- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

சூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 12

தப்லீக்கின் அடிப்படை அம்சங்கள் (ஆறு நம்பர்)

sufiyism [1]அதே போன்று இஸ்லாத்தின் ஆணிவேராகத் திகழ்வது இஸ்லாமிய அகீதா எனும் இறை நிர்ணயக் கோற்பாடு . அல்லாஹ்வைப் பற்றிய அவனது மலக்குகள் வேதங்கள் நபிமார்கள் பற்றிய விடயங்களெல்லாம் அகீதா – ஒவ்வொரு முஃமினும் கட்டாயம் நம்பிக்கை கொள்ள வேண்டிய பகுதியில் அமையும் . இவ்விடயத்தில் ஒரு முஸ்லிமிடம் சரியான நம்பிக்கை இருத்தல் அவசியம் . இதிலே கோளாறு இருந்தால் அவனது இறை நம்பிக்கையில் கோளாறு உள்ளதாகவே கருதப்படும் . ஆனால் தப்லீக்கின் பெரியார்களிடத்தில் இது சம்பந்தமாக இருந்த சில நம்பிக்கைகளைப் பார்க்கும் போது இந்துப் புராணங்கள்,மூடநம்பிக்கைகளே தோற்றுப் போகுமளவுக்கு அவை இருப்பதைக் காண முடிகின்றது .கலிமா லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை முதலாவது நம்பராக வைத்துச் செயற்படும் தப்லீக் பெரியார்களிடமே இக்கலிமாவின் போதனைக்கு மாற்றமான ஈமானுக்கெதிரான எத்தனையோ ராங் நம்பர்கள் -தவறான நம்பிக்கைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது . அவற்றில் சிலவற்றை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் .

சம்பவம் இல: 1-
iஷேக் இல்யாஸ் (றஹ்) அவர்கள் சொல்கின்றார்கள்;…
‘இந்த தப்லீக்கின் அடிப்படை விதிமுறைகளை நான் எனது விருப்பப்படி உருவாக்க வில்லை . அது எனக்குக் கொடுக்கப்பட்டது அவ்வாறு செய்யுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டது
இதற்கு விளக்கமாக மற்றொரு இடத்தில் அபுல் ஹஸன் அலி நத்வி அவர்கள் ‘அல்லாஹ்தான் இல்யாஸ் அவர்களுக்கு இந்த விடயத்தை உதிப்பாக்கி அவர்களது இதயத்தில் போட்டான்’ என்கின்றார்கள் இவை இல்ஹாமாகவோ கனவிலோ அவர்களுக்குத் தெளிவு படுத்தப்பட்டனவாம் .  (ஆதாரம் – தப்லீக்கே தஹ்ரீக் ப:57)

கட்டளையிடப்பட்டது என்றால் யாரால்?? அதற்கு விடையாக அல்லாஹ்வால் என தெளிவாகக் கூறிவிடுறார்கள் . அல்லாஹ்வின் கட்டளை வருவது நபிக்கே அப்படியானால் அவர்களும் நபியோ ?? நபிமார்களைத் தவிர வேறு யாராகினும் ஒருவரின் எண்ணத்தில் கனவில் வருவதெல்லாம் உண்மையாக முடியாது . அவை சரியா தவறா? என குர்ஆன் ஹதீஸைக் கொண்டே முடிவு செய்ய வேண்டியுள்ளது . ஒவ்வொருவரும் எனது கனவில் அல்லாஹ் இப்படிக் கட்டளையிட்டான் , நபி வந்து இப்படிச் சொன்னார்கள் என்று சொல்ல ஆரம்பித்தால் குர்ஆன் எதற்கு ஹதீஸ் எதற்கு ??
எனவே கனவில் வருவது இறை வாக்கு என்று நம்புவதே ஈமானுக்கு முரணான விடயமாகும் . இல்ஹாமில் சொல்லப்பட்டது என்பதும் ஈமானுக்கு முறணானதாகும் .
‘முஹம்மதுர்ரஸூலுல்லாஹ்’ எனும் கலிமாவின் அர்த்தத்திலேயே இது விளக்கப்படுகின்றது .நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்றுக் கொள்வது நான்கு அம்சங்களை உள்ளடக்கியிருப்பதாக அல்குர்ஆன் போதிக்கின்றது .

