Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,818 முறை படிக்கப்பட்டுள்ளது!

சமூக சேவையும் பயனாளிகளும்

ஏழை மக்களுக்கு பண உதவியும் பொருளுதவியும் செய்ய இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவனம் (Infosys Foundation) ஆரம்பித்த சமயம் அது. பெங்களூர் ரயில் நிலையத்தில் வந்து நிற்கும் ரயில்களின் பெட்டிகளைத் துடைத்து சுத்தம் செய்து விட்டு பயணிகளிடம் காசு கேட்டுக் கொண்டிருந்தனர் சிலர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி அவர்களின் மனைவி சுதா மூர்த்தி ஒரு முறை அதைப் பார்த்து, அந்த மனிதர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு அவர்களைப் பற்றி விசாரித்தார். அவர்கள் சுமார் 200 பேர் இருக்கிறார்கள் என்றும் அவர்களில் பலரும் வறுமை காரணமாக இரவில் வெறும் வயிற்றோடு படுக்கப் போவதாக அவரிடம் சொன்னார்கள். அவர்களுக்கு தினமும் இரவு வேளையில் உணவு வழங்கத் தேவையான அரிசி, பருப்பு ஆகியவற்றைத் தர தொண்டு நிறுவனத்தின் மூலம் சுதா மூர்த்தி ஏற்பாடு செய்தார்.

சில வாரங்கள் கழித்து அந்த பயனாளிகள் நிலை எந்த அளவு முன்னேறி உள்ளது என்றறிய சுதா மூர்த்தி சென்ற போது அவர்கள் யாரும் சோறு கிடைத்து விடுவதால் உழைப்பதில்லை, சோம்பேறிகளாக மாறி விட்டனர் என்ற தகவல் அவருக்குக் கிடைத்தது. கேட்டு வருத்தமடைந்தாலும் சுதா மூர்த்தி அவர்களுக்கு மேலும் உதவ முற்பட்டார். குளிர்காலம் ஆரம்பிக்கும் சமயம் ஆனதால் அவர்களுக்கு கம்பளிப் போர்வை தர எண்ணினார். அதை அனுப்பும் போது அவர்களுக்கு தடுப்பூசியும் போடும் யோசனையும் அவருக்கு வரவே தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்கு கம்பளிப் போர்வையும் தருவது என்று முடிவு செய்து அவர்களுக்கு அறிவித்தார்.

அப்போது தான் தெரிந்தது அவர்களில் இருநூறு பேர் இல்லை, இருப்பது ஐம்பது பேர் தான் என்ற உண்மை. தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்குத் தான் கையோடு கம்பளிப் போர்வையும் கிடைக்கும் என்றான போது உண்மை வெளி வந்து விட்டது. ஐம்பது பேர் இருநூறு பேர்களுக்கான உதவியைப் பெற்று வந்ததை அவர் அறிந்து கொண்டு விட்டார் என்று கோபப்பட்டு அவர்கள் அவரை வாயிற்கு வந்தபடி ஏசி விட்டனர். இத்தனை நாட்கள் அவரிடம் உதவி பெற்றும் ஏமாற்றியதை அறிந்து கொண்டு நிறுத்தியதை அவர்களால் சகிக்க முடியவில்லை. இது ஒரு நிகழ்ச்சி.

சுதா மூர்த்தியின் சமூக சேவை சம்பந்தப்பட்ட இன்னொரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். கர்னாடகா மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட சமயம் அது. அந்த தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் வாங்கியவர்களுடைய புகைப்படங்களும் தகவல்களும் செய்தித்தாள்களில் வெளியாகி இருந்தன. அந்த செய்தித் தாள்களில் கண்ட அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவனின் புகைப்படம் சுதா மூர்த்தி அவர்களை மிகவும் இரக்கப்பட வைத்தது. எலும்பும் தோலுமாக, ஒட்டிய கன்னத்துடன் இருந்த ஹனுமந்தப்பா என்ற சிறுவனின் புகைப்படம் தான் அது. அவன் ராமபுரா என்ற கிராமத்தைச் சேர்ந்த மூட்டை தூக்கிப் பிழைக்கும் ஏழை கூலித் தொழிலாளியின் மகன். அவனோடு பிறந்தவர்கள் ஐந்து பேர், அவன் தான் மூத்தவன் என்ற தகவல்களைப் படித்த அவர் இரக்கப்பட்டு அவனுக்கு ஒரு கடிதம் எழுதினார். குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட விலாசத்தில் தன்னை சந்திக்க வரும்படி அவனுக்கு எழுதிய அவர் பெங்களூர் வந்து போகத் தேவையான பயணத் தொகையும் அனுப்பி வைத்தார்.

அவர் சொன்ன படியே வந்து அவரை சந்தித்த ஹனுமந்தப்பாவிடம் சுதா மூர்த்தி சொன்னார். “நீ மேற்கொண்டு என்ன படிக்க விரும்புகிறாய்?, நீ என்ன படிப்பு படிக்க விரும்பினாலும் அந்த படிப்புக்கான செலவுகளை எங்கள் இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவனம் ஏற்றுக் கொள்ளும்”

அவன் தன் கிராமத்திற்கு அருகில் இருக்கும் பெரிய நகரமான பெல்லாரியில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படிக்க விரும்புவதாகச் சொன்னான்.

“ஆசிரியர் படிப்பு தான் என்றில்லை, நீ என்ன படிக்க விரும்பினாலும் தயங்காமல் சொல். உன்னைப் படிக்க வைக்கிறேன்” என்று சொன்னார் சுதா மூர்த்தி.

ஆனால் அந்த சிறுவன் தன் ஆசிரியர் படிப்பு ஆர்வத்திலேயே உறுதியாய் இருந்தான்.

“சரி அந்தப் பள்ளிக்குச் சென்று அந்தப் பயிற்சிப் படிப்பிற்கு எவ்வளவு செலவாகும் என்று விசாரித்து எனக்கு விவரமாக எழுது” என்று கூறி சுதா மூர்த்தி அவனை அனுப்பி வைத்தார்.

போன சிறுவன் உடனடியாக பதில் எழுதினான். பள்ளிக் கட்டணம், ஹாஸ்டல் கட்டணம், சாப்பாடுக் கட்டணம், புத்தகக் கட்டணம் எல்லாம் சேர்ந்து மாதம் முன்னூறு ரூபாய் செலவாகும் என எண்ணி இருந்தான். யாரோ உதவி செய்கிறார்கள் என்பதால் தகுதிக்கு மீறி எதையும் உபயோகிக்காமல் குறைந்த பட்சத் தொகையையே அவன் எழுதி இருக்கிறான் என்பதை சுதா மூர்த்தி புரிந்து கொண்டார். உடனடியாக அவனுக்கு ஆறு மாதச் செலவுக்கான தொகையாக 1800 ரூபாய் அவர் அனுப்பி வைத்தார்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன. அடுத்த ஆறு மாதச் செலவுக்கான தொகை 1800 ரூபாய் அவர் அனுப்பி வைத்தார். உடனடியாக ஹனுமந்தப்பாவிடம் இருந்து சுதா மூர்த்திக்கு முன்னூறு ரூபாய் திரும்பி வந்தது. அவர் அனுப்பிய தொகைக்கு நன்றி தெரிவித்து விட்டு அந்த சிறுவன் எழுதியிருந்தான்.

”இங்கு ஒரு மாதக் கல்லூரி ஸ்டிரைக்கில் இருந்தது. அதனால் நான் பெல்லாரியில் ஹாஸ்டலில் தங்காமல் கிராமத்தில் இருக்கும் என் வீட்டுக்கே சென்று விட்டேன். அதனால் ஒரு மாத செலவுத் தொகை முன்னூறு ரூபாயை நான் திருப்பி அனுப்பி உள்ளேன்”.

சுதா மூர்த்தி அந்த சிறுவனின் நேர்மையை எண்ணி உள்ளம் நெகிழ்ந்து போனார். அந்த சிறுவனின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். வீட்டில் ஆட்களும் அதிகம். அவனுக்கே ஆசைப்படும் வயது. ஆனாலும் அந்த முன்னூறு ரூபாயை வேறு வகையில் செலவு செய்து விடாமல் திருப்பி அனுப்பிய அந்த உயர்ந்த பண்பை எண்ணி அவரால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

உதவ முன் வந்தவரிடம் நான்கு மடங்கு அதிகமாக ஏமாற்றி வாங்கி பயன்படுத்தி அதை அவர் அறிந்து கொண்டார் என்றவுடனேயே அவரை ஏசிய அந்தக் கூட்டத்தின் தன்மை எப்படி இருக்கிறது? அனுப்பிய தொகையில் அனுப்பிய நோக்கத்திற்காகப் பயன்படாத சிறு தொகையை பல்வேறு செலவுகள் இருப்பினும் அதற்குப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பிய ஹனுமந்தப்பாவின் தன்மை எப்படி இருக்கிறது?

ஒருவருடைய நல்ல எண்ணத்தை நியாயம் இல்லாத விதத்தில் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் திருட்டுக் கூட்டம் எப்போதும் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் உதவும் உள்ளமே நெகிழ்ந்து நிறையும் படி அந்த உதவியை முறையாகப் பயன்படுத்தி முன்னேற முடிந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த முதல் வகைப் பயனாளிகளை அடையாளம் கண்டு கொண்டு அவர்களைத் தவிர்ப்பதும், இரண்டாவது வகைப் பயனாளிகளைக் கண்டு கொண்டு உதவி அவர்கள் முன்னேற உதவுவதுமே உண்மையான சமூக சேவையின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அப்படியில்லாமல் தங்கள் சேவை தகுந்தவர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறதா என்று கவனிக்காமல் சேவை செய்வது முட்டாள்தனமே அல்லாமல் சமூக சேவை அல்ல. அதே போல் பயனாளிகளில் ஏமாற்றுபவர்களும், நன்றி கெட்டவர்களும் கணிசமாக உள்ளனர் என்பதாலேயே யாருக்கும் உதவிக்கரம் நீட்ட மறுப்பதும் உதவ முடிந்தவர்களுக்குப் பெருமை அல்ல. அப்படிச் செய்தால் ஹனுமந்தப்பா போன்ற நல்ல, திறமையான மனிதர்கள் வளர முடியாமல் முளையிலேயே கருகிப் போவார்கள். எத்தனையோ நல்ல, உண்மையான, பாவப்பட்ட மனிதர்கள் எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு உதவினால், அந்த உதவி பெற்றவர்கள் கடைத்தேறுவதைக் கண்ணால் காணும் போது பெறும் நிறைவுக்கு ஒப்பானது உலகில் வேறெதுவும் இல்லை.

நன்றி:- என்.கணேசன் -ஈழநேசன்