- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

பெண்களை அதிகம் தாக்கும் எலும்பு புரை நோய்கள்!

 Bone-Disease-225x300 [1]உலகில் 80 சதவீதம் பேர், வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் கீழ் முதுகு வலியால் அவதிப்படுகிறோம். முதுகுத் தண்டு வடம், ஒன்றன் மீது ஒன்று அமைந்த வகையிலான சிறிய முள்ளெலும்புகளால் ஆனது. இந்த எலும்புகளுக்கிடையே உள்ள நீரும், வழுவழுப்பான சதையும், எலும்புகள் ஒன்றோடு ஒன்று தேயாமல் தடுக்கின்றன. இவை, முதுகு தண்டு வடத்துடன் ஒட்டிய சதை மற்றும் ஜவ்வுகளின் ஆதரவுடன் செயல்படுகின்றன.

நாம் நிமிர்ந்து நிற்கும் போது, தண்டுவடத்தின் கீழ் பகுதி மேல் பகுதியில் உள்ள எடையை தாங்கி கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. புவியீர்ப்பு விசையின் காரணமாகவும், முதுகு கீழ் அழுத்தம் ஏற்படுகிறது. சிலருக்கு, கீழ் பகுதி எலும்புகள் சரியான வளர்ச்சி இன்றியும் இருக்கும். இந்த முள்ளெலும்புகளில் இடையிலிருந்து வெளிவரும் சில நரம்புகள் தான், கை, கால்களுக்கு செல்கின்றன.

இந்த முள்ளெலும்புகளில் தேய்மானம் அல்லது சரியான முறையில் ஒன்றன் பின் ஒன்று பதியாமல் இருத்தல் ஆகிய காரணங்களால், இவற்றின் இடையே செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, முதுகு வலி ஏற்படுகிறது. சிறு வயது குழந்தைகள், பெரும்பாலும் வலியால் அவதிப்படுவதில்லை. இடைநிலைப் பள்ளி குழந்தைகள், புத்தகச் சுமை காரணமாக, முதுகு மற்றும் தோள் வலியால் அவதிப்படுகின்றனர். முதுகு அமைப்பிலேயே பாதிப்பு ஏற்படுவதால் அவதிப்படும் குழந்தைகள் மிகக்குறைவே.

புத்தகம், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றுடன் பையை தோளில் மாட்டிக்கொள்ளும் போது, உடலின் புவியீர்ப்பு மையத்தில் மாறுபாடு ஏற்பட்டு, சதை மற்றும் தசைகளில் வலி ஏற்படுகிறது. வகுப்பு நேரத்தில் பெஞ்சும் நல்ல முறையில் வடிவமைக்கப்படாமல் இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்ற உயரத்தில் அமையாமல், முதுகு பகுதிக்கு சரியான சாய் மானம் இல்லாமல் இருக்கும். வீட்டுப் பாடத்தை தரையில் அமர்ந்து எழுதுவது, முதுகை வளைத்தப்படி சோபாவில் அமர்ந்து எழுதுவது ஆகியவையும் முதுகு வலியை அதிகரிக்க செய்யும்.

பெண்கள் அதிக பாதிப்பு அறிகுறிகள்……..

முதுகு வலியின் முதல் அறிகுறிக்கு அதிக பரிசோதனை தேவைப்படாது. ஆறு மாதங்களுக்கு வலி தொடர்ந்தாலோ, கால் தசைகள் வலுவிழந்தாலோ, செயலற்று, போகும் போதோ சிறுநீர், மலம் வெளியேறுவதில் கட்டுப்பாடு குறைந்தாலோ, சிறுநீருடன் ரத்தம் சேர்ந்து வெளியேறினாலோ, தலைவலியுடன் வாந்தியும், வந்தாலோ அவசியம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

துவக்க நிலையில் எக்ஸ்-ரே பரிசோதனை எடுக்கப்படும். என்ன பிரச்சினை உள்ளதென்பதை எக்ஸ்-ரே மூலம் கண்டறியலாம். சில நேரங்களில் ரத்தப் பரிசோதனையும் செய்ய வேண்டி வரும் பெரும்பாலான முதுகுவலிகள், சில நாட்களிலேயே மறைந்து விடும். எனவே, வலி ஏற்பட்ட உடனேயே மருத்துவரிடம் செல் வதை விட, சில நாட்கள் பொறுத்திருந்து வலி நீடித்தால் மருத்துவரிடம் காண்பிக்கலாம்.

