- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

30 வகை வெரைட்டி ரைஸ்! 1/2

[1]என்னதான் பல வகை பதார்த்தங்களோடு, சாம்பார், ரசம், தயிர், பாயசம் என முழுமையான சாப்பாடு சாப்பிட்டாலும், ஒரு சாம்பார் சாதமோ, தயிர் சாதமோ… அப்பளம் அல்லது ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிடுவது தனி ருசிதான். தினமும் அலுவலகத்துக்கும் பள்ளிக்கும் லன்ச் பாக்ஸில் பேக் செய்வதற்கும் சரி… பயணங்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் சரி… ‘வெரைட்டி ரைஸ்’தான் ஏற்றது; தயாரிக்க எளிமையானதும் கூட. இந்த இணைப்பில் உங்களுக்கு வெரைட்டி ரைஸ் விருந்து படைத்திருக்கிறார், ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம்.

ஏற்கெனவே, 30 வகை கலந்த சாத வகைகளை உங்களுக்கு வழங்கியிருக்கும் ‘அவள் விகடனி’ன் ‘பார்ட்&2’ விருந்து இது. வெள்ளரி சாதம், கறிவேப்பிலை சாதம், காராபாத், கட்டா ரைஸ் என நீங்கள் அறிந்த உணவுகளையே புதுவித ரெசிபியால் சுவைமிக்கதாக்கி இருக்கிறார் ரேவதி சண்முகம். நீங்களும் செய்து அசத்துங்கள்!

வெள்ளரி சாதம்

[2]தேவையானவை: பச்சரிசி & ஒரு கப், வெள்ளரித் துருவல் & அரை கப், பச்சை மிளகாய் & 4,இஞ்சி & ஒரு துண்டு, எலுமிச்சம்பழச் சாறு & ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் & ஒரு சிட்டிகை,பெருங்காயத்தூள் & அரை டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு, கறிவேப்பிலை & சிறிதளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு & தலா அரை டீஸ்பூன், நெய் & ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்குங்கள். நெய்யைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து, வெள்ளரி துருவலையும் உப்பையும் சேர்த்து, 5 நிமிடம் வதக்கி இறக்குங்கள். அந்தக் கலவை யுடன் சாதம், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக் கிளறிப் பரிமாறுங்கள்.

[3]பிஸிபேளாபாத்

தேவையானவை: பச்சரிசி & ஒரு கப், துவரம்பருப்பு & அரை கப், சின்ன வெங்காயம் & 12,தக்காளி & 3, புளி & ஒரு சிறிய உருண்டை, மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் &அரை டீஸ்பூன், நெய் & ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு & தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் & 6, தனியா & ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு & ஒரு டேபிள்ஸ்பூன்,வெந்தயம் & கால் டீஸ்பூன், சீரகம் & அரை டீஸ்பூன், கொப்பரை துருவல் & ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் & ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு & ஒரு டீஸ்பூன், எண்ணெய் & 2 டீஸ்பூன், நெய் & 2 டீஸ்பூன்.

செய்முறை: அரிசியையும் பருப்பையும் நாலரை கப் தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, 5 நிமிடம் கழித்து இறக்குங்கள். வெங்காயத்தை தோல் உரித்து, இரண்டாக நறுக்குங்கள். தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களில், கொப்பரையைத் தவிர, மீதி எல்லாவற்றையும் வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்தெடுங்கள். கடைசியில் கொப்பரை துருவலையும் சேர்த்து, வறுத்து இறக்கி ஆறவிட்டுப் பொடித்துக்கொள்ளுங்கள். புளியை ஒரு கப் தண்ணீரில் நன்கு கரைத்து வடிகட்டுங்கள். குக்கரில் இருக்கும் சாதத்தை, அப்படியே (குக்கரோடு) மீண்டும் அடுப்பில் வைத்து, புளிக்கரைசலை அதோடு சேர்த்து, நெய், பெருங்காயத்தூள் சேர்த்து, குறைந்த தீயில் 5 நிமிடம் நன்கு கிளறுங்கள். பிறகு, பொடித்து வைத்துள்ள தூளை அதில் தூவுங்கள். எண்ணெய், நெய் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்குங்கள். பிறகு, தக்காளி சேர்த்து, நன்கு கரைய வதக்கி சாதத்தில் சேருங்கள். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, 10 நிமிடம் கழித்து இறக்குங்கள். விருப்பம் உள்ளவர்கள் கடைசியில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றிக் கிளறி இறக்குங்கள்.

