- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

ஐ.பி.எல்.: ஒரு விளையாட்டே அல்ல!

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அரசு பற்றியோ காங்கிரஸ் பற்றியோ வந்திருக்கும் கருத்துக் கணிப்புகள் அத்தனை சிறப்பாக இல்லை. எதிர்காலத்தில் இது வெற்றிக்கோ தோல்விக்கோ இட்டுச் செல்லும் என்று சொல்ல எனக்குத் தயக்கமாக இருக்கிறது.

மக்களவைக்கான பொதுத் தேர்தல் முன்னதாகவே வரக்கூடும். கூட்டணி பற்றிய ஊகங்களைக் கூறுவதற்கு இன்னமும் காலம் கனியவில்லை. மூன்றாண்டு ஆட்சி நிறைவை முன்னிட்டு பிரதமர் அளித்த இரவு விருந்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் பங்கேற்றிருப்பது, எதிர்கால அரசியல் காட்சிகளை மேலும் குழப்பமாக்கியிருக்கிறது.

காங்கிரஸýக்கு மாற்றாக எந்தக் கட்சியும் இப்போது இல்லை என்று பல அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இது தவறு. ஒரு பொதுத் தேர்தலில் எதிர்மறை வாக்குகள் அதிகம் விழுமாயின், அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகலாம். அதற்காக எதிர்க்கட்சியின் திறனை உணர்ந்துதான் மக்கள் வாக்களித்தனர் என்பதல்ல பொருள். இவ்விதமான காட்சியினை நாம் ஏற்கெனவே கண்டிருக்கிறோம்.

மும்பை மாநகராட்சித் தேர்தலில் சிவசேனை – பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வென்றிருக்கக்கூடாது. தில்லியிலும் அவ்வாறே. இந்த இரண்டு இடங்களிலும் ஆட்சிக்கு எதிரான மனநிலை காங்கிரஸýக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. ஒவ்வொரு தேர்தலும் தோற்றவருக்கும் வெற்றி பெறுபவருக்கும் ஒரு செய்தியைத் தருகிறது.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக எவரை நிறுத்தலாம் என்பது தொடர்பான தீவிர பேச்சுவார்த்தைகள் கடந்த வாரம் சூடுபிடித்தன. “காத்திருப்போம் – கவனிப்போம்’ என்ற கொள்கையை காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸýக்கு ஒரு சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது. பரிசீலிக்கப்படும் ஒவ்வொரு பெயரும் கேள்விக்குறியோடுதான் முடிகிறது.

இந்த கண்ணாமூச்சி விளையாட்டு இன்னும் எத்தனை காலம்தான் தொடரும் என்று வியப்படைகிறேன். இதனிடையே, மக்களவையின் முன்னாள் தலைவர் பி.ஏ. சங்மா பெயரை அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதாவும் பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக்கும் முன்மொழிந்துள்ளனர். இதற்கு ஓரளவு ஆதரவே இருக்கும். காங்கிரஸ் ஒரு முடிவெடுக்கும் வரை, இந்த யூக விளையாட்டுகள் தொடரும்.

குடியரசுத் தலைவர் பதவிக்கு பிரணாப் முகர்ஜி அதிக அளவில் பேசப்படுகிறார். எதிர்காலத்துக்கான பெரும் மாற்றங்களை தொடர்புபடுத்துவதாக ஒவ்வொரு நகர்வும் இருக்கும்.

தமிழகத்தில் தி.மு.க.வின் கதியை நாம் பார்த்தோம். தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அதிரடி சோதனைகள் நடைபெற்றன. பலர் கைது செய்யப்பட்டனர்.

700 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டன. இதனை தி.மு.க. “பழிவாங்கும் அரசியல்” என்கிறது. ஆனால், அவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் உண்மை என்ன என்பது நன்றாகத் தெரியும்.

எந்த நிபந்தனையுமின்றி மத்திய அரசை தொடர்ந்து தி.மு.க. ஆதரிக்கும். அநேகமாக, பகுஜன் சமாஜ கட்சியின் தலைவர் மாயாவதியும் இதே பாதையைப் பின்பற்றுவார் எனக் கருதுகிறேன்.

ஏனெனில், மாயாவதி தனது ஆட்சிக் காலத்தில் “அதிகமாகச்’ செய்தவற்றுக்கு எதிராக அகிலேஷ் யாதவ் நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் மாயாவதி மேற்கண்ட நிலைப்பாட்டையே மேற்கொள்வார்.

நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக நீதிமன்றங்கள் கடும் நிலைப்பாடுகளை மேற்கொண்டுள்ளன. ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் காலத்தில் வாங்கப்பட்ட சொத்துகள் குறித்து விசாரணை நடந்து வருகின்றன.

அதே நிலைமைதான் கர்நாடகத்தில் பி.எஸ். எடியூரப்பாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும். தி.மு.க.வோ அல்லது பகுஜன் சமாஜ கட்சியோ நீதிமன்றத்தை நாடினால், இதே நிலைதான் ஏற்படும் என நான் கருதுகிறேன்.

