- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

படிப்புக்கு ஒரு ஞானசேகரன்!

எந்த சூழலிலும் படிக்கலாம்; ஜெயிக்கலாம் என்பதற்கு ஞானசேகரன் சாட்சி. பெயருக்கு ஏற்றவாறு ஞானமுள்ளவர்தான். அதனால்தான் ப்ளஸ்டூவில் 1154 மதிப்பெண் எடு த்து மருத்துவ கட் ஆஃப் 199.25 மதிப்பெண்களுடன் கோவை மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்திருக்கிறார்.

ஈரோடு மாவட்டத்தில் சூரியபாளையத்தில் இருக்கிறது ஞானசேகரனின் சிறிய வாடகை வீடு. தமிழக அரசின் இலவச டி.வி.யும், கேஸ் அடுப்பும்தான், வீட்டிலிருந்த விலையுயர்ந்த பொருட்கள். தன்னுடைய குடும்பக் கதையை ஞானசேகரனே சொல்கிறார்.

‘என் அப்பா வீட்டிலேயே நெசவு நெய்து கொண்டிருந்தவர். நூல் விலை ஏறியதால் தொழில் செய்ய முடியாமல் கல் உடைக்கும் வேலை, கூலி வேலை என எது கிடைத்தாலும் செய்வார். தினமும் 200 ரூபாய் கூலி. என் அம்மா நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு கூப்பிடும்போது போவார். இதுதான் எங்கள் குடும்பத்தின் வருமானம். என் தம்பி +1 படிக்கிறான். மாதத்தில் பல நாட்கள் வேலையில்லாமல் போகும்போது குடும்பம் நடத்தவே சிரமப்படுவோம்.சாப்பாட்டுக்கே கஷ்டமாகிவிடும். அப்போதெல்லாம் நாம் நன்றாகப் படித்து நல்ல வேலைக்குப் போகவேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றும். அதற்காகவே நன்றாகப் படித்தேன். 10வது தேர்வில் 483 மார்க் எடுத்தேன். +2 தேர்வில் நன்றாக மார்க் எடுத்தால் உன் குடும்பத்தின் நிலையையே உயர்த்தி விடலாம் என்று ஆசிரியர்கள் நம்பிக்கையூட்டினார்கள். நான் டாக்டராவேன் என்றெல்லாம் படிக்கவில்லை. ஏதோ வாத்தியாராகவோ, கிளார்க்காகவோ படிக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன்.

ஆனால் மருத்துவம் படிக்கவே இடம் கிடைத்துவிட்டது என்று அரை மகிழ்ச்சியுடன் சொல்கிறார் ஞானசேகரன். அவருக்கு முழு மகிழ்ச்சி இல்லாததற்கு காரணம் இ ருக்கிறது.

‘‘நல்ல மார்க் வந்ததும் டாக்டர் சீட் கிடைக்கும்னு எல்லோருக்கும் சொன்னாங்க. நானும் எங்கப்பாவிடம் சொன்னேன். ‘டாக்டர் படிப்பு படிக்க வைக்க வெல்லாம் நம்மிடம் பணம்
ஏதய்யா…’ என்றார். எனக்கு மனசே உடைந்து விட்டது. மூன்று நாள் சரிவர சாப்பிடவில்லை. என்னுடைய வேதனையைப் புரிந்து என் அப்பாவும் அம்மாவும், ‘எப்படியாவது கஷ்டப்பட்டு உன்னை டாக்டருக்கு படிக்க வைக்கிறேன்’ என்றார்கள்.

அவர்கள் வேலை பார்த்தால் மட்டும் போதாதென்று நானும் என்னால் முடிந்ததை உழைத்து பணம் சம்பாதிக்கிறேன் என்று சொல்லி பக்கத்திலுள்ள பவர் லூம் தறிக்குச் சென்றேன். ஒன்னரை மாதம் வேலை செய்து ரூ 5ஆயிரம் சம்பாதித்தேன். அந்தக் காசுதான் கவுன்சிலிங் போய் வர உதவியாய் இருந்தது. கவுன்சிலிங்கில் எனக்கு கோவை மருத்துவக் கல்லூரியில்
சீட் கிடைத்துள்ளது. கல்லூரி திறப்பதற்கு இன்னும் 15, 20 நாட்கள் இருப்பதால் அடுத்த மாத கல்லூரிச் செலவுக்காக இன்றிலிருந்து மீண்டும் வேலைக்குச் சென்று விட்டேன். டாக்டர் சீட் வாங்கி வந்தபின் வேலைக்குச் செல்வதால் ஊரில் ‘என்னப்பா, டாக்டருக்கு படிக்கப் போற பையன் கூலி வேலைக்குப் போறியே’னு சொன்னாங்க.

‘இப்ப வேலைக்கு போனாத்தான் அடுத்த மாசம் காலேஜ் ஃபீஸ் கட்ட முடியும். வேலைக்குப் போறதில் ஒண்ணும் தப்பில்லை’னு சொன்னேன். இப்படியே வேலைக்குப் போய் காசு சேர்த்து
ஃபீஸ் கட்டணும்’’ என்கிறார் ஞானசேகரன்.

2ஜியில் ஒரு லட்சம் கோடி, கோயிலில் ஒன்றரை கோடி லட்சம் கோடி, சாமியார்களிடம் பல்லாயிரம் கோடி என செய்திகள் படித்தாலும் தெருக்கோடியில் இருக்கும் மனிதர்களுக்கு
கல்விக் கட்டணம் கட்டகூட பணம் இல்லை என்பதுதான் நிஜம்.

நன்றி: ஷாநவாஸ்