  அவர்கள் இட்ட கட்டளைக்கு அடி பணிதல் ;
அவர்கள்சொல்வதையெல்லாம் உண்மைப்படுத்தல்; .
அவர்கள் தடுத்தவற்றை விட்டும் தவிர்ந்து வாழுதல்
-அவர்கள் சொல்லித்தந்தவாறே அல்லாஹ்வை வழி படல்.

ஆனால் தப்லீக்கில் இவையெல்லாம் மூடி மறைக்கப்பட்டு விட்டு அவர்களின் சொந்த வியாக்கியானங்களே இஸ்லாமெனப் போதிக்கப்படுகின்றன ..

சம்பவம் இல: .2-
அல்லாமா ஸூபி இக்பால் அவர்கள் தப்லீக் முக்கியஸ்த்தர்களில் ஒருவர் . இவர்கள் கூறுகின்றார்கள்..
மிகப்பெரிய தப்லீக் பெரியார் ஒருவர் இருந்தார்கள் . இவர்களிடம் கஸ்புடைய ஞானம் இருந்தது . இதன்மூலமாக அவர்கள் நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் பிரசன்னமாகி உரையாடி மகிழ்வது வழக்கம் . அவர்களிடத்தில் ஷேக் சக்கரிய்யா மௌலானா அவர்கள் ஒரு முறை வருகை தந்து தான் ஒரு பயணம் செய்ய இருப்பதாகவும் அதற்காகத் தங்களிடத்தில் இஸ்திகாராத் தேடுவதற்காக வந்திருப்பதாகவும் தெரிவித்தார்கள் இதனைக் கேட்ட ஷேக் அவர்கள் ‘ஜக்கரிய்யாவுடைய இதயத்தில் உதிப்பாகும் அனைத்து விடயங்களுமே மேலிடத்திலிருந்தே கிடைக்கின்றன . எனவே இந்தப் பயணத்தை விடவும் சிறந்த ஒரு காரியம் கிடையாது’ என்றார்கள் . (மஹ்பூபுல் ஆரிபீன் 52)

வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை எனும் கலிமாவின் அர்த்தமே எந்த வணக்கமானாலும் அது அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யப்பட வேண்டும் . அல்லாஹ் அல்லாத பிறருக்கு எவ்வித வணக்கத்தையேனும் செய்தால் அதுவே கொடிய ஷிர்க்காக ஆகி விடும் .இதைத்தான் குர்ஆனும் ஹதீஸூம் பல இடங்களில் போதிக்கின்றன . நபிகளிடத்தில் ஒருவர் மிகப்பெரிய பாவம் எது என்று கேட்டதற்கு அல்லாஹ் உன்னைப் படைத்திருக்கும் போது நீ அவனல்லாத ஒருவனை வணங்குவது என்றார்கள் . (புகாரி இல :9)

இங்கு ஷேகுல் ஹதீஸ் – ஹதீஸ்க்கலை மேதை எனப் போற்றப்படும் ஜக்கரிய்யா மவ்லானா அவர்களோ இஸ்திகாரா – நன்மை நாடல் எனும் இபாதத்தை தனது குருவான ஷேக் ஒருவருக்கு செய்திருக்கின்றார்கள் . குரு நாதர் என்ன சளைத்தவரா? அவர் அதைவிட ஒருபடி மேலே சென்று உங்கள் இதயத்தில் உதிப்பாகும் அனைத்துமே மேலிடத்திலிருந்தான் அதாவது அல்லாஹ்விடமிருந்துதான் வருகின்றது என்று சேர்ந்து பாடுகின்றார். குருவும் நல்ல குரு சிஷ்யனும் நல்ல சிஷ்யன் . அல்லாஹ்வை நேரில் சந்தித்து உரையாடல் எனும் வழி கெட்ட கொள்கை நபிவழிவந்ததா? சூபிகள் வழிவந்ததா? தப்லீக் அமைப்பு சூபிகள் வழிவந்தது என்பதை இப்போதாவது ஏற்கின்றீர்களா?

