அறிவியல் அதிசயம் - MJM Iqbal

24-4-2004

Refer to Your Friends

மருத்துவ துறையில் ரோபட்டுகள்

ரோபட்டுகள் எனப்படும் எந்திர மனிதன் பற்றிய தகவல்கள் அறிவியல் அதிசயம் பகுதியில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது. இந்த வாரம் மருத்துவ துறையில் ரோபட்டுகளின் பங்குகள் பற்றிய தகவல்கள் இடம் பெறுகிறது.

துல்லியமான, தரமான, நுட்பமான மற்றும் விரைவான செயல்பாடுகள் மூலம் உயிர் காக்கும் மருத்துவ உலகில் பல இன்றியமையாத பணிகளில் ரோபட்டுகள் ஈடுபட்டு வருகின்றன.

உலோக மனித எந்திரம், எந்திரக் கைகள் என்று பல உருவங்களில் தயாரிக்கப்படும் ரோபட்டுகள் மனிதனின் அன்றாட பணிகளில் உதவியாக இருந்து வருகின்றன. இதேபோல மருத்துவ உலகிலும் பல விதமான வடிவங்களில் பலவிதமான பணிகளில் ரோபட்டுகள் ஈடுபட்டு வருகின்றன. மருத்துவ உலகில் ரோபட்டுகளின் செயல் பாடுகள் பற்றிய தகவல்கள் இந்த இதழில் இடம் பெறுகிறது.


''நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி'' என்பது மனிதர்களின் வாய்ச்சவடால் பேச்சுகளில் ஒன்று.

ஆனால் ஒரு வேலையை தொடர்ந்து செய்யச் சொன்னால் சலிப்பும் எரிச்சலும் அடைந்து மனிதன் தப்பு செய்ய ஆரம்பித்து விடுவான்.

ஆனால் ரோபட்டுகள் அப்படி அல்ல.

ஒருமுறை அல்ல நூறு தடவை அல்ல எத்தனை முறை சொன்னாலும் தனக்கு இடப்பட்ட பணிகளை தரமாக, துல்லியமாக விரைவாக முடிக்கும் திறன் கொண்டது.

பரிசோதனை சாலைகள் முதல் அறுவை சிகிச்சை அரங்குகள் வரை பல இடங்களில் ரோபட்டுகள் மருத்துவ பணிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பரிசோதனை கூடங்களில் பயன்படுத்தப்படும் ரோபட்டுகள் ரத்த பரிசோதனை போன்ற பல்வேறு வகையான மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக செய்து முடிக்கின்றன. ஒரே விதமான வேலைகளில் திரும்பத் திரும்ப ஈடுபடும்போது அவற்றை துல்லியமாகவும், அதேசமயம் களைப்பில்லாமலும் (சலிப்பு இல்லாமல்) செய்து முடிக்கும் திறனும், அலசி ஆராய்ந்து முடிவுகளை தெரிவிக்கும் வேகமும் இதற்கு நிகர் வேறு எதுவும் இல்லை என்றே கூறலாம்.

நேரயாளியை கவனிக்கும் ரோபாட்
பரிசோதனைச் சாலைகள் மட்டுமின்றி மருத்துவமனைகளிலும் ரோபட்டுகளின் பங்கு அதிகரித்து வருகிறது. மருந்துகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லுதல், நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்குதல் போன்ற பணிகளை ரோபட்டுகள் செய்கின்றன.

இதுதவிர நோயாளிகளை கவனிக்கும் ரோபட்டுகளும் உண்டு. நடக்க சிரமப்படும் நோயாளிகளை தூக்கிச் செல்லவும் மற்றும் அவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் சரியாக படுக்க வைக்கவும் உதவி செய்யும் ரோபட்டுகள் உள்ளன.

மறுசீரமைப்பு ரோபட்டுகள்

தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ, சுயமாகவோ இயங்க முடியாத நோயாளிகளுக்கு மறுசீர மைப்பு ரோபட்டுகள் உதவி செய்கின்றன. இந்தவகை ரோபட்டுகள் உள்ளீடு கட்டளைகள்  மற்றும் நோயாளிகளிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள்  அடிப்படையில் இயங்குகின்றன.

