- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்

சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

உடல் எடை மிகுந்தவர்களுக்கே மூட்டுவலி, மூட்டு வீக்கம் போன்ற தொல்லைகள் வருகின்றன. இவை வாத நோய்க்கான அறிகுறி என்பதை உணர்ந்து உணவுத்திட்டத்தை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும்.

மூட்டு வீக்கத்திற்கு மேலும் மேலும் மருந்துகள், புது வைத்தியம் என்று பார்ப்பதை விட சரியான சத்துணவு மூலம் மூட்டு வீக்கம், மூட்டு வலி முதலிய துன்பங்களை எளிதில் வென்று இயல்பாக வாழலாம்.

சிவப்பு இறைச்சி (Red Meat) கொழுப்பு நீக்காத பால் சம்பந்தப்பட்ட தயாரிப்புகள், எண்ணெயில் வேக வைத்த மாவுப் பண்டங்கள், மிட்டாய், கேக் வகைகள் முதலியவற்றிற்கு எடை அதிகரிக்கும் போதே முழுத் தடைபோட வேண்டும். அதாவது, இவற்றை எல்லாம் ருசிக்காகக் கூடத் தொடக்கூடாது.

இந்த உணவுப் பொருட்களின் உள்ள கொழுப்புச் சத்தால் எலும்பு இணைப்புகளில் அழற்சி ஏற்படுகிறது. மூட்டுவலி உண்டாகி வலிக்கிறது. சிலருக்கு மூட்டு வீக்கம் ஏற்படுகிறது. இந்த உணவு வகைகள் அதிகமானால் மூட்டு வீக்கமும் அதிகமாகும்.

ஐரோப்பிய நாடுகளில் வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒமேகா-3 மீன் எண்ணெயைச் சாப்பிட்டுக் குணமடைகிறார்கள். இந்த எண்ணெய் மூட்டு வலியை உண்டு பண்ணும் இரசாயனப் பொருட்களை உடலில் இருந்து குறைத்துக் கட்டுப்படுத்தி வைக்கிறது.

வாத சம்பந்தமான நோயாளிகள் இறைச்சி வகைகளுக்குப் பதிலாக தானியங்கள், பழங்கள், காய்கறிகள் முதலியவற்றை நன்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

குருத்தெலும்பில் உள்ள இணைப்புகள் பிறழ்வது மூட்டு வீக்கத்திற்கு மிக முக்கியமான காரணம். இந்த எலும்பு இணைப்புகள் கெட்டுப் போகாமல் பழுதுபட்டு விடாமல் இருக்க தினமும் வைட்டமின் சி உள்ள ஆரஞ்சு, தக்காளி முதலியவற்றைச் சேர்த்து வரவேண்டும். வைட்டமின் சி உணவு வகைகள் குறைவாக இடம் பெற்றால், அந்த நாட்களில் மட்டும் வைட்டமின் சி மாத்திரையைத் தனியாகச் சாப்பிடலாம்.

எலும்புகள் தேய்ந்து மெல்லியதாக மாறினால் அதுவும் உடல் நலனுக்கு நல்லது அல்ல. பெண்களில் பலருக்கு எலும்பு அழற்சி ஏற்படுவது இதனால்தான். எனவே, எலும்புகள் சரியான வளர்ச்சியுடன் ஆரோக்கியமாகத் திகழ ஈரல், முட்டை, பால் முதலியவற்றை நன்கு சேர்த்து வரவேண்டும். இவற்றில் உள்ள ‘டி’ வைட்டமின் எலும்புகள் தேய்ந்து போகாதபடி பாதுகாத்துக் கொள்ளும்.

இஞ்சியையும், வெள்ளைப் பூண்டையும் தினமும் உணவில் சேர்ப்பதும், சுக்குக்காபி குடிப்பதும் வாத சம்பந்தமான மூட்டுவீக்கம், வலி முதலியவற்றை நன்கு குறைத்துவிடும்!

மூட்டு வீக்க நோயாளிகள் சாதம், சப்பாத்தி, தயிர், மீன், சிட்ரஸ் பழங்கள் முதலியவற்றை விடாது தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.

மேற்கண்ட உணவு வகைகளுடன் சோயா பீன்ஸ், மாம்பழம், காரட், டர்னிக் கீரை, கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ், காலிஃப்ளவர், காளான், ராகி, பேரீச்சம்பழம், நண்டு, சிப்பி நண்டு, வெற்றிலை, பாக்கு போன்றவற்றையும் அவ்வப்போது சேர்த்து வந்தால் இவற்றில் உள்ள கால்சியம், செம்பு, வைட்டமின் ஏ, டி மற்றும் பாந்தோனிக் அமிலம் போன்றவை எலும்புகளில் பிறழ்வு ஏற்படாமல் பாதுகாப்புடன் மூட்டுவலி உபாதையை முற்றிலும் தணிக்கும்.

எடையை அதிகரிக்க விடாமல் சரியான சத்துணவையும் பின்பற்றினால் மூட்டுவலி, மூட்டு வீக்கம் முதலியவற்றிலிருந்து முழு விடுதலை உண்டு.

நன்றி:   – கே.எஸ்.சுப்ரமணி –  தமிழ்வாணன்.காம்