நபி(ஸல்) அவர்கள் கூட தான் செய்பவை, சொல்பவை அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வருபவை என்று சொல்லவில்லை . மாறாக நானும் உங்களைப் போன்ற மனிதன்தான் தப்பு தவறு எனக்கும் ஏற்படும் என்றே சொல்லியுள்ளார்கள் .

நபியவர்களுக்கு தொழுகையில் தவறு ஏற்பட்டது . (பார்க்க : புகாரி 460 -673)
வழக்கு விசாரனையின் போது தீர்ப்புகளில் தனக்கு தவறு ஏற்படுமென கூறியுள்ளார்கள் .(புகாரி 227 -6452)
போர் பற்றிய வியூகம் அமைப்பதில் அவர்களுக்குத் தவறு ஏற்பட்டுள்ளது . (பத்ர் யுத்தம்- ரஹீக் 128)

இப்படி எத்தனையோ உதாரணங்களை அடுக்கலாம் . நபியவர்களுக்கே மார்க்க விடயங்களில் மாத்திரமே தவறு ஏற்படாது . ஏற்பட்டாலும் உடனே அல்லாஹ் சுட்டிக் காட்டி விடுவான் . இப்படியிருக்க தனது ஷேக்கிடம் இஸ்திகாரா தேடுவதுதான் லாயிலாஹ இல்லல்லாஹ் கலிமாவுக்கு இவர்கள் கொடுக்கும் மதிப்பா ?

சம்பவம் : இல :3
ஷேக் அப்துர் ரஸீத் கன்கோயி எனும் தப்லீக் பெரியார் கூறுகின்றார் .
‘பனாஃ எனும் (ஒருவகை மெய்மறந்த) நிலையில் நான் இருக்கும் போதெல்லாம் எந்த விடயத்தை முடிவு செய்வதாயினும் ஷேக் இம்தாதுல்லாஹ்விடம் ஆலோசித்தே செய்வது வழக்கம் . பின்பு பனாஃ நிலையின் உயர் அந்தஸ்த்துக்கு வந்ததும் நபி (ஸல்) அவர்களைக் கண்டு ஆலோசித்தே முப்பது வருடங்களாக எந்த வித முடிவையும் எடுத்து வருகின்றேன் . அதற்கு அடுத்த நிலை இஹ்ஸான் எனும் நிலைதான் என்றார்கள் (தீஸ் மஜாலிஸ் ப: 311 , மஹ்பூபுல் ஆரிபீன் : ப: 57)

அதாவது இவர்களிடம் இஹ்ஸான் என்றால் அல்லாஹ்வை நேரில் கண்டு அவனுடன் நேரடியாக உரையாடும் நிலையை அடைந்தேன் என்று அர்த்தம். பனாஃ எனப்படுவது சூபிகள் தமக்கு இருப்பதாகக் கூறும் ஒருவகை போதை நிலை . அதாவது தரீக்கத்தின் வழிநடந்த இவர்களுக்கு மூன்றாவது படிநிலையாக பிரபஞ்சம் அனைத்துமே அல்லாஹ்வின் வெளிப்பாடே என்பது புலப்படுமாம் .அந்த அதிர்ச்சியால் ஏற்படும் போதைக்கே பனாஃ எனப்படும் . இப்போது சொல்லுங்கள் தப்லீக் பெரியார்களின் கொள்கையும் சூபிகளின் கொள்கை களும் ஒன்றா இல்லையா? .

இதே போன்று தானே சூபிகளும் அல்லாஹ்வை நேரில் காண்பதாகப் புருடா விட்டுக் கொண்டிருந்தார்கள் . அப்படியாயின் இவ்விரு பிரிவினரும் ஒன்றா இல்லையா ? நீங்களே முடிவு செய்யுங்கள் .

முற்காலத்தில் வாழ்ந்த இப்னு அரபி , மன்ஸூர் கல்லாஜி போன்றோரும் கூட தாம் நபியுடன் நேரடியாக உரையாடுவதாகக் கூறியே ஹதீஸ்களை எடுக்க மறுத்தனர் .அல்லாஹ்வை நேரடியாகக் காண்பகதாகக் கூறி மார்க்கச் சட்டங்களைப் புறக்கணித்தனர் . இவையெல்லாம் மார்க்கத்துக்கு முரணானவையென அக்காலத்தில் வாழ்ந்த உலமாக்கள் மறுப்பளித்துள்ளனர் . எனவே அக்கால ஸூபிகளுக்கும் இக்கால தப்லீக் பெரியார்களுக்கும் வேறுபாடு என்ன இருக்கின்றது . ??

