- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

விலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி 1/2

aval137 [1] நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் என்றாலே… ராக்கெட் வேகத்தில் உயரும் காய்கறி விலை, இந்தத் தடவை ஒளி வேகத்தில் உயர… ‘கறிகாய் சமைக்கறதையே மறந்துட வேண்டியதுதான்’ என கவலைக் குரல்கள் கேட்கின்

”ஆனா, உடம்புக்குத் தேவையான சத்துக்கள் சரிவர சேராம… புதுவித பிரச்னை வந்துடும்” என குண்டு போடும் மதுரை, ராஜேஸ்வரி கிட்டு,

”கொஞ்சம் யோசனையோட செயல்பட்டீங்கனா… ஆனை விலை, குதிரை விலை காய்கறியைக்கூட அடங்கற விலைக்கு வாங்கின திருப்தி வந்துடும். அதாவது, காய்கறிகளோட தோலை பத்திரப்படுத்தி, அதையும் ஒரு கூட்டு, பொரியல்னு மாத்திடுங்க. தினம் தினம் கறிகாய் வாங்கி, காசை கரைக்கத் தேவைஇருக்காது” என்று சொல்வதோடு, காய்கறித் தோல், பழத்தோல் போன்றவற்றில் சுவையான பதார்த்தம், துவையல், ஜாம் என்று விதம்விதமாக சமைத்துக் காட்டி அசத்துகிறார்.

பின்குறிப்பு: தோலையெல்லாம் பக்குவமாக சீவி எடுத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் நன்றாக அலசி பயன்படுத்துவது முக்கியம்.

முற்றல் முருங்கைக்காய் வடை

aval138 [2]தேவையானவை: முற்றிய முருங்கைக்காய் – 10, கடலைப்பருப்பு, நறுக்கிய வெங்காயம் – தலா அரை கப், சோம்புத்தூள், மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் – 2, இஞ்சி விழுது, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், அரிசி மாவு, நறுக்கிய பூண்டு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முருங்கைக்காய் ஒவ்வொன்றையும் மூன்று துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வைத்து, மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும். ஆறியதும், சதையை வழித்தெடுத்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல், அரைக்கவும். கடலைப்பருப்பை ஊற வைத்து, மசால் வடை பதத்தில் அரைக்கவும். இதனுடன் முருங்கை விழுது, (எண்ணெய் நீங்கலாக) மற்ற எல்லாவற்றையும் கலந்து சிறு வடைகளாகத் தட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வடைகளைப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

————

வெண்டைக்காய் காம்பு தோசை

aval139 [3]தேவையானவை: வெண்டைக்காய் காம்பு, இட்லி அரிசி – தலா 2 கப், உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் – 2 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – அரை கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியுடன் உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்து நான்கு மணி நேரம் ஊறவிடவும். இதனுடன் நன்றாக சுத்தம் செய்த வெண்டைக்காய் காம்புகளைச் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் அரைக்கவும். பிறகு, உப்பு போட்டுக் கலக்கி, ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். வெங்காயத்தை எண்ணெயில் லேசாக வதக்கி மாவில் கலந்து, தோசைகளாகச் சுட்டெடுக்கவும்.

————

தர்பூசணிப் பட்டை வற்றல்

aval140 [4]தேவையானவை: தர்பூசணி மேல் தோலை நீக்கி, உட்புற வெள்ளைப் பட்டை, கல் உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தர்பூசணியில் பிங்க் நிறத்தில் இருக்கும் சதைப்பகுதியை கத்தியால் வெட்டி தனியாக எடுத்து சாப்பிடவோ… ஜூஸ் செய்யவோ பயன்படுத்தலாம். வெள்ளையாக இருக்கும் சதைப் பகுதியின் மேல் தோலை நீக்கி, இரண்டு அங்குல நீளமுள்ள துண்டுகளாக நறுக்கி, கொதிநீரில் 10 நிமிடம் போட்டு மூடி வைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து உப்பு சேர்த்து, வெயிலில் உலர்த்தி, நன்றாகக் காய்ந்ததும் பாட்டிலில் சேமிக்கவும். தேவைப்படும்போது, எண்ணெயில் பொரித்துச் சாப்பிடலாம். மிகுந்த சுவையுடன் இருக்கும்.

