- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

மரணித்துவிட்ட ஒருவரை அழைக்கலாமா.?

மரணித்துவிட்ட ஒருவரை நமக்காக அல்லாஹ்விடம் துஆ கேட்ட சொல்லி அழைக்கலாமா.?

ஓரிறைவன் என்று பொதுவாக சொல்லும்பொழுது உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா ஆஸ்திகர்களும் அதாவது எல்லா மதத்தவர்களும் இறைவன் ஒருவன் தான் என்பதனை ஒத்துக்கொள்வார்கள். ஒரே இறைவன்தான் உலகத்தில் இரண்டு இறைவன் இல்லை என்று யாருக்குமே மாற்று கருத்து இருக்காது. ஆனால் அந்த ஓரிறைக் கொள்கையில் எவ்வாறு மதவாதிகள் வேறுபடுகிறார்கள் என்று சொன்னால் இறைவனுக்கு அவதாரம் உண்டு என்ற அடிப்படையிலே ஒரு சாராரும் இறைவனுக்கு குமாரனுண்டு என்ற அடிப்படியிலே ஒரு சாராரும் இறைவனை நேரடியாக நாம் நெருங்க முடியாது அந்த இறைவனை நெருங்குவதற்கு குட்டி குட்டி தெய்வங்களை கடவுள்களை உருவாக்கிக் கொண்டு அவற்றை வணங்கி வருகிறார்கள்.

ஆனால் முஸ்லிம்களை பொருத்த மட்டில் இது போன்ற நம்பிக்கைகள் கிடையாது. அவதார நம்பிக்கையோ அல்லது இறைவனுக்கு குமாரன் இருக்கிறான் என்ற நம்பிக்கையோ அல்லது இறைவனை நெருங்குவதற்கு குட்டி குட்டி தெய்வங்களை சிலைகளாக படங்களாகவோ படைத்து அவற்றை வைத்துத்தான் அந்த ஓர் இறைவனை நெருங்க முடியும் என்ற நம்பிக்கையும் முஸ்லிம்களிடம் இல்லை.

ஆனால் ஓரே இறைவனை ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லக்கூடிய முஸ்லிம்கள் மத்தியில் அந்த ஓரிறைக் கொள்கைக்கு மாற்றமாக எப்படிப்பட்ட சிந்தனைகள் எப்படிப்பட்ட கருத்தோட்டங்கள் இருக்கின்றன என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொள்வது அவசியமாக இருக்கின்றது. அதாவது சிலைகள் மீதோ அல்லது அவதாரங்கள் மீதோ நம்பிக்கை இல்லாத முஸ்லிமகள் இறந்துபோன பெரியார்களை அதாவது அவ்லியாக்களை இறைவனுடைய நல்லடியார்கள் என்ற அடிப்படையிலே இறைவனை அவர்கள் நெருங்கச் செய்வார்கள் இறைவனிடம் தங்களுக்காக சிபாரிசு செய்வார்கள், எனவே அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதும் அவர்களுக்குறிய சடங்குகள் செய்வதும் இஸ்லாத்தில் உள்ளவைதான் என்ற நம்பிக்கை முஸ்லிம்களிடம் இருக்கிறது. அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வழிபாட்டை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு தர்ஹாக்களை கட்டி வைத்துக்கொண்டு சமாதி வழிபாடு செய்கின்றனர். ஆனால் அல்குர்ஆன் இறைவனுடய இறுதி வேதம் இதனை தெளிவாக மறுக்கிறது.

6:51. “நபியே! எவர்கள் மறுமையில் தங்கள் இரட்சகனிடம் ஒன்று சேர்க்கப்பட்டு விசாரணை செய்யப்படுவோம் என்று பயப்படுகிறார்களோ அவர்கள் பாவத்திலிருந்து விலகி பரிசுத்தவான்களாகுவதற்காக நீர் எச்சரிக்கை செய்யும். அவர்களுக்கு (அந்நாளில்) உதவியாளனும், பரிந்து பேசுபவனும் அந்த அல்லாஹ்வையன்றி வேறு ஒருவருமில்லை”

அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ”அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை”” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 39:3)

தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், ”இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம்(துஆ) செய்பவை” என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; ”வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசத்தமானவன். அவர்கள் இறைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்” என்று கூறும். அல்குர்ஆன் 10:18.

39:43-44. “இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குச் சிபாரிசு செய்பவை என்று எண்ணி எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? அவை எத்தகைய சக்தியுமில்லாமலும் எதையும் அறியாமலும் இருந்தாலுமா அவற்றை உங்களுக்கு சிபாரிசு செய்பவையாக எடுக்கின்றீர்கள் என நபியே! நீர் கேளும். மேலும் நபியே! நீர் சொல்லும் ‘சிபாரிசுகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் யாரும் சிபாரிசு செய்ய முடியாது). வானங்கள், பூமியின் ஆட்சி முழுவதும் அவனுக்குரியதே! (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்”.

