- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண்மணி

மரக்கரண்டியால் புலியை விரட்டிய மலேசிய பழங்குடி வீரப் பெண்மணி

மலேசியாவை சேர்ந்த ஒரு பழங்குடியினப் பெண், தனது கணவன்மேல் பாய்ந்த புலியை, பெரிய மரக்கரண்டியைக் கொண்டு, தலையிலேயே “நச்’சென அடித்து விரட்டியுள்ளார்.

[1]மலேசிய நாட்டின் வட பகுதியில் அடர்ந்த காடுகள் அதிகம். இங்கு, பாரம்பரிய வேட்டைத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஜகாய் பழங்குடியினரும் ஒருபகுதியில் வசித்து வருகின்றனர். பழங்குடியினர் குடியிருப்பை சேர்ந்த டாம்புன் ஜெடியூ என்பவர் நேற்று தனது குடிசைக்கு அருகிலேயே அணில் வேட்டையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென அவர் மீது புலி ஒன்று பாய்ந்து, அவரை தாக்கியுள்ளது. இதை சற்றும் எதிர்பாராத டாம்புன் அலறியபடி, அருகில் இருந்த மரத்தில் ஏறி தப்ப முயன்றுள்ளார்.அப்போதும் விடாத புலி, அவரை இழுத்து கீழே தள்ளியுள்ளது. புலியின் வாயை இறுகப் பிடித்துக் கொண்டபடி, டாம்புன் அபயக்குரல் எழுப்பியுள்ளார்.

இதைக் கேட்ட அவரது மனைவி, பெரிய மரக்கரண்டியை எடுத்து வந்து, புலியின் தலையிலேயே ஒரு “போடு’ போட்டுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த புலி, தலை சுற்றியபடி அருகில் இருந்த புதருக்குள் பாய்ந்து தப்பியோடி விட்டது.

இதையடுத்து, தலையிலும், கால்களிலும் காயங்களுடன் நகர்ப்பகுதி மருத்துவமனை ஒன்றில் டாம்புன் அனுமதிக்கப்பட்டார். அவர் கூறும்போது,’ எனது மனைவி மட்டும் உரிய நேரத்தில் வரவில்லை என்றால், நான் இறந்திருப்பேன்,’ என்றார். இதுபற்றி கேள்விப்பட்ட வனத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து, ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுக்குள் புலியை விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புலியை முறத்தால் நையப்புடைத்த புறநானூறு காலத்து வீரப் பெண்மணி பற்றி கேள்விப்பட்டுள்ள நாம், இப்போதுதான் முதல்முறையாக இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததாக அறிகிறோம்.

நன்றி: தினமலர்