- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

ரிஸ்க் எடு! கொண்டாடு!!

1dae477 [1]ரிஸ்க் எடுக்கிறது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி… என்று நிஜ வாழ்க்கையில் துணிந்து செயல்படுபவர்கள்தான் ஜெயிக் கிறார்கள். இன்று தொழிலதிபராக உள்ள அனைவரும் இந்த ரகத்தினர்தான். இந்தப் பட்டியலில் நீங்களும் சேர விரும்புகிறீர்களா? அப்படியெனில் இந்தத் தொடர் உங்களை மெருகேற்றும்.

வேலை செய்ய பிடிக்கல, நாலு பேருக்கு வேலை கொடுக்கணும் இதன் மூலம் சமுதாயத்தில் சிறிதளவு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உத்வேகம் இருந்தாலே போதும். தொடர்ந்து படியுங்கள்… தொழிலதிபராகுங்கள்.

இந்தியாவின் எழுச்சியை இரு கட்டங்களாக அதாவது தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு முன் (ஐ.டி.மு), வளர்ச்சிக்குப் பின் (ஐ.டி.பி) என பிரிக்கலாம். தொழில் தொடங்க வேண்டும் என்றால் கோடிக்கணக்கில் முதலீடு தேவை என்பது அந்தக்காலம். புதிய உத்தியோடு தொழில் தொடங்க வேண்டும் என்ற தீவிர உத்வேகம் இருந்தாலே போதும்.

கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட அபரிமிதமான வளர்ச்சியின் விளைவாக தொழில் தொடங்க வேண்டும் என்ற உத்வேகம் இளைஞர்களிடையே இப்போது அதிகரித்துள்ளது டாட் காம் வீழ்ச்சி ஏற்பட்ட காலத்தில் கூட மேக்மைடிரிப்.காம் நிறுவனத்தின் தீப் கல்ரா, நௌக்ரி.காம் நிறுவனத்தின் சஞ்சீவ் பிக்சந்தானி ஆகியோர் பொதுப் பங்கு வெளியிட்டு வெற்றிகரமாக வலம் வந்தது இளைஞர்களின் ஆசைத் தீயில் நெய் வார்த்தது.

மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் அனைத்துமே பலரால் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் அல்ல. ஒரு நபரின் தீவிரமான முயற்சியின் வெளிப்பாட்டில் விருட்சமாக வளர்ந்தவை இவை. அதற்காக நீங்கள் மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தொடங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்கள் சிந்தனையை எவ்வளவு விரைவாக செயல்படுத்துகிறீர்கள் என்பதில் அடங்கியிருக்கிறது முன் னேற்றம்.

புத்திசாலித்தனம், அதிர்ஷ்டம், முறையான படிப்பு, கடின உழைப்பு அல்லது அனுபவம் இவற்றில் எது தொழிலதிபராக்க உதவும் என்று நினைக்கிறீர்கள். கடின உழைப்பாளி, எம்பிஏ படிப்பு முடித்தவர், புத்திசாலி ஆகியோர் உருவாக்கிய நிறுவனங்கள் நொடித்துப் போயுள்ளன.

அதேசமயம் மிகப் பெரும் தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய திருபாய் அம்பானி, அருண் ஐஸ் கிரீமால் தமிழக மக்களை குளிர்வித்த என்.ஜி. சந்திரமோகன், பிரியாணி சுவையில் பலரைக் கட்டிப்போட்டுள்ள தலப்பாகட்டு பிரியாணி உணவகத்தைத் தொடங்கிய நாகசாமி நாயுடு ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே முறையாகப் படிக்காதவர்கள்தான். எனவே தொழி லதிபராவதற்கு முறையான படிப்பு அவசியம் இல்லை என்பதை இவர்கள் உணர்த்தியுள்ளனர்.

எனவே சிறந்த தொழிலதிபராக உருவாக கண்ணுக்குப் புலப்படாத பல விஷயங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

எதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற திறந்த சிந்தனையோடு இருக்கவேண்டும். மாற்று யோசனைக்கு செயல் வடிவம் கொடுக்க முற்பட வேண்டும். தொழில் முனைவோராக வேண்டும் என்ற உத்வேகமே உங்களை கோடீஸ்வர தொழிலபதிபராக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தொழில் முனைவோராக என்ன தேவை?

1. நீங்கள் அளிக்கும் சேவை (Service) அல்லது தயாரிக்கும் பொருள் (Product) எந்த பிரிவினருக்கானது என்பதை அடையாளம் காண வேண்டும்.

2. நீங்கள் அளிக்க உள்ள சேவை அல்லது பொருள் சம்பந்தப்பட்டவர்களின் பிரச்சினையைத் தீர்க்கக் கூடியதா என்று சிந்திக்க வேண்டும்.

3. பிரச்சினையைத் தீர்க்க அவர்கள் பணம் செலவிடத் தயாராக இருக்கிறார்களா என்பதை ஆராய வேண்டும்.

மூன்று கேள்விகளுக்கும் ஆம் என்ற பதில் கிடைத்தால் நீங்கள் தொழில் தொடங்குவதற்கு பச்சை கொடி காட்டி விட்டார்கள் என்று அர்த்தம். சரி அடுத்தகட்டமாக நீங்கள் தயாரித்த பொருள் அல்லது சேவை எந்தப் பிரிவினருக்கானது என்று அடையாளம் கண்டீர்களோ அவர்களிடம் சென்று அந்த சேவை அல்லது பொருளின் தேவை குறித்து விசாரிக்க வேண்டும்.

உங்களது தயாரிப்பு, சேவைக்கு அவர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தால் போதும் நீங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறலாம். சமீபத்தில் 83 நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களின் தொழில் முனைவு சிந்தனைக்கான இறுதி போட்டியில் வெற்றி பெற்றது தமிழக இளைஞர்களின் சிந்தனைதான்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு உதவுவதற்காக வாட்ஸ்அப் போன்ற புதிய சேவையை இவர்கள் உருவாக்கியதுதான். வழக்கமான தொழில்களிலிருந்து மாற்றி யோசித்தாலே தொழிலின் முதல் படியில் நீங்கள் ஏறுகிறீர்கள் என்று அர்த்தம். விரைவிலேயே தொழில் உங்கள் வசமாகும்.

– கே.சுவாமிநாதன் aspireswaminathan at gmail dot com – Credit : tamil.thehindu.com