- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

பண்டைய இந்தியப் பொருளாதாரம்

நமது நாட்டுக்கு என பொருளாதாரம் போன்ற மிகவும் அடிப்படையான துறையில் நல்ல பின்னணி எதுவும் இருக்க முடியாதென நாமே கருதிக் கொள்கிறோம்.1 [1]

நமது நாட்டுக்கு என பொருளாதாரம் போன்ற மிகவும் அடிப்படையான துறையில் நல்ல பின்னணி எதுவும் இருக்க முடியாதென நாமே கருதிக் கொள்கிறோம். கடந்த இருநூறு வருடங்களாக உலகப் பொருளாதார அரங்கில் ஐரோப்பாவும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவும் முன்னிலையில் இருந்து வருகின்றன. ஆகையால், அதை வைத்துக் கொண்டு வரலாற்றுக்காலம் முழுவதும் அப்படியே இருந்திருக்கலாம் என எண்ணிக் கொள்கிறோம். ஏனெனில், நாம் படிக்கும் வரலாறு ஐரோப்பாவின் தொழிற் புரட்சியில் தொடங்கியே உலகில் பொருளாதார  வளர்ச்சி ஆரம்பித்ததாகப் போதிக்கிறது.

மேலும், நாம் சுதந்திரம் பெறும்போது இந்தியா ஏழை நாடாகவே இருந்தது. எனவே, நமது மனக் கண்ணில் அந்த வறுமையான சித்திரமே நம் முன் காட்டப்படுகிறது. அதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் நமது பொருளாதாரம் சிதைக்கப்பட்டு வீழ்ச்சியடைந்தது. ஆனால் அது பற்றி நமக்கு விரிவாகப் போதிக்கப்படுவதில்லை.

இந்தியப் பொருளாதாரத்தின் முந்தைய நிலைகள் குறித்து பண்டைய காலம் தொடங்கி, தொடர்ந்து வெளிவந்த பல இலக்கியங்கள் பேசியுள்ளன. விவசாயம், தொழில்கள், வியாபாரம் பற்றிய பல விஷயங்களை அவை குறிப்பிடுகின்றன. உதாரணமாக “சிலப்பதிகாரம்’ அப்போது தமிழ் நாட்டில் சர்வதேச வணிகம் எவ்வாறு சிறப்பாக நடைபெற்று வந்தது; எப்படி பல நாடுகளிலிருந்தும் வணிகர்கள் வந்து சென்றார்கள் என்பது பற்றியெல்லாம் விவரிக்கிறது.

உலகத்தின் முதல் பொருளாதார மற்றும் அரசியல் புத்தகமாக “அர்த்த சாஸ்திரம்’ கருதப்படுகிறது. அது சுமார் 2,300 வருடங்களுக்கு முன்னால் மெளரிய சாம்ராஜ்ய காலத்தில் எழுதப்பட்டது. விவசாயம், ஜவுளி, பிற தொழில்கள், வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி, வரிக் கொள்கை, ஊதியம், நுகர்வோர் நலன் எனப் பல விஷயங்களைப் பற்றியும், அவற்றை முறைப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அவற்றுக்குத் தேவையான நிர்வாக முறைகள் ஆகியவை பற்றியும் அந்த நூல் விவரிக்கின்றது.

பொருளாதாரம் பற்றிய சரியான அறிவும் அனுபவமும் இல்லாமல் அப்படிப்பட்ட ஒரு  நூல் எழுதப்பட்டிருக்க முடியாது. மேற்குலகத்தில் முதல் பொருளாதார நூல் பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பகுதியிலேயே வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆயினும் அண்மைக்காலம் வரையிலும் உலக நாடுகளின் தொடர்ச்சியான பொருளாதாரப் பின்னணி குறித்து ஒரு சரியான வரலாற்றுப் பார்வை இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் 1980களில் தொடங்கி கடந்த முப்பது ஆண்டுகளாக மேற்கத்திய அறிஞர்கள் உலகப் பொருளாதாரம் குறித்து சில முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அவை மேற்கு நாடுகளின் பொருளாதார வரலாற்றை மட்டுமின்றி, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் வரலாறு குறித்தும் முக்கியமான விஷயங்களைச் சொல்கின்றன.