ஸூபிகள் பேசிய அத்வைதம் தப்லீக்கிலும்  உண்டா??

அத்வைதம் என்பது ‘இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வே , அனைத்தும் அவனிலிருந்து தோற்றம் பெற்றவைகளே’ என்னும் கொள்கையைக் குறிக்கும் . இக்கொள்கையே ஸூபிகளின் அடிப்படைக் கொள்கையாக இருந்தது என்பதை முன்னர் நாம் அறிந்திருக்கின்றோம் . இதே கொள்கை தப்லீக்கின் பெரியார்களிடமும் இருக்கின்றதா? என்பது பற்றி பின்வரும் தகவல்களைப் படித்தபின் வாசகர்களான நீங்களே முடிவு செய்யவேண்டியுள்ளது.

இது சம்மந்தமான இன்னும் சில ஆச்சரியங்களை உங்களுக்கு எடுத்துக்காட்ட விளைகின்றேன் .

ஆச்சரியம் 1-
ஜக்கரிய்யா மௌலானா அவர்கள்; கூறுகின்றார்கள் ..
‘அல்லாஹூத்தஆலாதான் உண்மையில் அனைத்து அழகினதும் ஊற்றாக இருக்கின்றான் . உண்மையில் உலகில் இருக்கும் அழகு அனைத்தும் அவனது அழகேயன்றி வேறில்லை . (தப்லீக் தஃலீம் தொகுப்பு ப: 300)

அதாவது உலகிலுள்ள அழகானவை அனைத்தும் அவனது பிரதிபலிப்பே என்பதே இதன் அர்த்தம்.

தனது மற்றுமொரு நூலில் ..
‘ஒரு அடியான் தன் எஜமானான அல்லாஹ்வின் கட்டளை, வரம்புகளை மீறுவதன் ரகசியம் யாதெனில் அல்லாஹ் அடியார்களைத் தனது வடிவத்திலேயே படைத்துள்ளான் .எனவே அல்லாஹ்வுக்கு ஜலாலியத்தான (அதிகாரமிக்க) பண்புகள் இருப்பதால் அவனது அடியார்களிடத்திலும் அந்தப் பண்பின் வெளிப்பாடுகள் தோன்றுகின்றன அதனால்தான் அவனிடமிருந்து பாவச் செயல்கள் இடம்பெறுகின்றன (உம்முல் அம்ராழ் ப: 7)

அல்லாஹ் மனிதனின் உருவத்தை உடையவன் என்று சொல்வது மட்டுமின்றி அவன் ஏன் பாவம் புரிகின்றான் என்பதன் காரணத்தை விளக்கி பாவம் புரிவதை நியாயப்படுத்தும் விதத்தைப் பாருங்கள் . என்னே விளக்கம் ?? .அப்படியானால் பாவம் புரிந்தவனைத் தண்டிப்பதும் அர்த்தமற்றது தானே !

ஆச்சரியம் 2
ஜக்கரிய்யா மௌலானா தனது குருநாதர் ஷேக் இம்தாதுல்லாஹ் அவர்கள் நவின்றதாகக் கூறுகின்றார்கள் ..
‘ஷேக் அவர்கள் ஹக்கீக்கத் (யதார்த்தத்தைக்) காணக் கூடியவர்களாக இருந்தார்கள் .(அதாவது அல்லாஹ்வை நேரடியாகக் காண்பவர்கள் என்பது அர்த்தம்) அவர்கள் சொல்வார்கள் ‘ஒரு ஆண்; பெண்ணின் தோற்றத்தில் இருக்கின்றான்; . பெண்ணோ அல்லாஹ்வின் தோற்றத்தில் இருக்கின்றாள்; . ஆண்பெண்ணுக்குக் கண்ணாடியைப்போன்றவன். பெண் அல்லாஹ்வுக்குக் கண்ணாடியைப் போன்றவள் . எனவே பெண்ணும் அல்லாஹ்வைக் காட்டும் கண்ணாடி தானே ! அதனால்தான் அவளிலே அல்லாஹ்வின் அழகு வெளிப்பட்டுள்ளது . அதை அவசியம் நாம் காண வேண்டும் . (ஸமாயில் இம்தாதிய்யா ப:70)

