாடுகளுக்கிடையே பெரிய அளவில் சண்டைகள் மூண்டு பல உயிர்கள் பலியானது நமக்கெல்லாம் தெரிந்ததே.

ஹைட்ரஜன் -ஏர் செல்

இவைகளுக்கெல்லாம் விடிவு காலம்தான் என்ன? ஒரு முடிவு வரவேண்டாமா? இதோ வந்து விட்டது. ஆம். விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் ஒரு மைல் கல் என்று கூட சொல்லலாம். அதுதான் ஹைட்ரஜன் சக்தியினைக் கொண்டு இயங்கும் தொடர் வண்டியாகும். எப்படி அது இயங்குகிறது என்று பார்ப்போம்.

நீரில் இரண்டு பங்கு ஹைட்ரஜனும் ஒரு பங்கு ஆக்ஸிஜனும் இருக்கின்றது. இந்த நீரிலிருந்து ஹைட்ரஜனை மட்டும் தனியே பிரித்தெடுத்து அதனை செல்களில் (பேட்டரி) சேகரித்துவைத்து அந்த செல்களின் மூலமாக மோட்டார்களுக்கு மின்னூட்டம் அளிக்கப்பட்டு அதன்மூலம் இந்த ஹைட்ரஜன் தொடர் வண்டி இயக்கப்படுகிறது.

நீரிலிருந்து ஹைட்ரஜனை பிரித்தெடுப்பதற்கு தேவையான மின்சாரம் காற்றாலைகள் மூலமாக பெறப்படுகிறது. அந்த மின்சாரத்தின் மூலமாக, நீரிலிருந்து ஹைட்ரஜன் தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது. பின்னர் அது திரவ நிலையில் சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட ஹைட்ரஜன், செல்களில் அடைக்கப்படுகின்றன. பின்னர் இந்த செல்களில் காற்று செலுத்தப்பட்டு அதன் மூலம் மின் சக்தி பெறப்படுகிறது. இந்த மின் சக்தியானது தொடர் வண்டி இயங்குவதற்குண்டான மின்சாரத்தை மோட்டாருக்கு செலுத்தி மோட்டாரை இயங்கச்செய்கிறது. இந்த மோட்டாரின் மூலமாக தொடர்வண்டி இயக்கம் பெறுகிறது.


இப்பொழுது தயாரிக்கப்பட்டுள்ள 109 மெட்ரிக் டன் திறன்கொண்ட இந்த தொடர்வண்டியானது, ராணுவ கனரக வாகனங்களை கொண்டு செல்ல வசதியாக அமைந்துள்ளது. 1.2 மெகாவாட் மின்சாரத்தை இந்த தொடர்வண்டியிலிருந்து பெறமுடியும். அவசர கால நெருக்கடி நேரங்களில் இந்த தொடர்வண்டியிலிருந்து மின் சாரத்தை பெற்று பயன்படுத்திக் கொள்ள முடியும்.

காத்ரினா, ரீட்டா போன்ற புயல், மழை மற்றும் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு, மின்பாதிப்பு உண்டாகும் சமயங்களில் இந்த தொடர்வண்டியிலிருந்து பெறப்படும் மின்சாரத்தை சுமார் 1000 வீடுகளுக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த ஹைட்ரஜன் ரெயில்கள் மூலம், பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களையும் எடுத்துச்செல்ல முடியும்.

ராணுவத்தின் பணிகள் மின்சாரம் இல்லாத பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பொழுது இதன் மூலம் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள இயலும். இதனால் ரணுவத்தில் இன்றியமையாத பணிகளை பாதிப்புக்குள்ளாகாமல் பார்த்துக்கொள்ள இயலும்.

சாதாரண செல்களில் மின்னூட்டம் செய்வதற்கு ஆகும் காலம் சுமார் 8 மணி நேரம் என்றால், இதில் (ஹைட்ரஜன்) 30 முதல் 45 நிமிடங்களில் மின்னூட்டம் செலுத்தி முழு சக்தியினையும் பெற முடியும். மேலும் இதனால் சுற்றுப்புற சூழல் பாதிப்புக்கு உள்ளாவதில்லை.