அவை உலகப் பொருளாதாரம் என்பது ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆரம்பித்தது என்பதை மறுக்கின்றன. ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்துக்கான அடித்தளம் காலனியாதிக்க காலத்தில் அவை ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கொண்ட சுரண்டல்கள் மூலமே என்பது குறித்து பல விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன. மேற்கண்ட ஆய்வுகள், உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவும் சீனாவுமே முதன்மையான பங்கு வகித்து வந்துள்ளன என்பதை நிறுவுகின்றன.

முக்கியமாக, உலகிலுள்ள பணக்கார நாடுகளின் கூட்டமைப்பான “பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் முன்னேற்றத்துக்கான அமைப்பு’ (O‌r‌ga‌n‌i‌s​a‌t‌i‌o‌n​ ‌f‌o‌r​ Ec‌o‌n‌o‌m‌ic​ C‌o‌o‌p‌e‌r​a‌t‌i‌o‌n​ a‌n‌d​ D‌e‌v‌e‌l‌o‌p‌m‌e‌n‌t)வெளியிட்டுள்ள ஆய்வுகள் குறிப்பிடத் தக்கவையாகும். அவை பிரபல பொருளாதார வரலாற்றாசிரியரான ஆங்கஸ் மாடிசன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டவை.

உலகப் பொருளாதாரம் குறித்த கடந்த இரண்டாயிரம் வருட வரலாற்றை புள்ளி விவரங்களுடன் அவை முன்வைக்கின்றன. அது புத்தகமாக 2001ஆம் வருடம் வெளியிடப்பட்டது. இன்று வரை அந்த ஆய்வுகள் யாராலும் மறுக்கப்படவில்லை. அவற்றின் மூலம் உலகப் பொருளாதாரம் குறித்த ஒரு தெளிவான சிந்தனைக்கு வழி கோலப்பட்டுள்ளது.

அவை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், உலகப் பொருளாதாரத்தின் முதன்மையான சக்தியாக இந்தியா விளங்கி வந்துள்ளதை எடுத்துச் சொல்கின்றன. அப்போது உலகின் ஒட்டு மொத்த பொருளாதார உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவிடம் இருந்துள்ளது.

இரண்டாவது நிலையில் சீனா 26.2 விழுக்காடு பங்குடன் இருந்துள்ளது. இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகள் மட்டும் சுமார் அறுபது விழுக்காடு அளவு பொருளாதார பலத்தை வைத்திருந்துள்ளன. அதே சமயம் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் சேர்ந்து மொத்தமாக 15 விழுக்காட்டுக்கும் குறைவான அளவே பங்களித்துக் கொண்டிருந்தன.

உலகப் பொருளாதாரத்திற்கு மூன்றில் ஒரு பங்கினை அப்போதே இந்தியா அளித்துக் கொண்டிருந்தது என்பது அசாத்தியமானது. அந்த அளவுக்கு பொருளாதார வரலாற்றில் உலகின் எந்த மேற்கத்திய நாடும் இன்று வரை பங்களித்ததில்லை. எந்த ஒரு நாடும் திடீரென உலகப் பொருளாதாரத்தின் முதல் நிலைக்கு செல்ல முடியாது.

அப்படியெனில், பொது யுகம் தொடங்குவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னரே முன்னேற்றத்துக்கான அடித்தளங்கள் இந்தியாவில் போடப்பட்டிருக்க வேண்டும். மேலும் வளர்ச்சிக்கு ஏதுவான வழிமுறைகளும் இருந்திருக்க வேண்டும்.

indus [2]சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிக காலத்தை ஆய்வு செய்த நிபுணர்கள்கூட அப்போதிருந்த திட்டமிட்ட நகரமைப்பு, வளர்ச்சிக்கான அடையாளங்கள் குறித்து மிகவும் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளனர்.

பொது யுக காலத்துக்கு முந்தைய பல நூற்றாண்டுகளில் நிலவிய சர்வதேச வணிகம், வியாபாரம், தொழில்கள் உள்ளிட்டவை குறித்த விவரங்கள் உள்ளன. ஆனால் தொடர்ச்சியாக நாடு முழுமைக்கும் பொருந்தக்கூடிய அளவில் தற்போது கிடைத்துள்ளது போன்ற புள்ளி விவரங்கள் அப்போதைய காலங்களுக்கு இல்லை.

