முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்

 

PRAVASI BHARATIYA SAMMAN விருது பெற்ற ETA ASCON நிர்வாக இயக்குநருக்கு
துபை ஈமான் அமைப்பு நடத்திய வாழ்த்தரங்கம்


துபை ஈமான் அமைப்பு மிகச் சிறந்த வெளிநாடு வாழ் இந்தியக்குடிமகனுக்கான PRAVASI BHARATIYA SAMMAN விருதை இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்ற ETA ASCON குழுமங்களின் நிர்வாக மேலாண்மை இயக்குநரும், ஈமான் அமைப்பின் தலைவருமான அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹ¤த்தீன் அவர்களுக்கு வாழ்த்தரங்கை 01.03.2007 வியாழன் மாலை துபை தேரா பகுதியில் அமையப்பெற்ற குவைத் பள்ளியில் ( லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் ) அரங்கேற்றியது.

துவக்கமாக மெளலவி அப்துல் மாலிக் அரூஸி இறைவசனங்களை ஓதினார். ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் அல்ஹாஜ் எம் அப்துல் ரஹ்மான் வாழ்த்தரங்கம் நடத்தப்படுவதன் நோக்கம் குறித்து விவரித்தார். மிகச்சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர்க்கான விருது பெற்றதும் ஸலாஹ¤த்தீன் காக்கா அவர்கள் இவ்விருது தனக்கு மட்டும் கிடைத்த விருதல்ல. தனது நிறுவனத்தில் பணிபுரியும் 45,000 பேர்களுக்கும் கிடைத்த விருது என்று கூறி தனது பெருந்தன்மையுடன் வெளிப்படுத்திய நிகழ்வை நினைவு கூர்ந்தார். அத்தகைய பெருமையுடையவர்க்கு மிகப்பெரிய அரங்கில் விழா நடத்த ஆவல் கொண்டு காக்காவை அணுகிய போது இறைவனின் இல்லமான பள்ளிவாசலிலேயே மிகவும் எளிமையாக நடத்தப்படுவதையே தான் விரும்புவதாகக் கூறியதையடுத்து இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறினார். காக்கா அவர்கள் கல்வி, சமூக, சமுதாயப் பணிகளுக்காக செய்து வரும் உதவிகள் குறித்தும் விவரித்தார்.

ஏகத்துவ மெய்ஞான சபையின் தலைவர் பொறியாளர் அல்ஹாஜ் எம் ஜே முஹம்மது இக்பால், தான் ETA நிறுவனத்திற்கு நேர்முகத்தேர்வுக்கு வரும்போது காக்கா அவர்களுடன் ஏற்பட்ட அனுபவங்களை விவரித்தார். மிகவும் எளிமையுடன் காணப்பட்ட காக்கா பற்றி பெருமிதம் கொண்டார்.

அனைத்து ஜமாஅத்கள் சார்பில் உரை நிகழ்த்திய லெப்பைக்குடிக்காடு அன்வர் பாஷா அவர்கள் (Executive Director, ETA M&E Division, Dubai) ETA நிறுவனம் துவங்கிய போது பணிக்குத் தெரிவு செய்ய்யப்பட்ட நூறு பேரில் 30 பேர் லெப்பைக்குடிக்காட்டைச் சேர்ந்தவர்கள் என்பதில் பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து அமீரக ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மெளலவி குத்புதீன், அபுதாபி அய்மான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் காதர் பக்ஷ் ஹ¤சைன் சித்திக்கீ, குவைத் பள்ளி இமாம் மெளலவி காஜா முஹம்மது ஜமாலி மக்கி மன்பயீ உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

தேசிய விருதாளர் புலவர் முஸ்தபா தனது உரையில் காக்கா அவர்களின் நேரந்தவறாமை குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். ஸலாஹ¤த்தீன் காக்கா அவர்கள் அறிவாளர், உழைப்பாளர், பண்பாளர் என்றார். தாய், தந்தையரின் சொற்களுக்கு பெரிதும் மதிப்பு கொடுத்து உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்றார்.