நீங்கள் அமரும் அல்லது நிற்கும் நிலை, காலணி, அமரும் நாற்காலி அல்லது சோபா ஆகியவற்றில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பது குறித்தும் ஆராய வேண்டும். உன்னிப்பாக கவனித்து செயல்பட்டால், பெரும்பாலான முதுகு வலியை தவிர்த்து விடலாம்.

போதுமான அளவு ஓய்வில் இருத்தல், வலி குறைக்கும் பட்டைகள் கட்டிக் கொள்ளுதல், மென்மையான படுக்கையில் படுக்காமல் தரையில் படுத்தல், ஆகியவை மேற்கொண்டால், வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். உடல் எடையை குறைப்பதிலும் முனைப்பு காட்ட வேண்டும். உடல் எடையுடன், `பி.எம்.ஐ.’ அளவு சரியாக ஒத்து போகிறது என்பதையும் அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.

பரவலாக நாற்பது வயதிற்கு மேல் முதுகு வலி, கழுத்து வலி ஏற்படுதல் சாதாரணம். இதற்கு காரணம் எலும்பு தேய்மானம் என் சொல்வார்கள். நாம் அனைவரும் அறிந்தது போலே எலும்புக்கு வலு சேர்ப்பது கால்சியம் என்னும் தாதுச்சத்து தான். உடலில் கால்சியம் அளவு குறையும் போது, எலும்புகள் வலுவிழந்து தேய்மானம் ஏற்படும்.

கால்சியம் எலும்புகளை பலப்படுத்தும் என்று பெரும்பாலான மக்கள் அறிவர். ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புப்புரை என்னும் நோயாகும். இந்த நோயானது எலும்பை உருக்கி எலும்பு முறிவுக்கு இட்டு செல்வதோடு, கழுத்து மற்றும் முதுகு வலியை ஏற்படுத்தி காலப்போக்கில் உயரம் 6 அங்குலம் வரையில் குறைய வழி செய்துவிடும்.

இந்த நோயில் எளிதில் ஏற்படும் எலும்பு முறிவின் ஆபத்து இருப்பதனால், இது குறிப்பாக ஆயுள் எதிர்பார்ப்பு மற்றும் வாழ்க்கை முறையை பாதிக்கலாம். ஆயினும் இத்தகைய நோயை தடுக்க டஜன் கணக்கில் வழிகள் உள்ளன. ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் ஆஸ்டியோ போரோசிஸ் வரக்கூடும்.

ஆயினும் இது பெண்களுக்கு தான் அதிக அளவில் வருகிறது. குறிப்பாக இறுதி மாதவிடாய்/மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்களிடையே அதிகளவில் காணப்படுகிறது. அமெரிக்காவில் ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களில் ஐந்தில் ஒரு பெண்ணுக்கு இந்நோய் தாக்கம் இருக்கிறது.

எனவே இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது மிக அவசியமான ஒன்று. ஏனெனில் இந்நோய் இருப்பதாக உணரும் முன்னரே பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு விடும். இப்போது அந்த எலும்புப்புரை/ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கான சில எளிய வழிகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி, எலும்புப்புரை அல்லது ஆஸ்டியோபோரோசிஸ் நோயிலிருந்து விடுபடுங்கள்.