ஜப்பானை சேர்ந்த ஆர்.டி.ஆர்.ஐ என்கிற தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் இந்த ஹைட்ரஜன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி முதல் பயணிகள் ரெயிலை உருவாக்க திட்டமிட்டுள்ளது. ஜப்பானின் கிழக்கு ரெயில்வேத்துறை, இந்த ஹைட்ரஜன் தொடர் வண்டிக்குத் தேவையான மொத்த இயக்கு விசையில் மூன்றில் ஒருபங்கு சக்தியினை வேறு மோட்டார்களை இயக்குவதற்கு பயன்படுத்தும் வகையில் பயணிகள் ரெயிலை உருவாக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த திட்டம் முடிவடைந்து முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரெயில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய அளவிற்கு திறன்கொண்டதாக அமைவதோடு, கிட்டத்தட்ட 400 கி.மீ.வரை ஹைட்ரஜன் செல் ரீ-சார்ஜ் செய்யாமலேயே லெகுவாக இயங்கக்கூடிய தன்மை உடையதாக இருக்கும்.


ஜப்பான் கிழக்கு ரெயில்வேதுறை மலைக்குன்றுகளுக்கிடையே (நகோனா மற்றும் எமனாசி) இந்த ஹைட்ரஜன் ரெயிலை இயக்க திட்டமிட்டுள்ளது. இது 2007-ம் ஆண்டு மத்தியில் இயங்கக்கூடியதாக இருக்கும்.

டென்மார்க்கிலும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி 59 கி.மீ. து}ரம் கொண்ட மூன்று நகரஙகளை இணைக்கும் வகையில் இந்த தொடர் வண்டியினை இயக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான ஹைட்ரஜனின் பெரும் பகுதியினை காற்றாலைகளின் மூலமாக பெற திட்டமிடப்பட்டுள்ளது. 1 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மூலம் பெறப்படும் சக்தியிலிருந்து இரண்டு பெட்டிகள் கொண்ட தொடர் வண்டியினை இயக்க முடியும்.

2001- ம் ஆண்டு முதலே அதாவது இந்த திட்டத்தின் ஆரம்ப காலகட்டம் முதலே, ஹைட்ரஜன் ஆர்வலர்கள் மிக மலிவான சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த தொடர் வண்டி பற்றி ஆராயத் தொடங்கிவிட்டனர்.

இந்த ஹைட்ரஜன் ஆர்வலர்களைக்கொண்டு முதன் முதலில் கருத்தரங்கம் ஹைட்ரைல் 2005-ம் ண்டு நடத்தப்பட்டது. இதன் இரண்டாவது கருத்தரங்கம் இந்த ஆண்டு டென்மார்க் நாட்டில் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கம், இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் பல தயாரிப்பு நிறுவனங்களை கவரும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

கனடாவின் விமானதுறை பயணிகளின் பொதிகளை விமா னத்திலிருந்து விமான நிலையத்திற்கு கொண்டு செல்ல உதவும் வாகனங்களை இந்த தொழில்நுட்பத்தில் சோதனை ஓட்டமாக இயக்கி வருகிறது.

எது எப்படி இருந்தாலும் இந்த ரெயில்வேதுறைகளால் அவ்வளவு எளிதாக முழுவதுமாக ஹைட்ரஜன் சக்தியில் இயங்கக்கூடிய அளவிற்கு உடனடியாக மாறிவிட இயலாது. என்றாலும் தொழில் நுட்பத்திறமை, பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக கண்டுபிடிக்கக்கூடிய அவசியம் இவை எல்லாம் இன்னும் 10-20 ஆண்டுகளில் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் தோழமையுடன் இருக்கக்கூடிய ஹைட்ரஜன் ரெயில் சாதாரணமாக பார்க்கக்கூடிய தன்மையினை நம்முடைய சந்ததிகள் பார்க்கத்தான் செய்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

 

http://www.dailythanthi.com/Irmalar/home/second_page.asp?issuedate=9/16/2006&secid=76