நோயாளிகளுக்கு உதவும் ரோபட்டுகளில் செயல்நிலைய ரோபட்டுகள்  பணி குறிப்பிடத்தக்கதாகும். இந்தவகை ரோபட்டுகள் ஒரே இடத்தில் இருந்தவாறு ஒரு குறுகிய இட எல்லைக்கு உட்பட்டு செயல்படும். நோயாளிக்கு உணவு அளிப்பது, நோயாளி படிப்பதற்கு ஏதுவாக புத்தகத்தை பிடித்திருப்பது, புத்தகத்தின் பக்கங்களை புரட்டுவது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றன.

ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிச் சென்று பணிபுரியும் ரோபட் ஊர்திகளும் உள்ளன. இந்த வகை ரோபட்டுகள் ஆஸ்பத்திரி முழுவதும் அல்லது ஆஸ்பத்திரியின் ஒரு பகுதி முழுவதும் 'நடமாடும்' வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.


இத்தகைய ரோபட் ஊர்திகளில் மோட்டார் மூலம் இயங்கும் சுழலும் சக்கரம் கொண்ட ஒரு நகரும் மேடை மீது பொருத்தப்பட்டு இருக்கும். எந்திரகரங்களும் இந்த வகை ரோபட்டுகளில் பொருத்தப்பட்டு இருக்கும்.

இதயத்தை வளர்க்கலாம்

இன்றைய நாகரீக உலகில் மனிதனை கொல்லும் நோய்களில் ஒன்றாக 'இதய நோய்' திகழ்கிறது. இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படுதல் மற்றும் இதய கோளாறு நோய்களுக்கு சிகிச்சை முறைகள் உள்ளன. சில நேரங்களில் மாற்று இருதய அறுவை சிகிச்சைகளும் வெற்றி கரமாக நடத்தப்பட்டு வருகிறது. மாற்று இருதயம் கிடைப்பதில் உள்ள சிரமம் காரணமாக சோதனைச் சாலையிலேயே இருதயத்தை வளர்ப்பது பற்றிய ஆய்வுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. மருத்துவ விஞ்ஞானிகள் லிசாபிரீட் மற்றும் கோர் டானா நவாகோவிக் ஆகியோர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு இருதயத்தை ஆய்வுக்கூடத்தில் வளர்க்கும் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உதாரணமாக ராம் என்பவருக்கு இருதய நோய் காரணமாக மாற்று இருதயம் பொருத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாற்று இருதயம் மற்றும் செயற்கை இருதயத்தை தேடுவதற்கு பதிலாக அவரது உடல் 'திசு'வில் இருந்தே புதிய இருதயத்தை உருவாக்க முடியும் என்பது தான் விஞ்ஞானிகளின் கருத்தாகும்.

இதற்கான திசு வளர்ப்பு கருவி ஒன்றையும் அமெரிக்க விண்வெளி நிலைய (நாசா) விஞ்ஞனிகள் உருவாக்கியுள்ளனர். இந்த கருவி மூலம்  ஒரு மனிதனின் இருதய திசுவை வளர்க்கும் பணியை நிறைவேற்ற முடியும்.

இது தொடர்பாக நடந்து வரும் ஆய்வில் கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய திசு ஒன்றை ஒரு மில்லி மீட்டர் தடிமன் மற்றும் 5 மில்லி மீட்டர் விட்டம் அளவுக்கு வளர்த்து சாதனை படைத்துள்ளனர்.

இந்த ஆய்வுகளின் மூலம் வருங்காலத்தில் மனித இருதயத்தை ஆய்வுக்கூடத்திலேயே உருவாக்க முடியும் என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் இந்தஆய்வுப்பணியில் ரோபட்டுகளின் பங்கு மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இருதயத்தை ஆய்வுக்கூடத்தில் வளர்க்கும் பணியில் பரிசோதனைச்சாலை ரோபட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.


