முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்

 

கிராம கல்வி கூட்டம்


சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப் பள்ளியில் கிராம கல்வி கூட்டம் நடந்தது. பள்ளி தலைவர் தஸ்தகீர் முன்னிலை வகித்தார்.தலைமை ஆசிரியர் முகம்மது இபுறாமுசா, ஊராட்சி தலைவர் முகம்மது அப்துல்கனி, தாளா ளர் அகமது கபீர்,செயலாளர் முஸ்தபா, புரவலர் ஆரிப்கான், கல்விக்குழு உறுப்பினர் கிஷார் முகம்மது, முஸ்லிம் தர்ம பரிபாலன சபா செயலாளர் மக்சூல் கரீம், துணைத்தலைவர் அல் தாப் உசேன்,ஒன்றிய கவுன்சிலர் ஜமீர்ஹசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இடைநிலை ஆசிரியர் ஹபீப் ரகுமான் நன்றி கூறினார்.
 

தத்கல் முறையில் பாஸ்போர்ட் பெற இனி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்

தத்கல் முறையில் பாஸ்போர்ட் பெற செப். 17 முதல் "ஆன்லைன்' முறையிலேயே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ். பாலச்சந்திரன் தெரிவித்தார்.

முன்னாள் படைவீரர் சேவை மையம் மூலம் இது செயல்படுத்தப்படுகிறது. இந்த முறையின் வெற்றியைத் தொடர்ந்து நாட்டில் உள்ள 31 பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் இத்தகைய வசதியை அறிமுகப்படுத்த வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

தத்கல் முறையில் பாஸ்போர்ட் பெற செப். 17 ஆம் தேதி முதல், கையால் எழுதிய விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது; ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள இரு பாஸ்போர்ட் அலுவலகங்களில் இருவித நடைமுறைகளிருந்தால் தேவையில்லா குழப்பம் ஏற்படும் என்பதைக் கருத்தில்கொண்டு அதே நடைமுறையை திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திலும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, செப். 17 ஆம் தேதி முதல் திருச்சியிலும் கையால் எழுதப்பட்ட தத்கல் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டா. இந்த முறையில் விண்ணப்பிக்க விரும்புவோர் www.passport.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அச்சிட்டு அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
வீட்டில் இணையத்தை பயன்படுத்தும் வசதியில்லாதவர்கள், இணையதள சேவை மையங்களிலோ அல்லது திருச்சி பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில் உள்ள முன்னாள் படைவீரர் சேவை மையத்திலோ "ஆன்லைனில்' விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம். தத்கல் தவிர்த்த சாதாரணமாக முறையில் விண்ணப்பிக்க வழக்கம்போல கையால் எழுதியோ, ஆன்லைனிலோ விண்ணப்பிக்கலாம்' என்றார் பாலச்சந்திரன்.

 

நான்கு ஆண்டுக்கு பின் மீண்டும் "ஜம்போ பாஸ்போர்ட்'


சென்னை : நான்கு ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட, "ஜம்போ பாஸ்போர்ட்' வழங்கும் பணி மீண்டும் துவங்கப்பட்டது. "ஜம்போ பாஸ்போர்ட்' புத்தகங்கள் நேற்று சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் மீண்டும் அமலுக்கு வந்தது.

மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் கூறுகையில், "ஜம்போ பாஸ்போர்ட் 95ம் ஆண்டில் இருந்து 2003 வரை நடைமுறையில் இருந்தது. அதன்பிறகு இயந்திர மயமாக்கப்பட்டு 36 பக்கங்களில் பாஸ் போர்ட் புத்தகம் வினியோகிக்கப் பட்டது. தற்போது, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, "ஜம்போ பாஸ்போர்ட்' முறையை கொண்டு வந்துள்ளோம். இதனால், திரையுலகத்தினர், வியாபாரிகள், வர்த்தகர்கள் பெரிதும் பயன் பெறுவர்.

கடந்தாண்டு 37 ஆயிரம் பேர் தட்கல் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர். இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 41 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தினந்தோறும் 300 முதல் 350 பேர் தட்கல் பாஸ்போர்ட் கேட்கின்றனர். வரும் 17ம் தேதி முதல் இணைய தளம் (ஆன்-லைன்) மூலம் மட்டுமே தட்கல் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும்.

இவ்வாறு பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் கூறினார்.

