Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2016
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,672 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாடியில் தோட்டம்… மணம் பரப்பும் காய்கறிகள்!

  20p1யற்கை வாழ்வியல், நஞ்சில்லா உணவு ஆகியவை குறித்த விழிப்பு உணர்வு மிக வேகமாகப் பரவி வருகிறது. இளம் வயதிலேயே விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாட்டின் பல பள்ளிகளில் மரம் வளர்ப்பு, தோட்டம் அமைத்தல் போன்ற பணிகளை மாணவர்களைக் கொண்டு செய்து வருகிறார்கள். அத்தகைய சிறப்பான பள்ளிகளில் ஒன்றுதான், சென்னை, அண்ணாநகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ (ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆபிஸர்ஸ் அசோசியேஷன்) பள்ளி. இப்பள்ளியில், மாடித்தோட்டம் அமைத்து மாணவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

பள்ளியின் முதல்வர் ராதிகா உன்னியை சந்தித்துப் பேசினோம். “வீட்டு மொட்டை மாடியிலேயே தோட்டம் அமைத்து ஒரு வீட்டுக்குத் தேவையான அனைத்து காய்கறிகளையும் இயற்கை முறையில் உற்பத்தி செய்துவிட முடியும். குறைந்த செலவில் இயற்கைக் காய்கறிகள் தேவையைப் பூர்த்தி செய்ய, வீட்டுத்தோட்டம் அல்லது மாடித்தோட்டம்தான் எளிய வழி. அதுகுறித்து மாணவர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பள்ளியின் மொட்டை மாடியில் தோட்டம் அமைக்கலாம் என்று முடிவு செய்தோம். எங்கள் பள்ளி ஆசிரியை, அன்னி மனோஜின் உதவியோடு ஐந்து ஆசிரியர்கள் சேர்ந்து இத்தோட்டத்தைக் கவனித்து வருகிறோம். அதேபோல, பள்ளியைச் சுற்றி ஆக்ஸிஜனை அதிகமாக வெளியிடக்கூடிய பலவகையான மரங்கள், தாவரங்களை வைத்தும் பராமரித்து வருகிறோம்” என்ற ராதிகா உன்னி, ஆசிரியை அன்னி மனோஜை அறிமுகம் செய்து வைத்தார்.

20p2நம்மிடம், மாடித்தோட்டத்தைச் சுற்றிக்காட்டிக்கொண்டே பேசினார், அன்னி மனோஜ். “இங்கு வீட்டுத்தோட்டத்துக்கான பாலித்தீன் பைகளில்தான் செடிகளை வளர்க்கிறோம். பைகளில், தென்னை நார்க்கழிவு, எரு, செம்மண் ஆகியவற்றைக் கலந்து செடிகளை வளர்க்கிறோம். ஊட்டத்துக்குப் பஞ்சகவ்யா பயன்படுத்துகிறோம். பூச்சிகளைக் கட்டுப்படுத்த சாம்பல் பயன்படுத்துகிறோம். இங்கு 600 பைகளில்… கத்திரி, பீட்ரூட் உள்ளிட்ட செடிவகைக் காய்கறிகள்; புடலை, அவரை உள்ளிட்ட கொடிவகைக் காய்கறிகள்; பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி உள்ளிட்ட பல வகைக் கீரைகள்; ஆடாதொடை, தூதுவளை உள்ளிட்ட பலவகை மூலிகைகள், வாழை என அனைத்தையும் வளர்த்து வருகிறோம். மாணவர்கள் இத்தோட்டத்தை ஆர்வத்துடன் பார்வையிடுகிறார்கள். இத்தோட்டத்தைப் பார்த்து பல மாணவர்கள் அவர்களது வீட்டில் தோட்டம் அமைத்துள்ளார்கள். இங்கு விளையும் காய்கறிகளை எங்கள் பள்ளி ஆசிரியர்களே விலை கொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள்” என்ற அன்னி மனோஜ் நிறைவாக,

20p3“மொட்டை மாடியை பலரும் காற்று வாங்க உலவும் இடமாகத்தான் கருதுகிறார்கள். ஆனால், அங்கு தாவரங்கள் வளர்த்து அவற்றைப் பராமரித்தால், வீட்டுக்குத் தேவையான இயற்கைக் காய்கறிகளை அறுவடை செய்துகொள்ள முடியும். அதோடு சுத்தமான காற்றும் கிடைக்கும். முக்கியமாக தோட்டத்தில் பணி செய்யும்போது மன அழுத்தம் நீங்கி, புத்துணர்வு பெற முடியும்” என்றார்.