'ரவுண்ட்ஸ்' வரும் ரோபட் டாக்டர்


ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் தினமும் 'ரவுண்ட்ஸ்' வந்து நோயாளிகளை பார்வையிட்டு சிகிச்சை அளிப்பது வழக்கம். அந்தபணிகளைச் செய்யவும் 'ரோபட்'டுகள் வந்து விட்டன.

இந்த ரோபட் டாக்டரின் தோற்றம் வித்தியாசமானது. இதில் கம்ப்யூட்டர் திரை, வீடியோ கேமிரா, ஸ்பீக்கர் வசதி போன்றவை பொருத்தப்பட்டு இருக்கும். மேலும் இது ரிமோட் கண்ட்ரோலில் இயங்கக் கூடியது. டாக்டர் தனது அறையில் இருந்த படி இந்த 'ரோபட்'டை 'ரவுண்ட்ஸ்' அனுப்பலாம். டாக்டரின் கட்டளைக்கு ஏற்ப இந்த 'ரோபோ டாக்டர்' நகர்ந்து (நடந்து) செல்வார். கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டு இருக்கும் வீடியோ மூலம் 'ரோபோ டாக்டர்' செல்லும் பாதை, மற்றும் நோயாளிகள் படம் பிடித்து டாக்டரின் அறையில் உள்ள கம்ப்யூட்டர் திரையில் தெரியும். அதே போல டாக்டர் அறையில் உள்ள கேமிரா மூலம் டாக்டர் முகம் படம் பிடிக்கப்பட்டு 'ரோபோ டாக்டர்' கம்ப்யூட்டர் திரையில் தெரியும்.

இதனால் டாக்டரும், நோயாளியும் ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே முகத்தைப் பார்த்து உறவாடுவது போன்ற சூழ்நிலையை உருவாக்க முடியும். தற்போது இந்த 'ரோபட் டாக்டர்' எந்திரம் பரிசோதனை முறையில் இருக்கிறது. வருகிற 2020-ம் ஆண்டுக்குள் 'எந்திர டாக்டர்' பயன்படுத்துவது அதிக அளவில் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஆஸ்பத்திரிகளில் மட்டுமின்றி யுத்த களம் மற்றும் இயற்கைச் சீற்றங்களின் போது ரோபட் டாக்டரின் பணி முக்கிய மானதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


ரோபட் நர்ஸ்


ரோபட் டாக்டர் உருவாக்கப்பட்ட பிறகு ரோபட் நர்ஸ் உருவாக்குவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. 'ரோபட் நர்ஸ்' களை அமெரிக்காவில் உள்ள மிச்சிகின் மற்றுட் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகங்கள் இணைந்து 'ரோபட் நர்ஸ்'சுகளை உருவாக்கி இருக்கிறது. இதற்கு 'பியர்ல்' (முத்து) என்று பெயரிட்டுள்ளனர். நோயாளிகள் மற்றும் வயதானவர்களை பராமரிக்கும் பணியில் 'ரோபட் நர்ஸ்'கள் பெரிதும் உதவுகின்றன.

நோயாளிகள் வேளா வேளைக்கு மருந்து சாப்பிட்டார்களா? சரியான நேரத்துக்கு உணவு மற்றும் தண்ணீர் எடுத்துக் கொண்டார்களா? என்பதை ரோபட் கண்காணித்து நினைவுபடுத்தும். நோயாளிகள் படுக்கையில் இருந்து எழுந்து உட்காருவதற்கும், கழிவறைக்கு செல்வதற்கும் 'ரோபட் நர்ஸ்' உதவி செய்யும்.

மேலும் நோயாளியின் உடல் நிலையில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் அதை டாக்டருக்கு அவசர செய்தியாக தெரிவிக்கும்.