துபாய்க்கு வேலை செய்ய செல்பவர்களே

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பிற பகுதிகளுக்கு வேலைக்குச் செல்பவர்கள் விசிட் விசா ( Visit Visa ) எனப்படும் இரண்டு மாத கால விசா, சுற்றுலா விசா உள்ளிட்ட தற்காலிகமாக வழங்கப்படும் விசாவில் செல்வதை தவிர்த்துக் கொள்வது நன்று.

சமீபத்தில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த முஹம்மது எனும் 31 வயது இளைஞர் அமீரகத் தலைநகர் அபுதாபிக்கு விசிட் விசாவில் சென்றுள்ளார். அவரது விசிட் விசாவில் அவர் ஒரு வர்த்தகம் புரிபவர் ( businessman ) என குறிப்பிடப்பட்டிருந்தது,

அவர் மீது சந்தேகம் ஏற்படவே குடியுரிமை அதிகாரிகள் அவரிடம் அடையாள அட்டை, கடன் அட்டை (credit card) உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டுள்ளனர். ஆனால் இவை எதுவும் இல்லாத காரணத்தால் இரண்டு தினங்கள் சிறையில் வைக்கப்பட்டு பின்னர் தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இனிமேல் அவர் அமீரகத்துக்கு எப்பொழுதும் செல்ல முடியாதவாறும் தடை செய்யப்பட்டுள்ளார்.

எனவே வெளிநாடு செல்வோர் விசிட் விசாவில் வேலை பார்க்க செல்லும் எண்ணத்தை தவிர்த்து வேலைக்கான விசாவுடன் செல்வதே சிறந்தது. மேலும் விசிட் விசாவில் வருவோரை வேலைக்கு அமர்த்துவதும் அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். அவ்வாறு பணிபுரிவோரை கண்டறியும் பட்சத்தில் தாயகத்திற்கு திருப்பி அனுப்பப் படுவது மட்டுமல்லாது பணி கொடுத்த நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்படும்.

இந்தியாவில் தொழில்திறன் இருப்பதால்தான் வெளிநாடுகள் முதலீடு

இந்தியாவில் தொழில்திறன் இருப்பதால்தான் வெளிநாடுகள் முதலீடு செய்ய முன்வருகின்றன என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் எம்.ஏ. சித்திக் தெரிவித்தார்.

காரைக்குடி அழகப்பா பல்கலை. ஊரக மேம்பாட்டு மையம், ஹைதராபாத் ஐஎல்எப்எஸ் சிடிஐ லிமிடெட் நிறுவனம் ஆகியன சார்பில் நடத்தப்படும் கிராமப்புற வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கான பின்னலாடை பயிற்சியை வியாழக்கிழமை அவர் தொடங்கி வைத்துப் பேசியது:

இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 9 சதவீதம் எட்டியிருக்கிறது. கடந்த 10, 15 ஆண்டுகளாக இந்தியா கல்வியில் தொழில் திறன்மிக்க பல லட்சக்கணக்கான இளைஞர்களை உருவாக்கியுள்ளது.

இதுபோன்ற தொழில் திறன்மிக்க மக்கள் இருப்பதால்தான் நம்நாட்டில் வெளிநாட்டினர் முதலீடு செய்ய முன்வருகிறார்கள்.

இதுபோன்ற பின்னலாடைத் தொழில் பயிற்சிகள் வழங்கினால் இப்பகுதியில் தொழில்திறன் உயரும்.

அதனால் முதலீடு செய்வோர் திருப்பூர் போன்ற நகருக்கு மட்டும் செல்லாமல் இப்பகுதியிலும் முதலீடு செய்ய முன்வருவார்கள் என்றார் ஆட்சியர்.

துணைவேந்தர் பி.ராமசாமி தலைமைவகித்துப்பேசியது:

இந்தியாவில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் 35 கோடி மக்கள் உள்ளனர். தமிழகத்தில் 1.40 கோடி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர். இவர்களில், சிவகங்கை மாவட்டத்தில் 40 ஆயிரம் மக்கள் உள்ளனர்.

எனவேதான் அழகப்பா பல்கலைக்கழகம் கிராமத்தில் உள்ள கல்வி கற்காத மக்கள் தொழில்திறன் பெறும் வகையில், சிறப்புப் பயிற்சியை அளிக்கிறது. இப்பயிற்சியினால் ஆண்டுக்கு 700 குடும்பங்கள் பயனடையும் என்றார்.
 
