- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

அப்பா..! எனக்கு கல்யாணம்..!

  பகட்டான வாழ்க்கை..தேடி
பணம் எனும் காகிதம் சேகரிக்க..
பாசத்தை அடகு வைத்து…
பாரினில் வந்து சேர்ந்தேன்..
மழலை மனம் மாறா மகனை விட்டு..வந்து சேர வாங்கிய பணத்தின்
வட்டி கட்ட வருடம் ஒன்றானது..
முழுக்கடன் முழுதாய் தீர்க்க..
முழுவதும் எனை அடகு வைத்தேன்.
வேலையைப் புதுப்பிக்கின்ற சாக்கில்.அன்பு மனைவியோடு..
அலைபேசி வாழ்க்கை வாழ்ந்து
தொலைந்து போனது..இளமை…
அவள் துயரம் அறிந்தும்…
அருகில் இல்லாமல்..மனதை
கல்லாக்கி மண்ணாகி போனேன்.
அல்லும்பகலும் அயராது உழைத்து
இதயமும் இரும்பாகிப் போனது.

பணமென்ற பிணமொன்றை
தழுவித் தாங்கிக் கொள்ள..
பிணமாகிப்போனேன்…என்
பிள்ளை மனம் கல்லாகி
எனை வெறுத்திட
காரணம் நான் ஆனேன்.

வாலிபத்தில் வந்தவனின்
இளமைகள் சுரண்டப்பட்டு..
இன்பங்கள் அழிக்கப்பட்டு..
வேலிகட்டி வாழ்கிறேன்..
வெளிநாட்டில்…நானும்..

போதுமடா வாழ்க்கையென்று…
புறப்பட யத்தனித்த நேரத்திலே..
அலைபேசியில் அழைக்கிறான்..
ஆசையோடு..அன்பு மகன்…
அப்பா..!எனக்கு கல்யாணம்..!
மறக்காமல் இந்த மாதம்
பணம் சேர்த்து அனுப்பிடு..! என்று.

பண மரமாகிப் போனெனோ..நான்
என் பாசத்தின் விலைதனை
அறிவானோ..அவனும்..?

மீதமுள்ள நாட்களை…
மீண்டும் தொடருகிறேன்..வெளிநாட்டிலே..
வாழ்வில் இணைந்த உள்ளங்கள்..
நலமோடு வாழவே..

 

தேனி சூர்யாபாஸ்கரன்