உடற்பயிற்சி :

ஆஸ்டியோபோரோசிஸ் நோயை தடுக்க உதவும் விஷயங்களில் உடற்பயிற்சி மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்நோயால் பாதிக்கப்பட்டால், வாரத்தில் ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிலும் வாரம் இரண்டு மூன்று முறையாவது ஏரோபிக் மற்றும் வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை 30 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

உப்பு உட்கொள்ளுதலை குறைக்க வேண்டும் :

உப்பை அதிகம் உட்கொள்ளும் போது, அது சிறுநீர் மற்றும் வியர்வையின் மூலம் வெளியேற்றும் கால்சியத்தின் அளவை அதிகரிக்கிறது. அதிலும் ஏற்கனவே கால்சியம் குறைபாடு இருந்தால், அது மிகவும் ஆபத்தாய் முடியும் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவருக்கு சிறுநீரில் கால்சியம் அதிகளவில் வெளியேறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

காப்ஃபைன் உட்கொள்ளுதலை குறைக்க வேண்டும் :

உடலில் கால்சியம் உறிஞ்சுதலை, காப்ஃபைன் தலையிட்டு கெடுத்துவிடும். ஆகவே காப்ஃபைன் இருக்கும் சோடா, காபி மற்றும் சாக்லெட் போன்றவற்றை அளவாக உட்கொள்ள வேண்டும்.

புகைப்பிடித்தல் கூடாது :

புகைப்பிடித்தல் எலும்பு முறிவுகள் குணமடைவதை தடை செய்கின்றது மற்றும் உடலில் மீண்டும் புதிய எலும்பு வளர செய்யும் திறனையும் குலைக்கின்றது. ஆகவே புகைப்பிடித்தலை நிறுத்தினால், எலும்புகள் வலிமையடைவதோடு, முறிவிலிருந்தும் விரைவில் குணமடையலாம்.

கால்சியம் அதிகம் உட்கொள்ளுதல் :

தேசிய சுகாதார நிறுவனங்கள் பரிந்துரையின்படி, பெரியவர்களுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 1000 மில்லிகிராம் வரை உடலில் சேர வேண்டும். இந்த பரிந்துரை 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும், 70 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கும், 1200 மில்லி கிராம் இருக்க வேண்டும் என்றும் சொல்கின்றது

வைட்டமின் டி அதிகப்படுத்துதல் :

வைட்டமின் `டி’ உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவியாக உள்ளது. குறிப்பாக இத்தகைய வைட்டமின் `டி’ சத்தை சூரிய வெளிச்சமானது அதிகம் உற்பத்தி செய்கிறது. மேலும் பால், ஆரஞ்சு மற்றும் காலை உணவு தானியங்களில் வைட்டமின் `டி’ சத்தானது செறிந்துள்ளது.

சோடா உட்கொள்ளுதலை கவனித்தல் :

2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சோடா, கோலா ஆகியவை எலும்புகளை உருக்குவது தெரிய வந்துள்ளது. இது முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், சோடா எலும்பை வலுவிழக்க செய்கிறது மற்றும் சோடாவை அதிகம் அருந்துபவர்கள் கால்சியம் நிறைந்துள்ள பாலை அவ்வளவாக உட்கொள்ளமாட்டார்கள் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

உட்கொள்ளும் மருந்துகளில் கவனம் :

சில மருந்துகள் ஆஸ்டியோபோரோசிஸ் வருவதற்கான வாய்ப்புகளை அதிகபடுத்துகின்றன. அதில் அழற்சி எதிர்ப்பு கார்ட்டிகோஸ் டீராய்டுகள் எனப்படும் ப்ரிட்னிசோன் முக்கியமான காரணி ஆகும்.

மது உட்கொள்ளுதலை கட்டுப்படுத்தல் :

மது அதிகம் அருந்துவதால்  கால்சியம் உறிஞ்சுதலை குறைத்து, உடலில் கால்சியம் அளவுகளை சீர்குலைத்து, ஈஸ்ட்ரோஜன் போன்ற எலும்பை வலுப்படுத்தும் ஹார்மோன்களை குறைக்கிறது.