————

தர்பூசணிப் பட்டை கூட்டு

aval141 [5]தேவையானவை: தர்பூசணி உட்புற வெள்ளைப் பட்டை (நறுக்கியது) – ஒரு கப், சாம்பார் பொடி – ஒன்றரை டீஸ்பூன், வேக வைத்த துவரம்பருப்பு, நறுக்கிய வெங்காயம் – தலா அரை கப், தேங்காய் துருவல், கேரட் துண்டுகள் – தலா  கால் கப், தக்காளி – 3, சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன், மாங்காய் துண்டுகள் – அரை கப், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தர்பூசணியின் உட்புறம் வெள்ளையாக இருக்கும் சதைப் பகுதியை நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கவும். கடாயில் தண்ணீர் விட்டு… சாம்பார் பொடி, மாங்காய், கேரட், வெங்காயம், தக்காளி, உப்பு போட்டு, தர்பூசணி பட்டையை சேர்த்து வேகவிடவும். துவரம்பருப்பு, தேங்காய் துருவல், சோம்புத்தூள் போட்டு கொதிக்கவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கவும்.

————

முள்ளங்கி இலை கூட்டு

aval142 [6]தேவையானவை: நறுக்கிய முள்ளங்கி இலை – 2 கப், வேக வைத்த துவரம்பருப்பு, தேங்காய் துருவல் – கால் கப், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி – தலா அரை கப், கீறிய பச்சை மிளகாய் – 2, கேரட் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், வடகம், பெருங்காயம், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முள்ளங்கி இலையைச் சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி… வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கடாயில் போட்டுச் சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்ததும் கேரட் துருவல், உப்பு, தேங்காய் துருவல், வேக வைத்த பருப்பு எல்லாவற்றையும் போட்டுக் கலந்து, கொதிக்க விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வடகத்தைப் போட்டு பொரித்து, பெருங்காயம் சேர்த்துத் தாளித்துக் கொட்டி இறக்கவும். விருப்பப்பட்டால் கைப்பிடி வறுத்த வேர்க்கடலையை கரகரப்பாக பொடித்து சேர்க்கலாம். சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.

————

புடலங்காய் குடல் சட்னி

aval143 [7]தேவையானவை: புடலங்காய் குடல் (விதையுடன் உள்ள நடுப்பகுதி) – ஒரு கப், உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை – சிறிதளவு, வறுத்த எள் – ஒரு டேபிள்ஸ்பூன், புளி – கொட்டைப்பாக்கு அளவு, தக்காளி – 1 (நறுக்கவும்), காய்ந்த மிளகாய் – 3, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு… காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும். எள்ளை வெறும் கடாயில் பொரிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, புடலங்காய் நடுப்பகுதியை போட்டு வதக்கி, தக்காளி சேர்த்துப் புரட்டவும். பச்சை வாசனை போனதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தவிர, மற்ற எல்லா பொருட்களையும் அதனுடன் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டிக் கலக்கவும்.

————

பீட்ரூட் தோல் உசிலி

aval144 [8]தேவையானவை: சிறிது சதையுடன் சீவிய பீட்ரூட் தோல் துண்டுகள் – 2 கப், கடலைப்பருப்பு – கால் கப், நறுக்கிய வெங்காயம் – அரை கப், கீறிய பச்சை மிளகாய் – 3, கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,  கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் கடாயில் கடலைப்பருப்பை போட்டு வறுத்து, சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்து எடுத்து, மிக்ஸியில் உதிர் உதிராகப் பொடிக்கவும். பீட்ரூட் தோலை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் இருபது நிமிடம் போட்டு, மறுபடி புது தண்ணீரில் நன்றாக கழுவி, உப்பு சேர்த்த தண்ணீரில் வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து… வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, கேரட் துருவலையும் சேர்த்து வதக்கவும். உதிர்த்த கடலைப் பருப்பைப் போட்டுக் கிளறி, வெந்த பீட்ரூட் தோல் துண்டுகளை சேர்த்துக் கிளறவும். எல்லாம் கலந்து உதிர் உதிராக வந்ததும் கொத்தமல்லித்தழை கலந்து இறக்கவும்.

