- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

வேரை மறந்த விழுதே … கவிதை

உன்னில் என்றும் தன்னைக் கண்டனள்
தன்னில் அதிகம் உன்னை உயர்த்தினள்
கண்ணே மணியே பொன்னே என்று
விண்வரை உன்னை வைத்தே போற்றினள்.

ஊட்டிய பாலுக்கு விலை வைத்ததில்லை
கொட்டிய பாசத்தை கணக்கிட்டதில்லை
நீட்டிய போதுன் விரல் வாசலை நோக்கி
தீட்டிய கத்தியில் குத்தவள் உணர்ந்தனள்.

தனியாய் பயணம் கிளம்பிய போதும்
தவியாய் அவள்மனம் தவித்திட்ட போதும்
விதியாய் எண்ணி நொந்தனள் தவிர
சதியாய் கண்டுனை சபித்திட நினைத்திலள்.

தேவைகள் முடிகையில் உறவுகள் முறியுமோ?
பார்வைகள் மாறியே பாசமும் விலகுமோ?
சேவைகள் செய்ததன் நினைவுகள் மறக்குமோ?
நேர்மையும் நியாயமும் நெஞ்சினில் இறக்குமோ?

தலையில் ஊற்றிய நீரது விரைவில்
காலை நனைக்கும் நினைவில் கொள்வாய்!
நாளை முதுமை உனக்கும் வருகையில்
பிள்ளை உன்வழி நடக்கையில் உணர்வாய்!

நன்றி:- என்.கணேசன்