|
பிற்பட்டோர் ஆணைய பரிந்துரை தமிழக அரசு ஏற்பு
 சிறுபான்மையினருக்கு
தனி இடஒதுக்கீடு
முதல்வர் கருணாநிதி அறிவிப்பு
ஏப். 5-
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு தனி
இடஒதுக்கீடு வழங்கலாம் என
பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த
பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக்
கொண்டுள்ளது என்று
முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
சட்டசபையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது.
இதில்,
அரவக்குறிச்சி தொகுதி உறுப்பினர் கலிலூர்
ரகுமான் (தி.மு.க.)
பேசினார். அப்போது குறுக்கிட்டு
பேசிய முதல்வர் கருணாநிதி கூறியதாவது:
சிறுபான்மையினத்தை சேர்ந்த
முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கல்வி
நிலையங்கள் மற்றும்
அரசுப் பணிகளில் தனி இடஒதுக்கீடு வழங்க
வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்து
வருகிறது. கடந்த தேர்தலின்போது
தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் இதுபற்றி
அறிவிக்கப்பட்டது.
'சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கல்வி
நிலையங்களிலும் வேலை
வாய்ப்புகளிலும் தனி இடஒதுக்கீடு வழங்க
மத்திய அரசை வலியுறுத்தி
வருவதுடன், தமிழகத்திலும் அவர்களுக்கு
இடஒதுக்கீடுக்கு வழிவகுத்திட
தேவைப்படும் உறுதியான
நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்'
என்று 2007-08 நிதிநிலை அறிக்கையிலும் உறுதி
வழங்கப்பட்டது.
இதை செயல்படுத்துவதற்கு முதல்கட்டமாக,
நீதியரசர் ஜனார்த்தனனை தலைவராகக் கொண்டுள்ள
தமிழ்நாடு
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் இப்பொருள்
பற்றி விரிவாக விசாரணையும் ஆய்வும்
செய்து உரிய பரிந்துரைகளை தருமாறு அரசு
சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்த ஆணையம்
சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு
பற்றிய பரிந்துரையை தமிழக அரசுக்கு
அளித்துள்ளது.
ஜெ.அ.அம்பாசங்கரை தலைவராகக் கொண்டு
அமைக்கப்பட்ட தமிழ்நாடு இரண்டாவது
பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு
அறிக்கையில் காணப்படும் இந்து, முஸ்லிம்
மற்றும் கிறிஸ்தவர்களில்
பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை
பற்றிய புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு
முஸ்லிம்களுக்கும்
கிறிஸ்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு
வழங்கலாம் என்று
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
பரிந்துரை செய்துள்ளது.
கல்வி நிலையங்களிலும் அரசுப் பணிகளிலும்
கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும்
தனி இடஒதுக்கீடு வழங்கலாம் என்று
அமைந்த அனைவரும் ஒப்புக்
கொள்ளத்தக்க,
சட்ட ரீதியிலான இந்த பரிந்துரையினை
தமிழக அரசு ஏற்றுக் கொள்வது என்று முடிவு
செய்துள்ளது.
தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்துவரும் 69
சதவீத இடஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு ஒன்று
சுப்ரீம் கோர்ட்
விசாரணையில் இருந்து வருகிறது. அந்த
வழக்கின் தீர்ப்பு கிடைத்த பிறகு,
சிறுபான்மையினர் இட
ஒதுக்கீடு தொடர்பான பரிந்துரையினை
நடைமுறைப்படுத்துவதற்கு சட்டரீதியான முடிவுகளை
தமிழக அரசு மேற்கொள்ளும். தோழமைக்
கட்சிகளுடன் கலந்தாலோசித்து அதன் பின்னர் முழு
விவரம் அறிவிக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
முதல்வரின் கருத்துக்கு பேரவையில் அனைத்துக்
கட்சியினரும் வரவேற்று ஆதரவு தெரிவித்தனர்.
- எம். ஹெச். ஜி.
|