இந்தியப் பொருளாதாரத்தின் மற்றொரு தனிச் சிறப்பு அதன் நீடித்த தன்மையாகும். பொது யுகம் தொடங்கிய காலத்தில் இருந்து 1600ஆம் ஆண்டுவரை இந்தியாவே உலகப் பொருளாதாரத்தில் வல்லரசாக முதல் நிலையில் இருந்து வந்துள்ளது. சீனா தொடர்ந்து இரண்டாமிடத்தில் இருந்துள்ளது.

1600இல் சீனா முதலிடத்தை அடைய, பின்னர் 1700இல் மீண்டும் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கிறது. மறுபடியும் ஒரு முறை 1820இல் சீனா முதலிடத்தைப் பிடிக்க இந்தியா இரண்டாம் நிலையை அடைகிறது. எனவே, கடந்த இரண்டாயிரமாண்டு கால பொருளாதார வரலாற்றில் மிகப் பெரும்பான்மையான காலம் இந்தியாவே முதலிடத்தில் இருந்துள்ளது. இந்தியாவும் சீனாவுமே உலகப் பொருளாதாரத்தின் இரண்டு வலுவான சக்திகளாக இருந்து வந்துள்ளன.

பின்னர் அவை இரண்டும் வலுவிழந்ததற்கு முக்கியக் காரணமே காலனி ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சிதைவுகளாகும். ஐரோப்பியர்களின் ஆட்சிக் காலத்தில் உலக வரலாறே கண்டிராத கொடுமைகளை இந்தியா எதிர் கொண்டது என அமெரிக்க வரலாற்றாசிரியர் வில் துரந்த் விவரித்துள்ளார்.

அப்போதுதான் முதல்தரமான பொருளாதாரமாக விளங்கி வந்த இந்தியா, வறுமையும் பிணிகளும் நிறைந்த ஏழை நாடாக மாறிப் போனது. ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பஞ்சங்கள் பல லட்சக்கணக்கானோரின் உயிரைப் பறித்துக் கொண்டன. தொன்றுதொட்டு ஏற்றுமதிக்குப் பெயர் பெற்றிருந்த நாடு, இறக்குமதியைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத்  தள்ளப்பட்டது.

1750இல் உற்பத்தித் துறைக்கு உலக அளவில் கால் பகுதியைக் கொடுத்துக் கொண்டிருந்த இந்தியா, 1900ஆம் வருடத்தில் வெறும் 1.7 விழுக்காடு மட்டுமே கொடுக்கக் கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டது. 1800 முதல் 1850 வரைக்குமான ஐம்பது வருட காலத்தில் சென்னை பிரசிடென்சியில் மூன்றில் ஒரு பங்கு விவசாயிகள் அரசாங்கத்தின் கொடுமையான வரிகளால் தொழிலை விட்டுச் சென்று விட்டனர் என பொருளாதார நிபுணர் ரமேஷ் தத் தெரிவிக்கிறார். எனவே, பத்தொன்பதாம் நூற்றாண்டில் தனிநபர் ஆண்டு வருமானம் மிகவும் குறைவாகப் போனதாக தாதாபாய் நெüரோஜி குறிப்பிட்டுள்ளார்.

உலகப் பொருளாதார வரலாற்றின் முக்கியமான கால கட்டத்தில் நாம் இப்போது இருந்து வருகிறோம். மேற்கத்திய சித்தாந்தங்கள் பெருமளவு தோற்று வருகின்றன. அதே சமயம், நமது நாட்டுக்கென வலிமைகளும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளதை ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இந்த சமயத்தில் நமது பொருளாதார வரலாறு, அதன் அடிப்படைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த  சரியான உண்மைகளைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இதில் குறிப்பாக நமது நிபுணர்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் அறிவு ஜீவிகளின் பங்கு அதிகமாக உள்ளது.

வரலாறு குறித்த தெளிவான பார்வையில்லாத சமூகத்தைக் கொண்ட எந்த நாடும் எதிர் காலத்துக்கான கொள்கைகளை உறுதியாக வகுக்க இயலாது

ப. கனகசபாபதி