- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

உலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்!’

[1]ருதடவை ஆந்திரா மாநிலம் நெல்லூர் பக்கத்துல இருக்கிற கிராமத்துக்குப் போயிருந்தேன். பஸ்ஸே போகாத குக்கிராமம். அதனால, நடந்தே போய்ச் சேர்ந்தேன். அந்தக் கிராமத்துல ஒரு சின்ன மருத்துவமனை இருந்துச்சு. போன வேலையை மறந்துட்டு, அந்த மருத்துவமனைக்குள்ள போனேன். முதல் உதவிக்குத் தேவையான அத்தனை வசதிகளும் அங்கே இருந்துச்சு. சுற்றுவட்டாரக் கிராமமக்கள் மருத்துவம் பார்க்க வந்துபோய்கிட்டிருந்தாங்க.

இதைப் பார்க்கும்போதே, அந்த மருத்துவமனை சேவை நோக்கத்துல நடக்குதுன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சது. நான் மருத்துவமனையைப் பார்த்துக்கிட்டே இருப்பதைக் கவனிச்ச டாக்டர், அனைவருக்கும் மருத்துவம் பார்த்துட்டு, வெளியே வந்தாரு. அவருக்குச் சுமார் 50 வயதிருக்கும். ஆனா, இளைஞரைப்போல சுறுசுறுப்பா இருந்தாரு. ‘நான் சாப்பிடப்போறேன். நீங்களும் வாங்களேன்’னு கூப்பிட்டாரு. நான் பேசின சுமாரான சுந்தரத் தெலுங்கைக் கேட்டுட்டுத் தமிழ் மொழியிலயே பேச ஆரம்பிச்சாரு. அட, அருமையா தமிழ் பேசுறீங்களேனு ஆச்சர்யமா கேட்டேன்.

வாழை இலையில சோறு குறைவாவும் காய்கறிகளை அதிகமாவும் பரிமாறினாங்க. அன்னிக்குப் பறிச்ச காய்கறிகளை வெச்சு, சுவையான உணவு சமைச்சிருந்தாங்க. சாப்பிட்டபடியே டாக்டர் பேச ஆரம்பிச்சாரு…

‘‘சென்னை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலத்தான், படிச்சேன். அதனால, நல்லாவே தமிழ் பேசுவேன். சின்ன வயசுல இருந்தே எம்.பி.பி.எஸ் படிச்சு மருத்துவர் ஆகணும்னு வைராக்கியமா இருந்தேன். படிக்குற காலத்துல பல கனவுகள். பெரிய மருத்துவமனை கட்டி, கோடி கோடியா பணம் சம்பாதிக்கணும்னு திட்டம்கூட வெச்சிருந்தேன். ஒருமுறை எங்க வீட்டுக்கு வந்த காந்தியவாதி ஒருத்தர், காந்தி சம்பந்தமான புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னாரு. மகாத்மா காந்தி சொல்லியிருந்த விஷயங்கள்ல சில முரண்பாடுகள் இருந்தாலும் ‘இந்தியாவின் ஆன்மா கிராமங்களில்தான் உள்ளது’ங்கிற வாசகம் என்னைச் சுண்டி இழுத்துச்சு. டாக்டர் பட்டம் வாங்கின கையோடு கிராமப் பகுதிகளுக்குப் போய் மருத்துவம் பார்க்க ஆரம்பிச்சேன். போக்குவரத்து வசதியில்லா பகுதியிலதான் மருத்துவமனை தொடங்கணும்னு முடிவு செஞ்சு, இந்த இடத்துல மருத்துவமனையைத் தொடங்கினேன். என்னோட மதிப்பெண்களுக்கு, மேற்படிப்புப் படிக்க வாய்ப்பு கிடைச்சது. ஆனாலும், மேற்கொண்டு படிச்சா திரும்பவும் நகரத்துக்குப் போய்ப் பணம் சம்பாதிக்கும் எண்ணம் வந்திடும்ங்கிறதால அதைத் தவிர்த்துட்டேன். எம்.பி.பி.எஸ் படிக்கும்போது, சீனாவுல பின்பற்றுன மருத்துவமுறை பத்திப் படிச்சிருக்கேன். பேராசிரியர்களும் அதைப்பத்திச் சொல்லியிருக்காங்க. அந்தத் தகவலும் என்னைக் கிராமத்தை நோக்கி நகர வெச்சது.