அஜ்மானில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி


அஜ்மான் இந்திய சங்கம், இப்னு சினா-ஆலியா மருத்துவ குழுமம் மற்றும் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகியவை இணைந்து 06.09.2007 வியாழன் மாலை அஜ்மான் இந்திய சங்க அரங்கில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் அப்துல் ஹாதி தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் மருத்துவ விழிப்புணர்வு நிக்ழ்ச்சியை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார். டாக்டர் அப்துல் கபூர் வரவேற்றார். அஜ்மான் கல்ப் மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் கீதா அசோக்ராஜ் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

குழந்தை நலம் குறித்து டாக்டர் ஜேக்கப், இருதய நோய்கள் குறித்து டாக்டர் அபுபக்கர், மகப்பேறு குறித்து டாக்டர் நிர்மலா, பயண நேரத்தின் போது நாம் செய்துகொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து டாக்டர் ஷர்மா உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

உணர்வாய் உன்னை' எனும் தன்னம்பிக்கை பயிற்சி மைய இயக்குநர் ஜலாலுதீன் மனித வாழ்வின் மகத்துவம் குறித்து நிழற்பட காட்சிகளுடனான உரை அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்திருந்தது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மு.ஆ. முஹம்மது இஸ்மாயில் நன்றி கூறினார். முஸ்லிம் முன்னேற்றக்கழக துணைத்தலைவர் ஹ¤சைன் பாஷா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

பெண்களுக்கு தனியிட வசதியும், இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
துபாயில் கணினி கண்காட்சி

வளைகுடா நாடுகளின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் ஜிடெக்ஸ் ( GITEX ) எனப்படும் கணினி கண்காட்சி துபாயில் செப்டம்பர் 6 முதல் 12 வரை நடைபெற்றுவருகிறது. இவ்வாண்டு நடைபெற்று வரும் கண்காட்சியில் எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3300 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

இக்காண்காட்சி பல்வேறு நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பத்தேவைகளை நிறைவு செய்து கொள்ள பெரிதும் உதவிகரமாய் இருந்து வருகிறது.

இக்கண்காட்சியில் பங்கேற்க வசதியாக துபாய் நகரின் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து இலவச போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் லேப்டாப், கணினி, மொபைல் போன், கேமரா உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களும் கிடைக்கின்றன.

இக்கண்காட்சி 17 வது ஆண்டாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இக்கண்காட்சி குறித்த மேலதிக விப்ரங்களை www.shopper.gitex.com எனும் இணையத்தளத்தில் காணலாம்.
 
இந்தாண்டு 1.57 லட்சம் பேர் ஹஜ் பயணம்
 

ஐதராபாத் : இந்தாண்டு சுமார் 1.57 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அகமது கூறினார். ஐதராபாத்தில் நடைபெற்ற அனைத்திந்திய ஹஜ் மாநாட்டில் பேசிய அவர், ஹஜ் பயணம் செல்வோர் எவ்வித சிரமமுமின்றி பயணம் மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் அரசினால் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மத்திய ஹஜ் கமிட்டி மூலமாக இந்தாண்டு 1லட்சத்து 10 ஆயிரம் பேரும், தனியார் நிறுவனங்கள் மூலமாக 47 ஆயிரம் பேரும் புனித பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்தார். எனினும், இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த கோரி சில மாநிலங்கள் விடுத்த கோரிக்கையை தனது அமைச்சகத்தால் நிறைவேற்ற இயலவில்லை என்றும் தெரிவித்தார்
துபாய் இந்திய பள்ளி நிறுவனருக்கு விருது

துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நியூ இந்தியன் மாதிரிப் பள்ளிகளை நிறுவிய டாக்டர் எம்.கே. கமாலுதீனுக்கு புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச நட்புறவுக் கழகம் ''ஷிக்ச ரத்தன் புரஸ்கார்'' எனும் விருதை அவரது கல்வி மற்றும் சமூக சேவைக்காக வழங்குகிறது.

இவ்விருது எதிர்வரும் அக்டோபர் 6 ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து நவீன இந்தியாவில் கல்வியின் பங்கு எனும் தலைப்பில் கருத்தரங்கும் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் நாடெங்கிலும் இருந்து கல்வியாளர்கள் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.