ஏற்புரை நிகழ்த்திய அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹ¤த்தீன் அவர்கள் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றார். பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் வாழ்ந்து வந்தாலும் வளைகுடாவைச் சேர்ந்த நம்மைப் போன்றவர்கள் தான் தாயகத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையான பணிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். பல்வேறு ஜமாஅத்தினரும் தங்களது ஊருக்குத் தேவையான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவது குறித்து பெருமகிழ்வு அடைவதாகக் குறிப்பிட்டார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களது பெருமையை உணர்ந்த அரசு அவர்களுக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தி அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் தான் சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர்க்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார். தன்னால் இயன்ற பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவை இன்னும் சிறப்புற ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் தெரிவிக்க கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஈமான் அமைப்பு சார்பாகவும், முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர், காயல்பட்டணம், முதுகுளத்தூர், கோட்டக்குப்பம், வண்ணாங்குண்டு, கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு ஜமாஅத்கள் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் அல்ஹாஜ் அப்துல் கத்தீம் நிறைவுரையாற்றினார். காயல்பட்டணம் மெளலவி சுலைமான் லெப்பை ஆலிம் மஹ்ளரி அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. தேரிழந்தூர் தாஜுதீனின் வாழ்த்து கீதமும் இடம்பெற்றது.

நிகழ்ச்சியில் ஈமான் சங்க நிர்வாகிகள், ETA ASCON நிறுவன ஊழியர்கள், பல்வேறு ஜமாஅத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
 

முதுகுளத்தூர் இஸ்லாமியப் பயிற்சி மைய ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா


ராமநாதபுரம் ஜில்லா முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மைய ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா 18.03.2007 ஞாயிறு மாலை பயிற்சி மைய வளாகத்தில் சிறப்புற நடைபெற்றது.

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மெளலவி எஸ் பஷீர் சேட் ஆலிம் தலைமை வகித்தார். அரசு பள்ளி ஆசிரியர் எம் அஹமது பைசல் முன்னிலை வகித்தார். திடல் பள்ளி இமாம் மெளலவி அமானுல்லா இறைவசனங்களை ஓதினார்.

இஸ்லாமிய பயிற்சி மைய முதல்வர் H.A. சுல்தான் அலாவுதீன் வரவேற்புரை நல்கினார்.

தீனியாத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்க்கு பரிசுகளை வழங்கி தேசிய நல்லாசிரியர் எஸ் அப்துல் காதர் சிறப்புரை வழங்கினார். பள்ளித்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவரும், ஓய்வு பெற்ற தாசில்தாருமான ஹாஜி எம் அன்வர் பரிசு வழங்கி வாழ்த்துரை நல்கினார்.

விடியல் வெள்ளி மாத இதழ் நடத்திய கட்டுரைப் போட்டியில் பங்கேற்று பாராட்டுப் பெற்ற மாணாக்கர்களுக்கு முதுவைக் கவிஞர் மெளலவி உமர் ஜஹ்பர் பரிசு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து திடல் ஜமாஅத் தலைவர் M.A. முஹம்மது மசூது, பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் என் காஜா நிஜாமுதீன் குரைசி, ஆசிரியர்கள் ஏ அஸ்கர் அலி, எம். முஸ்தபா கமால், ஏ ஹபீப் முஹம்மது உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக சிறு சிறு தலைப்புகளில் எம். பெனாசிர், கே. அஜிபா நஸ்ரின், •பாத்திமா, ஏ அஹமது, ஏ. நுஸ்ரத் ஹசினா, எம். ராபியா பீவி, பி. பாவா பக்ருதீன் ஆகிய மாணவ, மாணவியர் உரை வழங்கினர்.

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் செயற்குழு உறுப்பினர் ஏ அஹமது இம்தாதுல்லாஹ் சேட் நன்றி கூறினார்.

இதுபோன்ற கல்வி மற்றும் சமுதாயப் பணிகளுக்கு அமீரகத்தில் வாழ்ந்து வரும் முதுகுளத்தூர் ஜமாஅத்தார்கள் உதவிகளைச் செய்து வருகின்றனர்.
 

கீழக்கரை புதிய டவுண் காஜி பதவி ஏற்பு


01.01.2007 ஹஜ் பெருநாள் தொழுகைக்குப்பின் கீழக்கரை நடுத்தெரு ஜும்ஆ மஸ்ஜிதில் அனைத்து ஜமாஅத் முன்னிலையில் கீழக்கரை அனைத்து மஹல்லா ஜமாஅத் கூட்டமைப்பு (குத்பா கமிட்டி) தலைவர் டாக்டர் அல்ஹாஜ் எஸ் எம் ஹமீது அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த டவுண் காஜி அல்ஹாஜ் முஹம்மது அப்துல் காதர் ஆலிம் சித்தீக்கி மருமகன் அல்ஹாஜ் காஜி ஏ எம் எம் காதர் பக்ஷ் ஹ¤ஸைன் சித்திக்கீ நகரின் 13வது காஜியாக பொறுப்பேற்றார்.

