- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

தாழ்வு மனப்பான்மை

என்னால் முடியாது என்ற தாழ்வு மனப்பான்மை நிச்சயம் தோல்வியையே தரும். தன்னைத்தானே சந்தேகிப்பதுதான் வீழ்ச்சியில் தலையாய வீழ்ச்சி-என்கிறார் மதாம் கத்தரீன் கஸ்பரீன்.

தாழ்வு மனப்பான்மை என்பதுதான் என்ன? தன்னை நம்பாமை என்ற மையக்கருத்தை அடிப்படையாக வைத்து அதைச் சுற்றி எழும் உணர்ச்சிப் பூர்வமான எண்ணங்களின் தொகுதியே தாழ்வு மனப்பான்மையாகும். தாழ்வு மனப்பான்மைக்குப் பலியானவன், தான் தோல்வி அடையப் பிறந்தவனே என வலுவாக நம்புகிறான்.

தோல்வி மனப்பான்மையை மாற்ற என்னால் முடியும், நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று திருப்பித் திருப்பி மனதிற்குள் கூறி வலிமை பெற வேண்டும். தன்னிடம் நம்பிக்கை இழப்பது தெய்வத்திடம் நம்பிக்கை இழப்பதாகும் என்கிறார் விவேகானந்தர்.

அமெரிக்கரின் வெற்றி!

அமெரிக்கர்கள் ஏன் வெற்றி பெறுகிறார்கள் தெரியுமா? AMERICAN என்ற வார்த்தை ICAN என முடிவதால் அதாவது I CAN என்னால் முடியும் என முடிகிறதே, அதனால்தான்!

தன்னம்பிக்கையை வெளிக்கொணருங்கள்!

சில வருடங்களுக்கு முன்னால் ஸ்பெயின் தேசத்தில் பயங்கரமான சூறாவளி ஒன்று வீசியது. விஸிகோத்தை ஆண்ட மன்னன் ஸ்விந்திலா என்பவனின் மகுடத்தை அந்தச் சூறாவளி வெளிக் கொணர்ந்தது.

1200 வருடங்கள் பூமிக்கடியில் புதைந்திருந்த மகுடம் அது. இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துவது எதை? உங்கள் தன்னம்பிக்கை மகுடம் கூட உங்களுக்குள்ளேயே அடியில் புதைந்திருக்கிறது. அதை வெளிக்கொணருங்கள் என்பதைத்தான்! இந்தத் தன்னம்பிக்கை வந்தவுடன் உங்கள் தோற்றம் மிடுக்குறும். பார்வை ஒளி பெறும். பேச்சு வலிமை பெறும். உங்கள் குறிக்கோளை அடைய உங்களால் இயலாது என்று நீங்கள் செய்யப்படும் ஒரு செயலைச் சிறிதளவு, தைரியமாகச் செய்து பாருங்கள். வெற்றி சிறிதளவு பெற்றாலும் உங்கள் தன்னம்பிக்கை வலிமை பெறும். அதாவது நீங்களே உங்களை சோதனைக்குள்ளாக்க ஆயத்தமாகுங்கள்.

வெற்றி பெறுபவரின் முக்கியமான குணாதிசயங்களுள் ஒன்று இதுதான். அவர்கள் தங்களைத் தாங்களே தொடர்ந்து மிஞ்சிய வண்ணம் நடப்பார்கள். என்னால் முடியும் என்று எண்ணி, நினைப்பதை அடைய, தான் நினைப்பதைவிட அதிகமாகச் செயல் புரிந்து கொண்டே இருப்பதே அவர்களது மனப்போக்காகும்

86 வயது அறிஞரின் கூற்று!

கார்டினல் கிப்பன்ஸ் என்ற முதுபெரும் பேரறிஞர் தாம் இறந்து போவதற்கு முன்பாகக் கூறிய வார்த்தைகள் இவை:- நான் 86 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்திருக்கிறேன். நூற்றுக்கணக்கானவர்கள் வெற்றியின் முனையைத் தொட்டதைக் கண்டிருக்கிறேன். வெற்றியடைவதற்குத் தேவையான குணங்களில் தலையாயது நம்பிக்கைதான்! இதையே தான் எமர்ஸனும் கூறுகிறார்.