ஆச்சரியம் 3
மேலும் ஜக்கரிய்யா மொலானா கூறுகின்றார்கள் .
‘ஸூபித்துவத்தின் ஆரம்பமே வஹ்தத்துல் வுஜூத் (எல்லாம் அவனே எனும் அத்வைதக் கொள்கைதான்) என்று கூறிவிட்டு மற்றொரு இடத்தில் ‘இப்போதுள்ள காலம் முழு மூச்சுடன் சூபித்துத்தின் பக்கம் அழைப்பதற்கும், அதன்படி செயற்படுவதற்கும் பொருத்தமான காலமாகும்’ என்று கூறுகின்றார்கள் . (திக்ரு இஃதிகாப் கே அஹமிய்யத் ப: 95)

இப்போது புரிந்து விட்டதா ? இவர்களது சுய ரூபம் . எல்லாமே அல்லாஹ்தான் என்பதே சூபித்துவத்தின் அடிப்படை என அவர்களே ஏற்றுக் கொண்டு விட்டு பின்னர் அதன் பக்கம் முழு மூச்சுடன் அழைப்பதற்கான தருனம் இதுவே என்கின்றார்களே ! அப்படியானால் இவர்கள் ‘எல்லாமே அல்லாஹ்வே’ எனும் சூபித்துவத்தின் பக்கம்தான் அழைக்கின்றார்கள் என்பதற்கு இதைவிடப் பெரிய ஆதாரம் என்னவிருக்கின்றது ?
.
ஆச்சரியம் 4-
மற்றுமொரு இடத்தில் ஜக்கரிய்யா மௌலானா சொல்கின்றார்கள்…
அல்லாஹூத்தஆலா குர்ஆனிலே ‘ஹூவல் லாஹிறு’ அவனே வெளியானவன் என்று கூறும் வார்த்தை உங்கள் சிந்தனையிலிருந்து நீங்காதிருக்க வேண்டும். நீங்கள் நன்கு சிந்தியுங்கள் ஒரு சிஷ்யனின் யதார்த்தத்திலும் வெளித்தோற்றத்திலும் அல்லாஹ்வே இருக்கின்றான் . இதனை அவன் நன்கு இதயத்தில் பதித்தால் அல்லாஹ்வின் தாத்துதான் (சடம் தான்) உலகத்திலும் (மனிதனாக) வெளியாகியுள்ளது என்பதை சிந்திப்பான் . (ஸக்காலத்துல் குலூப் ப: 89)

மௌலானா அவர்களின் கொள்கை ‘எல்லாமே அல்லாஹ்தான்’; எனும் சூபிகளின் கொள்கைதான் என்பதில் இனியேனும் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியுமா?
அவர்கள் எல்லாம் இறைவனே எனும் கொள்கையில் இருந் தார்கள் என்பதற்கு இதைவிடப் பெரிய ஆதாரம் வேறு என்ன வேண்டியிருக்கின்றது .

ஆச்சரியம் 5
சூபித்துவ பித்தரான ‘எல்லாமே அல்லாஹ்தான்’ எனும் கொள்கையின் ஆரம்பப்ப் பிரச்சாரகனாகிய மன்ஸூர் அல்ஹல்லாஜி என்பவனைப்; பாராட்டிக் கூறிய கவிதையொன்றில் ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் கூறுகின்றார்கள் ….
‘மன்ஸூர் ஹல்லாஜியை (இஸ்லாமிய ஆட்சியாளர்கள்) சிலுவையில் அறைந்ததற்குக் காரணம் .அவர் அல்லாஹ்வுடைய விடயத்தில் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார். நான்தான் அல்லாஹ் என்று சொன்னார் . அவரது இந்த வார்த்தை உண்மைதான். எனினும் அதை அவர் அப்படிப் பகிரங்கப் படுத்தியிருக்கக் கூடாது . (வலிய் காமில் ப: 249)

நான்தான் அல்லாஹ் என அந்தக் கிறுக்கன் கூறியதையும் உண்மையெனக் கூறும் மௌலானாவை என்னவென்று கூறுவது என்று நீங்களே முடிவு செய்யுங்கள் .