————

சுரைக்காய் பஞ்சு, விதை துவையல்

aval145 [9]தேவையானவை: சுரைக்காயின் விதையுடன்கூடிய நடுப்பகுதி – ஒரு கப், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன், தக்காளி – 1 (பொடியாக நறுக்கவும்), காய்ந்த மிளகாய் – 3, புளி – கொட்டைப்பாக்கு அளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை தனித்தனியே சிவக்க வறுக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு, சுரைக்காய் நடுப்பகுதியைப் போட்டு பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி சேர்த்துப் புரட்டவும். இதனுடன் வறுத்த பருப்புகள், காய்ந்த மிளகாய், புளி, தக்காளி, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டுத் தேவையான தண்ணீர் தெளித்து கரகரப்பாக அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும். சட்னியாக வேண்டுமானால்… மேலும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

————

சௌசௌ தோல் சட்னி

aval146 [10]தேவையானவை: ஓரளவு சதையுடன் தடிமனாக சீவிய சௌசௌ தோல் துண்டுகள் – ஒரு கப், தேங்காய் துருவல் – 2 டேபிஸ்ஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, புளி – கொட்டைப்பாக்கு அளவு, தக்காளி – 1 (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயம் – சிறிதளவு.

செய்முறை: சௌசௌ தோலை நன்றாகச் சுத்தம் செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு… காய்ந்த மிளகாய், பருப்பு வகைகளைத் தனித்தனியே வறுத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சௌசௌ தோல், கொத்தமல்லித் தழை, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி… புளி, தேங்காய் துருவல் மற்றும் வறுத்து வைத்துள்ளவற்றையும் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துக் கொட்டிக் கலக்கவும்.

————

முருங்கைப்பூ மசாலா கிரேவி

aval147 [11]தேவையானவை: முருங்கைப்பூ – ஒரு கப், பெரிய வெங்காயம், தக்காளி – தலா 2 (பொடியாக நறுக்கவும்), கீறிய பச்சை மிளகாய் – 2, கரம் மசாலாத்தூள், சாம்பார் பொடி – தலா அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய முருங்கைக்கீரை – கால் கப், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பட்டை – ஒரு துண்டு, கிராம்பு – 2, ஃபிரெஷ் க்ரீம், புதினா, எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: முருங்கைப்பூவை கல், மண் நீக்கி, சுத்தமாகக் கழுவவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு தாளித்து… புதினா, பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதில் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, முருங்கைக்கீரை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். கரம் மசாலாத்தூள், சாம்பார் பொடி சேர்த்துக் கலந்து… முருங்கைப்பூ, உப்பு போட்டு, வெந்ததும் க்ரீம் சேர்க்கவும். தளதளவென கொதித்ததும் இறக்கவும்.

————

வேப்பம்பூ வற்றல்

aval148 [12]தேவையானவை: வேப்பம்பூ – 2 கப், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், புளி பேஸ்ட் – 2 டேபிள்ஸ்பூன், வெல்லத்தூள் – ஒரு டேபிஸ்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வேப்பம்பூவை நன்றாகக் கழுவிப் பிழிந்து, மற்ற பொருட்களுடன் சேர்த்துப் பிசிறி, இரவு முழுவதும் வைத்திருக்கவும். மறுநாள் நன்றாகக் காயும் வரை வெயிலில் உலர்த்தி எடுத்து, பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும். தேவைப்படும்போது, இதை ரசத்தில் சிறிது போடலாம். வறுத்துச் சாப்பிடலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம். ஆரோக்கியத்துக்கு உகந்த வற்றல் இது.

