- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

சுய தொழில்கள்-கொசு விரட்டி தயாரிப்பு

பல நண்பர்கள் இன்று வெளி நாட்டில் தங்களின் எதிர் காலம் பற்றியக் கேள்விக் குறியுடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் சிலர் தாய் நாட்டுக்குத் திரும்ப வந்தால் (என்றாவது ஒரு நாள் வந்து தானே ஆக வேண்டும்) என்ன தொழில் செய்யலாம் என ஆலோசனைகள் கேட்ட வன்ணம் உள்ளனர். அவர்களுக்காக சிறு தொழில்கள் சிலவற்றைப் பற்றி இத் தொடரில் விளக்கங்கள் தரலாம் என எண்ணி இத் தொடரினை ஆரம்பம் செய்கிறேன். உங்களுக்கு இது ஒரளவுக்கு உதவியாக இருக்கலாம் என நம்புகிறேன்.

[1]அந்த வகையில் முதலில் கொசு விரட்டி(Liquid) தயாரிப்பதெப்படி என்பது பற்றி இங்கு தருகிறேன். இதற்காக இதை தயாரித்து விற்பனை செய்யும் Mr.ராம நாதன் என்பவர் கோவை,குனியமுத்தூரில் இருப்பதை அறிந்து அவரை நேரில் சென்று விளக்கம் கேட்கலாம் என்ற நோக்கத்தில் சில நாட்களுக்கு முன் அங்கு சென்று அவரை சந்தித்தேன். கோவையில், சுய தொழிலாக,குடும்பத்தோடு, நேர்மையான முறையில்,உழைப்பை செலுத்தி, ஒரு மூலிகை கொசு விரட்டியை தயாரித்து, தமிழகம் முழுதும் சந்தைபடுத்தி வருகிறார், Mr..ராமநாதன். ராஜா நைட்ஸ் எனும் அடையாளப் பெயரில், இவரது மூலிகை கொசு விரட்டி கோவையில் பிரபலமான மருத்துவர்கள், பேராசிரியர்கள் என்று பலரையும் கவர்ந்துள்ளது.

கோவை வேளாண்மை பல்கலை கழகம், போன்றவைகள் அளித்த பல சான்றுகள் இவரது உழைப்பிற்கு சான்று பகிர்கின்றன. கடந்த 8 ஆண்டுகளாக தீவீர முயற்சியில்,இவர் மூலிகை ஆராய்ச்சி மூலம் சுயமாக கண்டுபிடித்தவை இவரது தயாரிப்புகள். இயற்கை நறுமண ரூம் பிரஸ்னர், நறுமணம் கலந்த கொசு விரட்டி, வெறும் கொசு விரட்டி என 3வகைகள் பிரதான உற்பத்தியாக தயார் செய்து சந்தை படுத்தி வருகிறார்.

சென்னை,பாண்டி,தஞ்சாவூர்,கோவை போன்ற இடங்களில் இவரது முயற்சிக்கு மிகுந்த வரவேற்புள்ளது. செய்முறை விளக்கங்களை நேரில் தெரிந்து வரலாம் என்று அங்கு சென்றேன். ஆனால் அவரோ தற்போது தொழிலினை பாலக்காட்டுக்கு அருகிலுள்ள அவரது கிராமத்தில் செய்வதாகவும், தற்போது (நான் சென்ற வேளை), உற்பத்தியை நிறுத்தி, தேவைப்படும் போது மட்டும் செய்து வருவதாகவும் கூறினார். அங்கு மூலிகை திரவத்தை தயார் செய்து கோவையில் அவரது வீட்டில் வைத்து பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வருகிறார். பொருளாதார சிக்கல்களினால் குறைந்த அளவில் செய்து வருகிறாராம். சரி, நீங்கள் ஏன் இதில் விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது? என வினவியதற்கு அதில் அவர் ஆர்வம் காட்டவில்லை. தொழில் ரகசியம் என நினைக்கிறேன். இது போக கடந்த 25வருடங்களாக, கொசு வத்திச் சுருள், ஊது வத்தியில் கொசுவத்தி, நரை முடித்தைலம் [2]போன்றவைகளையும் தயாரித்து விற்பனை செய்திருக்கிறார். பட்டம் பெற்றவர்.

