- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

அருணோதயம்!

சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 10

ஆலோசனை மண்டபத்தில் அமர்ந்திருந்தான் விஜயன். பக்கத்தில் சில அதிகாரிகள்.

ஏதோ முக்கியமான விஷயம் குறித்து கலந்தாலோசனை நடந்து கொண்டிருந்தது.

வீரன் ஒருவன் வந்து அவை முன் நின்றான்.

‘என்ன செய்தி’ என்று கேட்பது போல் விஜயன் அவனை ஏறிட்டான்.

“மன்னரிடமிருந்து ஓலை வந்திருக்கிறது. தூதர் வெளியே காத்துக் கொண்டிருக்கிறார்.” என்று அடக்கமாகக் கூறினான் வீரன்.

“போய் உடனே அழைத்து வா!”

சற்று நேரத்திற்குள் தூதன் வந்து பணிந்து ஓலையை நீட்டினான்.

ஓலையைப் பிரித்துப் படித்தான் விஜயன். நெற்றியில் இலேசான சுருக்கம். கணநேரம் கண்களை மூடி சிந்தனை வயப்பட்டான்.

உடனே சமாளித்துக் கொண்டு, அவையில் இருந்தவர்களை நோக்கி, பின்னர் வீரபாண்டியர், சோழர் படையின் தாக்குதலை முறியடிக்கப் படை திரட்டிக் கொண்டிருக்கிறாராம். முடிந்த அளவு வீரர்களைத் திரட்டிக் கொண்டு உடனே புறப்பட்டு வருமாறு பணித்திருக்கிறார்” என்று கூறி அவர்களுடைய பதிலை எதிர்நோக்கினான்.

“மன்னனரின் விருப்பமே எங்கள் பாக்கியம்” என்று எல்லோரும் ஒரே குரலாகக் கூறினார்கள்.

அடுத்த நிமிடமே வீரர்களைத் திரட்டும் பணி துவங்கப்பட்டது. விஜயன் தலைமையில் மறவர் படை மதுரையை நோக்கிக் காற்றாய்ப் பறந்தது.

வீரபாண்டியன் இலங்கைப் படையின் கைப்பாவையாகச் செயல்படுவதும் சோழப் பேரரசுக்கு எதிரான சதிச்செயல்களுககு ஊக்கமளிப்பதும் சோழ மன்னனின் கோபத்தைக் கிளறியது. பெரும்படையொன்றை அனுப்பி வைத்து வீரபாண்டியனை விரட்டி விட்டு குலசேகரனை அரியணையில் அமர்த்துமாறு பணித்தான்.

ஈழப்படையும் தன்னிடம் உள்ள படையும் சேர்ந்தால் கூட சோழர் படையை வெல்வது கடினம் என்பதை வீர பாண்டியன் உணர்ந்தான்.

எனவே பாண்டிய நாட்டின் தொலை தூரப்பகுதிகளில் தன்னரசாக வாழ்ந்து கொண்டிருந்த பாண்டிய குல சிற்றரசர்களில் தனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு ஓலை அனுப்பி வைத்தான்.

விரும்பியோ விரும்பாமலோ மன்னனின் ஆணையைத் தட்ட முடியாத நிலையில் சிற்றரசர்கள் வந்து போரில் கலந்து கொண்டனர்.

அவ்வாறு வந்தவர்களில் ஒருவன் விஜயன்.

போர் துவங்கியது. பேரிகைகள் முழங்கின. வாளும் வேலும் மின்னின. மேகங்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டது போல் படைகள் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டன.

உயிரைத் திருணமாக மதித்து வீரர்கள் போராடினர். வாட்கள் உடைந்தன. வேல்கள் முறிந்தன. தலைகள் உருண்டன.

போர் உக்கிரமடையவே படையணியில் குழப்பம் ஏற்பட்டது. தன் படை எது மாற்றான் படை எது என்று தெரியாமல் கண்ணை மூடிக்கொண்டு வீரர்கள் வாளைச் சுழற்றிக் கொண்டு முன்னேறினர்.

தீடீரென்று போக்களத்தின் நடுவே “ஆ!” என்ற சப்தம் விண்ணை முட்டியது.