குறிப்பு: கொப்பரை என்பது தண்ணீர் சத்து இல்லாமல் இருக்கும். அது கிடைக்காத பட்சத்தில், தேங்காய் துருவலை, தண்ணீர் சத்து போக வெறும் வாணலியில் போட்டு நன்கு சிவக்க வறுத்துச் சேர்க்கலாம்.

[4]பச்சைமல்லி சாதம்

தேவையானவை: பச்சரிசி & ஒரு கப், நெய் & ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு & தேவையான அளவு.

வறுத்து அரைக்க: மல்லித்தழை & ஒரு சிறிய கட்டு, உளுத்தம்பருப்பு & ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயம் & ஒரு சிறிய துண்டு, புளி & சிறிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் & 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் & 6.

தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு & ஒரு டீஸ்பூன், எண்ணெய் & 2 டீஸ்பூன்.

செய்முறை: அரிசியை சிறிது உப்பு சேர்த்து, உதிராக வடித்துக்கொள்ளுங்கள். மல்லித்தழையை சுத்தம் செய்து, நன்கு அலசிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, பெருங்காயம், உளுந்து, மிளகாய் சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். பிறகு, மல்லித்தழை, புளி சேர்த்து நன்கு வதக்கி இறக்குங்கள். இதை ஆறவிட்டு, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். வடித்த சாதத்தில், இந்த விழுதைச் சேர்த்து, நன்கு கலந்து வையுங்கள். அத்துடன் கடுகு, உளுத்தம்பருப்பு, தாளித்து சேர்த்து, நெய்யை அதனுடன் சேர்த்து, நன்கு கிளறி இறக்குங்கள். பசியைத் தூண்டும் இந்தப் பச்சைக் கொத்துமல்லி சாதம்.

[5]தக்காளி, புதினா சாதம்

தேவையானவை: பச்சரிசி & ஒரு கப், உப்பு & தேவையான அளவு.

அரைக்க: புதினா & ஒரு கைப்பிடி, மல்லித்தழை & ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய் & 4, இஞ்சி & ஒரு துண்டு, பூண்டு & 4 பல், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன். தனியே அரைக்க: தக்காளி & 3. தாளிக்க: எண்ணெய் & 2 டீஸ்பூன், நெய் & ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை & ஒரு துண்டு.

செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். புதினா, மல்லித்தழையை சுத்தம் செய்து, அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். தக்காளியைத் தனியே அரைத்து வடிகட்டுங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து, பட்டை தாளித்து, புதினா&மல்லி விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகக் கிளறுங்கள். பிறகு, தக்காளி சாறு, சிறிது உப்பு சேர்த்து, தக்காளி சாறு சற்று பச்சை வாசனை போகும் வரை நன்கு கிளறி, அதில் சாதத்தைப் போட்டு நன்கு கிளறிப் பரிமாறுங்கள். வாசமும் நிறமும் சாப்பிட அழைக்கும்.

குறிப்பு: சற்றுப் புளிப்புச் சுவை விரும்புபவர்கள், ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக்கொள்ளலாம்.

[6]தால் பாத்

தேவையானவை: பச்சரிசி & ஒரு கப், துவரம்பருப்பு & அரை கப், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், பூண்டு & 10 பல், சீரகம் & அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் & 3, நெய் & ஒன்றரை டேபிள்ஸ்பூன், உப்பு & தேவையான அளவு, கறிவேப்பிலை & சிறிதளவு.

