- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

முதல்வர் ஜெயலலிதாவின், முதலாவது பெரிய சறுக்கல்!

பிரபல பிரென்ச் கார் தயாரிப்பு நிறுவனம், தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூருக்கு அருகிலுள்ள வல்லம் வடகால் என்ற இடத்தில் அமைக்க திட்டமிட்டிருந்த கார் தயாரிப்பு தொழிற்சாலையை, குஜராத் மாநிலத்துக்கு கொண்டு சென்றுள்ளது. வெளிநாட்டு முதலீடு மற்றும் தொழில் வாய்ப்பு விஷயத்தில், புதிய தமிழக அரசின் முதலாவது இழப்பாக இந்தச் சம்பவம் அமைந்துவிட்டது.

ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே கார் தொழிற்சாலை அமைப்பதற்கு தேவையான நிலத்தை வழங்குவதில் சில சிக்கல்களை எதிர்நோக்கியது தமிழக அரசு. உரிய நேரத்தில் அப்பகுதியில் தேவையான நிலத்தைப் பெற்றுக் கொடுக்க தமிழக அரசால் முடியவில்லை. அதையடுத்து, தமிழகத்தின் வேறு ஒரு பகுதியில் பொருத்தமான நிலத்தை வழங்குவதாக பிரென்ச் நிறுவனத்தை தமிழக அரசால் கன்வின்ஸ் பண்ணவும் முடியவில்லை.

இதனால் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, இந்தத் திட்டத்தை தட்டிச் சென்றுள்ளது குஜராத் அரசு.

இது பற்றிய கட்டுரையை விறுவிறுப்பு.காம், 10 நாட்களுக்கு முன்பே வெளியிட்டிருந்தது. இதில் சம்மந்தப்பட்டுள்ளது பிரென்ச் நிறுவனம் என்பதால், நாமும் கட்டுரைக்கு ‘Au revoir’ என்று பிரென்ச்சிலேயே தலைப்பு கொடுத்திருந்தோம்.  பிரென்ச் தெரியாத சில வாசகர்கள் “அதன் அர்த்தம் என்ன?” என்று கேட்டிருந்தனர்.

Au revoir என்பதன் அர்த்தம், ‘குட்பாய் தமிழ்நாடு!’

பிரபல பிரென்ச் கார் தயாரிப்பு நிறுவனமான Peugeot Citroen (உச்சரிப்பு – பேர்ஜோ சித்ரோ), இந்தியாவில் தமது தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கு மிகவும் பொருத்தமான இடமாகத் தேர்ந்தெடுத்ததே தமிழகத்தைத் தான்.

தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க ஸ்ரீபெரும்புதூர் வரை அவர்களது ஆய்வுக் குழு வந்து பார்வையிட்டுச் சென்றது. அதையடுத்து ஜூன் 29ம் தேதி, முதல்வர் ஜெயலலிதாவை, கார் தயாரிப்பு நிறுவனத்தின் குழுவினர் சந்தித்துப் பேசியிருந்தனர்.

இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு, முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று முதல்வரால் கூறப்பட்டிருந்தது. தொழிற்சாலை அமைப்பதற்கு, 450 முதல் 600 ஏக்கர் நிலத்தை வழங்க தமிழக அரசு சம்மதித்திருந்தது. இவ்வளவும் நடந்த நிலையில், இந்தத் திட்டம் தமிழகத்துக்கு வரப்போகின்றது என்ற நிலைமை இருந்தது.

தமிழகத்தில் இந்தத் தொழிற்சாலை இயங்கத் தொடங்கினால், கார் உதிரிப் பாகங்களுக்கான dye தயாரிப்பு பிளான்ட், டிசைனுக்கான R&D லேப், body-building shop ஆகிய மூன்றிலும் முதல் கட்டமாக 5500 பேருக்கு வேலைகள் கிடைக்கும். அதைத் தவிர இப்பகுதியில் எக்ஸ்டேர்னல் மான்பவர் மற்றும், அவுட்சோர்ஸ் சப்ளைஸ் மூலமாக மேலும் 14,000 பேருக்கு வேலைகள் கிடைக்கும் என்பது, தமிழகத்துக்கு சாதகமான அம்சங்களாக இருந்தன.