வீரன் ஒருவன் கீழே குனிந்து கீழே கிடந்த சடலத்தைப் பார்த்து அலறினான். அவனுடைய அலறல் சப்தம் கேட்டு பக்கத்தில் நின்ற இரண்டு மூன்றுபேர் வந்து கீழே உற்றுப் பார்த்தார்கள்.

ஆ! என்ன கொடுமை!

விஜய பாண்டியனின் தலையற்ற உடல்!

தலை எங்கே? அவசரமாக அங்குமிங்கும் தேடினார்கள். பயனில்லை. யோசிக்க நேரமில்லை.

உடலைத் தூக்கி ஒரு புரவியில் வைத்து போர்க்களத்தில் இருந்து காற்றாய் பறந்தார்கள்.

அந்தக் கிராமம் முழுதுமே எல்லையற்ற சோகத்தில் ஆழ்ந்திருந்தது.  தெருக்களில் ஜீவகளையில்லை. ஆண்களும் பெண்களும் இடிந்து போய் உட்கார்ந்திருந்தனர்.

கண்களில் கண்ணீர் தாரைதாரையாக வடிந்து கொண்டிருந்தது.

தங்களுக்கு ஏற்பட்ட துரதிஷ்டத்தை நினைத்தும் புலம்பிக் கொண்டிருந்தனர்.

சிறுவர் சிறுமியர் ஒன்றும் புரியாமல் மிரள மிரள விழித்துக் கொண்டிருந்தனர்.

சற்று நேரத்திற்கெல்லாம் கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டது.

வீரன் ஒருவன் கூட்டத்தினரை நோக்கி சைகை செய்தான்.

கூட்டம் மொத்தமும் அமைதியாக ஒருவர் பின் ஒருவராக, கோட்டைக்குள் நுழைந்தார்கள்.

வானலோகத்தில் இருந்து இறங்கியவனைப் போல் ஒரு நாள் திடீரெனத் தங்கள் முன் தோன்றியதும், இந்திரஜால வித்தை போல் அவன் நிகழ்த்திய அற்புதங்களும் இன்னும் பசுமை மாறாமல் அவர்கள் உள்ளங்களில் பதிந்திருந்தது.

தங்களை வாழ்விக்க வந்தவன் தங்களுக்கு – தங்கள் உயர்வுக்கு –  உயிர்மூச்சுக் கொடுக்க வந்தவன் இன்று உயிரற்ற நிலையில் மீளாத்துயிலில் ஆழ்ந்து கிடக்கிறான்.

ஊருக்கு உழைத்து ஓடாகத் தேய்ந்த உத்தமனுக்குக் கிடைத்த பரிசு இது தானா?

அல்லது விதியின் சதியா?

அருணோதயம்

கிபி 1187ல் இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக ஒரு பெரிய குழுவுடன் “சுல்தான் செய்யது இபுராஹீம் ஷஹீத்” அவர்கள் கண்ணனூர்த் துறைமுகத்தில் வந்திறங்கினார்கள்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டுப் புன்னைக்காயல் வந்து சேர்ந்தார்கள்.

அவ்வமயம் திருநெல்வேலிப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த குலசேகர பாண்டியனிடம் இஸ்லாமியப்பிரச்சாரம் செய்ய அனுமதி பெற்றார்கள்.

அதன்பின் தங்களுடன் வந்தவர்களை சிறுசிறு குழுக்களாகப் பிரித்து காயல்பட்டினத்தில் இருந்து தொண்டி வரை கடற்கரையோரப் பகுதிகளுக்கும், உள்நாட்டில் பல ஊர்களுக்கும் அனுப்பி வைத்தார்கள்.

இந்தக் குழுக்கள் அவரவர்களுக்குப் பிரித்து ஒதுக்கப்படட ஊர்களுக்குச் சென்று அமைதியான முறையில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தனர்.

ஆசிரியர்: சி. அ. அ. முஹம்மது அபுதாஹிர்

சித்தார் கோட்டை –  ஓர் ஆய்வுக்கோவை அட்டவணை [1] சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை தொடரும்