முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்
 
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஆதரவுடன் முதுகுளத்தூரில் நடத்தப்பட்டு வரும் இஸ்லாமிய பயிற்சி மையத்தின் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா 22.03.2008 சனிக்கிழமை மாலை பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது.
 
விழாவிற்கு பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் தலைமை தாங்கினார். அமீரகப் பிரதிநிதி எம். பக்ருதீன் பாதுஷா முன்னிலை வகித்தார். திடல் பள்ளிவாசல் இமாம் எஸ். முஹம்மது ரபியுத்தீன் ஃபைஜி பாஜில் மன்பஈ இறைவசனங்களை ஓதினார்.
 
இஸ்லாமிய பயிற்சி மைய முதல்வர் ஹெச்.ஏ. சுல்தான் அலாவுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
 
மாணாக்கர்கள் பி. பாவா பக்ருதீன், என். நஜிமா கனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
 
மார்க்க போதனைத் தேர்வில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி தேசிய நல்லாசிரியர் எஸ்.அப்துல் காதர் வாழ்த்துரை வழங்கினார்.
 
குர் ஆன் ஓதும் போட்டியில் முதலாம்,இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர் வாழ்த்துரை வழங்கினார்.
 
பத்தாம் வகுப்புத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணாக்கர்களுக்க்கு பரிசுகளை அரசு மருத்துவர் டாக்டர் எம். ஷேக் முஹம்மது மைதீன் பரிசுகளை வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினார்.
 
ஒன்பதாம் வகுப்புத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகளை பெரிய பள்ளிவாசல் உதவித் தலைவர் எம்.எம்.கே.எம். காதர் முகையதீன், பெரிய பள்ளிவாசல் உதவி இமாம் மௌலவி எஸ்.டி.ஷேக் முகைஅதீன் மன்பஈ, திடல் பள்ளிவாசல் உதவித் தலைவர் எம்.ஜஹ்பர் சாதிக் அலி, ஆசிரியர் ஏ. ஹபிப் முஹம்மது  உள்ளிட்டோர் வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.
 
உதவித் தலைமையாசிரியர் என். காஜா நிஜாமுதீன் குறைசி நன்றியுரை நிகழ்த்தினார்.
 
தகவல் : முதுவை ஹிதாயத்
ஐக்கிய அரபு எமிரேட்சின் முதல் பெண் நீதிபதி


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் முதல் பெண் நீதிபதியாக கோலோடு அகமது
ஜ×வான் அல் டகேரி நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் அபுதாபி
நீதிமன்றத்தின் அடிப்படை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவரை ஜனாதிபதி
ஷேக் கலீபா பின் சயேத் அல் நக்யான் நியமித்தார். அரபு நாடுகளில்
முதன்முதலாக பெண்நீதிபதியை நியமித்த நாடு பகரைன் தான். இதற்கு
அடுத்தபடியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு உள்ளது.

சவுதி அரேபியா போல இல்லாமல், இங்கு பெண்கள் தன்னந்தனியாக கார் ஓட்டி
செல்லலாம். அவர்கள் மந்திரி பதவி உள்பட பல உயர் பதவிகளில்
இருக்கிறார்கள்.
பஹ்ரைனில் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி தொகுப்பு நிகழ்ச்சி

பஹ்ரைன் தாருல் ஈமான் தமிழ் இஸ்லாமிக் சென்டர் சார்பில் இஸ்லாமிய சிறப்பு
ஒலி ஒளி தொகுப்பு நிகழ்ச்சி 29.03.2008 சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 9
மணி வரை முஹர்ரக் அல் இஸ்லாஹ் சொசைட்டியில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சியினை துபாய் ஜலாலுதீன் ஒருங்கிணைத்து நடத்த இருக்கிறார்.

மேலதிக விபரங்களுக்கு 3 9 0 3 2 2 2 3 மற்றும் 3 9 0 7 3 4 6 4
ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
 
துபாயில் கல்வி மற்றும் பயிற்சி கண்காட்சி 2008

துபாயில் கல்வி மற்றும் பயிற்சி கண்காட்சி 2008 ஏப்ரல் 2 முதல் 5 வரை
துபாய் இண்டர்னேஷனல் கன்வென்ஷன் அண்ட் எக்ஸிபிஷன் செண்டரில் நடைபெற
இருக்கிறது.

இதில் பல்வேறு இந்திய கல்வி நிறுவனங்கள் உள்பட 500 க்கும் மேற்பட்ட
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

மேலும் விபரங்களுக்கு
www.getexcareers.com
www.icedxb.com
 
ஜித்தாவில் புதிய தமிழ் உணவகம் திறப்பு விழா

ஜித்தா பலத் பகுதியில் சவுதி டிரான்ஸ்போர்ட் அருகே தமிழ் நண்பர்களால்
சென்னை உணவகம் மார்ச் 27 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்திய,
பாகிஸ்தான், அரபு, சீன உணவு வகைகள் மிகக் குறைந்த கட்டணத்தில், சிறப்பு
சுவையுடன் கிடைக்கும்.