மனிதரிடம் இதே போன்று பல அரிய கண்டுபிடிப்புகள் மண்டிக் கிடக்கின்றன. எடுத்துக்காட்டாக, Ultra sound மூலம் Washing m/c தயாரிக்கும் Idea வும் உள்ளது. எந்தவித சலவைத் தூள்களுமின்றி,வெறும் தண்ணீரைக் கொண்டு ultra sound எனும் மின்னியல் மூலம் துணிகளை துவைக்க முடியும் என்கிறார். சில தொழில் நுட்ப காரணங்களாலும், பொருளாதார சிக்கல்களாலும் இன்னும் செயல் வடிவில் [3]கொண்டு வர முடியாமல் இருக்கிறார். திரும்பி வரும் போது நானும் 12 கொசு விரட்டி Liquid பாட்டில்கள் (மொத்த விலைக்கு வாங்கினால் பாட்டில் ரூ.25 என தர முடியுமாம்.. கடையில் இதன் விலை ரூ.40-45)வாங்கிக் கொண்டு சென்னைக்கு நடையை(sorry ரயிலில்) கட்டினேன். கீழே அவர் மனைவிபத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியை இணைத்திருக்கிறேன். தொடர்ந்து இன்னும் மற்ற சிறு தொழில்கள் பற்றி படிப்படியாகத் தருகிறேன்.

கொசு விரட்டி தயாரிப்பு [4]

தற்போதைய வாழ்க்கை முறையில் ரசாயனங்களின் பங்கு மகத்தானது என்றாலும்,இயற்கை பொருட்களுக்கு இருக்கும் மவுசு தனிதான். கொசுக்களை விரட்ட, நாங்கள் தயாரிக்கும் மூலிகை லிக்யுட், நுகர்வோரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.கொசு விரட்டி தயாரிக்கும் தொழிலை கற்றுக்கொண்டால், நல்ல லாபம் சம்பாதிக்கலாம்’ என்கிறார் கோவை குனியமுத்தூரில் பெஸ்ட் நேச்சுரல் அண்ட் கம்பெனி நடத்திவரும் ஜெயந்தி.

அவர் கூறியதாவது: விளக்கு எரிக்க கேரளாவில் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், நல்லெண் ணெய், நெய் போன்றவற்றை இன்றும் பயன்படுத்துகின்றனர். இதன் வாசனை கொசு, பூச்சிகளை அண்ட விடாது. சாம்பிராணி, காய்ந்த வேப்பிலை புகை மூட்டம் போன்றவையும் கொசுகளை விரட்டும். இதை அடிப்படையாக வைத்து, கடந்த 5 ஆண்டாக கொசு விரட்டி மூலிகை லிக்விட் தயாரித்து விற்கிறோம். இது பாரம்பரியமும், நவீனமும் கலந்தது.மின்சார விளக்கில் பொருத்தி பயன்படுத்தலாம். ஆஸ்துமா உள்ளிட்ட நோயாளிகளை கொசுவிரட்டி பாதிக்கக் கூடாது. இயற்கை முறையில் தயாரிப்பதால், இவை நோயாளிகளை பாதிப்பதில்லை. வரும் காலத்தில் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் பயன்பாடு அதிகரிக்கும். கோவை வேளாண் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கண்காட்சிகளில் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் இடம்பெற்றுள்ளது. பலர் எங்கள் தயாரிப்பை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு ஜெயந்தி கூறினார்.

விற்பனை வாய்ப்பு மளிகை கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், சர்வோதய சங்கம், காதி கிராப்ட் விற்பனையகங்கள், நாட்டு மருந்து கடைகள், மருந்து கடைகள் ஆகியவற்றில் மூலிகை கொசுவிரட்டி லிக்யுட் விற்கப்படுகிறது. அங்கு நேரடியாக சப்ளை செய்யலாம். தினசரி கடைக்கு 5 பாட்டில் வீதம் 20 கடைகளுக்கு ஒரு நாள் உற்பத்தியான 4 லிட்டர் லிக்யுட்டை (100 பாட்டில்) எளிதில் விற்கலாம்.இவ்வாறு சுழற்சி முறையில் வெவ்வேறு கடைகளில் சப்ளை செய்யலாம்.தெரிந்தவர்களுக்கும், அக்கம்பக்கத்து வீட்டுக் காரர்களுக்கும் நேரடியாகவும் விற்கலாம். தரம் மிகவும் முக்கியம். நல்ல தரத்தோடு விலையும் ஏற்றதாக இருந்தால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். விற்பனையும் அதிகரிக்கும்.