புதிய டவுண் காஜி கீழக்கரை நடுத்தெரு, ஜும்ஆ மஸ்ஜித், ஏர்வாடி காட்டுப்பள்ளி ஜும்ஆ மஸ்ஜித் ஆகியவற்றின் முத்தவல்லி, கீழக்கரை இஸ்லாமிய பைத்துல்மால் செயற்குழு ஸ்தாபக உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை, தமிழ்நாடு தொல்லியல் கழகம், இராமநாதபுரம் தமிழ்ச்சங்கம், இஸ்லாமிய இலக்கியக் கழகம் இவற்றின் உறுப்பினர் ஆவார்.

திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி நிறுவனர்களில் ஒருவரான இவர் திருச்சி அய்மான் கல்வி அறக்கட்டளையின் துணைத்தலைவர் ஆவார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை துணைத்தலைவர், அபுதாபி அய்மான் சங்க தலைவர் ஆவார். புதிய காஜியார் இஸ்லாமிய மார்க்கம், கல்வி, சமூக சேவை இவற்றிற்கான பல விருதுகளைப் பெற்ற முதுகலை பட்டதாரியுமாவார்.

செங்கடல் முதல் கருங்கடல், அரபிக்கடல் முதல் மத்திய தரைக்கடல் பிராந்தியங்களில் இஸ்லாமிய வரலாற்று தடங்களில் ஆய்வு நடத்தியவராவார்.

முதல் கலீபா செய்யதினா அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களின் 28 வழித் தோன்றலான இவரது முன்னோர் காஜி பஹாவுத்தீன் 500 ஆண்டுகளுக்கு முன் கீழக்கரையின் முதல் காஜியாக விளங்கினார்.

கீழக்கரையின் புதிய டவுண் காஜியாக பதவியேற்றுள்ள அல்ஹாஜ் காதர் பக்ஷ் அவர்களை அமீரக சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள், சமுதாயப் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.

தகவல் : முதுவை ஹிதாயத்
முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி (எம் என் ஏ)
 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 முதல் 29-ந்தேதி வரை இலவச கண் சிகிச்சை முகாம்கள்


ராமநாதபுரம் மாவட்டத்தில் கிருஷ்ணன் கோவில் சங்கரா, மதுரை மீனாட்சி மிஷன், ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை, மதுரை அரவிந்த், சாலைக்கிராமம் விழியகம், நிலக்கோட்டை தமியான், விருதுநகர் செயின்ட்லூக், நாகர் கோவில் பெஜன்சிங், கீழக்கரை யூசுப் சுலைஹா ஆகிய மருத்துவமனைகள் சார்பில் வருகிற 4-ந் தேதி முதல் 29-ந்தேதி இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடை பெறுகிறது.

வருகிற 4-ந்தேதி கடலாடி யூனியன் பள்ளியிலும், 5-ந் தேதி எமனேசுவரம் சவுராஷ்டிரா சபையிலும், 7-ந்தேதி உரப்புளி யூனியன் பள்ளி, திருவெற்றியூர் யூனியன் பள்ளி ஆகியவற்றிலும், 8-ந்தேதி ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியிலும், 9-ந்தேதி பார்த்திபனூர் யூனியன் பள்ளி, சக்கரக்கோட்டை யூனியன் பள்ளி ஆகியவற்றிலும் இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடைபெறுகிறது.

பயன் பெறலாம்

இதேபோல 11-ந்தேதி காக்கூர் யூனியன் பள்ளி, கொழுந்துரை யூனியன் பள்ளி ஆகியவற்றிலும், 13-ந்தேதி முத்துப்பேட்டை ஆர்.சி. பள்ளி, கீழக்கரை ஹைராத்துல் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிலும், 15-ந்தேதி தொண்டி மெட்ரிக் பள்ளியிலும், 16-ந்தேதி பாம்பன் அந்தோணியாளர் நர்சரி பள்ளியிலும், 19-ந்தேதி உச்சிப்புளி யூனியன் பள்ளியிலும், 20-ந்தேதி அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, சூரன்கோட்டை காலனி சமுதாயக் கூடம், ஏர்வாடி அரசு மேல் நிலைப்பள்ளி ஆகியவற்றிலும் கண் சிகிச்சை முகாம்கள் நடக் கிறது.