1949-ம் ஆண்டு சீனாவில் கம்யூனிச அரசு அமைஞ்சது. அப்போ நகரங்கள்ல மட்டுந்தான் டாக்டர்கள் இருந்தாங்க. கிராமப்புற மக்களுக்கு ஏதாவது பிரச்னைன்னா, பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யணும். எல்லா கிராமத்திலும் டாக்டர்களை நியமிக்கும் அளவுக்கு மருத்துவம் படிச்சவங்களும் அப்போ இல்லை. படிச்ச டாக்டர்களும் கிராமங்களுக்கு வந்து மருத்துவம் பார்க்கத் தயாராக இல்லை.

அதனால, கிராம மக்கள்ல ஓரளவு படிப்பறிவு உள்ளவர்களுக்குச் சில அடிப்படைப் பயிற்சி தந்து, மருத்துவச் சேவை செய்ய அனுமதிக்கலாம்னு சீன அரசு முடிவெடுத்துச்சு. விவசாயிகள், நெசவாளர்கள், மாணவர்கள்னு பலரும் இந்தப் பயிற்சியில கலந்துகொள்ள முன் வந்தாங்க.

சாதாரண நோய்களுக்கான சிகிச்சை, தடுப்பு மருந்து தருவது, சுகாதாரக் கல்வி அளிப்பது, குடும்பக் கட்டுப்பாட்டுச் சிகிச்சை, முதலுதவி… என ஆறு மாதங்களுக்குப் பயிற்சி எடுத்துக்கிட்டு, தங்களோட கிராமங்களுக்குப் போய்ச் சிகிச்சை கொடுத்தாங்க. நெல் வயல்களுக்கு நடுவுல, செருப்பு அணியாத வெறும் கால்களோடு நடந்து திரிஞ்சு, மக்களைக் காப்பாத்துன இவங்களுக்கு ‘வெறும்கால் மருத்துவர்கள்’னு பெயர் வந்துச்சு. கிராமப்புற மக்களுக்கு மிகக் குறைந்த செலவுல, உயர்தரமான சிகிச்சை கிடைக்க, இந்த மருத்துவமுறை உதவுச்சு. சீனாவோட இந்த மருத்துவ முறையை உலகமே உத்துப் பார்த்துச்சு. பல நாடுகள்ல இருந்தும், இந்த மருத்துவ முறையைக் கத்துக்கிட்டு போகுற அளவுக்கு நல்ல விஷயமும் நடந்துச்சு.

‘உலகளவில்  கிராமப் பகுதிகளுக்கு மருத்துவச் சேவை வழங்க, இதைவிடச் சிறந்த வழி வேறு கிடையாது’னு உலகச் சுகாதார நிறுவனம் உறுதியா சொல்லிச்சு. ஆனா, அந்த மருத்துவ முறை நவீனம், நகரமயம்ங்கிற பேர்ல சீனாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சிடுச்சு. ஆனா, இந்தியாவுல சில தொண்டு அமைப்புகள் ‘வெறும்கால் மருத்துவர்கள்’ முறையைத் தங்களுக்குத் தகுந்த மாதிரி வடிவமைச்சு, மக்களுக்கு மருத்துவச் சேவை செய்துகிட்டிருக்காங்க. நாங்களும்கூட இந்த வெறும்கால் மருத்துவர்கள் முறையை, இந்தப் பகுதிக்கு ஏத்தபடி செய்துகிட்டிருக்கோம்”னு டாக்டர் சொல்லி முடிக்கும்போது, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாடியே, தமிழ்நாட்டுல ‘வெறும்கால் மருத்துவர்கள்’ முறை ஆரம்பிச்சிடுச்சு. சித்த மருத்துவத்தைச் சொல்லிவெச்ச சித்தர்கள் தொடங்கி, இப்பவும் பாரம்பர்ய மருத்துவம் பார்க்குற, அத்தனை பேரும் ‘வெறும்கால் மருத்துவர்கள்’தான்னு சொன்னதைக் கேட்டு, அந்த டாக்டர் ஆச்சர்யமா பார்த்தாரு.

 

மண்புழு மன்னாரு – விகடன்