- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

நன்னாரி ( மூலிகை ) வேர்

nanaari [1]நன்னாரி (Hemidesmus indicus ஆங்கிலத்தில் பொதுப்பெயர்: Indian Sarsaparilla) என்னும் தென்னிந்தியாவில் வளரும் நிலைத்திணை (தாவரம்) படரும் ஒரு கொடி இனம் ஆகும்.

இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது். இக் கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டது. இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும்.

இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா நிறம்) இருக்கும். இச்செடி ஒரு மருத்துவ மூலிகையாகும்.

நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் நீருணவு செய்வர். நன்னாரி சர்பத் என்று கூறப்படும். நன்னாரி சாறு இந்திய மருத்துவத்திலும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பெயர் அனாதமூலா (Anantmula.).

நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படும் ஒரு பொருளாக கருதப்படுகின்றது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு, மேல் பூச்சான தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படும் என்று கருதப்படுகின்றது.

மருத்துவ குணங்கள்:

நன்றி: விக்கிபீடியா.

நன்னாரி — கோடை வறட்சியை சமாளிக்க இயற்கை மருந்து

உடலுக்கு உடனடியாக சக்தியளிக்க கூடிய இயற்கை ஸ்டீராய்டுகள் நன்னாரியில் நிறைந்து உள்ளதால் வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்கள் நன்னாரி டீயை அதிகம் விரும்பி பருகுகிறார்கள். உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் வெப்பம் தணிவதுடன் உடலுக்கு உடனடி சக்தியளிப்பதால் வீரர்களால் அதிகம் நன்னாரி பயன்படுத்தப்படுகிறது.

கோடையை குளிர்ச்சியாக கொண்டாட நன்னாரி பானம், நன்னாரி சர்பத் பருகி உடல் நலத்தை காத்து கொள்வோம்.

நன்னாரி பால்:
1. நன்னாரி – 200 கிராம்

2. சுக்கு – 50 கிராம்

3. ஏலக்காய் – 25 கிராம்.

செய்முறை:- நன்னாரியை இடித்து நடுவில் உள்ள நரம்பை நீக்கி கொள்ள வேண்டும். சுக்கின் மேல் தோலை நீக்கி கொள்ள வேண்டும். பின்பு எல்லா பொருட்களையும் மிக்சியில் இட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

தேவைப்படும் பொழுது 2 தேக்கரண்டி பொடியை 100 மி.லி நீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அத்துடன் 100 மி.லி பால், 1 தேக்கரண்டி பனங்கற்கண்டு கலந்து பருகி வரலாம். காபி, டீ, அதிகம் பருகுபவர்கள் அதை தவிர்த்து இந்த நன்னாரி பாலை தினம் இரு வேளை பருகி வரலாம். நீரிழிவு நோயாளிகள் ஆவாரம்பூ (காய்ந்தது) 100 கிராம் கலந்து அரைத்து பயன்படுத்தினால் உடல் குளிர்ச்சி உண்டாகும். உடல் கழிவுகள் வெளியேறும். உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். தோல் நோயால் துன்பப்படுபவர்கள் தினம் இதை பருக விரைவில் நல்ல குணம் தெரியும்.

நன்னாரி சர்பத்:

நன்னாரி – 200 கிராம்.

தண்ணீர் – ஒரு லிட்டர்.

சர்க்கரை – 1 கிலோ.

எலுமிச்சம்பழம் – 6 (சாறு எடுத்து கொள்ளவும்).

செய்முறை:

1. நன்னாரி வேரை நன்கு இடித்து வைத்துக் கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில் நீரை நன்கு கொதிக்க வைத்து இடித்து வைத்துள்ள நன்னாரியை அதில் இட்டு, அடுப்பை அணைத்து இறுக்கமாக மூடி எட்டு மணி நேரம் வைத்து விடவும்.

3. எட்டு மணி நேரம் கழித்து நீரை வடிகட்டி அத்துடன் சர்க்கரை கலந்து நன்கு கம்பி பதம் வரும் வரை காய்ச்சி, ஆற வைத்து கொள்ளவும்.

4. ஆறிய பின் எலுமிச்சை சாறு கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி கொள்ளவும்.

5. எலுமிச்சம் சாறு தேவைப்பட்டால் சேர்க்கலாம். நன்னாரி மட்டுமே கூட நல்ல சுவை மற்றும் மனம் நிறைந்து இருக்கும்.

தேவைப்படும் பொழுது குளிர்ந்த நீரில் 2 தேக்கரண்டி சர்பத் கலந்து பருகி வந்தால், வியர்வையால் உண்டாகும் நம் உடலின் நீர் இழப்பை ஈடுகட்டுவதுடன், நம் உடல் கழிவுகளும் சிறந்த முறையில் வெளியேறி உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாக்கும். நன்னாரி வேர் மருந்து கடைகளில் கிடைக்கும்.