செய்முறை: அரிசியையும் பருப்பையும் ஒன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள். பூண்டைத் தோல் உரித்துக்கொள்ளுங்கள். அரிசி, பருப்புடன் பூண்டு, சீரகம், மஞ்சள்தூள், உப்பு, 5 கப் தண்ணீரைச் சேர்த்து, குக்கரில் வைத்து மூடி, 2 அல்லது 3 விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் கழித்து இறக்குங்கள். பிறகு, நெய், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறிப் பரிமாறுங்கள். இந்த ‘பாத்’துக்கு அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு பொரியல் நல்ல சைட்&டிஷ்.

குறிப்பு: சிறு குழந்தைகளுக்கும், வயோதிகர்களுக்கும், உடல்நிலை சரியில்லாதவர்களுக்கும் ஏற்ற எளிய டயட் இது. வாய்க்கு ருசியாக இருக்கும் இந்த சாதம், வயிற்றுப் புண்ணை ஆற்றக் கூடியது.

[7]புளி சாதம்

தேவையானாவை: சாதம் & 2 கப், புளி & எலுமிச்சம்பழ அளவு, மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு. தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு & ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு & 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் & 5, பெருங்காயத்தூள் & அரை டீஸ்பூன், வேர்க்கடலை (விருப்பப்பட்டால்) & ஒரு டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் & 3 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை & சிறிது.

செய்முறை: புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். அதனுடன் மஞ்சள்தூள், உப்பு, சாதம் சேர்த்துக் கலந்து அழுத்திவையுங்கள். ஒரு மணி நேரம் ஊறியபிறகு, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, பொன்னிறமானதும் சாதத்தில் சூடாகக் கொட்டி (அப்போதுதான் புளியின் பச்சை வாசனை போகும்) கிளறுங்கள். விருப்பப்பட்டவர்கள், ஊறவைத்து வேகவைத்த கொண்டைக்கடலையை, வேர்க்கடலைக்குப் பதிலாக சேர்க்கலாம்.
முதல்நாள் செய்து மீந்த சாதத்தில் புளியைக் கரைத்து ஊற்றிவைத்திருந்துவிட்டு கூட, மறுநாள் இம்முறையில் தாளிக்கலாம். அருமையாக இருக்கும்.

[8]காலிஃப்ளவர் ஊறுகாய் சாதம்

தேவையானவை: பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் துண்டுகள் & ஒரு கப், மிளகாய்தூள் & ஒரு டேபிள்ஸ்பூன், கடுகுத்தூள் & அரை டேபிள்ஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு & கால் கப்பிற்கும் சிறிது அதிகமாக, உப்பு & தேவை யான அளவு, பெருங்காயத்தூள் & அரை டீஸ்பூன், எண்ணெய் & கால்
கப்.

செய்முறை: காலிஃப்ளவரை சுத்தம் செய்துகொள்ளுங்கள். அதனுடன் எலுமிச்சம்பழச் சாறு, மிளகாய்தூள், கடுகுத்தூள், பெருங்காயத்தூள், நல்லெண்ணெய், உப்பு சேர்த்து நன்கு பிசறி வையுங்கள். ஒரு நாள் முழுவதும் இது ஊறட்டும். (எலுமிச்சம்பழச் சாறை, உங்களுக்கு தேவையான புளிப்புச் சுவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்). இதுதான் ஊறுகாய். மறுநாள் அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள் (குழைவாகவும் வடிக்கலாம்). சூடான சாதத்தில், ஊறிய காலிஃப்ளவர் ஊறுகாயைப் போட்டு நன்கு கிளறுங்கள். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்துக் கலந்துவிடுங்கள். பிரமாதமான சுவை தரும்.

குறிப்பு: இந்த காலிஃப்ளவர் ஊறுகாயை ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம், அவசரத்துக்கு பிள்ளைகளுக்கு லன்ச் தயாரிக்க உதவும்.

[9]பொடி போட்ட எலுமிச்சை சாதம்

தேவையானவை: பச்சரிசி & ஒரு கப், எலுமிச்சம்பழச் சாறு & 3 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் & கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் & 2, இஞ்சி & ஒரு துண்டு, கறிவேப்பிலை & சிறிதளவு, உப்பு & தேவையான அளவு.

