- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

30 வகை மார்கழி விருந்து! 2/2

பச்சை மொச்சை பொரியல்

16 [1]தேவையானவை: பச்சை மொச்சை – ஒரு கப், பெரிய வெங்காயம் – ஒன்று, சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், பூண்டு – 5 பல், கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

 

செய்முறை: பச்சை மொச்சையைக் கழுவி தண்ணீர் சேர்த்து குக்கரில் நான்கு விசில் வரும்வரை வேகவிடவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பூண்டை தோலுரித்து ஒன்றிரண்டாகத் தட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து… பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் வேகவைத்த பச்சை மொச்சை, மஞ்சள்தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து நன்கு கிளறி, கொதிக்க வைத்து இறக்கவும்.


கீரை வடை

17 [2]தேவையானவை:  கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பட்டாணிப்பருப்பு – தலா ஒரு கப், சோம்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், விருப்பமான கீரை – ஒரு கப், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் – 5, பெரிய வெங்காயம் – ஒன்று, எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

 

செய்முறை: பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். கீரையை அலசி சுத்தம் செய்யவும். பெரிய வெங்காயம், கீரையைப் பொடியாக நறுக்கவும். ஊறவைத்த பருப்பு வகைகளுடன் சோம்பு, சீரகம், உப்பு, மஞ்சள்தூள், பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் தெளித்து சற்று கொரகொரப்பாக மிக்ஸியில் அரைக்கவும். அந்த மாவில்… நறுக்கிய கீரை, வெங்காயம் சேர்த்துப் பிசைந்து சிறிய வடைகளாகத் தட்டி, காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: விருப்பமான கீரையைச் சேர்த்து செய்யலாம்.


    18 [3] மொச்சை – மிளகு மசாலா

தேவையானவை: பச்சை மொச்சை – ஒரு கப், பெரிய வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, மிளகு – 4 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – 5 டீஸ்பூன், சோம்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு, எண்ணெய், உப்பு –  தேவைகேற்ப.

 

செய்முறை: பச்சை மொச்சை யைக் கழுவி சுத்தம் செய்யவும். பெரிய வெங்காயம், தக்காளி யைப் பொடியாக நறுக்கவும். தேங்காயுடன் மிளகு, சோம்பு, சீரகம் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். குக்கரில் சிறிது எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து… நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, பச்சை மொச்சை சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். மூடி திறந்து உப்பு, அரைத்த விழுது சேர்த்து மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.


தேங்காய் அப்பள சாதம்

19 [4]தேவையானவை: வடித்த சாதம் – ஒரு கப், தேங்காய்த் துருவல் – கால் கப், காய்ந்த மிளகாய் – 4, கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை – தாளிக்கத் தேவையான அளவு, பொரித்த அப்பளம் – 4, எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

 

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளித்து, தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து நன்கு வறுக்கவும். அதனுடன் வடித்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கி, பொரித்த அப்பளங்களை கைகளால் உடைத்து சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.


அவியல்

20 [5]தேவையானவை: விருப்பமான காய்கறிகள், தயிர் – தலா ஒரு கப், தேங்காய்த் துருவல் – கால் கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4, கடுகு, கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு, எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

 

செய்முறை:  காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்கி, மூழ்கும் வரை தண்ணீர்விட்டு குக்கரில் வேகவிட வும். தயிரை நன்கு கடைந்து வைக்க வும். தேங்காய்த் துருவலுடன் பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் வேக வைத்த காய்கறிகள், அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். பிறகு, மற்றொரு வாணலியில் எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெந்த காய்கறி கலவையில் சேர்க்கவும். பின்னர் கடைந்த தயிரை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


குயிக் புளியோதரை

21 [6]தேவையானவை: வடித்த சாதம் – ஒரு கப், புளிக் காய்ச்சல் – தேவைக்கேற்ப.

புளிக்காய்ச்சல் செய்ய:
காய்ந்த மிளகாய் – 10, முழுமல்லி (தனியா), எள் – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம்- கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, புளி – எலுமிச்சை அளவு, வெல்லம் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க: கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், வேர்க்கடலை – சிறிதளவு.

 

செய்முறை:  புளியை தண்ணீரில் ஊறவைக்கவும். வெறும் வாணலியில் முழுமல்லி (தனியா), எள், வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வறுத்து ஆறிய பின் பொடிக்கவும்.  வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து… புளிக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு, அரைத்த பொடி சேர்த்து மீண்டும் கொதிக்கவைத்து வெல்லம் சேர்க்கவும். சுருள வரும்வரை கிளறி இறக்கி வைக்கவும். புளிக்காய்ச்சல் தயார். வடித்த சாதத்துடன் தேவையான அளவு புளிக் காய்ச்சல் சேர்த்துக் கலந்து கிளறி பரிமாறவும்.


இனிப்பு  வடை

22 [7]தேவையானவை: உளுத்தம்பருப்பு – ஒரு கப், தேங்காய்த் துருவல் – கால் கப், வெல்லம் – அரை கப், எண்ணெய் – பொரிக்க.

 

செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, களைந்து அரைக்கவும். பாதி அரைபட்டதும் தேங்காய்த் துருவல் சேர்த்து அரைக்கவும். பிறகு வெல்லம் சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவை சிறிய வடைகளாகத் தட்டி, எண்ணெயில் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, வேகவிட்டு எடுக்கவும்.