21-ந்தேதி பரமக்குடி ஆயிர வைசிய பள்ளி, கருத்தனேந்தல் யூனியன் பள்ளி, பண்ணவயல் யூனியன் பள்ளி ஆகியவற்றிலும், 22-ந்தேதி தங்கச்சிமடம் யூனியன் பள்ளியிலும், 25-ந்தேதி பரமக்குடி டி.இ.எல்.சி. பள்ளியிலும், 27-ந்தேதி வண்ணாங் குண்டு யூனியன் பள்ளி, கீழராமநதி யூனியன் பள்ளி ஆகியவற்றிலும், 28-ந்தேதி நத்தம் யூனியன் பள்ளி, தங்கச்சிமடம் அரசு மேல் நிலைப்பள்ளி, பகைவென்றி யூனியன் பள்ளி ஆகியவற்றிலும் 29-ந் தேதி ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியிலும் இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடைபெறுகிறது.

இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்று பயனடையுமாறு கலெக்டர் கிர்லோஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
நன்றி: தினத்தந்தி

ஒரு அலசல் ரிப்போர்ட்
 
இனி, சச்சின் ஒரு பிஸ்கட் பாக்கெட்டைக் கையில் எடுத்து, 'இதுதான் என் வெற்றியின் ரகசியம்' என்றால் ரசிப்பீர்களா? தோனி, தன் கூந்தலை வருடியபடி 'இந்த ஷாம்பு என்னை மாதிரியே பெர்ஃபெக்ட்' என்று சொன்னால், அந்த ஷாம்பு மேல் வெறுப்புத்தானே தோன்றும்? டிராவிட் அமைதியான முகத்தோடு வந்து 'ஊ.. ஆ.. இந்தியா..' என்று கத்தினால், டி.வி.யை உடைக்க வேண்டும் என்றே தோன்றுமல்லவா?

இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட் வெறும் விளையாட்டல்ல. ஒரு மதம். ரசிகர்களைப் பொறுத்தவரை கிரிக்கெட் வீரர்கள், சாதாரண மனிதர்களல்ல. தங்களின் சொந்த ஊர்களில் தெய்வங்களாகவே கொண்டாடப்பட்டார்கள். எல்லாம் மார்ச் 23, நள்ளிரவோடு முடிந்துவிட்டது. அன்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் இலங்கையிடம் அடைந்த தோல்வியை, யாராலும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு இந்தியனும் அதை தேசிய அவமானமாகவே கருதுகிறான்.

விளைவு? வீரர்களின் உருவ பொம்மைகள் எரிப்பு, செருப்படி, பாடை கட்டி ஊர்வலம், கொந்தளிப்பு எஸ்.எம்.எஸ்.கள், கோபக் குமுறல்கள், இரண்டு ரசிகர்களின் மரணம். என்றாலும் ரசிகர்களின் ஆத்திரம் இன்னும் அடங்கவில்லை. அடங்குவதாகவும் இல்லை. ஒவ்வொரு வீரரின் வீட்டுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு தொடரவே செய்கிறது.

மனரீதியாக இவ்வளவு பாதிப்புகள். பண ரீதியாக? இன்னும் நிறையவே!

முக்கியமாக கிரிக்கெட்டை ஒளிபரப்பும் டிவி நிறுவனங்களும், அதில் விளம்பரம் செய்யும் நிறுவனங்களும் தலையில் துண்டல்ல, துணிக்கடையையே போட்டுக் கொண்டு அழுகின்றன.

நோக்கியா, பெப்ஸி, ஹீரோ ஹோண்டா, வீடியோகான், மாருதி சுசூகி ஆகிய நிறுவனங்கள் மேட்ச் ஒளிபரப்பப்படும்போது டிவியில் காட்டப்படும் விளம்பரங்களுக்காக மட்டும் 400 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. மேட்ச் நடக்கும் மைதானங்களிலும், மற்ற இடங்களிலும் வைக்கப்படும் விளம்பர போர்டுகளுக்காக மட்டும் 100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. இந்த விளம்பரங்களின் தயாரிப்புச் செலவு, கிரிக்கெட் வீரர்களுக்கு ஸ்பான்சர்ஷிப் செலவு, முக்கிய நகரங்களில், முக்கிய இடங்களில் விளம்பரங்களை வைக்க ஆகும் செலவு, பத்திரிகைகள், ரேடியோ, கிரிக்கெட் ஒளிபரப்பாகாத பிற சேனல்களில் இந்த விளம்பரங்களை வெளியிட ஆகும் செலவு, இன்னபிற லொட்டு லொசுக்கு செலவுகளுக்கெல்லாம் சேர்த்து 3000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன.

