|

பஞ்ச பூதங்களில் முக்கியமானது நீர். உலகில் உள்ள ஜீவன்கள்
உயிர்வாழ நீர் மிகவும் அவசியம் என்பது நம் அனைவருக்கும்
தெரியும். நீரால் என்னென்ன பயன்கள் கிடைக்கிறது என்பதை
அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. பொதுவாக தண்ணீர்
என்றால் தாகம் தீர்க்கவும், விவசாய பணிகளுக்கும் அடிப்படை
என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. அனைவரும் அறிந்த
தண்ணீரில் பலரும் அறியாத பயன்கள் எத்தனையோ உள்ளன. ஏராளமான
அறிவியல் ஆராய்ச்சிக்கு தண்ணீர் அடிப்படையாக உள்ளது.
பூமியை மனிதன் ஆக்கிரமித்துக் கொண்டது மட்டுமல்லாமல் வேறு
கிரகங்களில் தண்ணீர் உள்ளதா? காற்று உள்ளதா? உயிர் வாழ
முடியுமா? என்று விண்வெளி ஆராய்ச்சியை முடுக்கி
விட்டுள்ளான். அதே போல் மனிதனுக்கு அன்றாடம் பயன்தரக்
கூடிய பொருட்களை தயாரிக்கவும் தண்ணீர் ஒரு ஆய்வு பொருளாக
பயன்படுகிறது. அதாவது நீரின் ஆற்றலில் இயங்கும் சிறிய
பேட்டரியை தயாரித்து அமர்க்களப்படுத்தி உள்ளனர். இந்த
வாரம் அந்த பேட்டரியின் சிறப்புகளைப் பற்றி அறிந்து
கொள்வோம்.
எத்தனையோ அறிவியல் கண்டுபிடிப்புகளில் சூரியக்கதிர்
ஆற்றல் மற்றும் காற்று இவைகள் பயன் படுத்தப்பட்டுள்ளன. இது
எரிபொருள் மற்றும் மின் சிக்கனத்தைத் தருவதோடு
மட்டுமல்லாமல் சுற்றுப்புற சூழ்நிலைகளையும் பாதிக்காமல்
இருக்கின்றது. அந்த வகையில் தண்ணீரில் இருந்து மின்சாரம்
பெறப்படுகிறது. அதே போல் தண்ணீர் சக்தியோடு இயங்கும்
பேட்டரியை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுவரை பேட்டரி செல்கள் கார்பன் மூலக்கூறுகளால் மட்டுமே
தயாரிக்கப்பட்டு வந்தன. ஆனால் ஜப்பானிய விஞ்ஞானி சுசுமு
சுசுகி என்பவர் தண்ணீரின் உதவியோடு இயங்கும் நூதன
பேட்டரியை கண்டுபிடுத்துள்ளார். இதன் சிறப்பம்சம்
என்னவென்றால் சொட்டு நீர் பாசனம் போன்று ஒரு சொட்டு
நீரிலேயே அதிக ஆற்றல் தரும் வகையில்
உருவாக்கபட்டுள்ளது.
அதே சமயத்தில் இது நீண்ட நாள் உழைக்கும் தன்மையைப்
பெற்றுள்ளது. அதிக நாள் ஆற்றலை வெளிவிடக்கூடியது.
சாதாரண பேட்டரியைவிட பத்தில் ஒரு பங்குதான் இதற்கு செலவு
ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது பேட்டரி சந்தையில்
புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இதைப் பற்றி கண்டுபிடிப்பாளர்
சுசுமு கூறுகையில், "தண்ணீர் மூலம்
தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த பேட்டரி எதிர்காலத்தில் பிற
கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாக இருக்கும். சுற்றுப்புற
சீர்கேட்டையும் ஏற்படுத்தாது,'' என்கிறார்.
கம்ப்யூட்டர் உளவாளி
உளவாளி என்றாலே நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது
சி.ஐ.டி. தான். ஆனால் கம்ப்யூட்டர் உளவாளி பற்றி நீங்கள்
கேள்விபட்டிருக்கின்றீர்களா? இப்போது தெரிந்து
கொள்ளுங்கள்!
கம்ப்யூட்டரில் திருட்டுத்தனமாக நாம் எதையாவது
செய்துவிட்டால் எல்லா கோப்புகளையும், அது சம்பந்தப்பட்ட
அனைத்து பதிவுகளையும் அழித்துவிடுகிறோம். இப்பொழுது
சாப்ட்வேர் திருட்டு என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. நாம்
இல்லாதபோது நம்முடைய கம்ப்யூட்டரில் யார் என்னென்ன
செய்தார்கள் என்று பதிவு செய்யும் ஒரு சிறிய கருவி
வந்துவிட்டது.
கீபோர்டு செருகிக்கு இடையில் இந்த சிறிய
பின் போன்ற கருவியை வைத்துவிட்டால் போதும். ஒவ்வொரு
தட்டச்சையும் அப்படியே பதிவு செய்து கொள்ளும். அதாவது
என்னென்ன தட்டச்சு செய்தார்கள் என்பதை நாம் துல்லியமாக
அறியமுடியும்.
ஒவ்வொரு தட்டச்சையும் கண்காணிக்கும் இந்த கருவி ஐந்து
லட்சம் எழுத்துவரை பதிவு செய்து கொள்ளும். மேலும் சில
மாதங்கள் வரை இது பதிவுகளை ஏற்றிக்கொள்ளும்.
இதனை கீபோர்டு போர்ட்டில் செருகிவிட்டால் திருட்டுத் தனமாக
என்ன நடந்தாலும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இதை ஒரு
கம்ப்யூட்டரிலிருந்து மற்றொன்றிற்கு எளிதாக மாற்றிக்
கொள்ளலாம். ரகசிய எண்ணையும் பயன்படுத்திக்
கொள்ள முடியும்.
|