- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

கதவைத் திற சூரியன் வரட்டும் -APJ

இழைனர்களுக்கு ஒரு vitamin தொடர் – Dr.APJ.அப்துல் கலாம்

ராஷ்டிரபதிபவனில் எனக்கு இரண்டு அலுவலகங்கள் இருந்தன. ஒன்று கீழ் தளத்திலும் இன்னொன்று முதல் மாடியிலும் இருந்தன. என்னுடைய பணிகள் ஆரம்பித்த ஒரு சில நாட்களுக்குள்ளேயே நான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். அநேகமாக எல்லா கதவுகளும் ஜன்னல்களுமே அழகான திரைச்சீலைகளால் மூடப்பட்டிருந்தன. அதனால் சூரிய வெளிச்சம் உள்ளேயே வர முடியாத அளவுக்கு ஒளி குறைவாக இருந்தது. அலுவலகத்தின் வேலை நேரம் முடியும் வரை எல்லா விளக்குகளுமே எரிந்து கொண்டிருப்பதையும் கண்டேன்.

தினமும் காலையிலும் மாலையிலும் அங்கே நான் நடைப்பயிற்சி செய்வதுண்டு. அப்போதெல்லாம் எனக்கு இந்த யோசனையே தோன்றும். ஏன் சூரியனின் கதிர்கள் தடை செய்யப்பட்டது போல் இங்கே எல்லா கதவுகளும் ஜன்னல்களும் மூடப்பட்டிருக்கின்றன? அழகான சூரியனின் ஒளிக்கதிர்கள் இங்கே பரவாமல் தடுக்கப் பட்டிருப்பது ஏன்? சூரிய வெளிச்சம் வராததாலேயே எல்லா அறைகளும் இருட்டாகக் காணப்படுகின்றன. அந்த இருட்டைப் போக்க செயற்கை விளக்குகள் நாள் முழுவதும் எரிகின்றன? இது மின்சக்தியை வீணாக்குவதாகத்தானே அர்த்தம்?

ஜனாதிபதி இயற்கையை ரசித்து ஆக வேண்டியது ஒன்றுமில்லை என்று சிலர் நினைத்திருக்கலாம் அல்லது பாதுகாப்பு காரணங் களால் கதவுகள் அடைபட்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றி யது. உடனே என்னுடைய தனிப்பட்ட அலுவல் குழுவினர் மற்றும் பாதுகாப்புக் குழுவினரை அழைத்துப் பேசினேன். அவர்களிடம் என்னுடைய எண்ணங்களை எடுத்துரைத்தேன். இயற்கையின் மகத்தான உருவம்தான் சூரியன்.  அதனுடைய கதிரும் வெளிச் சமும் நம் மீது பகல் நேரங்களில் படவேண்டும். தனிப் பட்ட ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல; சுற்றுச்சூழலுக்கும் சூரியக்கதிர் ஒரு கிரிமிநாசினியாகவும் வைட்டமின் சக்தியாகவும் பயன்படும் என்பதை எடுத்துச் சொன் னேன். அவர்களும் அதை உணர்ந்தார்கள்.

ராஷ்டிரபதி பவனின் பல கதவுகளும் ஜன்னல்களும் திறந்தன. தெளிந்த காற்றும் இளஞ்சூடான சூரிய வெப்பமும் உள்ளே வந்தன. அதைக் கண்ட பணியாளர்களின் முகங் களில் பரவசமும் ஆச்சரியமும் இணைந்து தென்பட்டன. பலர் என்னிடம் வந்து இதற்காக நன்றி கூறினார்கள். ஒரு அடைபட்ட இடத்தில் இவ்வளவு நாள் சிக்கிக் கிடந்து இப்போது விடுதலை ஆனது போன்ற உணர்ச்சி ராஷ்டிரபதி பவன் எங்கும் தெரிந்தது.

பகல் நேரங்களில் எரிந்து கொண்டிருந்த பல விளக்குகளுக்கு இப்போது வேலை இல்லை. இயற்கை வெளிச்சமே போதுமானதாக இருந்தது. ராஷ்டிரபதி பவனில் ஆயிரக்கணக் கான விளக்குகள் உண்டு. பகல் நேரங்களில் அவை வீணாக எரிவதால் எத்தனை பணம் அநாவசியச் செலவு? இப்போது அந்தப் பணம் மிச்சமானதைக் கண்டு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அங்கே என்னைக் காண வந்தவர்கள் எல்லாம் திறந்த கதவுகள், ஜன்னல் களைப் பார்த்து ஆச்சர்யம் அடைந் தார்கள். பாராட்டைத் தெரிவித் தார்கள். “உங்கள் இல்லங்களையும் அலுவலகங்களையும் இதே போல் மாற்றுங்கள்’’ என்று நான் அவர் களிடம் சொல்வேன்.

இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும், அலுவல கத்துக்கும் அடிப்படையான விஷயம். கதவுகளையும் ஜன்னல்களையும் பகல் நேரங்களில் திறந்து வைப்பதால் தேவையில்லாமல் மின் விளக்குகளையும் மின் விசிறிகளையும் பயன்படுத்தத் தேவை யில்லை. இதை கான்ஷியஸாகச் செய்வதன் மூலம் உங்களின் மின் கட்டணத்தில் பெரிய வித்தியாசத்தைக் காண்பீர்கள்.

பல மலைக்கிராமங்களில் சூரிய ஒளி பேனல்களின் மூலம் வீடுகளுக்கு சூரிய சக்தி மின் சக்தியாக மாற்றப்படு வதை நீங்கள் கண்டிருப்பீர்கள். இந்தியாவைப் போன்ற வெப்ப நாடுகளுக்கு இந்த சோலார் எனர்ஜி டெக்னாலஜி பெரிய மாற்றத்தைத் தரும். கர்நாடகாவில் உள்ள பிஆர் மலைப்பகுதியில் ஒவ்வொரு வீட்டிலும் சிறிய சோலார் பவர் பேனல்கள் பொருத்தப்பட்டிருப்பதை நான் கண்டிருக் கிறேன். அந்த மலைப்பகுதி வீடுகள் முழுக்க சூரிய சக்தியினாலேயே தமக்குத் தேவையான மின்சாரத்தைப் பெற்றுக் கொள்கின்றன. காண்பதற்கே மிக அழகான காட்சி அது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமமும் விளக்கு மற்றும் விசிறிகளுக்காக சூரிய சக்தி மின்சாரத்தையும், பயோகேஸ் மூலம் சமையல் முதலான எரிசக்தியையும் பெற்று , சுகாதாரமான கழிவுநீர் வசதிகள் மற்றும் இனிய சுற்றுச்சூழலை தன்னிறைவு பெற வேண்டும் என்பது என் கனவுகளில் ஒன்று. அது பல கிராமங்களில் நனவாகி வரு கிறது என்பதும் உண்மையே. சூரிய சக்தி பேனல்களோடு எல்.ஈ.டி கிறிஸ்டல் அடிப்படையிலான விளக்குகளைப் பயன்படுத்துவது என்பது மின்சக்தி பயன்பாட்டை இன்னும் குறைக்கும். சோலார் தெர்மல் என்று வீடுகளில் பயன் படுத்தக் கூடிய டெக்னாலஜியும் இருக்கிறது. இதன் மூலம் வீடுகளுக்குத் தேவையான சுடுதண்ணீரை ஹீட்டர்களில் கொண்டு வர முடியும். ஏர்கண்டிஷனர்களையே இயக்க வைக்கும் அளவுக்கு மின்சக்தியை இந்த சோலார் தெர்மல் டெக்னாலஜியினால் அளிக்க முடியும். இதெல்லாம் மிக விரைவில் மக்களைச் சென்றடையப் போகிறது.

“காணி நிலம் வேண்டும்’’என்று பாடியவர் பாரதி. அது ஒவ்வொரு இந்தியனின் கனவு. நம் நாட்டில் 300 மில்லியன் மக்கள் நடுத்தர வர்க்க வருமானத்தில் உள்ளார்கள். சுமார் 220 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்பவர்கள். இவர்கள் எல்லோருடைய கனவும் தங்களின் தலைக்கு மேல் ஒரு கூரை. எலி வளையானாலும் தனி வளை என்பதுபோல சிறியதானாலும் சொந்தமாக ஒரு வீடு.

இந்தக் கனவை நனவாக்க, முதல் கட்ட நடவடிக்கையாக அடுத்த 15 ஆண்டுகளில் குறைந்த பட்சம் 130 மில்லியன் வீடுகளையாவது நாம் கட்டி முடிக்க வேண்டும். இந்த வீடுகள்தான் நமது நாட்டின் முதுகெலும்பாக எதிர்காலத்தில் திகழப் போகின்றன. இந்த வீடுகளையும் “பசுமை வீடுகளாக “ நாம் கட்ட வேண்டும். ஒரு வீட்டைக் கட்டுவது என்பது ஒரு தேசத்தைக் கட்டுவது போல.

இப்படிப்பட்ட கனவுகளை எல்லாம் நனவாக்க, உடனே வேண்டும் இளைஞர்களின் “லீடர் ஷிப்!

Dr.APJ.அப்துல் கலாம் – Nakkeeran.in