- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

உலா வரும் எஸ்.எம்.எஸ். மோசடி

உலா வரும் எஸ்.எம்.எஸ்., மோசடி: ஆசை காட்டி “வலை’ விரிக்கும் கும்பல்

உங்களுக்கு ஏழு லட்சம் டாலர் பரிசு தொகை கிடைத்துள்ளது’ என்று உங்கள் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., வந்திருக்கும் அல்லது இனி வரலாம். அவ்வாறு எஸ்.எம்.எஸ்., வந்தால் பொருட்படுத்தாதீர். உங்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலின் வலை அல்லது தூண்டிலாகத்தான், அந்த எஸ்.எம்.எஸ்., இருக்கும். எனவே, எஸ்.எம்.எஸ்.,சை படித்துப்பார்த்து விட்டு, “கில்’ செய்து விடுங்கள்.

மொபைல் போன் இல்லாதவர்களே இல்லை என்ற அளவில் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மொபைல் நிறுவனங்களின் துவக்கம், மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கம், விற்பனை கடைகள், ஏஜன்சி, ரீ-சார்ஜ் மையங்கள், சர்வீஸ் சென்டர்கள் என மொபைல் போன் வளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. எந்தவொரு நல்ல விஷயமாக இருந்தாலும், அதிலும் சில தீய சக்திகள் நுழைந்து கைங்கரியத்தை காட்டுவது வழக்கம்; எந்தளவு தவறுகளை ஏற்படுத்தலாம், குறுக்கு வழியில் தாங்கள் பலனடையலாம் என்று சில வழிகளை பயன்படுத்துகின்றன. அவ்வகையில் தற்போது மொபைல் போன் வழியாக மோசடியில் ஈடுபடும் கும்பலின் கைவரிசை ஓங்கி வருகிறது.

ஆன்-லைன் மோசடி எனப்படும் இம்முறையில் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து மொபைல் போன்களுக்கு எஸ்.எம். எஸ்., தகவல்களை அனுப்பி, பண மோசடி செய்யும் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. மொபைல் போன்களுக்கு வரும் எஸ்.எம்.எஸ்.,களில், “உங்களின் மொபைல் எண்ணுக்கு சர்வதேச அளவில் நடந்த குலுக்கலில் (?) பல ஆயிரம் அல்லது பல லட்சம், பிரிட்டன் கரன்சி அல்லது அமெரிக்கன் டாலர் பரிசாக கிடைத்துள்ளது. இப்பரிசை பெற, கீழ்க்கண்ட இ-மெயில் முகவரிக்கு உங்கள் வங்கி கணக்கு பற்றிய விபரங்களை அனுப்புங்கள்,’ என்ற வகையில் மெசேஜ்கள் வருகின்றன. இவற்றில் சில பிரபலமான சர்வதேச நிறுவனங்களின் பெயர்களிலும் உள்ளன. இதை உண்மையென்று நம்பி, தொடர்பு கொண்டால் போதும். வெளி நாட்டு பணம் என்பதால், குறிப்பிட்ட பரிசு தொகையை வங்கி கணக்கில் சேர்க்க, சர்வீஸ் சார்ஜ், வெளிநாட்டு பணத்தை இந்திய ரூபாயாக மாற்ற ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை, குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்துங்கள் என்று மோசடி கும்பல் தகவல் அனுப்பும். இதை நம்பி, ஏதாவது பணம் செலுத்தினால் அவ்வளவு தான். உங்கள் பணம் போன இடம் தெரியாமல் போய்விடும்.

இதுபோன்ற மோசடியில் பல கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. கிடைக்கும் மொபைல் எண்களுக்கு எல்லாம் இதுபோன்ற எஸ்.எம். எஸ்., களை அனுப்பி, வலை விரிக்கும் இக்கும்பல், ஏமாந்த நபர்களின் தலையில் மிளகாய் அரைத்து, பிழைப்பைக் கெடுத்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுபோன்ற “மெசேஜ்’ உங்கள் மொபைல் போனுக்கு வந்தால், அதை “கில்’ செய்து விட்டு, அடுத்த வேலையை கவனியுங்கள். இதுபோன்ற தகவல் மீது எந்த கவனமும் செலுத்தாதீர்கள் என “சைபர் கிரைம்’ போலீசார் எச்சரித்து வருகின்றனர்.

நன்றி: தினமலர்