|
ஹஜ் யாத்ரீகர்களுக்கு மெக்கா
இமாம் வேண்டுகோள்
ஹஜ் யாத்திரைக்கு வருவோர், விபத்துகளைத்
தவிர்க்க, விதிமுறைகளை சரியாகப் பின்பற்ற
வேண்டும் என்று மெக்காவில் உள்ள பெரிய
மசூதியின் இமாம் கேட்டுக் கொண்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை நடந்த பிரார்த்தனையில்
உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். டிசம்பர்
18-ம் தேதி ஹஜ் நிகழ்ச்சி தொடங்குகிறது.
அப்போது மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாத
வகையில் யாத்ரீகர்கள் நடந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் மோதலில் ஈடுபடக் கூடாது. ஹஜ் புனித
யாத்திரைக்குச் செல்வோரின் பாதையை தடுக்கக்
கூடாது என்றார் அவர்.
பல்வேறு நாடுகளில் இருந்து 5
லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஹஜ்ஜுக்கு
சென்றுள்ளனர். இந்த ஆண்டு மொத்தம் 25 லட்சம்
பேர் ஹஜ் செல்வர் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை 60,429 இந்தியர்கள் ஹஜ்
வந்துள்ளனர். அவர்களில் 51,122 பேர்
மெக்காவிலும், 9293 பேர் மதினாவிலும் உள்ளனர்
என்று அங்குள்ள இந்தியத் துணைத் தூதர் அசப்
சயீத், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தின்
நிருபரிடம் கூறினார். இந்த ஆண்டு
இந்தியாவிலிருந்து ஹஜ் சென்ற 1,57,000
இந்தியர்களில் 12 பேர் நூறு வயது ஆனவர்கள்.
இந்தியாவில் இருந்து செல்லும் ஹஜ்
யாத்ரீகர்களுக்கு உதவ மெக்காவில் ஒரு அமைப்பு
1997-ல் இருந்து செயல்படுகிறது. 1997-ல்
மினாவில் ஏற்பட்ட நெரிசலில் பலர் இறந்தனர்.
அதன்பிறகு இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
இந்தியாவில் இருந்து ஹஜ் செல்வோர், அங்கு
தங்கள் பணத்தையோ அல்லது உடைமைகளையோ தொலைத்து
விட்டோல் அவர்களுக்கு இந்த அமைப்பு உதவுகிறது.
இந்திய யாத்ரீகர் நல சங்கம் என்று இதற்கு
பெயர்.
யாத்ரீகர்கள் ஹஜ் பயணத்தின்போது எப்படி
நடந்து கொள்ள வேண்டும், அந்த நாட்டில்
என்னென்ன விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்
என்பதை விளக்கும் விடியோவும் இந்தியாவில்
இருந்து வருவோருக்கு காண்பிக்கப்படுவதாக
இந்தியத் துணைத் தூதர் தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து டாக்டர்களும் மத்திய
அரசால் ஹஜ்ஜுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
சவூதியில் தங்கியிருக்கும்போது, தங்கள் உடல்
நலத்தை இந்தியர்கள் எப்படி காத்துக் கொள்ள
வேண்டும் என்று நமது டாக்டர்கள் அவர்களுக்கு
விளக்குகின்றனர்.
இந்திய யாத்ரீகர் நலச் சங்கத்தின் மகளிர்
பிரிவு, இந்தியத் துணைத் தூதர் சயீதின் மனைவி
ஃபர்ஹா தலைமையில் செயல்படுகிறது. அங்குக்
கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை விளக்கும்
துண்டு பிரசுரங்களை, தமிழ், தெலுங்கு,
மலையாளம், ஹிந்தி, உருது, வங்காளம்,
குஜராத்தி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில்
இந்த அமைப்பு வழங்குகிறது.
இந்திய யாத்ரீகர்களுக்கு இந்த அமைப்பு
இதுவரை ரூ.4.5 லட்சம் வழங்கி உதவியுள்ளது. |