முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்

சாதனை மாணவி தஹ்ஸீன் நிலோபர்


மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புத் தகுதித் தேர்வில் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டவர்களில் 6 வது இடத்தைப் பிடித்துள்ளார் இராமநாதபுரத்தைச் சேர்ந்த தஹ்ஸீன் நிலோபர். இவரது தந்தை நரம்பியல் நிபுணர் ஜாபர் சாதிக். தாய் சஃபீகா இவரும் மருத்துவர். நிலோஃபர் எஸ்.ஆர்.வி. பெண்கள் பல்ளியில் பயின்று பிளஸ் டூவில் மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்தவர்.

நிலோஃபரை அவருடைய இல்லத்திற்கே சந்தித்து, வாழ்த்து தெரிவித்தோம். அப்பொழுது அவர் கூறினார்.

முதலாவதாக எனக்கு இவ்வெற்றியைத் தந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

எனது முயற்சி இருந்தாலும் இறைவனுடைய நாட்டம் இல்லையென்றால் நான் வெற்றி பெற்றிருக்க முடியாது.

நான் கல்வி பயின்றது இஸ்லாமியக் கல்வி நிறுவனத்தில் அல்ல. இருந்த போதிலும் அது என்னுடைய உள்ளத்திற்கும், என்னுடைய இறைவழிபாட்டிற்கும் இஸ்லாமிய கலாச்சாரத்தைப் பின்பற்றுவதற்கும் எவ்விதத்திலும் தடையாக இருந்ததில்லை.

நிலோஃபர் மாணவர்களுக்கு விடுக்கும் விண்ணப்பம்.

வருட ஆரம்பத்திலிருந்தே தூக்கத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். பாடங்களை மிகக் கவனமாகவும், ஆழமாகவும் படிக்க வேண்டும். படித்ததை எழுதிப் பார்க்க வேண்டும். தேர்வு ஆரம்பிக்கும் மூன்று மாத முன்பிலிருந்தே சரியான ஓய்வை எடுத்துக் கொள்ள வேண்டும். கண்டிப்பாக டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனின் உதவியைத் தேட வேண்டும்.

நிலோஃபர் இராமநாதபுரம் நேஷனல் அகாடமி பள்ளியில் 2004 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பில் மாவட்டத்தில் முதலாவது இடத்தைப் பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சந்திப்பு : சலீமா முஹைதீன்  - ன்றி : சமரசம் ஆகஸ்ட் 1-15, 2007

நன்கொடை தராமல் எம்.பி.பி.எஸ். படிக்கலாம்: ரஷிய கல்வி குறித்த இலவச கருத்தரங்கம்


ரஷியப் பல்கலைக்கழகங்களில் நன்கொடை தராமலும், நுழைவுத் தேர்வு எழுதாமலும் சேர்ந்து படிப்பது தொடர்பான மூன்று நாள் இலவச கல்விக் கருத்தரங்கம் - கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது.

எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏ.ஜெ. கல்வி ஆலோசனை அறக்கட்டளை அலுவலகத்தில் வியாழக்கிழமை இந்தக் கருத்தரங்கம் தொடங்குகிறது.

இதுதொடர்பாக ஏ.ஜெ. கல்வி ஆலோசனை அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ஏ.அமீர்ஜஹான், மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஏ.நஜிருல் அமீன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

நமது நாட்டில் மருத்துவக் கல்வி படிக்க லட்சக் கணக்கில் நன்கொடை தர வேண்டி உள்ளது. ஆனால், ரஷியப் பல்கலைக்கழகங்களில் நன்கொடையும் கிடையாது. நுழைவுத் தேர்வும் இல்லை.

பிளஸ்-டூ படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் பொதுப் பிரிவு மாணவர்கள் 50 சதவீதமும், தாழ்த்தப்பட்ட -பழங்குடி மாணவர்கள் 40 சதவீதமும் மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலே போதும்.