கட்டமைப்பு: மூலிகை லிக்யுட் காய்ச்ச வீட்டு சமையலறை, மூலிகைகளை காய வைக்க திறந்தவெளி. தளவாட சாமான்கள்: வர்த்தக கேஸ் சிலிண்டர் அடுப்பு, 15 லிட்டர் குக்கர், 30 அடி நீள பைப், அகன்ற பாத்திரம், 10 லிட்டர் பாத்திரம், 40மி.லி காலி பெட் கன்டெய்னர்கள், லேபிள், பேப்பர் பேக்கிங் பாக்ஸ்.இவற்றுக்கு செலவு ரூ.15 ஆயிரம்.

தேவைப்படும் பொருட்கள்:வேப்பிலை, துளசி, நொச்சி இலை, மஞ்சள், சாம்பிராணி, குங்குலியம், தும்பை,ஆடாதொடா, சிறியாநங்கை, சோற்று கற்றாழை. நாட்டு மருந்து கடைகளில் மற்ற மூலிகை பொருட்கள் கிடைக்கின்றன. சோற்று கற்றாழையை வீட்டில் வளர்க்கலாம்.பெட் கன்டெய்னர் பாட்டில்கள் கோவை, மும்பை உள்ளிட்ட இடங்களில் கிடைக்கின்றன.

உற்பத்தி செலவு(மாதத்துக்கு):வேப்பிலை 500 கிராம் ரூ.10, துளசி 500 கிராம் ரூ.25, நொச்சி இலை 700கிராம் ரூ.70, மஞ்சள் 100 கிராம் ரூ.10, சாம்பிராணி 150 கிராம் ரூ.40,குங்குலியம் 150 கிராம் ரூ.30, தும்பை 50 கிராம் ரூ.10, ஆடாதொடா,சிறியாநங்கை, சோற்று கற்றாழை 1 கிலோ ரூ.20, 4 லிட்டர் மூலிகை கொசுவிரட்டி மூலிகை லிக்யுட் தயாரிக்க தேவையான மூலிகை பொருட்கள் செலவு ரூ.250,பேக்கிங் மெட்டீரியல் செலவு ரூ.50, உழைப்பு கூலி 2 நபருக்கு ரூ.300 வீதம் ரூ.600, இதர செலவுகள் ரூ.100 என தினசரி 1000 ரூபாய் செலவாகும். ஒரு மாதத்தில் 25 நாள் உற்பத்திக்கு ரூ.25 ஆயிரம் தேவை.

வருவாய்:உற்பத்தி செய்யப்படும் லிக்யுட் 40 மி.லி அளவுகளில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது. ஒரு பாட்டில் ரூ.25க்கு கடைகளுக்கு விற்கப்படுகிறது.அவர்கள் ரூ.40 வரை விலை வைத்து விற்கிறார்கள். இவ்வாறு தினசரி உற்பத்தியாகும் 4 லிட்டர் லிக்யுட்டை 100 பாட்டில்களில் அடைத்து விற்பதன் மூலம் ரூ.2,500 கிடைக்கும். செலவு போக தினசரி லாபமாக ரூ.1,500 கிடைக்கும்.இதுவே மாதத்தில் 25 நாட்களில் லாபம் ரூ.37,500.