இவ்விருது கல்வியின் மதிப்பீட்டுக்கு கிடைத்த பரிசு என்றால் மிகையல்ல என டாக்டர் கமாலுதீன் தெரிவித்தார். கல்வி சமூகத்தை உயர்நிலைக்கு கொண்டு செல்லும் ஒரு கருவியாகும்.

இவர் 1980 ஆம் ஆண்டு துபாயில் நியூ இந்தியன் மாதிரிப் பள்ளியை ஏற்படுத்தினார். அமீரகத்திலும், இந்தியாவிலும் 13 கல்வி நிறுவனங்களை இவர் நடத்தி வருகிறார்.

இதற்கு முன் இவ்விருதை தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பி கன்னியப்பன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பி மருதமுத்து, பெங்களூர் பல்கலைக்கழக பேராசிரியர் ரெங்கநாத் உள்ளிட்ட பலர் இவ்விருதை இதற்கு முன் பெற்றுள்ளனர்.
அமீரகத்தில் புகையிலை விளம்பரத்திற்கு தடை

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உடல்நலம் குறித்த விளம்பர சட்டப்படி பெரும் விற்பனை அங்காடிகள்,கடைகள், எரிபொருள் நிரப்பும் மையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகையிலை குறித்த விளம்பரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது
 
குவைத் மானுட வசந்தம் நிகழ்ச்சி டி.வி.யில் ஒளிபரப்பு

குவைத்: குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாசார சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட குவைத் மானுட வசந்தம் என்ற நிகழ்ச்சி, தமிழன் டிவி.,யில் ஒளிபரப்பாகிறது. இஸ்லாம் குறித்தும் இதர பொதுப் பிரச்னைகள் குறித்தும் இஸ்லாமியர்களும் மற்ற மதத்தினரும் கேட்ட கேள்விகளுக்கு கே.வி.எஸ்.ஹபிப் முகமத அளித்த பதில்கள் இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சி குவைத் நேரப்படி புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 07 மணி முதல் 07 30 வரையும் வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 02 மணி முதல் 02 30 வரையும் இந்திய நேரப்படி புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 09 30 மணி முதல் 10 00 வரையும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 04 30 மணி முதல் 05 வரையும் ஒளிபரப்பாகும். ( தினமலர் வாசகர் காரைக்கால் எஸ்.எம்.ஆரிப் மரைக்காயர்)
ஹமீதியா பள்ளிக்கு சாம்பியன் பட்டம்

கீழக்கரை: கீழக்கரை கைராத்துல் ஜாலியா மேல்நிலை பள்ளியில் வட்டார விளையாட்டு போட்டிகள் நடந்தன. பள்ளி தாளாளர் ஜகுபர் சாதிக்,கிழக்குத்தெரு ஜமாத் தலைவர் முகைதீன் அப்துல்காதர் தலைமை வகித்தனர். ஜமாத் தலைவர்கள், கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். முன்னாள் தாளாளர் மஹ்மூது கரீம், யூசுப் ஜவாஹீர் உசேன் துவக்கி வைத்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு யூசுப் சுலைகா மெடிக்கல் சென்டர் இயக்குனர் செய்யது அப்துல் காதர்,மாவட்ட கல்வி அலுவலர் ஜவஹர் அலி பரிசுகள் வழங் கினர்.இதில் 21 பள்ளிகள் பங்கு பெற்றன. இஸ்லாமியா பள்ளி 88 புள்ளிகள்,ஹமீதியா பெண் கள் பள்ளி 108 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது. மாணவிகளுக்கான 14 வயதுக் குட்பட்ட ஜூனியர் பிரிவில் ஹமீதியா மெட்ரிக்.,பள்ளி மாணவி பாத்திமா உகாசா 100,400 மீட்டர் ஓட்டங்களில் முதல் இடத்தையும்,நீளம் தாண்டுதலில் இரண்டாவது இடத்தையும் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்.17 வயதுக்குட்பட்ட சீனியர் பிரிவில் முத்துப்பேட்டை பள்ளி மாணவி சவுந்தர்யா 250,100 மீட்டர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதலில் முதலிடம் பிடித்துசாம்பியன் பட்டம் பெற்றார்.19 வயதுக்குட்பட்ட சூப்பர் சீனியர் பிரிவில் ஹமீதியா பெண்கள் பள்ளி மாணவி ஆமினத்துரிபா 200,100 மீட்டர் ஓட்டம்,நீளம் தாண்டுதலில் முதலிடம் பிடித்தார்.மாணவர்களுக்கான வயதுக்குட்பட்ட ஜூனியர் பிரிவில் தீனியா மெட்ரிக்., பள்ளி மாணவன் அப்ரித் ஹூசைன் 400 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம்,உயரம் தாண்டுதலில் இரண்டாவது இடம்,நீளம் தாண்டுதலில் மூன்றாம் இடம் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார்.17 வயதுக்குட்பட்ட சீனியர் பிரிவில் கைராத்துல் ஜாலியா பள்ளி மாணவன் தடை தாண்டுதலில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். சூப்பர் சீனியர் பிரிவில் இஸ்லாமியா பள்ளி மாணவன் சேக்முகம்மது ஆதிப் குண்டு எறிதல்,தட்டு எறிதல் போட்டியில் முதலிடம், ஹமீதியா ஆண்கள் பள்ளி மாணவர்கள் பாஸித் நீளம் தாண்டுதல் ,இளையராஜா 1500 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றனர்.
பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்புக் கழக நிர்வாகிகளுக்கு தமிழக அரசு விருது

பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்புக் கழக நிர்வாகிகளுக்கு தமிழக அரசு விருது வழங்கியுள்ளது.

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்புத் துறை மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் சார்பாக மாநில நுகர்வோர் தின விழா சென்னை கலைவாணர் அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி மற்றும் உணவுத்துறை அமைச்சர் வேலு ஆகியோர் கலந்து கொண்டு மாநிலத்தில் சிறப்பாக நுகர்வோர் சேவை செய்தவர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கி சிறப்பித்தனர்.

அப்போது பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்புக் கழகத்தின் முன்னாள் தலைவர் மு,புரோஸ்கானுக்கு நுகர்வோர் சேவையாளர் 2004-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விருதும்.

பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்புக் கழகத்தின் தலைவர் கே.ஜெ.மாதவனுக்கு நுகர்வோர் சேவையாளர் 2005-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விருதும். வழங்கப்பட்டது.

பள்ளிகளில் செயல்படும் நுகர்வோர் மன்றங்களில் சிறந்த நுகர்வோர் மன்றமாகப் பரமக்குடி கே.ஜே.இ.எம். மேல்நிலைப்பள்ளி நுகர்வோர் மன்றமும், சிறந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகமும் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளருக்கான 2006-07-ம் ஆண்டுக்கான விருது பரமக்குடி கே.ஜெ.இ.எம்.மேல்நிலைப்பள்ளி நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மு.புரோஸ்கானுக்கு கிடைத்துள்ளது.

விருதுபெற்ற இவர்களை நுகர்வோர் உரிமை பாதுகாப்பு க் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.
 
பெண்கள் திருமண உதவித்தொகை ரூ.15 ஆயிரமாக உயர்வு: ஆட்சியர்

ஆதரவற்ற பெண்கள், விதவைகள் ஆகியோருக்கான திருமண உதவித் தொகை ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து வெளியான செய்திக்குறிப்பு:

சமூக நலத்துறையின் கீழ் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டத்தில் இதுவரை நபருக்கு ரூ.10000 வழங்கப்பட்டு வந்தது. இதை ரூ.15000 ஆக உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தாய், தந்தை இல்லாத பெண்களின் திருமணத்திற்கு ரூ.15000, பாதுகாவலர் பெயருக்கு வழங்கப்படும். இதற்கான விண்ணப்பம் திருமணம் நடைபெறும் முன்பு கொடுத்து பயன்பெறலாம்.

டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டத்தில் இதுவரை நபருக்கு 10000 வழங்கியதை தற்போது அரசு ரூ.15000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. பெண்ணின் வயது 21 லிருந்து 35 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. திருமணம் முடிந்து 6 மாதங்களுக்குள்ளாகவும் மணமகனுக்கு முதல் திருமணமாகவும் இருக்க வேண்டும்.

இவ்விரு திட்டங்களின் மூலம் பயன்பெற விரும்புவோர் அனைத்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள், மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் விண்ணப்பங்கள் பெற்று தகுந்த சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 
இளையான்குடி மேல்நிலைப் பள்ளியில் இலக்கியக் கழக விழா

இளையான்குடி மேல்நிலைப் பள்ளியில் 60 ஆம் ஆண்டு வைரவிழாவை முன்னிட்டு இலக்கியக் கழக விழா நடைபெற்றது.