பொடிக்க: காய்ந்த மிளகாய் & 4, கடலைப்பருப்பு & ஒரு டீஸ்பூன், தனியா & அரை டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு & ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு & ஒரு டீஸ்பூன், எண்ணெய் & 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: சாதத்தை சிறிது உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் நன்கு சிவக்க வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேருங்கள். பிறகு, மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து இறக்கி, சாதத்தில் கலந்து,
அத்துடன் பொடித்த பொடியையும் சேர்த்து, நன்கு கலந்து பரிமாறுங்கள்.

[10]அரைத்த மாங்காய் சாதம்

தேவையானவை: பச்சரிசி & ஒரு கப், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு,நெய் & 2 டீஸ்பூன்.

வதக்கி அரைக்க: புளிப்பான மாங்காய் துருவல் & அரை கப், பச்சை மிளகாய் & 5, பூண்டு & 3 பல், தேங்காய் துருவல் & ஒரு டேபிள்ஸ்பூன், மல்லித்தழை & சிறிதளவு, பெருங்காயத்தூள் & அரை டீஸ்பூன், எண்ணெய் & 2 டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு & ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை & சிறிதளவு, எண்ணெய் & 2 டீஸ்பூன்.

செய்முறை: அரிசியை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குழைவாகவோ அல்லது உதிராகவோ வடித்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, பச்சை மிளகாய், பூண்டு, தேங்காய், மல்லித்தழை, பெருங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி மாங்காய் துருவலை சேருங்கள். இதை 3 நிமிடம் வதக்கி இறக்கி கரகரப்பாக அரைத்தெடுங்கள். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அதில் சேருங்கள். இந்த கலவையை சாதத்துடன் கொட்டிக் கலந்து, கடைசியில் நெய் சேர்த்து
பரிமாறுங்கள். பிக்னிக் போன்ற பயணங்களுக்கு இந்தக் கட்டுசாதம் சூப்பராக இருக்கும். தொட்டுக்கொள்ள தேங்காய் துவையல் சூப்பர் காம்பினேஷன்.

சட்னி [11] சாதம்

தேவையானவை: பச்சரிசி & ஒரு கப், உப்பு & தேவையான அளவு, நெய் & 2 டேபிள்ஸ்பூன்.

வதக்கி அரைக்க: சின்ன வெங்காயம் & 15, பூண்டு & 3 பல், காய்ந்த மிளகாய் & 6, புளி & நெல்லிக்காய் அளவு, எண்ணெய் & ஒரு டேபிள்ஸ்பூன்.

தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு & ஒரு டீஸ்பூன், எண்ணெய் & 2 டீஸ்பூன், கறிவேப்பிலை & சிறிதளவு.

செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து குழைவாக வடித்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை மேல்புற சருகுத் தோலை மட்டும் நீக்குங்கள். பூண்டுப் பற்களை தோல் உரித்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். நன்கு நிறம் மாறும் வரை வதக்கி, புளி, உப்பு சேர்த்து இறக்குங்கள். ஆறியதும் நன்கு அரைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேருங்கள். அத்துடன் சாதம், நெய் சேர்த்து நன்கு கலந்து சூடாக பரிமாறுங்கள்.

[12]கறிவேப்பிலை சாதம்

தேவையானவை: பச்சரிசி & ஒரு கப், உப்பு & தேவையான அளவு, நெய் & ஒரு டேபிள்ஸ்பூன்.

வறுத்து பொடிக்க: கறிவேப்பிலை & ஒரு கைப்பிடி, உளுத்தம்பருப்பு & ஒரு டீஸ்பூன், மிளகு & அரை டீஸ்பூன், சீரகம் & ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் & அரை டீஸ்பூன், எண்ணெய் & ஒரு டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு & ஒரு டீஸ்பூன், நெய் & 2 டீஸ்பூன்.

செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். வறுக்க கொடுத்துள்ள பொருட்களில் கறிவேப்பிலை நீங்கலாக மற்றவற்றை சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். வெறும் கடாயில் கறிவேப்பிலையை நன்கு வறுத்தெடுத்து, வறுத்த பொருட்களுடன் சேர்த்து ஒன்றாக பொடித்து சாதத்துடன் கலந்து கொள்ளுங்கள். கடை சியில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து சேர்த்து, நெய் சேர்த்து கலந்து பரிமாறவும். உடல் நலனுக்கு உகந்த சாதம் இது.