ஆச்சரியம் – 6
திக்ர் செய்யும் ஒழுங்குகள் பற்றி மௌலானா ஜக்கரிய்யா அவர்கள் சொல்லும் போது…
‘திக்ரின் போது அல்லாஹூ நூருஸ்ஸமாவாத்தி வல் அர்ழ் – அல்லாஹ் வானங்கள் ,பூமியுடைய ஒளியாவான் எனும் வசனத்தை மனதில் முன்னிறுத்த வேண்டும் .எல்லா இடங்களிலும் அல்லாஹ் இருக்கின்றான் அவனது ஒளி அண்ட சராசரங்கள் அனைத்திலும் வியாபித்துள்ளது என்று எண்ணிக் கொண்டு அவனது ஒளியில் தானும் சங்கமித்து மூழ்கி விட்டதாக எண்ண வேண்டும் . (ஸகாலதுல் குலூப் ப: 144)

கலிமா லாயிஹ இல்லல்லாஹ் — வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத்தவிர எவருமில்லை . என்ற கலிமாவை தம் அடிப்படை விதிகளில் முதன்மையானதாக ஆக்கிய தப்லீக் பெரியார்கள் தமது நூல்களில் எழுதி வைத்துள்ள கலிமாவுக்கு முரணான விடயங்கள் சிலவற்றை இங்கே சுட்டிக்காட்டியுள்ளேன் இவை போன்ற நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான விடயங் கள் இவர்களின் நூல்களில் மலிந்து கிடக்கின்றன . இவற்றிலிருந்து தெரிய வருவது யாதெனில் கலிமாவுக்குரிய அர்த்தத்தை விளங்குவதில் இவர்களும் சூபித்துவ வாதிகளை ஒத்த அதே நிலைப்பாட்டைத்தான் கொண்டிருக்கின்றனர் . அதே அத்வைதக் கருத்துக்களைத் தமது புத்தகங்களில் பரவலாகக் கூறியிருப்பதிலிருந்தும் , அன்றைய உலமாக்களால் வழிகேடர்கள் என்று பத்வா – தீர்ப்புக் கொடுக்கப்பட்ட சூபிகளை முன்னிலைப்படுத்தி அவர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமையளித்து சூபியாக்கள் , பெரியார்கள் ,ஞானவான்கள் என்று தமது நூல்களில் போற்றுவதிலிலிருந்தும் இவை தெளிவாகின்றன .

பெரியார்கள் என்ற காரணத்தால் – நாம் விரும்புபவர்கள் எனும் காரணத்தால் , நாம் தொழுகையாளிகளாக மாறுவதற்குக் காரணமாயிருந்தவர்கள் எனும் காரணத்தால் அவர்கள் சொல்வது அனைத்தையும் நாம் ஏற்க வேண்டுமா ? அல்லாஹ் றஸூலுக்கு மாற்றமானதா இல்லையா என்று கொஞ்சம் சிந்திக்க வேண்டா =மா? இஸ்லாத்திக்கு மாற்றமான ஒரு கருத்தை ஒரு குருநாதர் சொல்லிவிட்டால் அது தவறானது என மாணவனுக்கும் தெரிந்தி =ருந்தால் அந்தத் தவறை குருவுக்குப் பக்குவமாகச் சுட்டிக் காட்டிப் புரிய வைப்பதுதான் ஒரு உண்மையான சிஷ்யனுக்கு இலட்சனமேயன்றி அவர் சொல்லிவிட்டால் அது எப்படித் தவறாக முடியும்? என வறட்டுப் பிடிவாதம் பிடிப்பது அறிவற்ற மூடர்களின் செயலாகும் . நபியவர்களுக்கே தவறு ஏற்பட்டிருக்கும் போது இவர்களுக்குத் தவறு ஏற்படுவது என்ன ஆச்சரியமா ? எல்லோருமே மனிதர்கள்தானே !

