- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

ருசி

அன்று ஞாயிற்றுக்கிழமை பகல் நேரம்!

‘சூப்போடு ஆரம்பமாகியிருந்தது விருந்து!

ஹமீது ராவுத்தர் தம் திறமையை எல்லாம் காட்டித் தாமே மேற்பார்வை செய்து தயாரித்திருந்த சூப் அது.

மலேசியாவில் அவர் செய்த முதல் வியாபாரமே ‘சூப்’ வியாபாரதம்தான்!

மேண்டுமென்றே தூக்கலாக இடப்பட்டிருந்த உப்பும், புளிப்பும் பசியைக் கிளறிவிட வந்திருந்த விருந்தாளிகள் ஒரு கை பார்க்க ஆரம்பித்தார்கள்.

வந்திருந்தது நான்கு பேர்தான்!

ஆனால், நாறபது பேருக்கான உணவு வகை அந்த சாப்பாட்டு மேஜையில் பரப்பிக் கிடந்தது.

நெய் வடியும் பாசுமதி பிரியாணி!

தந்தூரி சிக்கன். மீன் பொறியல்!

முட்டை சாப்ஸ். மட்டன் கட்லட்!.. இத்யாதி.. இத்யாதி.. என்று ஏகப்பட்ட அயிட்டங்கள்!

மா, பலா. வாழை என்ற முக்கனிகள் தட்டுக்களில்!

ஆரஞ்சு, திராட்சை என்று வேறு சில பழங்கள்.

தட்டுத்தட்டாக ஸ்வீட் வகைகள்!

விருந்தாளிகள் நான்கு பேரும் விஐபிகள்!

ஹமீது ராவுத்தரின் பிஸினஸ{க்கு உதவும் அதிகாரிகள். நண்பர்கள்!

முப்பது ஆண்டுக்காலம் முனைப்போடு உழைத்து உருவாக்கிய தொழில்களை மூத்த பையன்கள் இருவரின் பொறுப்பில் விட்டுவிட்டு, மலேசியாவிலிருந்து திரும்பி ஊரோடு இருந்து விட்டவர் ராவுத்தர்!

இளைய மகன் இல்யாஸை இந்தியாவிலேயே தொழிற்துறையில் நிலைப்டுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அந்த முயற்சியில் ஒரு லைஸன்ஸ் கிடைப்பது சுணங்கிக் கொண்டே இருந்தது!

அதிகாரியைப் பரிச்சயப்படுத்தி, குறுக்கு வழியில் நுழைவது அவருக்கு கைவந்த கலை!

‘அப்படி இப்படி’ நுழைந்து வெற்றியும் பெற்று விட்டார்!

அந்த லைசென்ஸ் சம்பந்தமான நான்கு பெரிய அதிகாரிகளும் ராவுத்தரின் புரோக்கர்கள் முயற்சியால் இன்று வீட்டுக்கு விருந்துக்கு வந்து விட்டார்கள்.

இனிமேல் என்ன?

பலமான விருந்தும், விருந்தின் முடிவில் பரிமாறப்படவிருந்த வெளிநாட்டு மதுவகைகளும், அவர்களது கார் டிக்கிகளில் ஏற்றப்படவிருந்த ஏராளமான அன்பளிப்புகளும் அந்த லைஸன்ஸை அவரது காலடியில் கொண்டு வந்து போடப்போகின்றன.

ஹமீது ராவுத்தரின் முகம் களை கட்டியிருந்தது.

தாமே டைனிங் டேபிளைச் சுற்றிச்சுற்றி வந்து விருந்தினைரை விஷேசமாகக் கவனித்தார்.

வேலைக்காரப் பையன் மஹ்மூதை விரட்டி விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தார்.

‘போதும் போதும்’ என்று சொல்வதைப் பொருட்படுத்தாமல் ஒரு இன்ஞ் நீளத்துக்கு மசிந்து கிடந்த பாசுமதி பிரியாணியை அள்ளி அள்ளி வைத்தார்.

“என்ன சார், நீங்க, சிக்கனே எடுத்துக்கக் காணோம். என்று கூறி ஒரு பெரிய கோழித்துண்டை எடுத்து தட்டில் வைத்தார்!

இரண்டு மட்டன் கட்லட்டுகளை எடுத்து இன்னொரு தட்டில் இட்டார்.

“இது ஸ்பெஷலா வாங்கின வாவல்மீன் சார், உங்க பக்கத்துல கிடைக்கவே கிடைக்காது” என்றபடி இரண்டு பொறித்த மீன் துண்டுகளை மற்றவர் முன் வைத்தார்!