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான முக்கிய ஸ்பான்சரான பெப்சியின் விளம்பர பட்ஜெட் மட்டும் 40 கோடி ரூபாய். இந்திய வீரர்களை நம்பி எடுத்த விளம்பரங்களை எரித்து விடலாமா என்றுகூட தற்போது யோசித்துக் கொண்டிருக்கிறது. இதே கவலையோடுதான் ரீபோக், விசா நிறுவனங்களும் இருக்கின்றன.

'ப்ளீஸ்.. ஏதாவது செய்து என்னைக் காப்பாற்றுங்களேன்' என்று நோக்கியா நிறுவனம் சோனியிடமும் தூர்தர்ஷனிடமும் கெஞ்சிக் கொண்டிருக்கிறது. இந்திய வீரர்களின் முகத்தை நம்பாத நிறுவனங்களும், கிரிக்கெட் கான்செப்ட் இல்லாமல் விளம்பரங்களை எடுத்துள்ள நிறுவனங்களும் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றன. இருந்தாலும், இந்தியா விளையாடாத மேட்சுகளில் விளம்பரம் கொடுத்து என்ன பயன் என்று சீரியஸாகவே யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சரி, விளம்பரங்களைக் கொடுப்பவர்களுக்கே இவ்வளவு நஷ்டம் என்றால், விளம்பரங்களை ஒளிபரப்பும் சேனல்களுக்கு? பல மடங்கு.

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு, கிரிக்கெட் மேட்சை ஒளிபரப்பும் உரிமம் வாங்குவதற்கு, சேனல்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஐந்து கோடி ரூபாய் வரை கொடுத்தது. ஆனால், கிரிக்கெட் மிகப் பெரிய வர்த்தகமாக்கப்பட்ட பின்பு, அதன் விலை, நான்கு ஆண்டுகளுக்கு 3000 கோடி ரூபாய் என்று அசுர வளர்ச்சியடைந்துள்ளது.

அவ்வளவு விலை கொடுத்து வாங்கும் சேனல்கள், லாபம் சம்பாதிப்பதெல்லாம் இரண்டாம் பட்சம். போட்டதையாவது எடுக்க வேண்டுமே. அதற்கு ஒரே வழி, விளம்பரதாரர்கள். முன்பெல்லாம், ஒரு விளம்பரம் என்பது முப்பது செகண்டுகள் ஓடக் கூடியதாக இருக்கலாம் என்றிருந்தது. இப்போது அது பத்து செகண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு ஓவருக்கும் இன்னொரு ஓவருக்கும் இடைப்பட்ட நேரத்தில் குறைந்தபட்சம் மூன்று விளம்பரங்கள், யாராவது ஒரு வீரர் குனிந்து, அவிழ்ந்த தனது ஷ¨ லேஸைக் கட்ட ஆகும் சில நொடிகளில் ஒரு விளம்பரம். இவை போக, பந்துக்குப் பந்து, ஃபோர், சிக்ஸ் அடித்தால், விக்கெட் விழுந்தால் என்று திரையை ஆக்கிரமிக்கும் தோரண விளம்பரங்கள் என்று எங்கெல்லாம் சைக்கிள் கேப் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் கண்டெயினர் லாரியே ஓட்டினால்தான் பிழைக்க முடியும் என்ற நிலையில்தான் சேனல்கள் இருக்கின்றன.

இந்தியா சூப்பர் எட்டு சுற்றுக்கே போகாத இந்நிலையில், சோனி மேக்ஸ் நிறுவனம் விழி பிதுங்கி நிற்கிறது. சோனி, 50 முதல் 60 சதவிகிதம் வரையான விளம்பரங்களுக்கான ஸ்லாட்டுகளை (அதாவது பத்து செகண்ட் ஓடும் விளம்பரத்தை ஒருமுறை ஒளிபரப்ப இரண்டு முதல் மூன்று லட்சம் வரை கட்டணம்) விளம்பரதாரர்களிடம் விற்றிருக்கிறது. இந்தியா அடுத்த சுற்றுக்குப் போகும் பட்சத்தில், அதிக விலை வைத்து மீதி ஸ்லாட்டுகளை விற்கலாம் என்ற சோனியின் கணக்கு தப்பாகிவிட்டது. தூர்தர்ஷனின் நிலையும் இதேதான்.