————

மா பருப்பு புளிக்குழம்பு

aval149 [13]தேவையானவை: மாங்கொட்டையினுள் இருக்கும் பருப்பு – 2, புளி – எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள், தனியாத்தூள் – தலா ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், பூண்டு பல் – 20, வெல்லத்தூள் – சிறிதளவு, எண்ணெய், வடகம், சுண்டைக்காய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பூச்சி அரிக்காத மாங்கொட்டையை உடைத்து, உள்ளே உள்ள பருப்பை நறுக்கி… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசிறி வெயிலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். புளியைத் தண்ணீர் விட்டுக் கரைத்து… உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… வடகம், சுண்டைக்காய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய மா பருப்பையும் இதனுடன் சேர்த்து வதக்கி, புளிக் கரைசலை ஊற்றி, அடுப்பை ‘சிம்’மில் வைத்து, மூடி போட்டுக் கொதிக்கவிடவும். குழம்பு கெட்டியாக வந்ததும், வெல்லத்தூள் சேர்த்து இறக்கவும். வயிற்று உபாதைகளுக்கு மா பருப்பு நல்ல மருந்து.

————

வாழைக்காய் தோல் ஸ்டார் ஃப்ரை

aval150 [14]தேவையானவை: வாழைக்காய்த் தோல் துண்டுகள் (முழு வாழைக்காயை நன்றாகக் கழுவி, முழுசாக வேக வைத்து, சிறிது சதையுடன் தோல் சீவிய துண்டுகள்) – ஒரு கப், வேக வைத்த உருளைக்கிழங்கு – 2. நறுக்கிய வெங்காயம் – கால் கப், மிளகாய்த்தூள், தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி விழுது, மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், பூண்டு பல் – 8, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வேக வைத்த உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் வாழைக்காய் தோல் துண்டுகளை சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசிறவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கி… மிளகாய்த்தூள், தனியாத்தூள், இஞ்சி விழுது, பூண்டு சேர்த்துப் புரட்டவும். பிசிறி வைத்திருக்கும் வாழைத் தோல், உருளைத் துண்டுகளை இதில் போட்டு வதக்கவும். சிறிது சிறிதாக எண்ணெய் சேர்த்து ரோஸ்ட் ஆகும்வரை வறுக்கவும். மொறுமொறுப்பாக வந்ததும், கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்கவும்.

————

வாழைப்பூ மடல் கூட்டு

aval151 [15]தேவையானவை: வாழை மடல் துண்டுகள்  (வாழைப்பூவின் உள்ளே வெள்ளையாக உள்ள மடலை நறுக்கிய துண்டுகள்) – ஒரு கப், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, குட்டி மாங்காய் துண்டுகள் தலா – அரை கப், சாம்பார் பொடி – ஒன்றரை டீஸ்பூன், வேக வைத்த துவரம்பருப்பு, தேங்காய் துருவல் – தலா கால் கப், ஆம்சூர் பொடி, வெல்லத்தூள் – தலா டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, நீர் மோர் – சிறிதளவு, வடகம், பெருங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாழைப்பூ மடலை நறுக்கியவுடன் நீர்மோரில் போடவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நறுக்கிய வாழைப்பூ மடலை பிழிந்து போட்டு, உப்பு, சாம்பார் பொடி, வெங்காயம், தக்காளி, மாங்காய் சேர்த்துக் கலந்து, மூடி போட்டு வேகவிடவும். வெந்ததும், தேங்காய் துருவல், வேக வைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு… வடகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி… ஆம்சூர் பொடி, வெல்லத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து இறக்கவும். உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த கூட்டு இது.

————

முருங்கை காம்பு சூப்

aval152 [16]தேவையானவை: முருங்கைக்கீரை உருவிய பிறகு உள்ள காம்பு, கறிவேப்பிலை உருவிய பிறகு உள்ள காம்பு – தலா 100 கிராம், சுண்டைக்காய் – கால் கப், நறுக்கிய சின்ன வெங்காயம் – 6, எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,  மஞ்சள்தூள், உப்பு – தலா அரை டீஸ்பூன்.

செய்முறை: காம்புகளை நன்றாகக் கழுவி துண்டுகளாக நறுக்கவும்.  சுண்டைக்காயைத் தட்டி, உடைத்து கடாயில் போட்டு, வெங்காயம் சேர்த்துப் புரட்டி… மஞ்சள்தூள், காம்புகளைப் போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும். சுண்டைக்காய் வெந்ததும் கடைந்து, எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும். இதைச் சாப்பிட்டால் வயிற்றில் பூச்சித் தொல்லை இருக்காது.

————