சர்க்கரைவள்ளி வத்தக் குழம்பு

23 [8] தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு – ஒன்று, புளி – எலுமிச்சை அளவு, சாம்பார் பொடி – 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வெந்தயம் – தாளிக்கத் தேவையான அளவு, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

 

செய்முறை: புளியை வெந்நீரில் ஊறவைக்கவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கின் தோலை சீவி மெல்லிய வட்ட வடிவ வில்லைகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வெந்தயம் சேர்த்துத் தாளித்து, நறுக்கிய சர்கக்ரைவள்ளிக் கிழங்கைச் சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பிறகு புளிக்கரைசல் சேர்த்து,  மஞ்சள்தூள், சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அடுப்பை சிறுதீயில் வைத்து, எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.


தக்காளி கொத்சு

24 [9]தேவையானவை:  தக்காளி – 4, பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 4, கடுகு, சீரகம், கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு, வெந்தயம் – கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் – சிறிதளவு, பாசிப்பருப்பு – ஒரு கப், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

 

செய்முறை: பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடி யாக நறுக்கவும். பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேகவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம், கறி வேப்பிலை, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வேகவைத்த பருப்பைச் சேர்த்துக் கிளறி, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.


தினைப் பொங்கல்

25 [10]தேவையானவை: தினை – ஒரு கப், பாசிப்பருப்பு – கால் கப், பச்சை மிளகாய் – 4, மிளகு, சீரகம் – ஒரு டீஸ்பூன், இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, முந்திரி, நெய், உப்பு – தேவைக்கேற்ப.

 

செய்முறை: பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். தினை யுடன் பாசிப்பருப்பு, இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து, மூன்று கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும். வாணலியில் நெய் விட்டு, காய்ந்ததும் முந்திரி, கறிவேப் பிலை, மிளகு, சீரகம் தாளித்து, குக்கரில் உள்ள பொங்கலில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


ரவை பொங்கல்

26 [11]தேவையானவை: ரவை – ஒரு கப், பாசிப்பருப்பு – கால் கப், பால் – அரை கப், மிளகு – ஒரு டீஸ்பூன், இஞ்சித்துருவல் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, சீரகம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், நெய், உப்பு – தேவைக்கேற்ப.

 

செய்முறை: ரவை, பாசிப்பருப்பை வெறும் வாணலியில் தனித்தனியே வறுத்து, சிறிதுநேரம் தனியாக ஊற வைக்கவும். குக்கரில் 4 கப் தண்ணீர் சேர்த்துக் கொதித்ததும் பாசிப்பருப்பு, உப்பு, இஞ்சித் துருவல், மஞ்சள்தூள் சேர்க்கவும். பிறகு ரவையைச் சேர்த்து கட்டியில்லாமல் கிளறி மூடிபோட்டு மூன்று விசில் வரும்வரை வேகவிடவும். வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்துக் காய்ந்ததும் மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கலந்து, பால் விட்டு மீண்டும் ஒரு கொதிவிட்டு இறக்கவும்.


    27 [12]அக்கார அடிசல்

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், முந்திரி – 10, பாசிப்பருப்பு – கால் கப், வெல்லம், சர்க்கரை – தலா அரை கப், பால் – 3 கப், நெய் – தேவைக்கேற்ப.

 

செய்முறை: வாணலியில் நெய் விட்டு, காய்ந்ததும் முந்திரியை வறுத்து எடுக்கவும். அதே நெய்யில் அரிசி, பருப்பை தனித்தனியே வறுக்கவும். அவற்றுடன் இரண்டு கப் பால், ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கலந்து குக்கரில் நான்கு விசில் வரும்வரை வேகவிடவும். மற்றொரு வாணலியில் சிறி தளவு நெய் சேர்த்து வெந்த கலவை, வெல்லம், சர்க்கரை, மீதி பால் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி, முந்திரி சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.


பால் சாதம்

28 [13]தேவையானவை: பச்சரிசி – 2 கப், பால் – 4 கப், தண்ணீர் – 4 கப், நெய் , உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை: குக்கரில் களைந்த பச்சரிசி, பால், தண்ணீர், உப்பு சேர்த்து, நான்கு விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். பிறகு இறக்கி, நெய் விட்டு கிளறிப் பரிமாறவும். இதை கொத்சு சேர்த்து சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும்.


சிவப்பு அவல் சாதம்

29 [14]தேவையானவை: சிவப்பு அவல், வெல்லம் – தலா ஒரு கப், முந்திரி – 10, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, பால் – கால் கப், நெய் – தேவையான அளவு.

 

செய்முறை: சிவப்பு அவலை களைந்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவும். வெல்லத்தூள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டவும். நெய்யில் முந்திரியை வறுக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் அவலுடன் பால், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பிறகு வெல்லக் கரைசல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, இறக்கி, முந்திரி சேர்த்துப் பரிமாறவும்.


மஞ்சள் பொங்கல்

30 [15]தேவையானவை:
அரிசி – ஒரு கப், துவரம்பருப்பு – கால் கப், மஞ்சள்தூள் – சிறிதளவு, மிளகு – சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு, நெய் – தேவைக்கேற்ப.

 

செய்முறை: அரிசி, பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்துக் குக் கரில் குழைய வேகவிடவும். பிறகு நெய்யில் மிளகு – சீரகத்தூளை தாளித்து, அரிசி – பருப்புக் கலவையுடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

நன்றி: அவள் விகடன்