தவணை முறை கட்டணம்: ஆறு ஆண்டுகளுக்கான படிப்புக்கு ரஷியாவில் ரூ.10 லட்சம் செலவு ஆகும். இதை தவணை முறையில் மாணவர்கள் செலுத்தலாம். இந்தத் தொகையை வங்கிகள் மூலம் கல்விக் கடனாகப் பெற வகை செய்யப்பட்டுள்ளது.

ரஷியாவில் மருத்துவம் பயின்றவர்களுக்கு பல நாடுகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்தப் படிப்பை இந்திய மருத்துவக் கவுன்சில், உலகச் சுகாதார நிறுவனம் ஆகியவை அங்கீகரித்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு அறக்கட்டளை நிர்வாகிகளை 963, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை -600 084 என்கிற அறக்கட்டளை முகவரியிலோ, 2661 4485, 93800 05652, 98406 52729 என்கிற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

ராமநாதபுரத்தில் நடமாடும் தொலைபேசி கட்டண வசூல் மையம்

ராமநாதபுரம் தொலைபேசிக் கோட்டத்தில் இன்று முதல் நடமாடும் தொலைபேசி கட்டண வசூல் மையம் துவக்கப் பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு கோட்ட பொறியாளர் ஆர்.சேகரன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

தொலைபேசி சந்தாதாரர்களின் வசதிக்காக அதன் கட்டணத்தை தொலைத்தொடர்பு ஊழியர்கள் நேரில் வந்து வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தியவுடன் அந்த இடத்திலேயே அதற்கான ரசீதும் வழங்கப்படும். இவ்வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளமாறு ஆர்.சேகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆக.16-பெரியபட்டணம், 17-ரெகுநாதபுரம், 18-உச்சிப்புளி, 19-புதுமடம், சாத்தான்குளம், 20-பெருங்குளம், 21- தினைக்குளம், தாமரைக்குளம். 22-அழகன்குளம், 23- பனைக்குளம், 24-அத்தியூத்து, 25-சித்தார்கோட்டை, 26-தேவிபட்டணம், பொட்டகவயல், திருப்புல்லாணி, எக்ககுடி.

இக்கிராமங்களில் குறிப்பிட்ட தேதியில் தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி இச்சேவை இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

அழகன்குளத்தில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி ஊனமுற்றவீரர் ஆட்டநாயகன்


அழகன்குளத்தில் எம்.பி.ஜெ.எஸ். சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கால் பந்து போட்டி நடந்தது. இதில் ஊனமுற்ற வீரர் ஒருவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

கால்பந்து போட்டி

மண்டபம் ஒன்றியம் அழகன் குளம் முஸ்லிம் ஜமாத்தை சேர்ந்த முஸ்லிம் பொது ஜன சங்கம் (எம்.பி.ஜெ.எஸ்.) சார்பில் கலீல் ரகுமான் நினைவு மாவட்ட கால்பந்து போட்டி கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கியது. 20 நாட்கள் நடந்த இந்த போட்டியில் பெரியபட்டினம், பிரப்பன் வலசை, மண்டபம், வழுதூர், மேலக்கோட்டை, அழகன்குளம், பனைக்குளம், புதுவலசை, அத்தியூத்து, சித்தார்கோட்டை, மேலக் கோட்டை, பெருங்குளம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.

இதில் சக்கரக்கோட்டை, மேலக்கோட்டை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. சங்க விளையாட்டு மைதானத்தில் நடந்த இந்த இறுதி போட்டிக்கு முஸ்லிம் ஜமாத் தலைவர் ஹாஜி. எஸ்.எம்.ஹனீபா தலைமை தாங்கினார். துபாய் என்.சி.ஈ.கம்பெனி மேலாளர் ஹாஜி. என்.ஏ.ஹாஜா மைதீன், ஊராட்சி தலைவர் த.பா.அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பரிசளிப்பு விழா

பரபரப்பாக நடந்த இறுதி போட்டியில் ஒரு கோல் போட்டு சக்கரக்கோட்டை அணி வெற்றி பெற்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா கலந்து கொண்டு சக்கரக் கோட்டை அணிக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள பரிசு கேடயம் ஆகியவற்றை வழங்கினார். இதேபோல 2-ம் இடம் பிடித்த அணிக்கு ரூ.2 ஆயிரமும், ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள கேடயம் பரிசளிக்கப்பட்டது.

இந்த விளையாட்டு தொடரில் சிறந்த ஆட்ட நாயகனாக பெருங்குளத்தை சேர்ந்த சீனி பாஷித் தேர்வு செய்யப்பட்டார். ஒரு கை இல்லாதவரான அவருக்கு ஊராட்சி தலைவர் 2 ஆயிரம் மதிப்புள்ள கோப்பை பரிசளிக் கப்பட்டது. மேலும் அவரது தனித்திறனை பாராட்டி என்.ஜி.ஈ. பொது மேலாளர் ஹாஜா மைதீன் உள்பட பலர் ரொக்கப்பரிசு வழங்கினர்.

விழாவில் அழகன்குளம் பொது ஜன சங்க தலைவர் பஹ்ருல் அமீன், ஊராட்சி துணை தலைவர் முகம்மது இஸ்மாயில், ஒன்றிய கவுன்சிலர் சேகு சபியுல்லா, அழகன்குளம் அம்பலம் பாரூக் மற்றும் முஸ்லிம் ஜமாத், சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். சங்க நிர்வாகி சீனி முகம்மது நன்றி கூறினார்.

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு


ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் என்ற அமைப்பினை ஏற்படுத்தி தங்களது ஊரில் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வமைப்பின் நிர்வாகக்குழுக்கூட்டம் துபாயில் ஆடிட்டர் ஹெச். அமீர் சுல்தான் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துவக்கமாக பொதுச்செயலாளர் அல்ஹாஜ் சம்சுதீன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அல்ஹாஜ் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் ஆலிம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் விபரம் வருமாறு : கெளரவ தலைமை ஆலோசகராக ஹெச்.ஹஸன் அஹமது , தலைவராக மெளலவி என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் ஆலிம் , துணைத்தலைவராக அல்ஹாஜ் சம்சுதீன் , பொதுச்செயலாளராக கே. முஹம்மது ஹிதாயத்துல்லா, பொருளாளராக ஏ.அஹமது இம்தாதுல்லா சேட், ஆடிட்டராக ஹெச். அமீர் சுல்தான் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் செயற்குழு உறுப்பினர்களாக ஹெச்.இப்னு சிக்கந்தர் ( தேரா ) , ஏ.முஹம்மது தாஹா ( அல் கூஸ் ) , ஏ. ஜஹாங்கீர் ( அஜ்மான் ), முஹம்மது ரிஸ்வி ( ஷார்ஜா ), ஏ.அஹமது இஸ்மத்துல்லாஹ் சேட் ( சோனாப்பூர் ) , ஜாஹிர் உசேன் ( ராசல் கைமா ) மற்றும் எஸ்.அமீனுதீன் , கஸ்ஸாலி ( அபுதாபி ) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை கெளரவிப்பது எனவும் , இம்முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கி வரும் தாயகப் பிரதிநிதிகள் தேசிய நல்லாசிரியர் டாக்டர் எஸ். அப்துல் காதர் , மெளலவி எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் , மெளலவி ஏ உமர் ஜஹ்பர் ஆலிம், ஹெச்.ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

www.mudukulathur.com  என்ற இணையத்தளத்தை ஏற்படுத்துவது, மின்னஞ்சலில் உலகெங்கும் உள்ள முதுகுளத்தூர் மக்களை muduvai@googlegroups.com ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தொடர்புக்கு 050 5196433 எனும் அலைபேசியிலோ அல்லது muduvaihidayath@gmail.com எனும் மின்னஞசல் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

தகவல் : முதுவை ஹிதாயத்

தேச ஒருமைப்பாட்டை காப்பது அனைவரின் கடமை: தியாகி அமீர் ஹம்சா

 

விழாவில் சுதந்திரப் போராட்ட தியாகி அமீர் ஹம்சாவுக்கு சிறப்பு விருது வழங்கும் கோவை அண்ணா பல்கலை. துணைவேந்தர் ஆர். ராதாகிருஷ்ணன் (இடது), பள்ளியின் மூத்த முதல்வர் ஆர். கிஷோர்குமார்.