விழாவில் கல்வியின் முக்கியத்துவம் பற்றி மதுரை தியாகராஜர் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் ஞானசம்பந்தன் சிறப்புரையாற்றினார்.

பள்ளித் தலைமை ஆசிரியர் ஜான்முகமது தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் காதர்பாட்சா முன்னிலை வகித்தார்.

தமிழாசிரியர் முகமது அப்துல் ரஹீம் வரவேற்றார். தமிழாசிரியை சபீது நன்றி கூறினார்.
 
சேது பொறியியல் கல்லூரியில் தேசீய அளவிலான தகவல் தொழில் நுட்ப கருத்தரங்கு


மதுரை அருகே உள்ள சேது பொறியியற் கல்லூரியில் தகவல் தொழில் நுட்பத் துறை சார்பாக பொறியியற் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஒரு நாள் கருத்தரங்கு துவங்கியது.

இக்கருத்தரங்கை கல்லூரி தலைவர் மற்றும் நிறுவனர் எஸ்.முகமது ஜலீல் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் என். ரங்கராஜன் முன்னிலை வகித்து கருத்தரங்கு நூலை வெளியிட்டார். இயக்குனர் நிலோபர் பாத்திமா கலந்துகொண்டு கருத்தரங்கு அடங்கிய ஒளி பேழையை வெளியிட கல்லூரி பாடக் கல்வி இயக்குனர் இளங்கோ பெற்றுக்கொண்டார். துறைத் தலைவர் நெல்சன் பாபு கருத்தரங்கு பற்றிய செய்திகளை வழங்கினார். இக்கருத்தரங்கு துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக சோலானி டாடா கன்சல்டன்சி சர்வீஸின் வானொலி அலைவரிசை அடையாளம் காணல் துறையின் முதன்மை ஆலோசக தலைவர் டி.எஸ்.ரங்கராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மாணவர்கள் தங்கள் அறிவு புலனை வளர்த்துக் கொள்வதற்கு இதுபோன்ற கருத்தரங்கில் பங்கேற்க வேண்டுமென்றும், மின்னியல் மற்றும் மின்னணுவியல் கழகம் சார்ந்த இண்டர்நெட் பக்கங்களில் தொழில்நுட்ப இணையதளத்தில் தங்களை பதிவு செய்து தங்கள் படிப்பிற்காகவும், ஆராய்ச்சிக்காகவும் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். வானொலி அலைவரிசை அடையாளம் காணல் தொழில்நுட்பத்திலுள்ள தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளை காட்சி பதிவின் மூலம் மாணவர்களுக்கு விளக்கினார்.

இக்கருத்தரங்கில் 30_க்கு மேற்பட்ட கட்டுரைகளை மாணவ, மாணவிகள் பேட்டர்ன் ரெககனைசிங், நெட்வொர்க் ரெககனைசிங், கிரிட் கம்ப்யூட்டிங், மொபைல் கம்பயூட்டிங், டாடா ரெககனைசிங், இமேஜ் ப்ராஸசிங் போன்ற தலைப்புகளில் சமர்ப்பித்தனர்.

முன்னதாக தகவல் தொழில்நுட்பத்துறை மாணவர் ஹரிபிரசாத் வரவேற்றார். மாணவி நெல்வினா ஜெபலின் நன்றி கூறினார். கருத்தரங்கு ஏற்பாடுகளை துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
 
வெள்ளத்தில் சிக்கிய ஐந்து பேரைக் காப்பாற்றிய சிறுமிக்கு இலவசக்கல்வி


பீகார் மாநிலம் புர்னியா மாவட்டத்தில் பானர் ஆற்றில் படகு ஒன்று சென்ற பொழுது வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அதில் பயணம் செய்தவர்கள் உதவி கேட்டு குரல் கொடுத்ததும் பர்ஜானா எனும் 15 வயது சிறுமி உடனடியாக ஆற்றில் குதித்து ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகள் ஆகியோரை ஆற்று வெள்ளத்தில் இருந்து காப்பாற்றினார்.

பர்ஜானா சிறுவயதிலேயே நீச்சலை கற்றுக் கொண்டதாக அவரது தந்தை ஜமீல் அஹமது தெரிவித்தார். வசதியின்மை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர இயலவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பர்ஜானாவிற்கு இலவசக் கல்வி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் தீரச்செயல் புரிந்தமைக்கான தேசிய விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
http://www.indiaenews.com/india/20070915/70394.htm

முந்தைய பகுதிகள்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com