இனி, கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிடும். மீதி ஸ்லாட்டுகளை யாரும் வாங்கப் போவதே இல்லை. அடிமாட்டு ரேட் கூறினாலும் விலை போவது கடினமே. ஏற்கெனவே, விளம்பர ஒப்பந்தம் செய்திருக்கும் நிறுவனங்களும் தொகையைப் பலமடங்கு குறைக்கச் சொல்லி (பத்து செகண்டுக்கு 40 முதல் 50 ஆயிரம் வரை கட்டணம்) நெருக்கடி கொடுத்து வருகின்றன. 'மேட்ச் நேரத்தில் ஒளிபரப்பாமல், எங்களின் ப்ரைம் டைம் நிகழ்ச்சிகளின்போது, உங்கள் விளம்பரங்களை ஒளிபரப்புகிறோம்' என்று சோனி சமாதானம் பேசிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கொடுமைகள் எல்லாம் நடப்பதற்கு முன்பே, சோனி நிறுவனம் இனி கிரிக்கெட்டைத் தலைமுழுகி விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்த எட்டு ஆண்டுகளுக்கான கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமையை இ.எஸ்.பி.என்., ஸ்டார் ஸ்போர்ட்ஸ்தான் வாங்கியுள்ளது. அதற்காக கொடுக்கப்பட்ட விலை, அமெரிக்க டாலர்களில் 1.1 பில்லியன். உலகக் கோப்பைக்குப் பின் அடுத்து இந்தியா ஆடப்போகும் மேட்சுகளுக்கு விளம்பரதாரர்கள் கிடைக்காமல், இ.எஸ்.பி.என்., ஸ்டார் ஸ்போர்ட்ஸ் திண்டாட வேண்டிய நிலை வரலாம்.

இந்தியாவின் தோல்வியால் விளம்பரதாரர்களுக்கும் சேனல்களுக்கும்தான் நஷ்டமே தவிர, ஐ.சி.சி.க்கோ, இந்திய கிரிக்கெட் போர்டுக்கோ எந்தவித நஷ்டமும் கிடையாது. ஏனென்றால், அவை சேனல்களோடு செய்யும் ஒப்பந்தங்கள் எல்லாம் நான்கு வருடங்கள், எட்டு வருடங்கள் என்ற கணக்கில்தான்.

சரி, இந்திய வீரர்களுக்கு இதனால் என்ன நஷ்டம்? புதிய விளம்பரங்கள் கிடைக்காது. பழைய விளம்பரங்கள் கை நழுவிப் போகும். (ஏற்கெனவே எம்.ஆர்.எஃப், தன் ஆஸ்தான வீரர் சச்சினைக் கைகழுவி விட்டது.) இனியும் டீமில் இருந்தால், மேட்ச் ஆடி கிடைக்கும் சம்பளம் மட்டுமே. அதுவும் குறைக்கப்படலாம் என்ற நிலைதான். ஏற்கெனவே கிரிக்கெட்டுக்குள் ஏகத்துக்கும் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கும் அரசியல் இப்போது தவிர்க்கப்பட்டால், இந்திய அணியில் களையெடுக்கப்படலாம். புதிய ரத்தம் பாய்ச்சப்படலாம். ஓரிரு ஆண்டுகளிலேயே வலிமை வாய்ந்த 'டீம் இந்தியா'வை உருவாக்கலாம்.

'சேப்பலைத் தூக்கிவிட்டு அந்த இடத்தில், லாலு பிரசாத் யாதவை கோச்சாக நியமிக்கலாம். இந்திய ரயில்வேயை பெண்டு நிமிர்த்திய லாலு, இந்திய அணியையும் உருப்படியாக்கிவிடுவார்' என்று சேனல் ஒன்றில் ரசிகர் ஒருவர் சிரித்துக்கொண்டே சொன்னார். இப்போதிருக்கும் சூழ்நிலையில், இதையும் சீரியஸாகவே சிந்திக்கத் தோன்றுகிறது.

நன்றி: குமுதம் ரிப்போர்டர்

முந்தைய பகுதிகள்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com