ஜெகன்மோகன் ரெட்டி, “ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்’ எனும் மாநிலக் கட்சியை தொடங்கியிருக்கிறார். இதே பாணியை கர்நாடகத்தில் எடியூரப்பா பின்பற்றக்கூடும். இருவருமே சி.பி.ஐ.யால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தேர்தலில் ஒரு சில தொகுதிகளை அவர்கள் வெல்லக்கூடும். அவர்கள் கையில் வைத்திருக்கும் தொகுதி எண்ணிக்கை மத்தியிலும் மாநிலத்திலும் ஓரளவு செல்வாக்கு செலுத்தும்.

தென்னிந்தியாவின் 2 மாநிலங்கள் ஜார்க்கண்ட் வழியில் செல்வது துயரமானது. இந்த மாநிலங்களைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள காங்கிரஸாலோ பாரதிய ஜனதா கட்சியாலோ முடியவில்லை என்பதுதான் உண்மை.

நல்லாட்சி இல்லாத நெருக்கடியில் நாம் உள்ளோம். ஐரோப்பா கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. கேம்ப் டேவிட்டில் ஜி 8 நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடந்தது. அந்தத் தலைவர்களும் இந்தியாவில் நாமும் பொருளாதாரம் சீராக இருப்பதைப் பேண போராட வேண்டியுள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நமது ஊடகங்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் சம்பந்தப்பட்ட சில அபத்தமான நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. இது கண்டு நான் அதிர்ச்சி அடைகிறேன். அசலான அர்த்தத்தில், ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் ஒரு விளையாட்டே அல்ல. மக்களைக் கவர்ந்து பணம் சம்பாதிப்பதற்கான ஒரு விளையாட்டு வடிவம்தான் ஐ.பி.எல். இப்போது நடந்துவரும் இந்த விளையாட்டு வெற்றிகரமாக உள்ளது. அதன் அனைத்துப் போட்டிகளுக்கும் கூட்டம் சேர்கிறது.

சில சம்பவங்களைப் பெரிதுபடுத்தி இவ்விதமான விளையாட்டு வடிவத்தை நாம் சிதைத்து விடக் கூடாது. ஆனால், இதனை முழுமையான வர்த்தக நடவடிக்கையாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.

ஐ.பி.எல்.-ன் பிரச்னை என்னவெனில், கிரிக்கெட், பாலிவுட், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் கலந்த ஒரு கலவையாக “மோலோடோவ் காக்டைல்’ போல இருப்பதுதான். இந்த நான்கு வித மனிதர்களின் கலவை, முரண்பாடுகளில் சென்று முடிகிறது. ஒவ்வொரு சிறிய சம்பவமும் பெரும் நெருக்கடிகளாக வெடிக்கின்றன.

லலித் மோடியின் மூளையில் உதித்த இந்த “விளையாட்டுக்கான கரு’, அது தோன்றியபோதே கடும் எதிர்ப்புக்கு ஆளானது. ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் அவர் பிரிட்டனில் போய் உட்கார்ந்துகொண்டுவிட்டார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டை முழுமையான வர்த்தக நடவடிக்கையாக மாற்றும் பொறுப்பையும் பிரச்னைகளைச் சமாளிக்கும் பொறுப்பையும் தகுதியும் திறமையும் உடைய அணி உரிமையாளர்களிடமே விட்டு விடுவதுதான் தீர்வாக இருக்கும்.

கிரிக்கெட்டில் பல்வேறு கட்சிகளின் அரசியல்வாதிகள் பங்கெடுத்து வருகின்றனர். அவர்களுக்கு நாட்டையோ மாநிலத்தையோ கவனிப்பது பகுதிநேர வேலை போல் ஆகிவிட்டது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐ.பி.எல். குறித்து விசாரிக்குமாறு அமலாக்கத் துறைக்கும் வருமான வரித் துறைக்கும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் உத்தரவிடுகிறார். அத்துடன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் கேள்விகளையும் அனுமதிக்கிறார்.

இவற்றுக்கெல்லாம் என்ன பொருள்? ஐ.பி.எல்.-ன் தலைவர் பதவியில் இருப்பவர் ராஜீவ் சுக்லா. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர்களாக மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா, சி.பி. ஜோஷி, விலாஸ் ராவ் தேஷ்முக் ஆகியோர் உள்ளனர்.

ஷாரூக்கானை 5 ஆண்டுகளுக்கு வான்கடே ஸ்டேடியத்துக்குள் நுழையக்கூடாது என்று மும்பை கிரிக்கெட் அசோஸியேஷனின் தலைவர் விலாஸ் ராவ் தேஷ்முக் தடை விதிக்கிறார். இந்த ஆணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திரும்பப் பெறுமா?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மத்திய அரசு பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில், நாம் இதுவரை பெற்றிருந்தது ஓர் அரசையா அல்லது பல்வேறுபட்ட நலன்களின் தொகுப்பையா? என்பதைக் காண வேண்டும்.

கவிழ்ந்துவிடாமல் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வது மற்றும் நல்லாட்சி – இவை தொடர்பான விவகாரங்கள் தீர்க்கப்பட வேண்டும்.

நன்றி:  அருண் நேரு  -தினமணி 26-05-2012