தன்னம்பிக்கையே வெற்றியின் அடிப்படை ரகசியம் என்று அவர் எழுதிய Self Reliance (தன்னம்பிக்கை) என்ற கட்டுரையை உடனே தேடிப்பிடித்து ஒரு முறை படியுங்கள். அதில் ஒரு பகுதி இதோ:-

நம்பு, நினை, முயல்!

நண்பா! நீ உன்னையே நம்பு, நீ மகாவலிமையும், மனோதிடமும், தன் உறுதியும் படைத்தவன் என்பது உன் சிந்தனையில் எப்போதும் ஊறிக்கிடக்கட்டும்.

அந்தத் தன்னம்பிக்கை உன்னுள் இருக்கும்வரை, எல்லா உள்ளங்களும் உன் விழியை நாடும். ஆண்டவன் உன்னை எங்கு வைக்கிறாரோ அங்கிரு, அந்த இடத்தில் அமைதியாக இருந்து பணியாற்று.

அவன் ஆணையை ஒரு போதும் மீறாதே, உன்னுடன் ஏக காலத்தில் வசிப்போரிடம் நட்புறவை வளர், அவர் தம் கால நிகழ்ச்சிகளில் கலந்து கொள், அனுபூதி பெற்ற மகான்களின் போக்கை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள். அவர்கள் தேவ தூதர்கள். கடவுளின் திருவடிகளை, குழந்தை உள்ளத்துடன் வீழ்ந்து துதித்த மகான்கள். அவர்கள் எய்தியுள்ள பக்குவ நிலையைப் பார்த்தால் அவர்கள் ஆண்டவன் அருளால் தூண்டப் பெற்று வாழ்வது விளங்கும்.

மனோ, வாக்கு, காயசித்தி பெற்ற மகாத்மாக்கள் அவதார புருஷர்கள் என்றே நமக்குத் தோன்றும். அவ்வனுபூதி செல்வர்களைப் போன்று நாமும் ஆக முடியும். அதற்கு ஏன் முயற்சிக்கக் கூடாது? நாம் குழந்தைகள் அல்லோம், நாமும் ஆண் பிள்ளைகளே. வீர மைந்தர்களே

தன்னம்பிக்கை வளர வழி!

எனது குறிக்கோள் என்ன என்பதை நானே நிர்ணயித்துள்ளேன். ஆகவே அதை அடையத் தீவிரமாகவும், முழு முயற்சியுடனும் தொடர்ந்து ஈடுபடுவேன். வெற்றி பெறுவேன். எண்ணும் எண்ணங்களே உடலின் வெளித் தோற்றத்திலும் செய்கையிலும் மிளிரும் என்பதை அறிவேன். ஆகவே நான் வெற்றி அடைந்த தோற்றத்தை மனக்கண் முன்னால் தினமும் முடிந்தவரை பார்ப்பேன்.

வெற்றி பெறத் தேவைப்படும் அனைத்துக் குணங்களையும் மனதில் ஒரு பத்து நிமிடம் தினம்தோறும் நினைத்து அதை அடையப் பாடுபடுவேன். நியாயம், தர்மம் இவற்றின் அடிப்படையில் அல்லாது மற்ற வழியில் வரும் வெற்றி நிலைக்காது என்பதால் தன்னம்பிக்கையுடன் நேர்மையான வழியிலேயே நிச்சயம் வெற்றியைப் பெறுவேன். வெற்றி நிச்சயம் என்பது எனக்கேயாகும் இந்தத் தன்னம்பிக்கைச் சிந்தனையை விடாது காலை எழுந்தவுடன் மனதிற்குள் கூறிக் கொள்ளுங்கள்.

வெற்றியை அடைய இரண்டாவது படி இதுவே!

நன்றி: நிலாச்சாரல் [1]