- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

பேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள்! ! ! !

perry [1]ஆசியா மற்றும் ஐரோப்பா பகுதிகளை தாயகமாகக் கொண்டவை பேரிக்காய்கள். ‘ரோசாசியே’ தாவர குடும்பத்தை சேர்ந்த பேரிக்காயின் அறிவியல் பெயர் ‘பைரஸ் கமியூனிஸ்’. பச்சை, சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங்களிலும், உருண்டை, மணி வடிவங்களிலும் பேரிக்காய்கள் விளைகின்றன. ஆசிய பகுதிகளில் ஆகஸ்ட் மாதத்தில் பேரிக்காய் பழங்கள் அறுவடை செய்யப்படுகின்றன.

பேரிக்காய் ஆப்பிள் வகையைச் சார்ந்தது. எனினும் ஆப்பிளில் இல்லாத விட்டமின் ஏ இப்பழத்தில் உள்ளது. ஆப்பிளை விட இது விலை மலிவு என்றாலும் ஆப்பிளைவிட பல மருத்துவக்குணங்கள் உடையது.

சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.

வளரும் குழந்தைகளுக்கு:

வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது. பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.

இதயப் படபடப்பு நீங்க:

இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு:

கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து.

தாய்ப்பால் சுரக்க:

பிறந்த இளம் குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்த ஊட்டச் சத்து மிகுந்த உணவாகும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். குழந்தை பிறந்தது முதல் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். ஆனால் தற்போது தாய்ப்பால் கொடுப்பது குறைந்து வருகிறது. சில பெண்களுக்கு தாய்ப்பால் சரியாக சுரப்பதில்லை. இவர்கள் காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

வாய்ப்புண் குணமாக:

வயிற்றில் புண் இருந்தால்தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.

வயிற்றுப் போக்கு:

உண்ணும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும். மேலும் சிலருக்கு பாக்டீரியாக்களால் வயிற்றுப் போக்கு உண்டாகும். தினமும் பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும்.

சிறுநீரக கல்லடைப்பு நீங்க:

இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.

* உடல் சூட்டைத் தணிக்கும்.

* கண்கள் ஒளிபெறும்.

* நரம்புகள் புத்துணர்வடையும்.

* தோலில் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தும்.

* குடல், இரைப்பை இவைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலை வலுவாக்கும்.

பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் உண்டு அதன் மருத்துவப் பயன்களை முழுமையாகப் பெறுவோம்.