ஆயிற்று! விருந்தாளிகள் ‘ஆவ்’ என்ற பலமான ஏப்பங்கள் வயிற்றில் இனி காலி இடம் இல்லை என்பதை வெளிப்படுத்தியது!

இருந்தாலும் ஹமீது ராவுத்தர் விடுவதாக இல்லை.

பழத்தட்டுக்களையும், இனிப்பு வகைகளையும் வற்புறுத்தி அவர்களுக்கு முன் நகர்த்திக் கொண்டிருந்தார்.

ஒரு விஐபி ஒரு மாம்பழத்துண்டை எடுத்து வாயில் வைத்தார்!

தேள் கொட்டியது போல “தூ..தூ” என்று வாஷ்பேஷினுக்குச் சென்று துப்பினார்! அவரது முகம் ஆயிரம் கோணலாகிப் போனது!

பதறிப் போனார் ராவுத்தர்!

“என்ன? என்ன சார்?” என்றார் பதட்டத்தோடு!

“ஒரே புளிப்பு சார்! வாயிலேயே வைக்க முடியல” என்றார்.

உடனே ஒரு துண்டு மாம்பழத்தை தன் வாயில் எடுத்து சுவைத்துப் பார்த்த ராவுத்தரின் முகம் கோபத்தால் சிவக்க ஆரம்பித்தது.

பயங்கரமாகக் கண்களை உருட்டி வேலைக்காரப் பையன் மஹ்மூதைப் பார்த்தார்!

முதலாளியின் கோபத்தைப் பார்த்த அந்த பன்னிரெண்டு வயதுப் பையன் பயத்தோடு நெளிய ஆரம்பித்தான்!

“ஏலே மஹ்மூது, என்னலே இது?” குரல் அதிர்ந்தது!

‘….  அவன் கைகட்டி மெளனமாய் நின்றான்!

“என்னலே, நாம்பாட்டுக்கு கேட்டுக்கிட்டே இருக்கேன் .. நீம்பாட்டுக்கு மரமாட்டம் நிக்கறே?  பழத்தை வெட்டி வைக்கயிலேயே ருசி பார்த்து வையிண்டு சொன்னனா இல்லியாலே?”

“ஆமாங்க முதலாளி”

அப்ப ஏலே ருசி பாத்து வைக்கலை?”

“….  ” – அதற்கவன் பதில் சொல்லவில்லை.

அவனது மெளனம் மேலும் வெறியேற்றியது ராவுத்தருக்கு!

‘என்ன அகம்பாவம் இந்தப் பயலுக்கு? இத்தணை பேருக்கு முன்னாடி அவமரியாதை செய்கிறானே? என்ற எண்ணவோட்டம்!

அருகில் சென்று ஓங்கி ஒரு அறை விட்டார் அவன் கன்னத்தில். “சோம்பேறி ராஸ்கல்” என்று திட்டிக் கொண்டே!

அந்த அழுத்தமான அறையின் தாக்குதலால் நிலை குலைந்து போன அந்தப் பையன் மெளனமாகக் கண்ணீர் வடித்துக் கொண்டு நி்ன்றான்!

அவனை மேலும் தாக்க் ஆரம்பித்தார் ராவுத்தர்!

அதை எதிர்பார்க்காத விஐபிகள் பதறிப் போனார்கள்!
ஓருவர் மட்டும் “போதும் ராவுத்தர்! சின்னப் பையன்! விட்டுடுங்க” என்று தடுக்க முயன்றார்.

தான் இவ்வளவு சிரமப்பட்டு ஒவ்வொன்றாக மேற்பார்த்து செய் முயற்சிகளை அவனது கவனக்குறைவும் தவறும் கெடுத்துவிட்ட வெறி மேலிட்டவராக மேலும் நான்கு அறைகள் விட்டே நிறுத்தினார் ராவுத்தர்!

“வெளியே ஓடுலே, நாயே! இனி இந்த ஊட்டுல ஒனக்கு எடமில்ல” என்று பிடறியைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டுத்தான் ஓய்ந்தார்!

“சார்மாருங்க மன்னிக்கனும் – தெரியாம ஒரு குறை நடந்து போச்சு! விசுவாசமில்லாத வேலைக்கார நாய்களால் வந்த குறை” என்று குழைந்தார் ராவுத்தர் விருந்தாளிகை நோக்கி!