(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக.யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். அல்குர்ஆன் 18:102-104

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களின் நிலை :

2:154. இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “(அவர்கள்) இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.

3:169. அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் – தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் – (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.

மேற்கண்ட வசனங்களில் அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் இருகிறார்கள் என்ற வாசகமும் ,அதற்கு விளக்கமாக அந்த உயிரின் தன்மையை நீங்கள் உணர முடியாது என்ற வாசகமும் கவனிக்கதக்கது. மேலும் உயிருடன் உள்ளதாக கூறப்படும் அவ்வுயிர்கள் இவ்வுலகத்திற்கு வர முடியுமா ? என்பதையும் நபி (ஸல்) விளக்கியுள்ளார்கள்.

“மேற்கண்ட இறைவசனத்தின் விளக்கத்தைப்பற்றி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் கேட்டோம் இதற்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள்

அவர்களின் உயிர்கள் பச்சை நிரப்பறவைகளின் உருவத்தில் அர்ஷில் தொங்கவிடப்பட்ட கூண்டில் உள்ளது. அது சொர்க்கத்தில் தான் விரும்பிய இடமெல்லாம் சென்று பின் அக்கூண்டில் வந்து தஞ்சமடைந்துவிடும் அல்லாஹ் அவர்கள் முன்னிலையில் தோன்றி ,உங்களுக்கு ஏதாவது விருப்பம் உண்டா? என்று கேட்ப்பான். எங்களுக்கு என்ன தேவை இருக்கிறது ? நாங்கள் சொர்க்கத்தில் விரும்பிய இடமெல்லாம் சுற்றுகிறோம் எனக் கூறும். இப்படி மூன்றுமுறை நடக்கும். நம்மை (அல்லாஹ் விடமாட்டன்) என்று தெரிந்து கொண்ட பிறகு எங்கள் உயிர்களை எங்கள் உடல்களில் செலுத்தி ,இன்னொரு முறை உன் வழியில் கொள்ளப்பட ஏற்பாடு செய் என்று கூறுவார்கள். அல்லாஹ் இவர்களுக்கு வேறு எந்த தேவையுமில்லை என்று விட்டு விடுவான்.” அறிவிப்பாளர் : மஸ்ரூக் (ரலி) நூல்கள்: முஸ்லீம் ,அபூதாவுத்,திர்மிதி

உயிருடன் இருக்கிறார்கள் என்றால் என்ன பொருள் என்பதற்கு அழகான விளக்கத்தை அல்லாஹ்வின் தூதரே தந்துவிட்டார்கள். அவர்கள் உயிருடன் இவ்வுலகத்தில் இல்லை. சொர்க்கத்தில் தான் இருகிறார்கள். மார்க்கபோரில் ஈடுபட்டு . மரணமானவர்கள் கூட  இவ்வுலகத்திற்கு வர இயலாது என்பதை அறியலாம்.

10:31. “உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.

10:32. உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?

இறைவனுடைய அடியார்களை தங்களுக்கு இறைவனிடம் பரிந்துரை செய்யக்கூடியவர்களாக அல்லாஹ்விடம் நெருங்கச்செய்வார்கள் என்ற அடிப்படையில் இறந்து போனவர்களை அவ்லியாக்களாக எடுத்துக்கொண்டு அவர்களுக்கு சடங்கு சம்பிரதாயங்கள் செய்வது அவர்களுடைய அடக்கஸ்தலங்களுக்குச் சென்று எங்களுக்கு குழந்தை பேற்றைத் தாருங்கள், நோய்களை குணமாக்குங்கள் என்று வேண்டுவது அல்லது அவர்களை அல்லாஹ்விடம் எங்களுக்கு கேட்டுப் பெற்றுத்தாருங்கள் எங்களுக்காக முறையிடுங்கள் அல்லது அவர்களுடைய பொருட்டால் அல்லாஹ் எங்களுக்கு அதனை நிரைவேற்றித்தா என்று கேட்பது, கப்ருகளை சுற்றி வலம் வருவது, அங்குள்ள படிக்கட்டுகளை முத்தமிடுவது இன்னும் கூடு, கொடியேற்றம், சந்தனம் பூசுதல், மேளதாளமங்கள் இன்னும் ஏராளமான இணைவைப்பு காரியங்கள் செய்து வழிகேட்டின்பால் சென்று மன்னிக்கப்படாத பாவத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்வோமாகா!

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்

நன்றி: ரீட்இஸ்லாம்.நெட்