தேச ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம் காப்பது நம் அனைவரின் கடமை என்று சுதந்திரப் போராட்டத் தியாகி எம்.கே.எம்.அமீர் ஹம்சா தெரிவித்தார்.

சென்னை பூந்தமல்லி அருகேயுள்ள செயின்ட் ஜான்ஸ் சர்வதேச உறைவிடப் பள்ளியில் சுதந்திரதின வைரவிழா சனிக்கிழை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் பேசியது:

நாட்டுக்காக பல இன்னல்களை அனுபவித்து தியாகம் செய்து விடுதலை பெற்றோம்.

இந்த தேச ஒருமைப்பாட்டையும், மத நல்லிணக்கத்தையும் காப்பாற்ற வேண்டியது அனைவரது கடமையாகும் என்றார் அவர்.

துணை வேந்தர் பேச்சு:கோவை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர். ராதாகிருஷ்ணன் பேசியது:

இளைஞர்கள் முயற்சி செய்தால் அப்துல் கலாமின் கனவான 2020-ல் இந்தியா வல்லரசு நாடாகும். கல்வி கொடுப்பது அரசின் கடமை.

தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலத்தில் ஆங்கில அறிவு அவசியம். பள்ளி அளவில் ஆங்கில அறிவை வளர்க்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளும் திறன் குறைவால் தகவல் தொழில்நுட்பம் குறித்து படித்துள்ள பலர் பணி வாய்ப்பினை இழக்கின்றனர்.

மாணவர்களின் ஆங்கில அறிவை வளர்ப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆங்கில செய்தித்தாள், புத்தகம், படிக்கவும், ஆங்கில சானல்களைப் பார்க்கவும் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.

ஒரு மாணவன் நல்ல குடிமகனாக உயர்வதற்கு பெற்றோர், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் பங்களிப்பு அவசியம் என்றார் ராதா கிருஷ்ணன்.

பள்ளியின் முதுநிலை முதல்வர் ஆர். கிஷோர்குமார் அனைவரையும் வரவேற்றார். சுதந்திரப்போராட்டத் தியாகி எம்.கே.எம். அமீர் ஹம்சா, துணை வேந்தர் ஆர். ராதா கிருஷ்ணன், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் பி. அய்யம்பெருமாள், பாடலாசிரியர் பா. விஜய், ஹாக்கி விளையாட்டு வீரர் வி. பாஸ்கரன், எக்ஸ்னோரா நிறுவனர் எம்.பி. நிர்மல் ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.


அறிவு சார்ந்த சமுதாயம் உருவாக அர்ப்பணிப்பு ஆசிரியர்கள் தேவை திருச்சி கல்லூரி விழாவில் துணைவேந்தர் அறிவுரை
 

அறிவுசார்ந்த சமுதாயம் உருவாக அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஆசிரியர்கள் தேவை என்று திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்த விழாவில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி கூறினார்.

முன்னாள் மாணவர்களுக்கு விருது

திருச்சி ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்களை பாராட்டி விருது வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஷேக் முகமது தலைமை தாங்கினார். கல்லூரி துணை முதல்வர் ஷாகுல் அமீது ஆண்டு அறிக்கையை வாசித்தார்.

கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சென்னை கிளைதலைவர் இதாயத்துல்லாஹ் வாழ்த்தி பேசினார். விழாவில் ஜமால்முகமது கல்லூரியில் படித்து தற்போது கல்வி, வணிகம், தொழில்வளர்ச்சி, மருத்துவம், சேவை பணிகள், சமூக சேவை என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்கள் 12 பேருக்கு தலைசிறந்த முன்னாள் மாணவர் என்ற விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்க பட்டது.