[13]உளுந்து சாதம்

தேவையானவை: பச்சரிசி & ஒரு கப், உப்பு & தேவையான அளவு, நெய் & ஒரு டேபிள்ஸ்பூன்.

வறுத்து பொடிக்க: உளுத்தம்பருப்பு & 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் & 5, சீரகம் & அரை டீஸ்பூன், கொப்பரை துருவல் & ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு & 2 பல், எண்ணெய் & 2 டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு & ஒரு டேபிள்ஸ்பூன், நெய் & 2 டீஸ்பூன், கறிவேப்பிலை & சிறிதளவு.

செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். வறுக்க கொடுத்துள்ள பொருட்களில், பூண்டு நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சிறு தீயில் சிவக்க வறுத்து, பிறகு பூண்டையும் சேர்த்து ஒரு புரட்டுப் புரட்டி எடுத்து பொடித்து சாதத்துடன் கலந்துகொள்ளுங்கள். அத்துடன் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து, நெய் சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள்.

[14]பட்டாணி மசாலா சாதம்

தேவையானவை: பச்சரிசி & ஒரு கப், பெரிய வெங்காயம் & 1, தக்காளி & 3, மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு, பட்டாணி & கால் கப்.

அரைக்க: தேங்காய் துருவல் & ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி & ஒரு துண்டு, பூண்டு & 3 பல், சோம்பு & அரை டீஸ்பூன்.

தாளிக்க: கறிவேப்பிலை & சிறிதளவு, எண்ணெய் & 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துவைத்துக்கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்தெடுங்கள். எண்ணெயைக் காயவைத்து கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின் சிறிது உப்பு, பட்டாணி சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்குங்கள். பிறகு தக்காளி, மஞ்சள்தூள், அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, வடித்த சாதம் சேர்த்து நன்கு
கலந்து பரிமாறுங்கள். குழந்தைகளின் லன்ச்சுக்கு செய்து அனுப்பினால், விருப்பமாகச் சாப்பிடுவார்கள்.

[15]பூண்டு &வெங்காய சாதம்

தேவையானவை: பச்சரிசி & ஒரு கப், சின்ன வெங்காயம் & 10, பூண்டு & 8 பல், உப்பு & தேவையான அளவு, கறிவேப்பிலை & சிறிதளவு.

வறுத்து பொடிக்க: காய்ந்த மிளகாய் & 6, மிளகு & அரை டீஸ்பூன்.

தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் & 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். பூண்டு, வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்குங்கள். மிளகாய், மிளகு இரண்டையும் வெறும் கடாயில் வறுத்து பொடியுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து, வெங்காயம், பூண்டு, சிறிது உப்பு சேர்த்து, நன்கு வதக்குங்கள். இது நன்கு வதங்கியதும், மிளகாய், மிளகு தூளை தூவி நன்கு கிளறுங்கள். பிறகு கறிவேப்பிலை, சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

[16]கத்தரிக்காய் சாதம்

தேவையானவை: பச்சரிசி & ஒரு கப், கத்தரிக்காய் & 4, மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு.

அரைக்க: தேங்காய் துருவல் & ஒரு டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் & 6, இஞ்சி & ஒரு துண்டு, பூண்டு & 3 பல், பச்சை மிளகாய் & 4, தனியா & ஒரு டீஸ்பூன், புதினா, மல்லி & தலா சிறிதளவு.

தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், எண்ணெய் & 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அரிசியை சிறிது உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். கத்தரிக்காய்களை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்தெடுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து, மஞ்சள்தூளையும் கத்தரிக்காயையும் சேருங்கள். 5 நிமிடம் வதக்கிய பிறகு, அரைத்த விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, சாதத்தை சேர்த்து கிளறுங்கள்.

மற்ற 15 வகைகள் அடுத்த தொடரில்..