தகவல் உதவி : noorulameen72@gmail.com
 
சவுதி அரெபியா தலைநகர் ரியாத்தில் பெண்களுக்கென பிரத்யேகமாக முதல் ஹோட்டல் லுத்தான் ஹோட்டல் & ஸ்பா செவ்வாய்க்கிழமை இளவரசர்  சுல்தான் பின் சல்மானால் திறந்து வைக்கப்பட்டது.  பெண்கள் அனைத்து துறைகளிலும் தங்களது திறனை வெளிப்படுத்தும் வண்ணம் இந்த ஹோட்டல் சவுதி அரேபிய அரசுடன் இணைந்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
இத்திட்டம் சவுதியின் பிற பகுதிகளிலும் விரிவு படுத்தப்பட இருப்பதாக இளவரசர் சுல்தான் தெரிவித்தார்
 
துபாயில் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் அல் கூஸ் பகுதியில் உணர்வாய் உன்னை எனும் தன்னம்பிக்கை நிகழ்ச்சியினை 20.03.2008 வியாழக்கிழமை காலை எட்டு மணி முதல் துபாய் மண்டல முஸ்லிம் முன்னேற்றக் கழக கிளை ஏற்பாடு செய்துள்ளது.
 
சமீபகாலமாக துபாயில் தொழிலாளர்கள் மத்தியில் குறிப்பாக இந்தியத் தொழிலாளர்கள் மத்தியில் தற்கொலை விகிதம் அதிகரித்து வருகிறது. தொழிலாளர்கள் குடும்பத்தினரைப் பிரிந்து வாழ்ந்து வருவதால் பல்வேறு காரணங்களால் மனச்சோர்வின் காரணமாகவும், தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து உரிய ஆலோசனை பெற இயலாத சூழ்நிலையினைப் போக்க இத்தகைய தன்னம்பிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாட்டாளர்கள் செய்துள்ளனர்.
 
இனிமையான இத்தகைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் 050 3851929 / 055 9761677 / 050 7640972 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
 
தகவல் : ஹுசைன் பாஷா
 
துபாயில் செயல்பட்டு வரும் இந்தியப் பல்கலைக்கழகமான மணிப்பால் பல்கலைக்கழகம் புதிய பொறியியல் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வளைகுடாப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு மனித வளம் தொடர்பான பாடங்கள் புதிய கல்வியாண்டு துவக்கத்தில் தொடங்கப்படும். மேலும் தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் கட்டிடக் கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் அறிமுகப்படுத்தப்படும்.
 
துபாய் அறிவு கிராம ( Dubai Knowledge Village ) எக்ஸியூடிவ் இயக்குநர் டாக்டர் அயூப் காஜிம், மணிப்பால் பல்கலைக்கழக இயக்குநர் டாக்டர் ராம்ஜி, மணிப்பால் கல்வி நிறுவன பிராண்ட் அம்பாஸிடரும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் அனில் கும்ளே உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது.
 
துபாய் புளு ஸ்கை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த அப்பாஸ் ஷேக் ( வயது சுமார் 21 ) 16.03.2008 ஞாயிறன்று பிற ஊழியர்கள் பணிக்குச் சென்ற நேரத்தில் பேனில் கயிறை மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக சக ஊழியர்கள் தெரிவித்தனர்.
 
எக்ககுடியைச் சேர்ந்த இவர்களது குடும்பம் தற்பொழுது முதுகுளத்தூரில் வசித்து வருகின்றனர்.
 
தனது மகன் துபாய் சென்று குடும்பத்திற்கு உதவியாக இருப்பான் என நினைத்த இவரது குடும்பத்தினருக்கு ஷேக்கின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷேக்கிற்கு தகப்பனார், தாய், இரண்டு இளைய சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி ஆகியோர் இருக்கின்றனர்.
 
பிற ஊழியர்கள் பகலில் பணிக்குச் சென்று திரும்பி விட்டு அறைக் கதவைத் திறந்ததும் ஷேக் தூக்கில் தொங்கியது கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
 
துபாய் காவல்துறை சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக இந்திய தூதரக அலுவலகங்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் இந்தியர் தற்கொலை விகிதம் படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடின்றி அதிகரித்து வருவது அதிர்ச்சியலைகளை இந்திய சமூகத்தினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
தோஹாவில் 15.03.2008 சனிக்கிழமை முதலாவது கத்தோலிக்க சர்ச் திறந்து வைக்கப்பட்டது. சர்ச் திறப்பு விழாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். இவர்கள் 63 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கத்தோலிக்கர்கள் தோஹாவில் பணிபுரிந்து வருகின்றனர்.
 
தோஹாவில் சர்ச் அமைத்து வழிபாடு செய்ய அனுமதித்தமைக்காக போப் பெனிடிக்ட் கத்தார் அமீர் ஷேக் ஹமத் பின் கலிஃபா அல் தானிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
 
சர்சைப் பார்வையிட்ட கத்தார் துணைப்பிரதமர் அப்துல்லாஹ் அல் அதிய்யாஹ் கத்தார் நாட்டிற்கு வருகை தர போப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

முந்தைய பகுதிகள்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com