இதே போல சீனாவும் எய்ம்  என்ற பெயரில் ஒரு 'ரோபட் நர்ஸ்' உருவாக்கி இருக்கிறது. சமீபத்தில் 'சார்ஸ்' நோய் ஆபத்து பரவிய போது அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவே டாக்டர்களும் நர்ஸ்சுகளும் பயந்தனர். காரணம்-எளிதில் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு தொற்றிக் கொள்ள கூடியது 'சார்ஸ்' நோய்.

எனவே சார்ஸ் நோயாளிகளை கண்காணித்து சிகிச்சை அளிக்கவும் உதவி செய்யவும் 'எய்ம்' என்ற பெயரில் 'ரோபட் நர்ஸ்'களை சீனா உருவாக்கியது.

ஜப்பான் நாட்டு தயாரிப்பான ரோபட் நர்ஸ


மருத்துவ 'தவறு'கள்


ஒரு மனிதனுக்கு பல வழிகளில் மரணம் ஏற்படக்கூடும். இயற்கையான மரணம், நோய்வாய்ப்பட்டுமரணம், விபத்துகளில் சிக்கி உயிரிழத்தல், புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற பயங்கரமான நோய் தாக்கி மரணத்தை சந்தித்தல்..

இப்படி பல வழிகளில் மனிதனை மரணம் நெருங்குகிறது.

இதில் குறிப்பிடத்தக்கது 'மருத்துவ தவறுகளால் ஏற்படும் மரணம்'. ஆஸ்பத்திரிகளில் ஏற்படும் மரணங்களில் பல மருத்துவ தவறுகளால் ஏற்படுகின்றன என்று அமெரிக்காவில் உள்ள தேசிய மருத்துவ மையம் கூறுகிறது.

டாக்டர்கள் மற்றும் நர்சுகளின் கவனக்குறைவு, பரிசோதனைச்சாலை முதல் அறுவை சிகிச்சை அரங்குகள் வரை நடைபெறும் தவறுகள், நோய் மற்றும் நோயின் தன்மையை கண்டுபிடிப்பதில் உள்ள குறைபாடுகள் காரணமாக பல மரணங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இத்தகைய 'மருத்துவ தவறு'களை நீக்க 'ரோபட் டாக்டர்' மற்றும் 'ரோபட் நர்ஸ்'கள் பெரிதும் உதவியாக இருப்பார்கள் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.


மருத்துவத்துறையில் ரோபட்டுகளின் பங்கு மகத்தானது. வழுக்கைத் தலையர்களுக்கு உதவும் வகையில் தலையில் முடிகளை பதியம் செய்யும் மருத்துவ முறைகள் உள்ளன. இதற்கான சிகிச்சைகளில் உதவ ரோபட்டுகளும் முன் வந்துள்ளன.

இந்த பணிகளைச்செய்யும் ரோபட்டுக்கு ஆம்னிகிராப்ட் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரான்சு நாட்டு மருத்துவ கருவிகள் தயாரிப்பு நிறுவனம் மெடிகாமட் இந்த ஆம்னிகிராப்ட் கருவியை வடிவமைத்துள்ளது.

வழுக்கைத் தலையில் முடிகளை பதியம் செய்யும் பணியில் இந்த ஆம்னிகிராப்ட் ரோபட் டாக்டர்களுக்கு பெரிதும் உதவுகிறது. தலையின் மற்ற பகுதியில் உள்ள முடியை எடுத்து வழுக்கையாக இருக்கும் பகுதியில் பதிக்கும் பணியை இந்த ரோபட் அதிவிரைவாக செய்கிறது. ஒரு நிமிடத்திற்கு 30 முடிகளை பதியம் செய்யும் திறன் கொண்டது இந்த எந்திரம்.

அடுத்த இதழில்...


ஆபரேஷன்கள் செய்யும் ரோபட்டுகள் பற்றிய தகவல்கள் இடம் பெறுகிறது. மூளை மற்றும் இருதய ஆபரேஷன்கள் செய்யும் ரோபட்டுகள் பற்றிய தகவல்கள் வெளி வருகிறது.

தகவல் தொகுப்பு:

எம்.ஜே.எம்.இக்பால், துபாய்.