தயாரிப்பது எப்படி? வேப்பிலை, துளசி தலா 500 கிராம், நொச்சி 700 கிராம், மஞ்சள் 100 கிராம்,சாம்பிராணி, குங்குலியம் தலா 150 கிராம், தும்பை, ஆடாதொடா, சிறியாநங்கை தலா 50 கிராம் ஆகியவற்றை காயவைத்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். சோற்று கற்றாழை ஒரு கிலோ எடுத்து கசப்பு நீங்கும்வரை கழுவ வேண்டும். மூலிகை பொடிகளையும், சோற்று கற்றாழை ஜெல்லையும் 10 லிட்டர் தண்ணீரில் போட்டு, குறைந்தது 6 நாள் முதல் 10 நாள் வரை ஊற வைக்க வேண்டும்.பின்னர் அவற்றை குக்கரில் போட்டு மூடி மிதமான தீயில் வைக்க வேண்டும்(வெப்பநிலை 30 முதல் 40 டிகிரி வரை). குக்கரில் ஆவியை வெளியேற்ற விசில் போடும் இடத்தில், விசிலுக்கு பதிலாக 30 அடி நீள பைப்பை செருக வேண்டும்.குக்கரில் இருந்து வெளியேறும் ஆவி, பைப் வழியாக வரும். அந்த பைப்பை தண்ணீர் நிரப்பப்பட்ட அகன்ற பாத்திரத்தில் மூழ்கியவாறு வைக்க வேண்டும்.பைப் வழியாக வரும் ஆவி குளிர்ந்து தண்ணீரும், எண்ணெயும் கலந்தவாறு சொட்டு சொட்டாக வெளியேறும். பாத்திரத்தின் கீழ் பகுதியில் 4 லிட்டர் தண்ணீரும்,மேல் பகுதியில் 3 லிட்டர் எண்ணெயும் மிதக்கும். மேலே மிதக்கும் எண்ணெய் தான் கொசு விரட்டி மூலிகை லிக்யுட். இதற்கு மூன்றரை மணி நேரம் ஆகும்.அதற்குள் குக்கரில் உள்ள தண்ணீர் வற்றி விடும். பிறகு தீயை அணைத்து விட வேண்டும். தண்ணீரும், எண்ணெயும் கலந்த பாத்திரத்தில் உள்ள எண்ணெயை மேலோட்டமாக வடித்து எடுத்து கொள்ளலாம் அல்லது ஏர் பில்லர் மூலம் உறிஞ்சி எடுக்கலாம். எண்ணெய் வடித்தது போக பாத்திரத்தில் மிஞ்சிய 4 லிட்டர் தண்ணீரை மீண்டும் குக்கரில் ஊற்ற வேண்டும். ஏற்கனவே குக்கரில் மூலிகை பொருட்கள் மசாலா போல் தங்கியிருக்கும். இதில் தண்ணீர் கலந்தவுடன் மீண்டும் மிதமான தீயில் வேக வைத்து, ஆவி வெளியேறி, அதன் மூலம் மேலும் ஒரு லிட்டர் லிக்யுட் கிடைக்கும். இவ்வாறு ஒரு நாளில் ஒரு முறை 4 லிட்டர் கொசுவிரட்டி மூலிகை லிக்யுட் கிடைக்கும். சேகரித்த தைலத்தை பெட் கன்டெய்னர் பாட்டிலில் ஊற்றி பேக்கிங் செய்தால் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் விற்பனைக்கு தயாராகி விடும். தினசரி 4 லிட்டர் தயாரிக்க, 10 நாளுக்கு முன்பே மூலிகை பொருட்களை தண்ணீரில் ஊறப் போட வேண்டும்.
கொசுறு செய்தி: இது வியாபாரத்திற்காக அல்ல…கொசுவோடு போராடும் நமக்காக…

கற்பூரம் இயற்கையான கொசு விரட்டி.

[5] [6]படத்தில் காட்டியுள்ளபடி ரேபெல்லேண்டில் கற்பூரத்தை வைத்து பிளக் பாயிண்ட்டில் மாட்ட வேண்டும். பின்பு switch on செய்தால் கொசுக்கள் ஓடி விடும்.கொசுக்கள் அதிகம் உள்ள இடங்களில் கற்பூரத்தை போட்டு வைத்தால் கொசுக்கள் அங்கு தங்காது. முயற்சி செய்து பாருங்கள். நம்புவோம்! நம்பிக்கை தான் வாழ்க்கை!! அப்படியும் கொசு ஓடாவிட்டால் நாம் அதனிடம் தோற்று விட்டோம் என்று தோல்வியை ஒப்புக் கொள்வோம்.

Engr.Sulthan