- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

கடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி!

கடற்பாசி எண்ணெய் மூலம் பெரிய அளவில் மின்சாரம் உற்பத்தி செய்ய அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் ஆய்வுகள் தொடங்கியுள்ளன. உலகிலேயே பெரிய கடற்கரை பரப்பை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிலும் 3வது பெரிய கடற்கரையை கொண்ட மாநிலமாக தமிழகம் இருக்கிறது.  தமிழகத்தில் மின்பற்றாக்குறை நிலவி வருவதால், கடற்பாசி எண்ணெய் மூலம் மின்உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், வல்லுனர்களும் வலியுறுத்துகின்றனர்.

காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போல, கடற்பாசி சார்ந்த மின் திட்டத்துக்கும், அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என, வேளாண் விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.”கடற்பாசியிலிருந்து தயாரிக்கும் எண்ணெய் மற்றும் மின்சாரம்’ என்ற தலைப்பில், தேசிய அளவிலான கருத்தரங்கம், சென்னையில் நடந்தது.

இதில்,வேதியியல் தொழில் அமைப்புகளின் சங்க செயலர், வெங்கட்ராமன் பேசியதாவது:பரந்த கடற்பரப்பையும், தகுந்த தட்பவெப்ப நிலையையும், நம் நாடு கொண்டுள்ளதால், இங்கு கடற்பாசியை பெருமளவில் உற்பத்தி செய்ய முடியும். கிராமப்புறங்களில், 100 ஏக்கர் பரப்பளவிற்கு, கடற்பாசியை உற்பத்தி செய்ய, திட்டம் வகுக்க வேண்டும்.கடற்பாசி, நல்ல தண்ணீர், உப்பு தண்ணீர், மாசு தண்ணீரிலும் விளையும். உற்பத்தி செய்யப்படும் கடற்பாசியிலிருந்து, எண்ணெய் மற்றும் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை, செயல்படுத்த வேண்டும்.

2030ம் ஆண்டில் மின்துறையில் கடற்பாசி பங்கு அதிகமாக இருக்கும். நிலக்கரி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட வளங்களின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு மாறாக மின்சார தேவை பல மடங்கு அதிகரித்து வரும். கடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய கடல்கரை பகுதியும், வெப்பமுள்ள பகுதியும் தேவை. இதற்கான வாய்ப்பு இந்தியாவில் அதிகமாக உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் அதிகம் வாய்ப்பு இருக்கிறது.

கடற்பாசியின் நன்மை கருதி அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் பெரிய அளவில் ஆராய்ச்சி மையங்கள் அமைத்து தொடர் ஆய்வுகள் நடந்து வருகிறது. இதற்காக அமெரிக்கா 2013,14 ஆண்டுக்கு மட்டுமே 20 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது. கடல் அருகே உள்ள நில பரப்பளவில் கடல்பாசி மையம் அமைக்கலாம். குறிப்பாக 100 ஏக்கரில் 6 மாதத்திற்கு வளர்க்கும்போது, அதன் மூலம் கிடைக்கும் கடற்பாசி எண்ணெய் மூலம் 10 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும்.

இதற்கான மின்உற்பத்தி நிலையங்களை அருகிலேயே அமைக்கலாம். சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு வராது. தொடர்ந்து மின்உற்பத்தி செய்ய முடியும். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலம் அருகே உள்ள வீடுகள், தொழிற்சாலைகள், விவசாயத்திற்கு மின்சாரம் விநியோகம் செய்ய முடியும். 1 மெகா வாட் மின்உற்பத்திக்கு 6 டன் கடற்பாசி போதுமானது. இதுதவிர, கழிவு நீரை சுத்தப்படுத்தலாம்.

மீத்தேன் வாயுயை சமையலுக்கு பயன்படுத்தலாம், இயற்கை மருத்துவத்திற்கும் பயன்படுத்தலாம். இப்படி பல சிறப்புகள் உள்ளன. ஆனால், இதுவரையில் பெரிய அளவில் ஒரு ஆய்வு கூடம் இந்தியாவில் இல்லை என்பதுதான் வருத்தமான ஒன்று. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

50% எண்ணெய் கிடைக்கும்  

எள், நிலக்கடலை உள்ளிட்டவை மூலம் எண்ணெய் தயாரிக்கும் போது, குறைந்த அளவே எண்ணெய் கிடைக்கும். ஆனால், கடற்பாசியை எடுத்து நன்றாக காயவைத்து அரைத்தால், 50 சதவீதம் அளவுக்கு எண்ணெய் கிடைக்கும். மேலும், அருகிலேயே மின்சார நிலையங்கள் அமைத்து விநியோகம் செய்வதால், மின்இழப்பையும் தடுக்க முடியும்.

20%புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சதவீதம் வேண்டும்

‘‘நாட்டில் தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் அதிகரித்து வருவதால் மின்தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அனல் மற்றும் அணு மின்நிலைங்களில் செய்யப்படும் மின்உற்பத்தியில் மாசுகளும், ஆபத்துகளும் அதிகமாக இருக்கிறது. எனவே பருவநிலைக்கான தேசிய திட்டத்தில் 2020ம் ஆண்டுக்குள் மொத்த மின்உற்பத்தியில் 20 சதவீதம் புதுப்பிக்க தக்க எரிசக்தி இடம் பெற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையை அடைய ஆண்டுதோறும் 8,000 மெகா வாட் அளவுக்கு மின்உற்பத்தி பெறும் வகையில் மின்நிலையங்கள் அமைக்க வேண்டும். அதாவது, பயோ காஸ், சூரிய ஓளி, காற்றாலை மூலம் மின்உற்பத்தி செய்ய வேண்டும். அந்த வரிசையில் தற்போது கடற்பாசி மூலம் மின்உற்பத்தி செய்யலாம்’’ என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சோலார் போல கடற்பாசி கொள்கை

இந்திய காற்றாலை மின்உற்பத்தி சங்க தலைவர் கஸ்தூரி ரங்கன் கூறுகையில், ”நமது அன்றாட வாழ்க்கையில் மின்சாரத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. எனவே, அனல் மற்றும் அணு மின்நிலையங்களை மட்டுமே நம்பி இருக்காமல், புதுப்பிக்கத்தக்க மின்சாரம் அதிகரிக்க போதுமான கொள்கை வகுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் காற்றாலைகள் 7,000 மெகா வாட் அளவுக்கு நிறுவப்பட்டுள்ளது. இதேபோல், சூரிய ஒளி மற்றும் கடற்பாசி மின்உற்பத்திகளில் ஆர்வம் காட்ட வேண்டும். கடற்பாசி மின்உற்பத்திக்கு தொடர்ந்து ஆய்வு நடத்தி ஊக்குவிக்க வேண்டும். வரும் காலங்களில் நிலக்கரி, டீசல் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது” என்றார்.