விழாவில் கலந்து கொண்ட கல்லூரியின் முன்னாள் மாணவரும் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தருமான ராமசாமி பேசியதாவது:-

வழிகாட்டுபவர்களே காரணம்

பொருள் இல்லாதவர்களுக்கு இந்த உலகம் இல்லை என்று ஒரு பழமொழி உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பு பொருள் வளம் கொண்டவர்கள் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த கல்லூரியை உருவாக்கினார்கள். நான் இப்போது இந்த கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் விருது பெற வந்திருக்கிறேன் என்பதைவிட என்னை ஆளாக்கிய இந்த கல்லூரிக்கு நன்றி சொல்ல வந்திருக்கிறேன் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

ஒருவர் ஒரு துறையில் சிறந்தவராக உருவாவதற்கு அவருடைய திறமை மட்டுமே காரணமல்ல. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொடுக்கும் ஊக்கமே ஒருவரை சிறந்த தகுதி உடையவராக உருவாக்குகிறது. குரு இல்லாமல் எதுவும் இல்லை. ஒருவன் நல்லவனாவதற்கும், கெட்டவனாவதற்கும் குரு என்ற நிலையில் இருந்து வழிகாட்டுபவர்களே முக்கிய காரணமாக இருக்கிறார்கள்.

அர்ப்பணிப்பு உணர்வு

இந்தியாவின் 60-வது சுதந்திர தினவிழாவை கொடாடும் இந்த நேரத்தில், நாட்டின் எதிர்காலத்தை வளமாக்க இளைய தலைமுறையை அறிவுசார்ந்த திறன்கள் கொண்டதாக உருவாக்க வேண்டியது அவசியம். இந்த இலக்கை அடைவது எளிதானது அல்ல. இதற்கு அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அதிக அளவில் தேவை. அறிவுசார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் அதே நேரத்தில் மாணவ,மாணவிகளிடம் மனிதநேயத்தை வளர்ப்பதாக கல்வி அமைய வேண்டும்.

தற்போது பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் வணிக நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றன. இது போன்ற ஒரு சில கல்வி நிறுவனங்களே ஏழை எளிய மாணவர்களுக்கும் சிறந்த கல்வி சேவையை வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் செயல்படுகின்றன. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக, முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் மூலம் அளிக்கப்படும் உதவிகள் மிகவும் பாராட்டுக்குரியவை. இந்த உதவிகளுக்குரிய வெகுமதிகளை இந்த சமுதாயம் உரிய நேரத்தில் உங்களுக்கு வழங்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், முன்னாள் மாணவர்சங்க பிரதிநிதிகள், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
 

ஷாபான் மாத பிறை மற்றும் பராஅத் இரவு அறிவிப்பு


திருச்சி மாவட்ட ஹிலால் கமிட்டி தலைவரும், திருச்சி மாவட்ட அரசு டவுன் காஜியும், திருச்சி மாநகர ஜமாஅத்துல உலமா தலைவருமான ஜலீல் சுல்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:_


கடந்த 14_ம் தேதி மாலை சென்னையிலும், அதன் சுற்றுப்புறங்களிலும், திருச்சி மாரட்டத்திலும் அதன் சுற்றுப்புறங்கலிலும் ஷாபான் மாத முதல் பிறை தென்பட்டதால் கடந்த 15_ம் தேதி ஷாபான் மாத முதல் பிறை ஆரம்பம் என அறிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் 28_ம் தேதி மாலை பராஅத் இரவு எனவும் அறிவித்துள்ளார். பராஅத் இரவில் முஸ்லீம் மக்கள் அனைவரும் இறைவனை அதிகமாக தொழுது, நபிலான வணக்கங்களும் அதிகமாக செய்து உணவு அபிவிருத்திக்காகவும், ஆயுள் அதிகரிக்கவும், மரணித்தவர்களின் பிழைப் பொருத்தலுக்காகவும் நம் சகோதர சமுதாய மக்களுடன் ஒற்றுமையுடனும் மத நல்லிணக்கத்துடன் இணைந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்யக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இத்தகவலை திருச்சி அரசு டவன் காஜி ஜலீல் சுல்தான் தெரிவித்துள்ளார்.
 

முந்தைய பகுதிகள்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com