ஆனால், உரிய நேரத்தில் நிலத்தைக் கொடுக்க முடியாமல் திணறியது தமிழக அரசு. (அந்த விபரங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்)

அப்போதுகூட பிரென்ச் நிறுவனம் தமிழகத்திலேயே தமது தொழிற்சாலையை அமைக்க விரும்பியிருந்தது. விறுவிறுப்பு.காம் சார்பில் பாரிஸ், பிரான்ஸிலுள்ள பேர்ஜோ சித்ரோ நிறுவன ஊடக தொடர்பு அதிகாரி Cécile Damideவை நாம் தொடர்பு கொண்டபோது, “எமது முதன்மை சாய்ஸ் தமிழகம்தான். ஆனால், குஜராத் அரசுடனும் பேச்சுக்கள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டால், வெளி மாநிலம் ஒன்றுக்கு செல்லும் பிளான், நிச்சயம் எமது கார்ட்களில் உள்ளது” என்றார்.

இப்படியிருந்த நிலையில், தமிழக அரசு வேகமாகச் செயற்படவில்லை. பிரென்ச் நிறுவனம் தமிழகத்துக்கு, “நன்றி. வணக்கம்” கூறிவிட்டு குஜராத் சென்றுவிட்டது.

பிரென்ச் நிறுவனம், குஜராத் அரசுடன் இதற்கான ஒப்பந்தத்தில் வியாழக்கிழமை (1ம் தேதி) கையொப்பமிட்டது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முன்னிலையில், தலைமைச் செயலர் மகேஷ்வர் சாகுவும், பேர்ஜோ சித்ரோ நிறுவன துணைத் தலைவர் பிரடிக் ஃபப்ரேயும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

ஒப்பந்தப்படி, பிரென்ச் நிறுவனம் குஜராத்தில் 4,000 கோடி ருபா முதலீட்டைச் செய்கிறது. தொழிற்சாலை அமைப்பதற்காக குஜராத் அரசு 584 ஏக்கர் நிலத்தை லீஸ் அடிப்படையில் வழங்குகிறது. அகமதாபாத் நகரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சனான்த் என்ற இடத்தில் தொழிற்சாலை அமையவுள்ளது. ஆரம்ப கட்ட உற்பத்தியாக வருடத்துக்கு ஒரு லட்சத்து அறுபத்தையாயிரம் கார்கள் தயாரிக்கப்படவுள்ளன.

பேர்ஜோ சித்ரோ நிறுவன தலைவர் Philippe Varin, “தொழில் முயற்சிகளுக்குத் தேவையான உதவிகளை மிகத் துரிதமாகச் செய்து கொடுப்பதில் குஜராத் அரசு, முதலிடத்தில் உள்ளது. இங்குள்ள நிர்வாக உட்கட்டமைப்பு ஏற்பாடுகள், அணுகுவதற்கு ஏற்ற வகையில் மிகவும் எளிமையாக உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

புதிய அரசில் தமிழக முதல்வரின் முதலாவது சறுக்கலாகக் கூறப்படுவது சமச்சீர் கல்வி விவகாரம்தான். ஆனால், அதை அவரால் சரிப்படுத்தி விடமுடியும். (ஓரளவுக்கு சரிப்படுத்தியும் விட்டார்) ஆனால், இந்தத் தொழிற்சாலை விஷயம் அப்படியல்ல. சறுக்கல், சறுக்கல்தான்! இதை மீண்டும் கொண்டுவர முடியாது! (குஜராத் அரசு சொதப்பினால்தான் சான்ஸ் உண்டு)

தமிழக அரசு நாலைந்து அமைச்சர்களையாவது லபக்கென்று பிடித்து, குஜராத் பக்கம் ட்ரெயினிங்குக்கு அனுப்பி வைக்கலாமே!

நன்றி: விறுவிறுப்பு.காம்