அன்றாடம் தப்லீக் சகோதரர்களால் தஃலீம் எனும் பெயரில் வாசிக்கப்படும் நூற்களான .அமல்களின் சிறப்பு , ஸதகாவின் சிறப்பு , ஹஜ்ஜின் சிறப்பு போன்ற நூல்களில் கூட இவ்வாறான நச்சுக்கருத்துக்கள் பரவலாகக் காணப்பபடுகின்றன . ஆனால் இவற்றை மொழிபெயர்த்த வல்லவர் தந்திரமாக இப்படியாக அத்வைதக் கருத்துக்களை பாமர மக்களுக்கு எழிதில் புரியாத வண்ணம் மிக்க சமயோசிதமாக மொழிபெயர்த்துள்ளார் .

ஆனால் இதுவரை தமிழில் பெயர்க்கப்படாத தப்லீக் பெரியார்களின் நூல்களில் இவ்வாறான நச்சுக்கருத்துக்கள் தாராளமாக பச்சை பச்சையாகச் கூறப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றைத்தான் மேலே சுட்டிக்காட்டியுள்ளேன் . தப்லீக் சகோதரர்கள் நபிவழி எது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் இவைகளைக் கூறுகின்றேன் . வேறு எவ்வித நோக்கங்களோ காழ்ப்புணர்வோ அல்லாஹ் மீது சத்தியமாக தப்லீக் சகோதரர்கள் மீது எனக்கில்லை என்பதை சத்தியமிட்டுக் கூறுகின்றேன் . ஒரு சில பயபக்தி மிகு பேணுதலான கார்க்கூன்கள் கூட ‘உயிரோடு உள்ளவர்களைப் பற்றியே விமர்சிப்பது புறம்பேசியதாக ஆகி விடும் போது மரணித்த இந்த மௌலானாக்களைப் பற்றி எப்படி தாறுமாறாகப் பேசுவது ஆகும் இது புறம்பேசுவதாகாதா ? மரணித்தவர்களைப் பற்றி நல்லவற்றையேயன்றி வேறு எதையும் பேச வேண்டாமென நபியவர்கள் கூறியுள்ளார்களே’ என்றெல்லாம் சொல்லி தப்லீக் அமைப்பிலுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டும் பிரசுரங்களைப் படிக்க வேண்டாமென மக்களைத் தடுக்கின்றனர் .

இதுவும் ஒரு அர்த்தமற்ற வாதமாகும் . உதாரணத்திற்கு ஒருவர் நல்ல ஆட்டிறைச்சி என்று சொல்லிக் கொண்டு செத்த ஆட்டின் இறைச்சியை விற்றுக் கொண்டிருக்கின்றார் . நீங்கள் அதை அவருக்கு இதமாக எடுத்துச் சொல்லியும் , கண்டித்தும் எவ்விதப் பலனும் இல்லை .இப்போது அவனது செயலைப் பற்றிப் பேசினால் புறம்பேசியதாகி விடும் என எண்ணிக் கொண்டு வாய் மூடி இருக்க வேண்டுமா ? அல்லது இது பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமா? இதைச் சுட்டிக்காட்டுவது புறமா? அவதூறா ? இல்லை . இது ஒரு இஸ்லாமியக் கடமை மாத்திரமல்ல . தார்மீகக் கடமையும் கூட . அப்படித்தான் இங்கும் தீன் என்று சொல்லிக் கொண்டு – இஸ்லாம் எனும் லேபிளை ஒட்டிக் கொண்டு தீனுக்கு மாற்றமான எத்தனையோ விடயங்கள் இன்னும் சொல்லப் போனால்  ஷிர்க்கான பித்அத்தான விடயங்கள் கூட இஸ்லாம் என்று போதிக்கப்படுகின்றன . எனவே இதனை விடயம் தெரிந்த அனைவருமே சுட்டிக்காட்ட வேண்டும் எதிர்க்கவும் வேண்டும் . நபியவர்கள் பிர்அவ்ன் ஹாமான், அபூ ஜஹ்ல் போன்றவர்களைப் பற்றி உம்மத்துக்கு எச்சரித்தமை எப்படி புறம்பேசியதாகாதோ – கவாரிஜ் எனும் இஸ்லாத்துக்கு மாற்றமான ,ஆனால் நிறைய வணக்கம்புரியக் கூடியவர்களைப் பற்றி எச்சரித்தமை எப்படிப் புறம் பேசியதாகாதோ அப்படித்தான் இதுவும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .