- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

பிரமிக்க வச்சுட்டீங்க மிஸ்டர் பிரவீன்குமார்!

அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவமாக இன்னும் சில நாட்கள்தான் பாக்கி இருக்கும். ஆனால், தைரியமாக ஓட்டுச்சாவடியில் வரிசையில் நிற்கிறார் அவர். மற்றவர்கள் பார்த்து, அவரை முன்னால் ஓட்டுப்போட அனுமதிக்கின்றனர். ஓட்டுப்போட்டு வந்து, வெளியே இருப்போரிடம் தன் விரல் மையை அவர் உயர்த்திக்காட்டும்போது, அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு குழந்தையைப் பிரசவித்த பரவசம்.

[1]இது எப்படிச் சாத்தியமானது என்று தெரியவில்லை. நினைத்துப் பார்த்தால், பெரும் பிரமிப்பாகத் தெரிகிறது, தமிழகத்தில் இப்படியொரு தேர்தலா என்று. கள்ள ஓட்டு இல்லை; கை கலப்பு இல்லை; கலவரம் எதுவுமில்லை. அமைதியான ஓட்டுப்பதிவு என்றால் இப்படித்தான் இருக்கும் என்பதை துல்லியமாக காட்டி, இந்த தேர்தலின் கதாநாயகன் தான்தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது தேர்தல் கமிஷன்.தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அதற்கு அடுத்த நாளிலிருந்தே ஊரெல்லாம் ஒலி பெருக்கிகள் முழங்கும்; அரசியல் விளம்பரங்களால் வெள்ளைச் சுவர்கள் அழுக்காகும்; காணும் திசையெல்லாம் கட்சித் தோரணங்கள் கலங்கடிக்கும்; ஊர்வலம் என்ற பெயரில் ஊரே குப்பையாகும்; தொண்டர்களின் வெள்ளத்தில் மதுக்கடைகள் மூழ்கிப்போகும்; ஓட்டுப்பதிவு நாளில், மக்கள் வெளியே வர பயப்படும் அளவுக்கு சூழல் மிரட்டும்.

இந்த தேர்தலில் இந்தக் காட்சிகள் எதுவுமில்லை; ஆங்காங்கே பணப்பட்டுவாடா நடந்தாலும், அதுவும் இலைமறை காய்மறையாகத்தான் நடந்தது. சிறு சிறு தகராறுகள் அரங்கேறினாலும், அதுவும் பரவாத அளவுக்கு பாதுகாப்பு வளையம் இறுக்கப்பட்டது. எல்லாவற்றையும் விட, தேர்தல் நாளில் மக்களிடம் காணப்பட்ட உற்சாகம், தேர்தல் கமிஷன் மீது மக்களுக்கு ஏற்பட்டிருந்த நம்பிக்கையை முழுமையாக வெளிப்படுத்தியது. ஏதோ திருவிழாக் கூட்டத்தைப் பார்க்க அழைத்து வருவதைப்போல, ஓட்டுச்சாவடிக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய்மார்களும், முதியவர்களும் வந்த காட்சி, முன் எப்போதும் பார்த்திராதது. வண்டி வைத்து வாக்காளர்களை தூக்கி வரும், தேர்தல் கால திடீர் கரிசனத்தை நேற்று எங்கும் பார்க்க முடியவில்லை. இறுதி கட்ட “கேன்வாஸ்’ என்ற பெயரில், வாக்காளர்களை வம்புக்கிழுக்கும் வேலையும் நடக்கவில்லை.

தேர்தல் கமிஷனில் பணியாற்றும் எந்த அலுவலரும், திடீரென வானத்திலிருந்து குதித்தவர்களில்லை; இதே ஊரில், ஏதோ ஒரு துறையில் வேலை பார்க்கும் அலுவலர்கள்தான். வெளி மாநிலங்களிலிருந்து கண்காணிக்க பல அதிகாரிகள் வந்திருந்தாலும், இவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அவர்களால் முழு வீச்சில் செயல்பட்டிருக்க முடியாது. அப்படி இருந்தும் யாருக்கும் பயப்படாமல் தேர்தல் பணியாற்றிய இவர்களே, முதல் பாராட்டுக்குரியவர்கள். இவர்களுக்கு அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் தந்து செயல்பட வைத்ததும், செயல்பட மறுத்தவர்களைத் தண்டித்து, மற்றவர்களுக்குப் பாடம் புகட்டியதும் தேர்தல் கமிஷன்தான். தலை சரியாயிருந்தால், எல்லாமே சரியாயிருக்கும் என்பார்கள். அந்த வகையில், எல்லோரையும் சரியாகச் செயல்பட வைத்து, தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன் குமார்தான் ஒட்டு மொத்த பாராட்டுக்குரியவர்; அவருக்கு தமிழக மக்கள் அனைவர் சார்பிலும் தலை தாழ்த்தி குரல் உயர்த்திச் சொல்கிறோம்… சபாஷ்!

நன்றி: தினமலர்