தொடர்புக்கு,
எஸ்.பி.ஒ.ஏ பள்ளி & ஜூனியர் கல்லூரி,
18, ஸ்கூல் ரோடு, அண்ணா நகர்
மேற்கு (விரிவு), சென்னை – 600 101
தொலைபேசி: 044 26151145.


செங்குத்துத் தோட்டம்!

சுவரில் தொங்கும் ‘வெர்ட்டிகல் கார்டன்’ (செங்குத்துத் தோட்டம்) குறித்துப் பேசிய ராதிகா உன்னி, “சுவரில் தொங்க விடுவதுபோல அடுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறிய தொட்டிகள் கிடைக்கின்றன. இவற்றைச் சுவரில் தொங்கவிட்டு செடிகளை வளர்ப்பதுதான் வெர்ட்டிகல் கார்டன். பள்ளியின் கட்டடச் சுவர்கள், சுற்றுச்சுவர்கள் ஆகியவற்றில் இதுபோல 50 தொட்டிகளைப் பொருத்தி வெர்ட்டிகல் கார்டன் அமைத்துள்ளோம். இந்த அடுக்குத் தொட்டிகளில் மேலே உள்ள தொட்டியில் தண்ணீர் ஊற்றினால் கீழே உள்ள தொட்டிகளுக்குத் தண்ணீர் வருமாறு துளை இருக்கும். அதனால் தண்ணீர் விடுவது எளிது. கீழ்த் தொட்டியில் குழாய் பொருத்தி அதிகப்படியான தண்ணீரை வீணாகாமல் சேமித்துவிட முடியும். வரிசையாக அதிக எண்ணிக்கையில் தொட்டிகளை அமைக்கும்போது சொட்டுநீர்க் குழாய்கள் அமைத்தும் பாசனம் செய்யலாம்.

20p6எங்கள் பள்ளியில் தெற்குப்பக்க வாசலில் இருபுறமும் சுவரில் வெர்ட்டிகல் கார்டன் அமைத்து அழகுச்செடிகளை வளர்த்து வருகிறோம். தொடர்ந்து இவற்றிலும் காய்கறிகளை வளர்க்க இருக்கிறோம். ஆனால், இந்த வெர்ட்டிகல் கார்டன் இன்னமும் நம் ஊரில் பிரபலமாகவில்லை. ஆனால், வெளிநாடுகளில் இம்முறையில் சிறப்பாகக் காய்கறிகள் உள்ளிட்ட செடிகளை வளர்த்து வருகிறார்கள். குறிப்பாக இடவசதி குறைவாக உள்ள சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இம்முறையில் காய்கறிகளை உற்பத்தி செய்கிறார்கள்” என்றார்.


வீட்டிலும் மாடித்தோட்டம் போட்டாச்சு !

இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு மாடித்தோட்டத்தைப் பார்வையிடுவதற்கு அனுமதிப்பதோடு, அதைப் பாராமரிப்பதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்துப் பேசிய ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் யஸ்வந்த், “ஸ்கூல்ல இருக்கிற கிளப்ல மெம்பரா இருக்கேன். அதுமூலமா தோட்டத்தைச் சுற்றிக்காட்டுவதோடு, அதைப் பத்தி சொல்லியும் கொடுப்பாங்க. இங்க எல்லா வகையான மூலிகைகளும் காய்கறிகளும் இருக்கு. அத சாப்பிடறதால வர்ற பயன்களையும் தெரிஞ்சு வெச்சிருக்கோம். இதப் பார்த்த பிறகு, வீட்ல சொல்லி எங்க வீட்டிலும் மாடித்தோட்டம் அமைச்சிருக்கோம். வாரத்துக்கு மூணு தடவை இந்தத் தோட்டத்தினைப் பார்வையிட வருவோம்” என்றார்.

மாணவி பூஜா வர்ஷினி பேசும்போது,  “சிட்டில செடிகள பாக்குறதே அதிசயம். அதுவும் நாம் சாப்பிடுற காய்கறிச் செடிகளை ஒரே இடத்துல பார்க்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷம். வாரத்துக்கு 2 முறை வந்தாலும், ரொம்ப நேரம் செடிகளோடு இருப்பேன்.

இந்தத் தோட்டம் அமைச்ச பிறகு நிறைய மெடிஷினல் பிளான்ட்ஸ் பத்தி தெரிஞ்சு வெச்சிருக்கேன். ஸ்கூல்ல இருப்படியொரு விஷயத்த பண்றது, விவசாயம்னா என்னான்னு தெரியாத எங்களுக்கு அதப் பத்தித் தெரிஞ்சுகிறதுக்கு ரொம்ப உதவியா இருக்கு” என்றார்.