“தட்ஸ் ஆல் ரைட்” என்றார்கள் அவாகள் பெருந்தன்மையோடு!

ராவுத்தர் அவசரமாக ஐஸ் பெட்டியைத் திறந்து வெளிநாட்டு ‘சரக்குகளை’ எடுத்து மேஜையில் வைக்க ஆரம்பித்தார் – நடந்துவிட்ட சிறு குறையின் அழுத்தத்தை அந்த கவர்ச்சியான பாட்டில்கள் பெருமளவில் குறைத்து விடும் என்ற நம்பிக்கை அந்த அனுபவசாலிக்கு! அது உடனடியாக பலன் தந்தது போலவும் இருந்தது.

அழகான அந்த வெளிநாட்டு அயிட்டங்களைப் பற்றிய விமரிசனங்களைத் தொடங்கிய அந்த அதிகாரிகள் தங்கள் தங்கள் கிளாஸ்களை அவசரமாக நீட்டினார்கள் ராவுத்தரை நோக்கி!

எல்லாம் முடிந்து விஐபிகள் தங்கள் தங்கள் கார்களில் ஏறிக்கொண்ட போது பிற்பகல் மூன்று மணியாகி விட்டது.  போதை ஏறிப்போவதற்குள் வீடுகளுக்குச் சென்று படுத்துக் கொள்ள விரைந்தார்கள் அந்த பொறுப்பான அதிகாரிகள்! கார்கள் புழுதியைக் கிளப்பிக் கொண்டு புறப்பட்டன.

அவை கண்பார்வையிலிருந்து மறையும்வரை கேட் வாசலிலேயே நின்றிருந்து விட்டு, வீட்டுக்குள் திரும்புவதற்காக ஆயத்தாமானார் ராவுத்தர்.

மனதில் லைசென்ஸ் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை வளர்ந்திருந்தாலும் அந்த புளித்த மாம்பழம் ஏற்படுத்தி விட்ட உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது! அவரது அனுபவத்தில் இப்படிப்பட்ட விருந்துகளில் இத்தகைய குறைகள் வரவிட்டதே இல்லை!

அப்போது தற்செயலாக போர்டிகோவின அருகில் ஒரு ஓரமாக கைகட்டி நின்று கொண்டிருந்த மஹமூதைப் பார்த்து விட்டார் ராவுததர்!

அவனைப் பார்த்ததும் அந்த உறுத்தல் மறுபடியும் வெறியாக மாறியது!

“ஏண்டா நாயே! இன்னுமா நீ வெளியில போகல?

எவ்வளவு கொழுப்பிருந்தா ருசி பாத்து வையிடாண்டு நான் சொல்லியிருந்தும்இப்படி அவங்க முன்னால அவமானம் ஏற்படுத்தியிருப்பே? செய்யிறதையும செஞ்சிப்புட்டு குத்துக்கல்லாட்ம் வேற நிக்கறே, கழுதை! விருந்தையே கெடுத்துத் தொலைச்சிட்டியேடா பேமாணி” என்றவாறு கையை ஓங்கினார்!

“மன்னிச்சுடுங்க முதலாளி! நான் நோன்பு வச்சிருக்கேன் அதுனாலதான் ருசி பார்க்க முடியல” -விழுங்கி விழுங்கிச் சொன்னான் மஹ்மூது!

ஓங்கிய ராவுத்தரின் கை உறைந்து போய் நின்றது!

“நீ நோம்பாடா வச்சிருக்கே?”

“ஆமாங்க, முதலாளி”

“அதையேண்டா முன்கூட்டியே சொல்லல?”

“அத்தன பேருக்கு முன்னால நான் நோம்புண்டு சொன்னா உங்களுக்கு அவமானமில்லையா முதலளாளி? ஏழையானாலும் பணக்காரரானாலும் ரம்ளான்ல எல்லோரும் நோன்பிருக்கனுந்தானே? வேலைக்காரப் பையன் நோன்பிருக்கான் – ஆனா ராவுத்தர் முதலாளி நோன்பிருக்காததுமல்லாம, ரமளானோட பகல் நேரத்துல படோடாபமா விருந்தும் கொடுக்கராண்டு அவங்க அசிங்கமா நெனைச்சிட மாட்டாங்களா முதலாளி? அதான் ஒன்னுமே பேசல”

ஹமீது ராவுத்தரால் ஒன்னுமே பேச முடியவில்லை

சிறிது நேரம் அவனையே உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றார்!

“வீட்டுக்குள்ள போடா!” என்றார் தழுதழுத்த குரலில்.